இடைக்கழி நாட்டு ஊர்களில் நல்லூர் என்பது ஒன்று, இடைக்கழி நாடு என்பது செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தது. செய்யூருக்குக் கிழக்கிலும், தென்கிழக்கிலும், தெற்கிலும் கடற்கரையோரத்தில் பரவியுள்ளது. நல்லூர் என்னும் ஊர்ப்பெயர் நன்மை என்ற பண்பையுணர்த்தும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு பெயர் பெற்றிருக்க வேண்டும். சூழ்ந்துள்ள ஊர்களைவிட நீர்வளம், நில வளம். மக்கள் மனவளம் போன்றவற்றில் நல்ல என்ற குறிப்பில் நல்லூர் எனப்பெயர் பெற்றிருக்கலாம். நல்லூர் என்னும் சொல்லை முன் ஒட்டாகவும், பின் ஒட்டாகவும் கொண்ட நல்லூர்ப் பெருமணம் கலிகடிந்த சோழநல்லூர் சுந்தரபாண்டிய நல்லூர், வீரபாண்டிய நல்லூர் போன்ற பல ஊர்ப்பெயர்கள் உள்ளன. நல்லுரர் என்பதையே பெயராகக் கொண்ட ஊர் இது. நம் இலக்கியத்தில் இடம் பெற்ற நல்லூர். ஒய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன் மீது சிறுபாணாற்றுப்படை பாடிய நத்தத்தனார் என்ற புலவரின் ஊர், இவ்வூர் இடைக்கழி நாட்டில் அமைந்தது. நத்தத்தனார் பிறந்த நல்லூரில் அவர் நினைவாக உருவச் சிலை ஒன்று 18 6 1958 இல் அன்றைய சென்னை மாநில அமைச்சர் பக்தவத்சலம் தலைமையில் நிறுவப் பெற்றது. கும்பகோணத்தருகிலும் நல்லூர் என்ற பெயருடைய ஊர் ஒன்று உள்ளது.