சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம்

முனைவர் ப.பாண்டியராஜா
(www.tamilconcordance.in)


105

52

77

24

121

13

36

20

5

32

20

1
க்
124
கா
24
கி
12
கீ
2
கு
58
கூ
17
கெ
9
கே
7
கை
23
கொ
48
கோ
28
கௌ
1
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
15
சா
42
சி
51
சீ
7
சு
29
சூ
13
செ
66
சே
17
சை
1
சொ
6
சோ
4
சௌ
ஞ்
3
ஞா
15
ஞி
4
ஞீ ஞு ஞூ ஞெ
17
ஞே ஞை ஞொ
1
ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
113
தா
23
தி
54
தீ
13
து
76
தூ
25
தெ
44
தே
25
தை
6
தொ
44
தோ
16
தௌ
1
ந்
82
நா
44
நி
40
நீ
21
நு
30
நூ
11
நெ
39
நே
12
நை
3
நொ
24
நோ
13
நௌ
1
ப்
245
பா
80
பி
63
பீ
7
பு
173
பூ
19
பெ
48
பே
25
பை
22
பொ
76
போ
37
பௌ
1
ம்
240
மா
85
மி
35
மீ
13
மு
163
மூ
24
மெ
14
மே
30
மை
9
மொ
6
மோ
11
மௌ
1
ய்
2
யா
30
யி யீ யு யூ
2
யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
236
வா
71
வி
120
வீ
15
வு வூ வெ
81
வே
67
வை
18
வொ வோ வௌ
2
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மக

மக – (பெ) குழந்தை, குட்டி, child or young one of an animal
கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/15
தன் குழந்தையைக் காணாமற்போக்கிய பெண்டிர் போல தேடித்திரியும்

மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38
குட்டி இறுகப்படித்துக்கொண்ட குரங்கு மலைக்கு மலை தாவ,

மகடூஉ

மகடூஉ – (பெ) பெண், female, woman
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 58
குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப

மகட்கொடை

மகட்கொடை – (பெ) தன் மகளைத் திருமணம்செய்துகொடுத்தல், giving away one’s daughter in marriage
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/3-5
நீருண்ணும் துறையில் நீர்மொள்ளும் மகளிர் வெருண்டு ஓட,
வாளை மீன் நீருக்குள் பிறழும் ஊரனாகிய தலைவனுக்கு, ஒவ்வொரு நாளும்
ஒரு பெண்ணை மணமுடிக்க நேர்ந்துவிடும் அறிவில்லாத பெண்ணே!

மகன்

மகன் – (பெ) 1. ஆண் குழந்தை, son
2. ஆண், ஆள், man
3. நல்லவன், சிறந்தவன், goodman, exalted man
1.
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 9/6,7
என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும்
தமக்குத்தாமே காதல் கொண்டு, இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்தனர்,
2.
வாழ்வோர் போகிய பேர் ஊர்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/9,10
குடிமக்கள் விட்டு ஓடிப்போன பெரிய ஊரில்
பாழ்பட்ட இடங்களைக் காவல்புரிந்து நிற்கும் தனி ஆளைப் போல
3.
நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/6-9
நீயோ பெண்மை நலம் மிகுதியாகப் பெற்றவள்; உன் கணவனோ
ஆழமான நீரையுடைய பொய்கைக்கு நள்ளிரவில் சென்று
குளிர்ச்சியுடன் மணங்கமழும் புதிய மலரில் தேனுண்ணும்
வண்டு என்று சொல்வார்கள், அவனை நல்லவன் என்று யாரும் சொல்லமாட்டார்.

மகன்றில்

மகன்றில் – (பெ) இணைபிரியாத நீர்வாழ் பறவைகள், a species of aquatic love-birds
பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/1,2
(நீர்ப்பரப்பில் இணையாகப் பறந்து வரும்போது)
ஒரு பூ இடையில் வந்தாலும், (அதனால் ஏற்படும் பிரிவினால்) ஓர் ஆண்டு கழிந்ததைப் போன்ற
நீரில் வாழும் மகன்றில்களின் சேர்க்கை போல

வார் சிறை
குறும் கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கை காதலோரே – ஐங் 381/3-5
நீண்ட சிறகுகளையும்,
குட்டையான கால்களையும் கொண்ட மகன்றில் பறவையைப் போல
சேர்ந்தே இருக்கும் கொள்கையினையுடைய காதலர்கள்!

அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44
மலர்களினூடே திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற

மகமுறை

மகமுறை – (பெ) தாய்பிள்ளை உறவு, close relationship
தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப – சிறு 192
தொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க,

மகம்

மகம் – (பெ) 27 நட்சத்திரங்களுள் பத்தாவது நட்சத்திரம், the 10th nakṣatra;
மதி சேர்ந்த மக வெண் மீன் – பட் 35
சந்திரனைச் சேர்ந்த மகம் என்னும் வெள்ளிய மீனின்

மகரப்பகுவாய்

மகரப்பகுவாய் – (பெ) சுறாமீனின் திறந்த வாயின் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
a head ornament shaped like an open-mouthed shark
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகரப்பகுவாய் தாழ மண்_உறுத்து – திரு 24,25
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கச் செய்து,

மகரம்

மகரம் – (பெ) 1. பத்தாம் இராசி., மகரராசி, the tenth contellation, Capricorn of the zodiac;
2. சுறாமீன், shark
1.
இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ – பரி 11/8,9
யமனைத் தமையனாகக் கொண்ட சனி
தனுராசியின் பின்னர் உள்ள மகரராசியில் நிற்க
2.
மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/72
சுறாமீனையுடைய அலைபுரளும் அந்தப் பாற்கடலில் வைத்து நிலைபெறச் செய்து

மகரவலயம்

மகரவலயம் – (பெ) சுறாமீன் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
a head ornament shaped like a shark
ஏறி மகரவலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77
தாக்கிக் கொல்லும் சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய மகளிர்,

மகரவாய்

மகரவாய் – (பெ) சுறாமீனின் திறந்த வாயின் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
a head ornament shaped like an open-mouthed shark
பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை – கலி 54/6
பொன்னால் செய்யப்பட்ட மகரமீன் வடிவான தலைக்கோலத்தை விழுங்கிய கூந்தல் முடிப்பை

மகள்

மகள் – (பெ) 1. பெண் குழந்தை, daughter
2. பெண், woman
1.
குவளை உண்கண் என் மகள் – நற் 271/8
குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகள்
2.
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் – நற் 274/3,4
உழை மானின் அழகிய பெண்ணானது உராய்தலால், இழை அணிந்த ஒரு பெண்ணின்
பொன்னால் செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்

மகள்கொடை

மகள்கொடை – (பெ) பார்க்க : மகட்கொடை
மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/5

மகவு

மகவு – (பெ) குழந்தை, குழவி, குட்டி, child, young of animals
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 58
குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப

மகவு உடை மந்தி போல – குறு 29/6
குட்டியை உடைய குரங்கு போல

மகாஅஅர்

மகாஅஅர் – (வி.வே) மக்களே! Oh! sons!
சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர் – புறம் 291/1
சிறுவர்களே! துடிப்பறை கொட்டுபவர்களே! பாடுதல் வல்ல மக்களே!

மகாஅன்

மகாஅன் – (வி.வே) மகனே, Oh! son!
சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன் – பரி 8/57
சான்றாளர் பெற்றெடுத்தும் அதற்குத் தகுதியில்லாத மகனே!

மகார்

மகார் – (பெ) 1. குழந்தைகள், சிறுவர், children
2. மகன்கள், sons
1.
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 236,237
தீவிரமாய்ப் பறையடிக்கும் கழைக்கூத்தாடிகளின் பிள்ளைகளைப் போன்று,
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்
கன்று கடாஅ_உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 336-339
காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி,
உருண்டு திரண்ட குலைகளையுடைய பலாவின் சுளைகள் நன்கு பழுத்த இனிய பழத்தினை
தின்று விழுந்த மீதமான(பழங்களின்) கொட்டைகளின் பயன் கொள்ள(=அவற்றை எடுக்க)
கன்றுகளால் (அப் பழங்களின்மீது)போரடிக்கும் சிறுவர்களின் ஓசையும்;
2.
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 217,218
செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள்

மகிழம்

மகிழம் – (பெ) ஒரு மரம்/பூ, a tree/its flower, pointed-leaved ape-flower, Mimusaps elangi
ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம்
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/7,8
இவ்வூரின் ஒரு பக்கத்தே, அழகிய மலர்களையுடைய வேங்கை, வெண்கடம்பு, மகிழம்,
அரும்புகள் கட்டவிழ்ந்த அசோகம் ஆகியவை உயர்ந்து ஒன்றுகூடி வளர்ந்து

மகிழம் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும். இது வகுளம், இலஞ்சி, மகிழ் என்றும் அழைக்கப்படும்
இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும்
ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும்.
இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர்.

