தஞ்சாவூர்

சங்க காலத்தில் சோழர்களின் தலைநகராக உறையூர் இருந்தது. பின்னர் சங்க கால சோழர்கள், சிற்றரசர்களாக பழையாறையையும் தலைநகராக்கிக் கொண்டு இருந்தனர். இடைக்காலத்தில் (கி.பி. 850-871) விசயாலயன் சோழ அரசை தஞ்சையில் நிலை நாட்டிய நிலையில் தஞ்சை சிறப்புறத் தொடங்கியது. தஞ்சை பற்றிய பிற முன்னைய செய்திகள் தெரியவில்லை. எனினும் முதலில் இது சிறப்புப் பெறாத. சிறியதொரு ஊராக இருந்திருக்கலாம். சோழ மன்னன் தலைநகராகக் கொண்டு ஆட்சி தொடங்கிய பின்னர் பெரும் சிறப்பு பெற்றிருக்கலாம் என்பதையுணர இவ்வூர் பற்றிய எண்ணங்கள் துணைபுரிகின்றன. தஞ்சாவூரில் உள்ள திருமருகல் என்ற தலம் சோழன் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலைக் கொண்டது என்பதும், ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம் எனவும் அறிகின்றோம். எனவே மருகல் ஒரு பழமையான தலம். பக்தி யால் பெருமை பெற்ற தலம் என்பது தெரிவது மட்டுமல்லாது இது ஒரு பெரும் குடியேற்றப் பகுதியாக, நாட்டுப் பகுதியாக இருந்திருக்கின்றது என்பதும், எனவே தான் சோழனால் இங்கு மாடக் கோயில் எழுப்பப்பட்டது என்றதொரு எண்ணமும் நாம் உணர்வதற்கு வழி வகுப்பது. சேழக்கிழார் பாடிய,
கொள்ளுமியல்பிற் குடி முதலோர் மலிந்த செல்வக் குல பதியாம்
தெள்ளும் திரைகள் மதகு தோறும் சேறும் கயலும் செழு மணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருத நாட்டுத் தஞ்சாவூர் (பெரிய செருத் – 1)
என்ற பாடலடிகளாகும். எனவே மருகல் நாட்டின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது தஞ்சாவூர் என்பது தெளிவாகிறது. மேலும் பொன்னி நாட்டைச் சார்ந்தது என்பதும் புரிகின்றது. இந்நிலையில் மக்கள் வாழ்ந்த பகுதியாக இது முன்பு இருந்தாலும், இடைக் காலத்தில் சோழர்களின் தலைநகராக அமைந்த பின்னரே சீர் பெறத் தொடங்கியது என்பது தெளிவு. சுந்தரர் பாடலில் நின்றும், தஞ்சையைப் பற்றிய இன்னொரு எண்ணமும் தெளிவாகிறது. அதாவது, அவர், பிற அடியார்க்கு எல்லாம் தான் அடியேன் என்று பாடும் நிலையில்,
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்
மடல் சூழ்ந்த தார் நம்பியிடம் கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செருத்துணை தன்னடியார்க்கு மடியேன் (39-9)
என்கின்றார். எனவே தஞ்சையை ஆண்ட மன்னவனாக செருத்துணை நாயனார் காட்டப்படுகின்றார். ஆயின் இவர் கதையைக் கூறும் சேக்கிழார், தஞ்சாவூரில்.
சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண்குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந்த செருத்துணையார் பரவுத் தொண்டின்
நெறி நிற்றார் (பெரிய – 61-2)
எனப் பாடுகின்றார். இங்கு வேளாண் குடி முதல்வர் எனக் காட்டப்படுகின்றாரே தவிர, தஞ்சை மன்னர் எனச் சுட்டப் படவில்லை. இந்நிலையில் வேளாண்குடியைச் சார்ந்த இவர் தஞ்சையை ஆண்ட குறு நில மன்னராக இருந்திருக்க வாய்ப்பு அமைகிறது. எனவே இவ்வூரின் பழமை புலனாகிறது. மேலும் இவர் கதையிலேயே சேக்கிழார், உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந் தேவி – (பெரிய – 61-4) எனப்பாடும் நிலையில், அப்பொழுது ஆண்ட மன்னன் பல்லவன் என்ற உண்மை புலப்படுகிறது. எனவே பல்லவர் ஆட்சி காலத்திலேயே இவ்வூர்ப் பெயர் பற்றிய எண்ணம் தெளிவுபடுகிறது. முன்னர் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு. அங்கு இருந்த தஞ்சைத் தளிகுலத்தார் பற்றிய எண்ணம் திருநாவுக்கரசர் பாடலில் அமைகிறது (265-8), எனினும் பெரிய கோயில் அளவிற்கு இக்கோயில் பெருமையுடன் இருந்திருக்கவில்லை என்பதை, நாயன்மார் பாடல் நிலை காட்டுகிறது. திருவீழி மிழலை பதிகத்தில், பல கோயில் பெற்ற ஊர்களையும் சொல்லிச் செல்லும் நிலையில் தஞ்சைத் தளிக் குளத்தார் என இவர் பாடும் நிலையிலேயே இவ்வூர் பற்றி தெரிய வருகின்றோம். பெறாத தஞ்சை என்று மரூஉப் பெயராக அமையும் நிலையும் தஞ்சாவூர் என்றே வழங்கப்படும் நிலையும் நாம் காணும் நிலை இப்பாடல்களினின்றும் அமைகிறது. இவற்றுள் இவ்வூர்ப் பெயர் தோற்றம் குறித்த எண்ணங்கள் தெளிவு பெறவில்லை. எனினும் தஞ்சை என்பது மரூஉப் பெயர் என்பதைப் பலரின் கருத்து உறுதிப்படுத்துகிறது. தஞ்சாவூர் என்பதன் மரூஉவா ? அல்லது தஞ்சாக்கூர் என்பதன் மரூஉவா? என்பது மேலும் ஆய்விற் குரியது. திரு. நாச்சிமுத்து தஞ்சாக்கூர் என்பதன் மரூஉவே தஞ்சை என்கின்றார். வடமொழி நூலான தஞ்சாக்கூர் புராணம், தஞ்சாக்கூரின் முன்னைய பெயர் அளகாபுரி எனவும் : தஞ்சாசுரன் என்னும் அசுரன் காரணமாக இப்பெயர் எழுந்ததாகவும், தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி என்ற நூல் இவ்வூரைக்கருடங்கோட்டை எனவும், தஞ்சாறை தஞ்சாவூர் என்பதாகவும், புகலிடம் காரணமாக இப்பெயர் அமைந்ததாகவும் போன்ற பல கருத்துகளில் இறுதி கருத்தே ஒப்புக்கொள்ளக் கூடியது என்பது தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் ஆசிரியர் கருத்து (பக்- 34-35). தஞ்சன் என்ற அசுரன் ஊர் தஞ்சாவூர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று என்ற எண்ணமும் அமைகிறது புகலிடம் என்ற கருத்து பொருத்தமுடையதாயினும், தஞ்சாக்கூர் என்ற இதன் முதற்பெயர் மேலும் இவ்வூர் பற்றி ஆராயத் தூண்டுகிறது. ஆக்கூர் என்றதொரு பாடல் பெற்ற தலம் தஞ்சாவூர் மாவட் டத்தில் அமைகிறது. கோச் செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் பெற்ற தலம் இது. இங்கு வேளாளர் வாழ்ந்து சிறப்புற்ற நிலையை ஞானசம்பந்தர் பாடல் சுட்டுகின்றது. பிறருக்காக உணவு ஆக்குபவர் வாழும் ஊர் என்ற நிலையில் ஆக்கூர் என்ற பெயர் வந்தது என்பது ஆக்கூர் பற்றிய ஆய்வு தந்த கருத்து. தஞ்சை பற்றிய சேக்கிழார் எண்ணமும் வேளாளர் வாழ்ந்து சிறப்புற்றமையை நமக்கு உணர்த்துகிறது. நிலையில் தஞ்சாக்கூர் என்பதன் பழம் பெயர் ஆக்கூராக இருந்திருக்க வாய்ப்பு அமைகிறது. ஆக்கூரில் வாழ்ந்த வேளாளர் இங்கு வந்து குடியேறிய பின்னர் இதனைத் தனிப்படுத்த தம் ஆக்கூர் எனச் சுட்டியிருக்கலாம். பின்னர் இவ்வூர் தஞ்சாக்கூர் எனத் திரிந்திருக்கலாம் எனக் கொள்ளலாம். மேலும் ஆக்கூரில் உள்ள கோயிலும் மாடக்கோயில், கோச் செங்கட்சோழனால் கட்டப்பட்டது என அறிகின்றோம். தஞ்சாவூர் இருந்த மருக நாட்டுப் கோயிலும் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது அறிகின்ற பொழுது, இரண்டும் சைவப்பற்றுடையார் வாழ்ந்த நிலையிலும் ஒப்புமை காட்டுகிறது.