சோழனின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்குக் காகந்தி என்று ஒருபெயர் இருந்ததாகத் தெரிகிறது. இன்று இப்பெயர் வழக்கில் இல்லை. சோழ மன்னனுக்குக் கணிகை வயிற்றுதித்த ககந்தன் என்பவன், பரசுராமனுக்கு அஞ்சிப் புகார் நகரை விடுத்துச் செல்லலுற்ற தன் தந்தையின் கட்டளையால் அப்பதியைக் காத்தான். ககந்தனால் காக்கப்படுதலின் காகந்தி எனப் பெயரிட்டுச் சென்றான் சோழமன்னன் என்று மணிமேகலைமூலம் தெரிகிறது. நீலகேசியில் வேதவாகச் சருக்கத்தில் “காதம் பலவுங் கடந்த பின் காகந்திக் கடிநகருள்” என இப்பெயருள்ள நகரமொன்று கூறப்பட்டிருக்கிறது. ( உ.வே, சாமிநாதையர் மணிமேகலை முதற்பதிப்பு 1898 அபிதான விளக்கம் பக். 6) “பவ்வத்திரிக் கோட்டத்துக் காகந்தி நகரில் உள்ள பண்டரி கீசுரம், “இராசேந்திர சோழ மண்டலத்தப் பவ்வத்திரி” என்ற கல்வெட்டுத் தொடர்கள் மூலம் நெல்லூர் மாவட்டத்துக் கூடூர் வட்டத்து ரெட்டிப் பாளையம் பகுதியும், அதனையடுத்த பண்ட ரங்கம் என்ற பகுதியும் காகந்து எனப் பெயர் பெற்றிருந்தது எனத் தெரிகிறது. நெல்லூர் மாவட்டப் பகுதியை வென்ற கரிகாலனே தனது வளமார்ந்த தலைநகரின் பெயர்களுள் ஒன்றை புதிய நாட்டுக்கு இட்டான் எனக் கொள்ளலாம்.
“துயர் நீங்கு இளவியின் யான் தோன்றளவும்
ககந்தன் காத்தல் காகந்தி யென்றே
இயைந்த நாமம் இப்பதிக்கிட்டு”… (மணிமே. சிறைசெய் காதை. 36 38)
காண்ட வாயில் “கழிசூழ் படப்பைக் காண்டவாயில்” என்ற சங்க இலக்கியப் பாடலின் தொடரின்மூலம் நாம் அறியும் ஊர் காண்டவாயில் என்பது. மரக்காணத்தை அடுத்த மாண்ட வாயில் என்னும் ஊரே காண்டவாயில் என்று அறிஞர் எண்ணுகின் றார். இக்கருத்துப் பொருத்தமுடையதாகவே தோன்றுகிறது, காண்டம் என்றால் நீர் காண்ட வாயில் நீர்வாயில், நீர்த் துறை அல்லது நீர்க்கரை என்ற பொருளில் காண்டவாயில் என்ற ஊர்ப்பெயர் அமைந்திருக்கலாம் என்ற எண்ணம், மேற்காணும் மாண்டவாயில் என்பதே காண்ட, வாயிலாக இருக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது…
“…..தோழி! கலங்குநீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்
ஒலி காவோலை முள்மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பை எம்அழுங்கல் ஊரே”'(நற்.38:6 10) இவ்வூர் பனைமரங்கள் உயர்ந்த பெரிய மணல் மேட்டினை யுடையது என்பதை இன்றும் நேரில் காணலாம்..