தொண்டி என்னும் பெயருடைய ஓர் ஊர் துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கிறது. கடற்கழி என்னும் பொருஞுடைய தொண்டி என்னும் சொல் படகுகள் போன்றவை வந்து செல்லுவதற்கு ஏற்ற ஆழமான பள்ளமான கடற்கரை ஓரத்தில் அமைந்த இடத்தைக் குறிக்க முதலில் பயன்படுத்தப் பெற்று, நாளடைவில் கடற்கரை நகரத்திற்குப் பெயராய் அமைந்திருக்க வேண்டும். தொண்டி என்ற பெயருடன் தமிழ் நாட்டில் இரண்டு துறைமுக நகரங்கள் இருந்தன என்று இலக்கியங்களால் தெரிகிறது. அவற்றுள் ஒன்று சங்ககாலத்தில் மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த தொண்டி என்னும் துறைமுக நகரம். இது சேரர் களுக்குரியது. மற்றொன்று கீழைக் கடற்கரையில் பிற்காலத்தில் அதே பெயருடன் அமைந்த நகரம். இது சோழர்களுக்குரியது. ஒரு கடற்கரை நகரம் அழிந்த பிறகு அதே பெயருடன், வேறொரு நகரம் அமைந்திருக்க வேண்டும். மேலைக் கடற்கரையில் அமைந்திருந்த தொண்டி மார்கழி மலர்ந்த நெய்தல் மலராலும், நீராடுவோருடைய கோதையாலும் மணம் கமழும். கானலையுடையது. சேரமான் கோக் கோதை மார்பனுடையது, இத்துறைமுக நகரம் தொண்டிப்பத்து” என்னும் பத்துப் பாக்களால் ஐங்குறுநூற்றில் அம்மூவனார் என்னும் புலவரால் பாடப் பெற்றுள்ளது. இத் தொண்டி சேர மன்னரின் தாயத்தாருக்குத் தலை நகரமாக இருந்திருக்க வேண்டும், இத்தொண்டி முற்காலத்தில் பல நாட்டு மரக்கலங்களும் வந்து தங்கும். பெருந்துறைமுகமாக விளங்கியது என்பது பழைய நூல்களாலும் தாலமி என்னும் கிரேக்க ஆசிரியரது குறிப்புகளாலும் அறியப்படுகின்றது. அ.கலப் புழையை (ஆலப்புழை) அடுத்துள்ள தொண்டிப் பாயில், என்னும் சிற்றூரே பழைய தொண்டி எனக் கருதுகின்றனர்
“ஓங்இரும் பரப்பின் வங்க வீட்டத்துத் தொண்டியோர் (சிலப். 14: 106 107) என்ற தொடருக்கு, “குணதிசைக்கண் தொண்டி யென்னும் பதியிலுள்ள அரசரால்” என்று பொருள் கூறி “தொண்டியோர் சோழகுலத்தோர்” என்று கூறிய அடியார்க்கு நல்லாரின் விளக்கம் மற்றொரு தொண்டி சோழர்களுக்கு உரியது என்பதைக் காட்டுகிறது. பகைவரை அட்டு, அவர் பல்லைக் கொணர்ந்து தமது கோட்டை வாயிற் கதவில் வைத்துத் தைக்கும் பண்டை வழக்கையொட்டி, தொண்டை நகரின் வாயிற் கதவில், போரில் வெல்லப்பட்ட மூவன் என்பவனின் வலிய முட் போன்ற பற்களை பிடுங்கிக் கொணர்ந்து வைத்து இழைத்திருந்தனர். இத்தொண்டி, நகரின் தலைவன் சேரமான் கணைக்காலிரும்பொறை,
“திண்தேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுக, இவள் ஈன்றதாயே” (நற். 8 : 9 10)
“…………………….. மூவன்
முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற்
கானலந் தொண்டிப் பொருநன்” (௸. 18 : 2 4)
“கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி,
நெல் அரி தொழுவர் கூர்வாள் உற்றென,
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும் நீநயந்தோள் கண்ணே”? (௸. 95: 5 9)
“குணகடல் இரையது பறைபுத நாரை
திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தரஅங்கு” (குறுந். 128 ; 1 3)
“திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு,
எழுகலத்து ஏந்தினும் சிறிது என்தோழி.
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே” (௸. 210 : 1 6)
“தொண்டி அன்ன என் நலம் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் (௸. 238 4 5)
“குடக்கோ நெடுஞ் சேரலாதற்கு வேஎன்
ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன்
தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து
வானவரம்பன் எனப்பேர் இனிது விளக்கி” (பதிற். 6ஆம் பத்து பதிகம் 1 6)
“வளை கடல் முழவின் தொண் டியோர் பொருந” (௸. 88.21)
“பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டு மீன் கெண்டி
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே” (அகம். 10:10 13)
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்ன”’ (ஷே. 60;3 7)
“வெண்கோட்டு யானை வீறற் போர்க்குட்டுவன்
தென்திரைப் பரப்பின் தொண்டி முன்துறை” (௸. 290:12 13)
“குலை இறைஞ்சிய கோள்தாழை
அகல்வயல், மலைவேலி
நிலவுமணல் வியன் கானல்
தெண்கழிமிசைத் தீப்பூவின்
தண் தொண்டியோர் அடுபொருந” (புறம்: 17;9 13)
“கோதை மார்பின் கோதையானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்
மாக்கழி மலர்ந்த நெய்தலானும்,
கள் நாறும்மே, கானல் அம் தொண்டி” (௸. 48:1 4)
“…………….ஓங்கிரும் பரப்பின்
வங்க வீட்டத்துத் தொண்டியோரிட்ட (சிலப். 14;106 107)