மகிழ்

மகிழ் – 1. (வி) 1. உவ, மனம் மகிழ்ச்சிகொள், be happy, rejoice
2. குடித்துவிட்டு மகிழ்ச்சியாயிரு, revel
3. உண், அருந்து, take in, drink
4. குரை, bark
– 2. (பெ) 1. மகிழ்ச்சி, உவகை, joy, happiness
2. மது அருந்துவதால் ஏர்படும் களிப்பு, intoxication
3. கள், toddy
1.1
வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே – புறம் 192/4,5
வாழ்தலை
இனிதென்று உவந்ததும் இலம்
1.2
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும்
மகிழ்கம் வம்மோ மற போரோயே – புறம் 364/6-8
கள்ளுண்ணும் சிவந்த வாயிலிட்டு நாவானது இரு மருங்கும் புரட்டிக்கொடுக்க
தின்றும் உண்டும் இரவலரை உண்பித்தும்
மகிழ்வோம் வருவாயாக மறம் பொருந்திய போரைச் செய்பவனே!

இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் – நற் 38/3,4
கரிய பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழ்ச்சியோடிருக்கும்
பெருத்த ஆரவாரம் மிக்க புதியவரவுகளைக் கொண்டிருப்பினும்,
1.3
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து
மாண் இழை மகளிர் புலந்தனர் – மது 678-680
வானத்தில் கடந்து செல்லும் நீல நிறமுடைய முகிலினில்
மின்னுக்கொடி நுடங்கின தன்மையுடையவராய், மதுவை உண்டு,
மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய்,
1.4
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின்
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – அகம் 122/7-11
விளங்கும் வேலினராகிய காவலர்கள் துஞ்சினும், கூரிய பல்லினையும்
வலமாகச் சுரிதலையுடைய வாலினையுமுடைய நாய் குரைக்கும்
ஒலி மிக்க வாயினையுடைய நாய் குரையாது உறங்கினும்
பகலின் ஒளியினை ஒக்க நிலவினைத் தந்து
வானின்கண் அகற்சி வாய்ந்த மதியம் விளங்கிப் பரவும்

மகிழ்தல் – மகிழ்ந்து குரைத்தல் என்பார் வேங்கடசாமி நாட்டார். ஒருவேளை வெறித்தனமாகக்
குரைப்பதை அவ்வாறு குறிப்பிட்டார் போலும்.
2.1
தமிழ் நிலைபெற்ற தாங்க அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே – சிறு 66,67
தமிழ் வீற்றிருந்த, (தானே)தாங்க முடியாத பாரம்பரியத்தையுடைய,
மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே
2.2
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33
வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு,
2.3
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி – புறம் 269/7,8
வடித்த கள்ளை ஏந்தி உண்க என்று வேண்டியும், அதனைக்
வேண்டா என்று கொள்ளாய், கள்ளினை வாழ்த்தி

மகிழ்நன்

மகிழ்நன் – (பெ) 1. மருதநிலத் தலைவன், chief of an agricultural tract
2. கணவன், husband
1.
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – நற் 70/8,9
வயல்களையுடைய நல்ல ஊரினையுடைய எனது காதலரிடம் சென்று என்னுடைய
அணிகலன்கள் கழன்றுபோகும் துன்பத்தை இதுவரை சொல்லாதிருக்கின்றாய்!
2.
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர் – ஐங் 32/1-3
தோழியே கேட்பாயாக! எம் தலைவனான கணவன்
ஒரே ஒருநாள் நமது வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள்
அழுதிருந்தனர் என்று சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர்

பொதுவாக ஊடலும் ஊடல் நிமித்தமும் என்ற உரிப்பொருளைக் கொண்ட மருதத்திணைப் பாடல்களில் வரும்
பாடல் தலைவன் மகிழ்நன் எனப்படுவான்.

மகுளி

மகுளி – (பெ) 1. எள் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய்
Redness, a disease affecting sesame and other plants;
2. ஓர் இசைக்கருவி (தோல் கருவி ?), a musical instrument, probably a percussion instrument
1.
நீலத்து அன்ன விதை புன மருங்கில்
மகுளி பாயாது மலி துளி தழாலின்
அகளத்து அன்ன நிறை சுனை புறவின்
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 102-106
நீல மணிகள் போன்ற (விதைகள்)விதைக்கப்பட்ட கொல்லைக்காட்டின் பக்கத்தே,
மகுளியென்னும் அரக்குநோய் பரவாமல், மிகுந்த மழைத் துளியைத் தழுவுதலால்,
நீர் இறைக்கும் சாலைப் போன்று நிறைந்த சுனைகளையுடைய காட்டுநிலத்தில்,
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்
நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்;
2.
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/40-44
ன்றோடொன்று ஒத்து இசைக்கும் குழல் வாத்தியங்களினின்றும் இசை எழ, முழவின் முழக்கத்தோடு
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின்
தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;
3
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/4,5
உருண்டையான உடுக்கின் ஓசையைப் போன்று, பொருள் தெரிந்து ஒலிக்கும்
கடும் குரலையுடைய ஆந்தைகள் உள்ள உயரமான பெரிய மலையில்,

இங்கு மகுளி என்பதற்குப் பெரும்பாலும் ஓசை என்றே பொருள்கொள்ளப்படுகிறது. எனினும் பரிபாடலில்
காணப்படும் மகுளி என்பதை ஓர் இசைக்கருவியாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.
அங்கு மகுளி என்பதனுடன் கொடுக்கப்பட்டுள்ள முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை ஆகியன
தோற்கருவிகளாதலால், மகுளி என்பதுவும் ஒரு தோற்கருவி என்றே கொள்ளத்தோன்றுகிறது.
இங்கு இது துடியுடன் சேர்த்துக் கூறப்படுவதால், துடியாகிய மகுளி எனக்கொண்டு, மகுளியைத் துடி
என்ற உடுக்கு வகைக் கருவி எனக் கொள்ளத்தோன்றுகிறது.

மக்கள்

மக்கள் – (பெ) 1. மனிதர்கள், people, human beings
2. ஒருவருக்குப் பிறந்தவர்கள், மகன்,மகள் ஆகியோர், children, sons and daughters
1.
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/3,4
பாலைவழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில்
மனிதர்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய
2.
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3
என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினர்

மங்குல்

மங்குல் – (பெ) 1. மூடுபனி, தாழ்ந்து வரும் மேகம், fog, low lying clouds
2. இருள், darkness
3. மேகமூட்டம், sky overcast with clouds
1.
குரூஉ குய் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால் – மது 757,758
நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப்
பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே

சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/6-8
மலைச் சாரலில்
அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
அசைகின்ற மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும்

கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – கலி 105/24,25
கார்காலத்தில் தோன்றிய மிகுந்த ஒலியினையுடைய கடுமையான பேரிடியைப் போன்று இசைக்கருவிகள் முழங்க,
பரந்து உயர்ந்து எழுந்து அசைவாடும் மூடுபனியைப் போல நறுமணப்புகை மேலெழ,

திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் – புறம் 379/16,17
செல்வமுடைய நின் திருமனைக்கண் மெல்லிதாகத் தோன்றும் நறிய புகை
பெய்தற்கு வரும் மழை முகில் படிந்து மறைப்பது போல தெருவெல்லாம் ஒருங்கு மறைக்கும்

புடை நடுகல்லின் நாட்பலி ஊட்டி
நன்னீராட்டி நெய் நறை கொளீஇய
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் – புறம் 329/2-4
பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலத்துப் பலியை ஊட்டி
நல்ல நீரையாட்டி, நெய்விளக்கேற்றுதலால் உண்டாகிய
மேகம் போலும் புகை எழுந்து தெருவில் மணக்கும்

முனை சுட எழுந்த மங்குல் மா புகை
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/6,7
பகைவரின் முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த மங்குலாகிய கரிய புகை
மலையைச் சூழும் முகில் போல இளம் களிற்றைச் சூழும்

கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப – அகம் 37/2-4
பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர்
தூற்றாப் பொலியை முகந்து தூற்ற எழும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
மூடுபனி வானத்தைப் போன்று நாற்புரத்தையும் மறைக்க –

மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/1-3
பெரிய கழியின் நீலமணி போன்ற பூக்கள் கூம்ப, தூவுகின்ற அலைகளினின்றும்
பொங்கி வரும் சிதறல்கள் கொண்ட துவலையோடு, தாழ்ந்த முகில்களையும் சேர்த்துக்கொண்டு
செயலற்றுப்போக வந்த தடவிச்செல்லும் வாடைக்காற்றோடு

தொடை மடி களைந்த சிலை உடை மறவர்
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி
வரும் கடல் ஊதையின் பனிக்கும் – பதி 60/9-11
அம்பினைத் தொடுப்பதில் சோம்பலைக் களைந்த வில்லையுடைய மறவர்கள்
பொங்குகின்ற சிறு திவலைகளைச் சிதறும் அலைகளோடு, தாழ்ந்து வரும் மேகங்கள் கலந்து
வரும் கடலின் குளிர்ந்த காற்றில் மிகவும் நடுக்கம்கொள்ளும்,
2.
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும்
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி – பெரும் 480-482
இருண்ட வானத்தின்கண் திங்களைப் போன்று
உலாவும் வண்டுகள் ஒலியாத, தீயில் மலர்ந்த வெண்பொற்றாமரையை
நீண்ட கரிய மயிரில் அழகுபெறச் சூட்டி;
3.
சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/1-3
திரும்புவேன் என்று தலைவர் சொல்லிச் சென்ற பருவமும் வந்துசென்றுவிட்டது; பகற்போதிலும்
இருள் கலந்த நள்ளிரவைப் போல மேகமூட்டத்துடன் சேர்ந்து
ஆரவாரத்தையுடைய மேகங்கள் நீர் நிறைந்து வானத்தில் இயங்க

மங்குல் என்பதற்குப் பல பொருள்கள் கூறப்பட்டாலும், மிகப்பெரும்பாலும் இது புகை மூட்டத்திற்கு
ஒப்பிடப்படுவதால், மங்குல் என்பது மேகங்கள் தாழ்ந்துவருவதால் ஏற்படும் மூட்டமான நிலை
என்பது பெறப்படும்.

மஞ்சனம்

மஞ்சனம் – (பெ) நீராட்டுதல், Ablutions, used of great persons; ceremonial bath as of a deity
கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/89
கழுவப்படும் தன்மையுள்ள மஞ்சனப் பொருள்களும், குங்குமம், குழம்பு முதலியனவும் கலந்து கலங்கலாகி

மஞ்சள்

மஞ்சள் – (பெ) வேரில் கிழங்கு வைக்கும் ஒரு செடி, Turmeric, curcuma longa;
1. இது சேரநாட்டு நீர்நிலை ஓரங்களில் செழித்து வளரும்.
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா
குளவி பள்ளி பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் – சிறு 42-47
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன்
2.
வீட்டு முற்றங்களில் இதன் கிழங்கைப் புதைத்துவைத்துச் செடியாக இதனை வளர்ப்பர்.
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை – பெரும் 353-355
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணம் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
தோப்புகளில் வாழும் உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில்
3.
முற்றாத மஞ்சள்கிழங்கின் சொரசொரப்பான முதுகினைப் போல இறாமீன்களிருக்குமாம்.
முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் – நற் 101/1,2
முற்றாத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்
சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்
4.
இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகற்களை நீராட்டி, மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூசுவர்.
ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய – அகம் 269/3-9
ஏறுகளுடன் கூடிய பசுவினமாய் நிரைகள் மீளவும், மீளாது நின்று
திணிந்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி மறவரைத் தடுத்துப் பொருது பட்ட
அஞ்சாமையுடைய கரந்தை வீரரது நல்ல புகழை நிலைநிறுத்துமாறு
பெண்யானைகள்கிடந்தாலொத்த குன்றுகளின் பக்கத்தே
நட்டு வைத்தலைப் போன்ற இயற்கையில் எழுந்த நீண்ட கற்களின்
அகன்ற இடத்தைச் செதுக்கி இயற்றிய பல வடிவுகளையும் நீராட்டி
நறுமணமுள்ள மஞ்சள் அவற்றின் ஈரிய புறத்தில் விளங்குமாறு பூசி

மஞ்சிகை

மஞ்சிகை – (பெ) கூடை, basket
உரு கெழு கரும்பின் ஒண் பூ போல
கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 162,163
அழகு பொருந்திய கரும்பின் பிரகாசமுள்ள பூவைப் போன்ற,
சோறுடைய கொழுவிய கூடைக்கும்,

மஞ்சு

மஞ்சு – (பெ) 1. மேகம், cloud
2. வெண்மேகம், white cloud
3. மூடுபனி, fog
1.
முனை சுட எழுந்த மங்குல் மா புகை
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/6,7
பகைவரின் முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த மங்குலாகிய கரிய புகை
மலையைச் சூழும் முகில் போல இளம் களிற்றைச் சூழும்
2.
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 262-265
துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் உடைய மகளிர்
அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல்
(நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மேகத்தின் இடையே (அணையாக)விரித்து,
தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்,
3.
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது
பெரும் களிறு பிளிறும் சோலை – நற் 222/7-9
வாழை மரங்கள் உயர்ந்து, சுரபுன்னை மரங்களுடன் பொருந்திய மலைச்சாரலில்
தூங்கும் தன் பெண்யானையின் பக்கத்தில் மூடுபனி சூழ்ந்திருக்க, அதனைக் காணாது
பெரும் களிறு பிளிறும் சோலையுள்

மஞ்ஞை

மஞ்ஞை – (பெ) மயில், peacock
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/1,2
காட்டு மயில் பாறையில் இட்ட முட்டையை
வெயிலில் விளையாடும் குரங்குக்குட்டி உருட்டும்

மடங்கல்

மடங்கல் – (பெ) 1. சிங்கம், lion
2. யமன், Yama, as subduer of all things
3. ஊழிப்பெருந்தீ, வடவைத்தீ, வடவாமுகாக்கினி,
பெண்குதிரை முகத்தின் வடிவில் கடலுள் தங்கியிருந்து, யுகமுடிவில் வெளிப்பட்டு,
உலகத்தை அழித்துவிடுவதாக நம்பப்படும் தீ,
A submarine fire in the shape of a mare’s head believed to consume the word at
the end of an aeon
4. ஊழியின் முடிவுக்காலம், end of an aeon
5. இறப்பு, சாவு, death
6. கூற்றுவன், யமனுக்கு ஏவல் செய்பவன், attendent of Yama
7. மடங்கிப்போதல், கீழ்ப்படுதல், turning about, submission
1.
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என – நற் 57/1,2
வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் உள்ள
குன்றிலுள்ள வேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் படுத்திருந்ததாக,
2.
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற_கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் – கலி 2/3-5
யமனைப் போல் சினங்கொண்டு, அழிவு செய்யும் அந்த அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது இருந்த பொறி பறக்கும் முகத்தினைப் போல, வெண் கதிர் வீசும் ஞாயிறு
சுட்டுப்பொசுக்குவதால்,
3.
பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை
சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே – பதி 72/14-16
பொங்கியெழும் பிசிரினையுடைய வெள்ளத்தை வற்றச் செய்யும் சிவந்த சுவாலைகளோடு தோன்றும்
ஊழிப்பெருந்தீயைப் போன்றவன்,
சினம் பொருந்திய குருசிலே! உன்னைக் கோபப்படுத்தியவர்களுக்கு.

