செங்கோடு என்று இலக்கியத்தில் வழங்கிய ஊர்ப்பெயர் திரு என்னும் முன் ஓட்டுடன் இணைந்து திருச்செங்கோடு என வழங்குகிறது. செந்திறம் வாய்ந்த மலையின் கெரம் என்னும் பொருளில் செங்கோடு எனப் பெயர் பெற்றிருக்கலாம். அல்லது செம்மையான அதாவது செங்குத்தான மலையின் சிகரம் ஆகையால் செங்கோடு எனப் பெயர் பெற்றது என்றும் கொள்ளலாம். பிற்காலத்தில் செங்குன்றம் என்றும் செங்குன்றூர் என்றும் பக்தி இலக்கியங்களில் கூறப்பெற்றுள்ளது, இன்றைய சேலம் மாவட்டத்தின் தென்மேற்கு மூலையின் அமைந்திருக்கிறது திருச்செங்கோடு, இந்த ஊர்ப்பெயர் அப்பெயருடைய வட்டத்திற்கும் பெயராய் வந்துள்ளது. ஆதிசேடன் பூசித்ததால் நாகமலை என்றும் இதற்குப் பெயர் உண்டு அதற்கு அறிகுறியாகப் பெரிய பாம்பின் உருவம் பாறையில் செதுக்கப்ட்டுள்ளது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்” (சிலப் 2448 9)