‘மனோன்மணீயம்’ சுந்தரனார் (1855-1897)
–>Anna Centenary Library –>
08 March, 2024
‘மனோன்மணீயம்’ சுந்தரனார் (1855-1897)
அறிமுகம்
பெ. சுந்தரனார் கேரளம், ஆலப்புழையில் பிறந்தவர் . இவர் நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். திருவனந்தபுரம் மகராஜாக் கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ. பட்டங்கள் பெற்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் தமிழ்நாடகத் துறை, கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
தமிழ் பணி
கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப்படியெடுத்து உள்ளார்.
தமிழ் வரலாற்றை கல்வெட்டுகளின் வழியாக ஆராய்ந்து வகுக்கும் முறையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர்.
தமிழின் தனித்தியங்கும் தன்மையையும் பண்பாட்டு மேன்மையையும் வலியுறுத்தியவர்.
தமிழ்மொழியை திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமை மொழியாக முன்னிறுத்தியவர்.
திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தவர்.
தமிழ் இலக்கியங்களின் வழியாக தமிழக வரலாற்றின் காலத்தை கணிக்கும் முறைக்கு முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர்.
‘திருஞானசம்பந்தர் காலம்’ என்னும் இவரது நூல் சம்பந்தரின் காலத்தை ஆதாரபூர்வமாக வரையறை செய்தது. அதிலிருந்து மற்ற காலக்கணிப்புகள் நடைபெற்றன.
மொழிபெயர்ப்பு
பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ. சுந்தரனார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
படைப்புகள்
லிட்டன் பிரபு எழுதிய ‘ரகசிய வழி’ கதையின் தழுவலாகத் தன்னுடைய ‘மனோன்மணியம்’ நாடகத்தைப் பெ.சுந்தரனார் எழுதினார். நாடக மறுமலர்ச்சிக்கு திருப்புமுனையாக இந்நூல் அமைந்தது.
‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற நூலை உரைநடையில் எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு.
திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார்.
ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார்.
சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
இவர் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
‘மனோன்மணீயம்’ என்ற நாடகத்தின் காரணமாக இவர் ‘மனோன்மணீயம் சுந்தரனார்’ என அழைக்கப்பட்டார்.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ‘மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்’ இவரது பெயரால் அமைக்கப்பட்டுள்ளது.