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும் – கலி 105/20
ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும்,
4.
நால் திசையும் நடுக்கு_உறூஉம் மடங்கல் காலை
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/8,9
நான்கு திசைகளும் நடுக்கமுறும் ஊழியின் முடிவுக்காலத்தில்
கூற்றுவன் சிரிப்பது போன்று அச்சத்தை வருவித்துக் கொடுமை செய்யும் மாலைக்காலமே
5.
வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 363/7-9
இறவாமல்
உடம்போடே என்றும் இருந்தவர் யாருமில்லை
இறப்பு உள்ளது பொய்யன்று
6.
தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும்
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/8-10
அசுவினி, தேவர் ஆகிய இருவரும், இயமனும், கூற்றுவனும்,
மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும்,
மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,
7.
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
புல்லி அவன் சிறிது அளித்த_கால் என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் – கலி 122/17-19
என்னை நினைத்துப்பார்க்கவும் செய்யாத பண்பற்றவன் என்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தும்
என்னைத் தழுவிக்கொண்டு அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
அல்லல்படும் நெஞ்சம் மடங்கிப்போவதையும் காண்கிறேன்;

மடங்கு

மடங்கு – (வி) 1. வளை, மடி, கோணு, become bend
2. ஒடுங்கு, be absorbed
3. சுருங்கு, அடங்கு, shrink, be contained
4. இணங்கு, கீழடங்கு, yield, submit
5. தீய்ந்துபோ, கருகிப்போ, be burnt
6. குறைவுபடு, be diminished
7. மீள், திரும்பிச்செல், go back, return
8. உக்கிரம் அடங்கு, be decreased in force
1.
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/9-11
சிறப்பான கலப்பையில் இறுக்கப்பட்ட கொழுவினைப் போல் முடங்கியும், வளைந்தும்
சுருட்டிவிட்டதைப் போன்ற நிறைந்த அழகால், எனக்குப்
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன்,
2.
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்_கண் பெயர்ப்பான் போல்
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/1-3
பழைய ஊழிக்காலத்தில் உயிர்கள் தோன்றி, பின் முறைகெட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கக்கூடிய ஊழி முடிவில்,
பல அண்டங்களில் வாழும் அந்த உயிர்கள் அனைத்தையும் படைத்த தன்னிடமே அடக்கிக்கொள்ளும்
இறைவனைப் போல,
பகற்பொழுதைச் செய்யும் சுடுகின்ற கதிர்களைத் தன்னிடத்தில் மீட்டுக்கொண்டு ஞாயிறு மறைய,
3.
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/1-3
பலருக்கும் நிழல் போல் இனியனவனாக இருந்து உயர்ந்தோர் பாராட்ட
அரசாளும் கடமையை நிறைவேற்றமுடியாமல், சிறிய வழியிடத்தில் அடங்கி
என்றும் நிலைபெறும் நடுகல்லாக நீ ஆனபோதும்
4.
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு_களம் போலும் தொழூஉ – கலி 104/57-59
போரினை விரும்பி அதனை மேற்கொண்ட நூற்றுவர்கள் கீழடங்க
வரிந்து கட்டப்பட்ட வலிமை பொருந்திய வில்லினையுடைய ஐவர் போரிட்ட
போர்க்களம் போன்று இருந்தது தொழுவம்;
5.
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/1,2
தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்
6.
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே – புறம் 200/16,17
உனக்கு அடங்கிநடக்காத மன்னரை அடக்கிவைக்கும்
குறையாத மிக்க விளைதலையுடைய நாட்டையுடையோய்

’மடங்கா விளையுள்’ என்பதற்கு ‘மடக்கப்படாத மிக்க விளையுள் – போகம் பல தலையாப் பல்கிப் பெருகலின்,
மடக்குதல் “போகம் ஒருக்குதல்” – ஒருக்குதல் வரையறுத்தல் என்பார் ஔவை.துரைசாமியார்.
7.
மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்கா தானை வேந்தர் – புறம் 71/1,2
சிங்கம் போல் சினந்து, மீளாத மேற்கோள் பொருந்திய உள்ளத்தினையும்
மிகைத்துச் செல்லும் படையையும் உடைய வேந்தர்
8.
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு_உறாஅ
பொருள்_வயின் நீடலோ இலர் – அகம் 233/10-13
குறியனவும் நெடியனவுமாய குன்றுகள் இடந்தோறும் உள்ள
சுரத்தினைக் கடந்து சென்றவராயினும் மிகப்பெரிதும்
அடங்காத உள்ளமுடையவராய் அறிவு மயங்குதலுற்று
பொருள் ஈட்டுதலைக் கருதி தாழ்த்திருத்தல் இலராவர்.

மடந்தை

மடந்தை – (பெ) 1. பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண்,
Woman between the ages of 14 and 19;
2. பெண், woman
1.
சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி
பொன் ஏர் மேனி மடந்தையொடு
வென் வேல் விடலை முன்னிய சுரனே – ஐங் 388/3-5
சிறிய குன்றின் இறக்கத்தில் நின்று பார்த்தால் காணலாம், செறிவாக வளையல்கள் அணிந்த
பொன்னைப் போன்ற மேனியையுடைய சிறுபெண்ணுடன்
வெற்றிகொள்ளும் வேலினையுடைய இளைஞன் சென்ற வழியை
2.
மணி மலை பணை தோள் மா நில_மடந்தை
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 1-3
மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்

மடன்

மடன் – (பெ) பார்க்க : மடம்
கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின்
நயன் உடைமையின் வருதி இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/1-5
வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுதலில் வல்ல ஆணானது
வழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில்
திரளான மீன்களுள்ள கரிய கழியை நீந்திக் கடந்து, நீ உனது
அன்புடைமையால் வருகிறாய்; இவள் தனது
அறியாமை உடைமையால் மகிழ்கிறாள்;

மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இது – குறி 19-21
(என் பெற்றோரின்)விருப்பமும் (எனது)மடனும் ஒருசேர நீங்கிப்போக,
நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி,
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது

மடன் – கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை என்னுமொரு பெண்மைப் பண்பு

அன்பும் மடனும் சாயலும் இயல்பும் – அகம் 225/1
அன்பு – ஒருவரையொருவர் இன்றியமையாக்கேதுவாகிய காதல்
மடன் – ஒருவர்குற்றம் ஒருவர் அறியாமை
சாயல் – மென்மைத்தன்மை
இயல்பு – ஒழுக்கம்

மடமை

மடமை – (பெ) அறிவின்மை, அறியாமை, stupidity, ignorance
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருள்_பிணி போகி தம்
இன் துணை பிரியும் மடமையோரே – அகம் 43/13-15
(நிச்சயமாய்) இரங்கத்தக்கவராவர் – இரக்கமின்றி
அயல்நாட்டுப் பொருளீட்டும் ஆசையால் பிரிந்து சென்று தம்முடைய
இனிய துணையைப் பிரியும் அறிவில்லாதோர்

தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையின் புலக்கம்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/4-6
குளிர்ந்த பெரிய கடல் என்னை வருத்துவதாக! தோழி!
இல்லாள் அறியாமையில் ஊடல்கொள்ளும்
தன்மையுடைவளாய், தலைவனுக்கு நான் ஆகிவிட்டேன் என்றால்.

மடம்

மடம் – (பெ) 1. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற மகளிர் குணங்கள் நான்கனுள் ஒன்று.
one of the four characteristic features of women
2. பேதைமை, கபடமின்மை, credulity, artlessness
3. மென்மை, softness, tenderness, delicacy
4. அறியாமை, ignorance, folly
1.
மடம் என்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.
சொன்னவுடனே ஒன்றனைப் புரிந்துகொண்டு, அதனை விடாமல் பற்றிக்கொள்ளுதல்.

குன்ற குறவன் காதல் மட மகள்
வரை அர_மகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/1,2
குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய மடப்பம் பொருந்திய மகள்,
மலையிலிருக்கும் தெய்வ மகளிரைப் போன்ற சாயலையுடையவள்,
2.
எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/20-23
(பிறர்) இகழ்வதைப் பொறுக்காத பொருளீட்டும் விருப்பத்துடன்
மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.

பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276
பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்
கபடமற்ற கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,
3.
மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 500
மென்மையான நடையையுடைய காட்டுப்பசுவின் கன்றும், யானைக்கன்றும்,
4.
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/6-8
அறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
இறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன்

மடம்படு

மடம்படு – (வி) அறியாமைப்படு, assume ignorance
1. அறிவு மடம்படுதல் –
அறிவு குறைந்தவர் முன்னே அறிந்தும் அறியாததுபோல் தன் அறிவைக் குறைவாகக் காட்டிக்கொள்வது.
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் – சிறு 216
அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும்,
2. கொடை மடம்படுதல் – யாருக்குக் கொடுக்கிறோம் என்பதில் அறியாமைப்படுதல்
வேண்டியோர், வேண்டாதவர், வலியோர், மெலியோர், புதியோர், பழையோர் எனக் கருதாது யாவருக்கும் கொடுத்தல்
3. படை மடம்படுதல் – யாருடன் போரிடுகிறோம் என்பதில் அறியாமைப்படுதல்.
வீரர் அல்லாதோர், புறமுதுகிட்டோர், புண்பட்டோர், மூத்தோர் எனக் கருதாது யாவரிடத்தும் போரிடல்.
அறிவு மடம்படுதலும், கொடை மடம்படுதலும் சிறந்தவை. படை மடம்படுதல் சிறந்ததன்று.
பேகன் படை மடம்படான் என்கிறார் பரணர்.

