மங்கலம்

“மங்கலம்” என்பது தூய்மை, நிறைவு போன்ற பொருள்களில் வழங்கி, மக்களின் குடியிருப்பினையும் குறிக்கத் தொடங்கியது. “மங்கலம் என்ப மனைமாட்சி” என்பது குறள். இச்சொல் சங்க காலத்திலேயே ஊர்ப்பெயர்களுடன் இணைந்து வந்துள்ளது. கிள்ளிமங்கலம், கொடிமங்கலம் என்னும் ஊர்கள் சங்ககாலத்தில் இருந்திருக்கின்றன.
மக்கள் குடியிருப்பினைக் குறித்தாலும், இடைக்காலத்தில் சிறப்பாகப் பார்ப்பனர்களின் குடியிருப்புக்களே “மங்கலம்” என்று குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்பொழுது தம் பெயர் விளங்கத் தம் பெயருடன் “சதுர்வேதி மங்கலம்” என்பதனை இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துத் தந்திருக்கின்றனர்.[28] இவ்வடிவத்தின் முற்பகுதியாகிய சதுர்வேதி காலப்போக்கில் மறைந்தது. இருக்கு முதலான நான்கு வேதங்களைக் கற்ற பார்ப்பனர் சதுர்வேதி எனப்பட்டார்.