மு.இராகவனார் (1878 – 1960)
–>Anna Centenary Library –>
19 February, 2024
மு.இராகவனார்
(1878 – 1960)
முத்துசுவாமி இராகவையங்கார் என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர்.
பிறப்பு
இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26-ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார்.[1] இவர் இளமையிலேயே தம் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரைத் தேவர் இவரை வளர்த்துக் கல்வி புகட்டினார்.
அவைக்களப் புலவர்
மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ஆம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.[2]
தமிழாசிரியர்
பாண்டித்துரைத் தேவரால் 1901-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2] அப்பணியை 1912-ஆம் ஆண்டு வரை ஆற்றினார்.
1944-ஆம் ஆண்டில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்புத் தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]
1945-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார்.[2] 1951-ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார்.
இதழாசிரியர்
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ஆம் ஆண்டு வரை அப்பணியைச் செவ்வனே ஆற்றினார்.[2] இவருக்கு முன்னர் 1901 – 03-ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை அ. நாராயண ஐயங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்.
பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[3]
தமிழ்ப் பேரகராதிக் குழுவின் தலைமை தமிழ்ப் பண்டிதர்
செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913-ஆம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்பணியைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது.[2]
பதிப்பாசிரியர்
அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார்.[4] இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.
வ.எண்
ஆண்டு
நூல்
01
1910
திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்
02
நரிவிருத்தம் அரும்பத உரையுடன்
03
சிதம்பரப் பாட்டியல் உரையுடன்
04
திருக்கலம்பகம் உரையுடன்
05
விக்கிரம சோழனுலா
06
சந்திரா லோகம்
07
கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை
08
1936
பெருந்தொகை
09
1936
திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்
10
1949
அரிச்சந்திர வெண்பா
11
1951
கம்பராமாயணம் – பால காண்டம்
12
1953
திரிசிராமலை அந்தாதி
13
1958
கம்பராமாயணம் – சுந்தர காண்டம்
நூல்கள்
மு. இராகவையங்கார் தன்னுடைய கருத்துகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை வருமாறு:
வ. எண்
ஆண்டு
நூலின் பெயர்
பொருள்
01
1905
வேளிர் வரலாறு
வரலாறு
02
1912
தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி
திறனாய்வு
03
1915
சேரன் செங்குட்டுவன்
வரலாறு
04
1924
தமிழரும் ஆந்திரரும்
ஆராய்ச்சி
05
1926
ஆழ்வார்கள் காலநிலை
வரலாறு
06
1929
சாசனத் தமிழ்க்கவி சரிதம்
வரலாறு
07
1938
ஆராய்ச்சித் தொகுதி
இலக்கிய ஆராய்ச்சி
08
1939
திருவிடவெந்தை எம்பெருமான்
திருமங்கை ஆழ்வார் பாடல்களின் விளக்கம்
09
1947
சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி)
இலக்கிய ஆராய்ச்சி
10
1948
செந்தமிழ் வளர்த்த தேவர்கள்
வரலாறு
11
1950
Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes
12
1950
இலக்கியக் கட்டுரைகள்
இலக்கிய ஆராய்ச்சி
13
1951
சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி)
இலக்கிய ஆராய்ச்சி
14
1958
வினைதிரிபு விளக்கம்
இலக்கணம்
15
1959
கட்டுரை மணிகள்
இலக்கிய ஆராய்ச்சி
16
1969
தெய்வப் புலவர் கம்பர்
வரலாறு
17
இலக்கிய சாசன வழக்காறுகள்
வரலாறு
18
நூற்பொருட் குறிப்பகராதி
19
நிகண்டகராதி
சொற்பொழிவாளர்
மு. இராகவையங்கார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் சில நூல்களாகவும் வெளிவந்தன. அவர் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகள் சில:
வ. எண்
ஆண்டு
தலைப்பு
இடம்
தலைமை
01
1929
சாசனத் தமிழ்க்கவி சரிதம்
சென்னைப் பல்கலைக் கழகம்
உ. வே. சாமிநாதையர்
02
1950
காந்தளூர்ச் சாலை
திருவனந்தபுரம் பல்கலைக் கழகம்
சர். சி. வி. இராமன்
03
1950
சேரத் தமிழ் இலக்கியங்கள்
திருவனந்தபுரம் பல்கலைக் கழகம்
கோபால மேனன்
04
1959
தெய்வப் புலமை
சென்னை மாநிலக் கல்லூரி
தெ. பொ. மீனாட்சிசுந்தரம்
05
கம்பனின் தெய்வப் புலமை
காரைக்குடி கம்பன் கழகம்
சா. கணேசன்
மறைவு
மு. இராகவையங்கார் தன்னுடைய 18-ஆம் அகவை முதல் 82-ஆம் அகவை வரை தமிழ்த் தொண்டாற்றி 1960 பிப்ரவரி 2 ஆம் நாள் மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.
மு.இராகவனார்
(1878 – 1960)
மதுரைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில் ஆசிரியராகவும், பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் இருந்தார்.
செந்தமிழ் பத்திரிகையின் ஆசிரியராகவும், கௌரவாசிரியராகவும், கலைமகள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியவர்.
முக்கிய நூல்கள்
சாசனக்கவி சரிதம், சேரன் செங்குட்டுவன்
ஆழ்வார் கால நிலை, வேளிர் வரலாறு
Some Aspects of Kerala from Tamil Literature
பதிப்பித்தவை
பெருந்தொகை
திவாகர நிகண்டு
தமிழ்நாவலர் சரிதை
திருக்குறள்(பரிமேலழகர் உரையுடன்)
ஆதாரம்: மூதறிஞர் மு.ராகவையங்கார்(2004): சா.கிருட்டிணமூர்த்தி,ச.சிவகாமி(ப.ர்).உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்