கடாஅ யானை கழல் கால் பேகன்
கொடை மடம்படுதல் அல்லது
படை மடம்படான் பிறர் படை மயக்கு_உறினே – புறம் 142/4-6
மதம் மிக்க யானையும், கழல் அணிந்த காலும் உடைய பேகன்
பிறர்க்குக் கொடை அளிக்கும்போது அறியாமையுடையவன், அதுவல்லது
பிறர் படை வந்து போர்செயின் தான் அறியாமைப்படான்.

மடர்

மடர் – (பெ) மடார், வள்ளம், குவளை, cup
கூம்புவிடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள – புறம் 383/7,8
குவிந்திருந்து விரியும் மெல்லிய அரும்பு மலர்ந்த ஆம்பல் பூவைப்போன்ற
தேன் பரந்துள்ளதாகிய கள் தெளிவை அழகிய மணம் கமழும் மடாரில் பெய்து

மடல்

மடல் – (பெ) 1. வாழை, பனை, தாழை போன்றவற்றின் இலைப்பகுதி,
Flat leaf of plantain, palm and screwpine
2. பனங்கருக்கு, Jagged stem of a palmyra leaf;
3. சோளக்கதிர், வாழைப்பூ முதலியவற்றின் மேலுறை,
sheath of indian corn, plantain flower etc.,
4. தலைவியைப் பெற இயலாத தலைவன் பனங்கருக்கினால் செய்து ஏறும் குதிரை
Horse of palmyra stems on which a thwarted lover mounts to proclaim his grief.
1.
படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/1,2
நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின்
வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு

இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின்
ஓங்கு திரை ஒலி வெரீஇ
தீம் பெண்ணை மடல் சேப்பவும் – பொரு 204-207
இறவினைத் தின்ற திரண்ட நாரைகள் (இருக்கும்)
பூக்களையுடைய புன்னையின் கொம்புகளில் தங்கின்,
உயர்ந்த அலையின் ஆரவாரத்திற்கு வெருவி,
இனிய பனையின் மடலில் தங்கவும்,

வால் இணர் மடல் தாழை – பட் 118
வெண்மையான பூங்கொத்துக்களையும் மடல்களையுமுடைய தாழையையுடைய

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 23,24
பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – மலை 336
காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி,
2.
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/1,2
தொங்குகின்ற ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
கரிய அடிமரத்தைப் புதைத்த மணல் மிகுந்துகிடக்கும் வீட்டு முற்றத்தில்

ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு – புறம் 29/14
வீழ்ந்த பனங்கருக்காகிய விறகால் கழிக்கண் மீனைச் சுட்டு
3.
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை – அகம் 336/1
துளை பொருந்திய தண்டினையுடைய சேம்பினது கொழுவிய மடலிலுள்ள அகன்ற இலையுடன் கூடிய
4.
இ நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய்
மறுத்து இ ஊர் மன்றத்து மடல் ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/20-23
இந்த நோயைப்
பொறுக்கக்கூடிய அளவையும் மீறி இது பெரியதானால், பொன்னால் செய்த குழையினையுடையவளே!
இதற்குப் பதிலாக, இந்த ஊர் மன்றத்தில் மடல் ஏறி
உன் மேல் நிலைநாட்டுவது போல் உள்ளேன் நான், நீ எய்தும் பழியை.

மடவ

மடவ – (வி.மு) அறியாமையுடையன, these are ignorant
மடவ மன்ற தடவு நிலை கொன்றை
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66
அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்!
மலைகள் விளங்கும் பாலைநிலத்து அரிய வழியில் சென்றோர் கூறிய
பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன,
காலமல்லாது திடீரென்று தோன்றிய மழையைக் கார்ப்பருவ மழை என்று கருதி.

மடவது

மடவது – 1. (வி.மு) அறியாமையுடையது, this is ignorant
– 2. (பெ) பேதைமை, innocence
1.
மடவது அம்ம மணி நிற எழிலி
————– ———————- ———————–
நன் நுதல் நீவி சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை
——————————— ———————-
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – நற் 316
அறியாமையுடையது, இந்த நீலமணி நிறத்தைக்கொண்ட மேகம்;
—————— ———————- ——————–
நல்ல நெற்றியை நீவிவிட்டுச் சென்றோர், தம்முடைய பொருளிட்டும் விருப்பம்
வாய்க்கப்பெற்று திரும்பி வருவதற்கு முன்னரேயே,
—————— ———————– ———————–
மழைத்துளியைப் பெய்யும் குளிர்ந்த கார்காலத்தைச் செய்து
இடிமுழக்கத்தை எழுப்பியது அகன்ற வானப்பரப்பில்.
2.
களிறு கெழு தானை பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப
கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/13-16
யானைகள் மிக்க படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின்
ஒளிறும் அருவியினை உடைய மலைச் சரிவின் அகலமான இடம் பொலிவுபெற
தெய்வமாக அமைத்த கொல்லிப்பாவையினைப் போன்ற,
பேதைமையால் சிறந்த மாநிறத்தவளாகிய தலைவி.

மடவந்தனள்

மடவந்தனள் – (வி.மு) பல்வேறு பொருள் – கீழேகாண்க, various meanings, refer below
வல் வில் ஓரி கொல்லி குட வரை
பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே – குறு 100/5-7
1. உ.வே.சா உரை
வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள
பாவையைப் போல, நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள்;
ஆயினும், அவளுடைய மூங்கிலைப்போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்

மடவந்தனள் – அறியாமையை உடையளாயினள்.யான் அவளைக் கண்டு படுந்துன்பத்தை அறியாளாயினள்
என்பது கருத்து. மடவந்தனள் – வெருவினாள் என்றலுமாம்.
2.பெருமழைப்புலவர் உரை.
வலிய வில்லையுடைய ஓரி வள்ளலினது கொல்லியாகிய மேற்குமலையின்கண் எழுதப்பட்ட
பாவை தன்னைக் கண்டார்க்கு மடமைவரச்செய்யுமா போல, மடமைவரச் செய்பவள் ஆவள்
அவளுடைய மூங்கில் போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்

கொல்லிப்பாவை கண்டாரை மடமையுறுத்துவது போன்று மடமையுறுத்துபவள்.
3. ச.வே.சுப்பிரமணியன் உரை
வல்வில் ஓரி வள்ளலின் மேற்கு மலையின் கொல்லிமலையில் மலையைக் குடைந்து செய்த
கொல்லிப்பாவை போல் அழகும் இளமையும் பொருந்தியவள் என் காதலி.
அவளது மூங்கில் போன்ற பருத்த தோள்கள் தழுவுவதற்கு அரியவை ஆகும்

4. வைதேகி எர்பர்ட் ஆங்கில உரை
The young woman with arms
like bamboo is hard to embrace,
and naive like the Kolli goddess
who resides on the westside
of strong-bowed Ori’s mountain,

மடவந்தனள் – she is delicate, she is naive

5. இரா. இராகவையங்கார் உரை
பாவையைப் போல கண்டார்க்கு அறியாமை வருதல் செய்தாள்.

மடவன்

மடவன் – (பெ) அறிவில் குறைந்தவன், he who has limited knowledge
தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செம் நா புலவீர் – புறம் 140/1,2
பெரிய நிலைமையையுடைய பலாமரத்தை உடைத்தாய நாஞ்சில் மலைக்கு வேந்தன்
அறிவு மெல்லியன் நிச்சயமாக, செவ்விய நாவையுடைய புலவர்களே

மடவம்

மடவம் – (வி.மு) பேதையர் ஆவோம், let us be foolish
அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20
அருளையும் அன்பையும் கைவிட்டு (தம்)துணையைத் துறந்து
பொருள்தேடுவதற்காகப் பிரிந்துசெல்வோர் வலியோர் ஆயின்
வலியோர் வலியோராகவே இருக்கட்டும்!
பேதையர் ஆவோம் மங்கையராகிய நாமே!

மடவரல்

மடவரல் – (பெ) 1. மடப்பம், பேதமை, கபடமின்மை, Simplicity, artlessness, credulity, guilelessness
2. மடப்பம் பொருந்தியவள், a lady possessing simplicity and artlessness
1.
மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40
பேதைமை (மிக்க)பெண்கள் — (தம் கையிலுள்ள) பூத்தட்டுகளில் பறித்துப்போட்ட
(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்
2.
ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க – ஐங் 194/2
ஒளிரும் தோள்வளைகளைக் கொண்ட மடப்பம் பொருந்தியவளைக் காண்பாயாக தலைவனே!

மடவர்

மடவர் – (பெ) 1. அறிவில்லாதவர், foolish people
2. பேதையர், innocent people
1.
வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/11,12
வடநாட்டிலிருந்து வாடை வீசும் காலத்தில் பிரிந்து செல்வோர்
அறிவில்லாதவர் ஆவார், வாழ்க நெஞ்சமே! இந்த உலகத்தில்.
2.
இளையரும் மடவரும் உளரே
அலையா தாயரொடு நற்பாலோரே – குறு 246/7,8
இளையவர்களும், மடப்பமுடையோரும் இருக்கின்றனரே!
இப்படி அலைக்கழிக்காத அன்னையரோடு! அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்!

மடவள்

மடவள் – (பெ) அறியாமையுடையவள், ignorant woman
மடவள் அம்ம நீ இனி கொண்டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரி
பெரு நலம் தருக்கும் என்ப – ஐங் 67/1-3
அறியாமையுடையவள், நீ இப்பொழுது கொண்டிருப்பவள்;
தன்னோடு ஒப்பிடமுடியாத என்னைத் தனக்கு ஒப்பாகக் கூறிக்கொண்டு
தன்னுடைய பெண்மைநலம் பெரிது என்று பெருமைபேசிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள்;

மடவார்

மடவார் – (பெ) பெண்கள், women
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார்
கரை மரம் சேர்ந்து கவினி மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர்
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/31-34
மலையிலிருந்து இறங்கும் அருவிநீர், செழித்த பூங்கொத்துக்களை இடமெல்லாம் கொண்ட
கரைமரங்களைச் சேர்ந்து அவற்றின் நிழலால் அழகுபெற்று, நீராடும் பெண்களின்
அரும்புகள் சேர்ந்த கூந்தலுக்குள் இருக்கும் குளிர்ந்த மலர்களும், மைந்தர்களின்
அகலமான மார்பிலிருந்து உதிர்ந்து விழுந்த மலரிதழ்களும் கலந்து பரவி,

மடவீர்

மடவீர் – (வி.வே) பெண்களே! Oh, ladies!
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்
பொய்யும் உளவோ என்றனன் – அகம் 48/18,19
கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! உமது வாயில்
பொய்யும் உண்டோ?’ என்றனன்,

மடவை

மடவை – (வி.மு) அறியாமையுடையவனாய்(ளாய்) இருக்கிறாய், you are ignorant
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/4-11
பெரிய மலைச் சரிவுகள் பொலிவுபெற, சூரர மகளிர்
அருவியின் ஓசையே இசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டையுடைய தலைவனின்
முயக்கத்தினால் ஏற்பட்ட துன்பம் மிகுந்த நீங்குதற்கு அரிய இந்தக் காமநோய்
நீ வருத்தியதால் ஏற்பட்டது இல்லை என அறிந்தும், தலைநிமிர்ந்து
கார்காலத்து மலரும் நறிய கடம்பின் இலைகளால் தலைமாலை செய்து சூடிக்கொண்டு
வேலன் வெறியாடி வேண்டிக்கொள்ள வெறிக்களத்துக்கு வந்திருக்கிறாய்!
நீ உண்மையாகவே கடவுளே ஆயினும் ஆகுக,
ஆனால் நீ அறியாமை உடைத்திருக்கிறாய், வாழ்க முருகனே!

பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை – நற் 162/8,9
மிக்க பொருளையுடைய நின் தந்தையின் பெருமனையின்கண் மனையறத்தால் நீண்ட புகழ்பெற்ற
தாயினன்பு நிழலில் வளர்ந்தவளாதலால் நீ மிகமிக இளமையும் மடமையும் உடையவளாவாய்.

மடவை மன்ற கொண்க வயின்-தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே – நற் 183/6-11
அறியாமையையுடையாய், தலைவனே! – இடந்தோறும்
துன்புறுத்தி அலைக்கும் ஊதைக்காற்றோடு
நீ இல்லாத தனிமைக்காலத்து வரும் மாலைப்பொழுதும் சேர்ந்துகொள்கிறது;
கூட்டமான மீன்களை நிறைய உண்ட வெண்குருகு மிதித்த
நீரற்ற குளத்தின் நெய்தல் மலர் போல
இவள் உயிர்வாழமாட்டாள் என்பதனை நினைத்துப்பார்க்காத நீ –

மடவோன்

மடவோன் – (பெ) அறிவிலி, foolish man
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/5,6
பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல்
அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல

மடவோய்

மடவோய் – (வி.வே) மடப்பத்தையுடவளே!, Oh, ignorant woman!
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்
சேரியேனே அயல் இல்லாட்டியேன் – அகம் 386/10,11
கரிய பெரிய கூந்தலையுடைய மடவோளே! யானும் நின்
சேரியில் உள்ளவனே! அயன் மலைக்கு உரியேன்!

மடவோர்

மடவோர் – (பெ) 1. அறிவில்லாதவர், foolish people
2. மடப்பத்தையுடைய மகளிர், innocent women
3. அறியாமையுள்ளவர், ignorant people
1.
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/1-3
அறிவுடையோர் நினைத்துப்பார்த்தாலும், அறிவில்லாதர் நினைத்துப்பார்த்தாலும்
பிறர்க்கு நீ ஒப்புமையாக அமைவதல்லாமல், உனக்குப்
பிறர் ஒப்புமை ஆகாத தனிச் சிறப்பு வாய்ந்த வேந்தனே!

மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் – பரி 5/76
மறுபிறப்பு என்பது இல்லையென்று வாதிடும் அறிவற்றோரும் உன்னை ஒருபோதும் அடையமாடார்கள்;
2
மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் – சிறு 56,57
மடப்பத்தையுடைய மகளிர்
சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
3.
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட – சிறு 135-140
மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
வறுமையுறுதல் இயல்பென்று அறியாது புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு;

மடவோள்

மடவோள் – (பெ) இளம்பெண், young lady
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/3,4
அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி
யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!

மடா

மடா – 1. (வி.எ) செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம், மடுத்து, feeding,
– 2. (பெ) அகன்ற மண்குடம், large earthen vessel
1.
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உறாஅ வறு முலை மடாஅ
உண்ணா பாவையை ஊட்டுவோளே – ஐங் 128
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
நன்கு வளராத வறிய தன் முலையை வாயில் வைத்து,
உண்ணாத பாவைக்கு ஊட்டிக்கொண்டிருந்தவளை –
2.
அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின் – பதி 24/20
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,

மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு – கலி 147/54-56
பெரிய பானையளவு மது உண்டவர் போல, என்னை மயங்க
விடாமல் என் உயிரோடு கலந்துவிட்டது, என் மைதீட்டிய கண்களை
உறங்காமற் செய்தவனின் நட்பு;

மடாய்

மடாய் – (வி.வே) மடை என்பதன் விளிவேற்றுமை, மடை – ஆபரணங்களின் கடைப்பூட்டு
Clasp, as of an ornament
கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் – கலி 94/18,19
கொக்கை உரித்ததைப் போன்ற வளைந்த மூட்டுவாய் போன்ற கூனியே! உன் கைகளுக்குள் நான்
புகுந்து உன் மார்பினைத் தழுவினேனாயின் என் நெஞ்சிலே உன் கூன் அழுந்தும்

மடி

மடி – 1. (வி) 1. தொழில் செய்யாதிரு, சோம்பியிரு, be indolent, inactive
2. மடங்கு, வளை, be bent, folded
3. இற, முடிவுக்கு வா, die, come to an end
4. உறங்கு, sleep
5. வீழ், fall down
6. ஊக்கம் குன்றியிரு, be disprited, dull
7. அற்றுப்போ, இல்லாமல்போ, cease to exist
8. சுருங்கு, கரை, shrink, contract
9. தங்கு, stay
10. மற, forget
11. வருந்து, feel sorry
12. மடக்கு, வளை, bend, fold
– 2. (பெ) 1. மடிப்பு, fold
2. மடிப்பு உள்ள துணி, folded cloth
3. வயிறு, belly, stomach
4. சோம்பல், Sloth, idleness, indolence
1.1
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும் 107,108
மழை பெய்தலைத் தவிர்ந்த காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி,

தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது – குறி 155-157
தேனால் சமைந்த கள் தெளிவை உண்டு, மகிழ்ச்சி மிக்கு,
காவல்தொழிலில் சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் செலுத்தி(உண்டு)
பெரிய புனத்தை அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல்,

உவவு மடிந்து உண்டு ஆடியும் – பட் 93
உவாநாள்(பௌர்ணமி/அமாவாசை) ஓய்வுஅனுசரித்து உண்டும் விளையாடியும்;

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154
உயர்ந்த தன்மையையுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த
1.2
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199
பிடியின் வாயை ஒத்த, மடங்கிய வாயையுடைய கலப்பையின்

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11
(நம்)வீட்டைச் சேர்ந்துள்ள பனைமரத்தில், வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகள்
1.3
ஒருவேன் ஆகி
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/9,10
யானும் தன்னந்தனியாய் ஒருத்தியாக இருந்து
வருத்தமுறும்படியாகக் கழிந்துபோகும் இந்தப் பகல் முடியும் அந்திப்பொழுது.
1.4
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/9-11
நள்ளென்னும் ஓசையினையுடைய இரவில் பறவைகளின் ஒலி கேட்கும்போதெல்லாம்
அவனது தேர் மணியின் தெளிந்த ஓசை அல்லவா என்று
ஊரெல்லாம் உறங்கும் இரவிலும் துயிலை மறந்தது.
1.5
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன – குறு 180/2,3
பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால், அழிந்து
பாத்தியில் விழுந்துகிடக்கும் கரும்பின் நடுவே நிற்கும் ஒற்றைக் கரும்பு போல

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154
உயர்ந்த தன்மையையுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த

பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/6
பெண்யானைகள் படுத்துக்கிடந்தாலொத்த குன்றுகளின் பக்கத்தே
1.6
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3
குட்டிகளை ஈன்று காட்டினில் ஊக்கம் குன்றியிருக்கும் தன் பெண்புலி பசியால் வாடியது என
1.7
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/8
வழிச்செல்வோர் அற்றுப்போன நீர் நிறைந்த பள்ளங்கள் உள்ள சிறிய வழியில்,
1.8
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/7-9
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்து அவை சுருங்கவேண்டி
கனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
1.9
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 254-256
வளன் மிக்க பெரிய ஊரின்கண் தங்குவீராயின், தொழில் ஒழிந்திராத
உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை
மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர்

திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் – அகம் 122/12-14
திங்கள் மேற்கு மலையினை அடைந்து மிக்க இருள் தங்கின்
இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதான கூகையின் சேவல்
பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்
1.10
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்னாட்டு – புறம் 212/5,6
செய்கின்ற தொழில் மறந்துபோகும் அளவுக்கு ஓய்வில்லாமல் நடக்கிற விழாவினையும்
புது வருவாயும் உளதாகிய சோழநாட்டு
1.11
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்
அன்னேன் ஒருவனேன் யான் – கலி 140/9-12
சிறந்த உருவத்தைச் செத்துக்கியெடுத்த அழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண்
இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு
அடிமை என்பதை உலகுக்குக் காட்டுவதற்குச் செல்கிறேன், நீங்கள் எனக்காக வருந்தவேண்டாம்,
நான் அப்படிப்பட்ட ஒருவன்தான்;
1.12
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்
யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/5-7
உலர்ந்த கிளையைப் பிளக்கும் வலிமை இல்லாததினால்
யானை தன் துதிக்கைகையை மடக்கிக்கொண்டு வருந்தும்
பாலைநிலமும் இனியதாகும் உம்மோடு வந்தால்-
2.1
துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே – நற் 70/2,3
சலவைத்துறையில் மிதக்கும் வெள்ளை ஆடையின் தூய மடிப்பு போன்ற
நிறம் விளங்கிய சிறகினை உடைய சிறிய வெள்ளைக் குருகே!
2.2
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520
சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,

தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135
மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடித்தது விரித்த படுக்கையின்கண்,
2.3
அவன் மடி மேல் வலந்தது பாம்பு – பரி 4/43
அவனது வயிற்றின் மேல் கச்சாகக் கட்டப்பட்டிருப்பதும் பாம்பு,
2.4
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த – கலி 35/1
சோம்பல் இல்லாதவனின் செல்வத்தைப் போல் மரங்கள் தழைத்துச் சிறக்க

மடிவு

மடிவு – (பெ) சோம்புதல், being idle
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி – புறம் 29/9,10
தீயோரைத் தண்டஞ்செய்தலும், நடுவுநிலைமையுடையோர்க்கு அருள்பண்ணுதலுமாகிய
இடையறாத முறைமையால் சோம்புதலையுடையை அல்லை ஆகி

மடிவை

மடிவை – (பெ) தழை, foliage
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை
குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் – அகம் 226/3,4
அகன்ற ஊரிடத்தே அழகிய பகுப்பையுடைய தழையுடையினையும்
குறிய வளையல்களையும் உடைய மகளிர் நிறமுள்ள புனல்விளையாட்டை வெறுப்பின்

அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் – பதி 27/3
மலர்ந்த ஆம்பல் பூவின் அக இதழை மடித்துவைத்துத் தைத்த தழையாடை அணிந்தவராய்

மடு

மடு – (வி) 1. ஊட்டு, feed
2. செலுத்து, நுழை, cause to go or enter
3. தீ மூட்டு, ignite, kindle
4. சேர்த்துவை, unite, join
5. ஊடுருவக்குத்து, gore, pierce, thrust
6. மேற்கொள், undertake
7. அமிழ்த்து, immerse, cause to sink
8. கொண்டுபோ, எடுத்துச்செல், take with
9. நுழை, புகு, enter
10. உணவுபடை, பலியுணவு செலுத்து, offer food, offer oblation to deity
11. துயில்கொள், go to sleep
12. உண், அருந்து, eat, drink
13. விழுங்கு, devour
1.
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை நும் ஊர் வருதும் – ஐங் 92/1-3
கரிய கொம்பினையுடைய எருமையின் சிவந்த கண்ணையுடைய அண்மையில் ஈன்ற பெண்ணெருமை
தன் அன்புக்குரிய கன்றினுக்குப் பால் சுரக்கும் தன் முலையைத் தந்து ஊட்டிவிடும்
உனது தந்தை இருக்கும் உன் ஊருக்கு வருகிறேன்,
2.
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன – புறம் 60/7-9
கழியின் நீரால் விளைந்த உப்பை முகந்துகொண்டு மலைநாட்டை நோக்கிச் செலுத்துகின்ற
ஆரையுடைய சகடையினது குழிப்பாய்தலைத் தீர்த்துச்செலுத்தும்
வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை ஒக்கும்

சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது – குறி 156,157
காவல்தொழிலில் சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் நுழைத்து(உண்டு)
பெரிய புனத்தை அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல்,
3.
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின்
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/2-12
மூங்கில்கள் பின்னிக்கிடக்கும் கற்பாறை நெறியாகிய சிறிய வழியில்,
நேரக்கூடிய தீங்குகளை எண்ணிப்பாராமல், இரவில் வந்து இவளின்
புள்ளித்தேமல் படர்ந்த மார்பகத்தைத் தழுவிச்செல்ல, இவளின் தோளைச் சேர்த்து
வண்டினங்கள் அளவில்லாதனவாய் மொய்க்க,
கண்ணால் கொல்பவளைப் போல் பார்த்து, இதற்கு முன்பும்
இவ்வாறு மொய்க்கப்பெற்றாயோ எனக் கேட்டாள் தாய்;
அதற்கு மறுமொழி சொல்லாதவளாய் மனம்வருந்தி
என் முகத்தை நோக்கினாள் தலைவி; அன்னையே
எப்படி ஆராய்ந்து இதனின்றும் தப்பிப்பாள் என எண்ணி, தீ மூட்டிய
சந்தனக் கொள்ளிக்கட்டையைக் காட்டி,
இதனால்தான் இப்படி ஆயிற்று என்றேன் நான்.
4.
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/1,2
கொல்லன் தொழிலால் பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி
முகத்தில் படும்படி சேர்த்துக்கட்டப்பட்ட உலர்ந்த மூங்கிலின் வலிமையுள்ள கழியை
5.
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று
மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/1,4
தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து,
அறத்தை விட்டு மறத்தை மேற்கொண்ட நூற்றுவர் தலைவனான துரியோதனனின்
தொடையை முறித்திட்ட வீமசேனன் போல் தன் கூரிய கொம்புமுனையால் குத்தி, அதன்
மருமத்தைக் கிழித்துத் தன் பகையைத் தீர்த்துக்கொண்ட நீண்ட கொம்புகளையுடைய அழகிய யானை,
6.
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் – அகம் 340/19
பகலிலே மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய செயலையுடைய மீன்பிடிப்போர்
7.
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடும் கயம் புகல் வேட்டாங்கு – அகம் 361/11,12
அழல் ஓங்கிய வேள்விக்குண்டத்தின் கண் ஆழ இடப்பெற்ற யாமை
நிழல் பொருந்திய பெரிய பொய்கையின்கண் போதலை விரும்புவது போல
8.
அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி – அகம் 369/20,21
அறியப்படாத தேயத்தின்கண் அரிய சுர நெறியில் கொண்டுபோன
இளையானுக்குப் பொருந்திய பெரிய மடப்பமும் தகுதியும் உடைய என் மகள்
9.
வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42
வையை கடலில் சென்று புகுந்தாற்போல
10.
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/20,21
ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்துப்
படைத்து, நீ
நறிய நெற்றியையுடைய தோழியருடன் மகிழ்ந்திருக்கும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ?

ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலி
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் – மது 607-610
ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் பலியுணவுகொடுக்க – ஒருபக்கத்தே,
11.
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப
பானாள் கொண்ட கங்குல் இடையது – மது 629-631
ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல,
படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில்கொள்ள
நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே
12.
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும – மது 780,781
மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும்
மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,
13.
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன்
வேட்டுவர் உள்_வழி செப்புவேன் ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
என் அல்லல் தீராய் எனின் – கலி 144/18-23
திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?
காட்டாவிட்டால் வேட்டை நாயை உன்மீது ஏவிவிடுவேன்,
வேடர்கள் இருக்குமிடம் சென்று அவரிடம் அறிவித்துவிடுவேன், படமெடுக்கச் செய்து
பாம்பினை, திங்களுடன் உன்னையும் விழுங்க அனுப்புவேன் – மதி மாறிப்போயிருக்கும்
என் அல்லலைத் தீர்த்துவைக்காவிட்டால்,

மடை

மடை – 1. (வி) மடு, ஊட்டு, அருத்து, feed, make to drink
– 2. (பெ) 1. பலியுணவு, oblation of food to a deity
2. மடுத்தல், உண்ணுதல், பருகுதல், the act of eating / drinking
3. ஆபரணங்களின் மூட்டுவாய், Clasp of an ornament;
4. மதகு, Shutters of a sluice
5. உருளையான பொருள்களின் பொருத்துவாய், joint as in a spherical objects
6. மடுத்தல், தடுத்துநிறுத்தல், obstructing
1.
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை – அகம் 275/1-3
உயர்ந்த நிலையினதாகிய சாடியில் நிறைய அடைவித்து
பனக்குடையால் முகந்த நீரினை மடுத்தவளாய்ச் சொரிந்து வளர்த்த
வயலைக் கொடி படர்ந்த பந்தரில்
2.1.
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 104,105
– தெய்வங்களுக்கு இட்டுவைத்த பலியுணவுபோலத் தேக்கின் இலையில் குவிக்கையினால், உம்முடைய
பசுமை(வளமை) தீர்ந்த சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப் பெறுவீர்;
2.2.
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5
மிகுதியாகப் பருகுதலையுடைய கள்ளின் இனிய மயக்கத்தாலே செருக்குண்டு
2.3.
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி – நெடு 124,125
மூட்டுவாய் சிறந்துவிளங்கும் நுண்ணிய நூல் அழகுபெறும்படி, (அதனைத்)தொடுத்தல் சிறப்புற அமைந்து
முத்துக்களை உடைய (தொடர் மாலைகளைப்)பலகணிகள்(போன்று) தொங்கவிட்டு

மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/20,21
மார்பிற் பூணப்பட்ட விளங்கிய முத்து வடங்களையுடைய ஆரத்தை
கொளுத்துச் செறிந்த முன்கைக்கணிந்த கடகத்துடனே தந்தனன் (கொளுத்து = ஆபரணங்களின் மூட்டுவாய்)
2.4.
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/3,4
சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட,
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
2.5.
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யா பூவின் மெய் சாயினளே – குறு 9/2,3
அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனித்து இருக்கும்
சூடாத பூவைப் போல உடல் மெலிந்தாள்;

செறி மடை வயிரின் பிளிற்றி – அகம் 40/15
செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப்

மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13
மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும் கரிய தண்டினையுமுடைய வேலே துணையாக

செறி மடை அம்பின் வல் வில் கானவன் – அகம் 282/2
மூட்டுவாய் செறிந்த அம்பினையும் வலிய வில்லினையுமுடைய வேட்டுவன்
2.6.
மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் – அகம் 248/8,9
பகைவர் படையைத் தடுப்பதற்குச் செல்லும் ஆற்றல் வாய்ந்த தன் படை மறவர் புறங்காட்டி ஓடிவிட, தான் மட்டும்
ஓடாமல்
பகைவர் வரும் வழியில் தடுத்து நிற்கும் எம் வலிய வீரனைப் போல்

மட்டம்

மட்டம் – (பெ) கள், toddy
மட்டம் பெய்த மணி கலத்து அன்ன
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை – குறு 193/1,2
கள்ளை எடுத்துவைத்த நீல நிறக்குப்பியைப் போல்
சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்

மட்டு

மட்டு – (பெ) 1. கள், toddy, fermented liquor
2. தேன், honey
3. கள் இருக்கும் குடம்,
1.
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/12
நிலத்தின்கண் புதைக்கப்பட்ட முற்றிய கள்ளின் தெளிவை

துணை புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கி துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 106-108
(தம்)கணவரைக் கூடிய மடப்பம் பொருந்திய இளம்பெண்கள்,
பட்டுடையை நீக்கிப் (மெல்லிய)பருத்தி ஆடையை உடுத்தவும்,
(மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும்,
2.
கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/24
கட்டுவடத்தோடு, கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும்,
3.
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1
கள் குடத்தை வாய் திறப்பவும், ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும்

மண

மண – 1. (வி) 1. கமழ், மணம்வீசு, emit fragrance, smell sweet
2. கல, கூடு, mingled
3. அணை, தழுவு, embrace, clasp
4. கூடியிரு, ஒன்றாக இரு, be in company with
5. களவுமணம் செய், have premarital union
6. கூடு, புணர், come together, copulate with
– 2. (பெ.அ) திருமணத்திற்குரிய, for wedding
1.1.
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4
மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்

நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34
நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்,
1.2.
அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை
தெள் நீர் சிறு குளம் – புறம் 118/1-3
பாறையும் சிறு குவடும் கலந்த உச்சியையுடையவாகிய
எட்டாம் பக்கத்துப் பிறை போலும் வளைந்த கரையையுடைய
தெளிந்த நீரையுடைய சிறிய குளம்
1.3.
இலங்கு வளை நெகிழ சாஅய்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே – குறு 50/4,5
ஒளிரும் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து
தனிமைத் துயரைப் பூண்டுநிற்கின்றன அவர் தழுவிய தோள்கள்.
1.4.
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால்
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/16,17
அடும்பங்கொடிகள் படர்ந்துள்ள அழகிய மணல்மேட்டில் இவளுடன் விளையாடி நீ ஒன்றாக இருந்தபோது
‘வளைந்த குழைகளை அணிந்தவளே! என்னை நம்புவாயாக’ என்றதை ஏற்றுக்கொண்டதன் விளைவு அன்றோ
1.5.
யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினை தாள் அன்ன சிறு பசும் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே – குறு 25
ஒருவரும் இல்லை; அவர்தானே களத்திலிருந்தார்;
அவரே தனது உறுதிமொழியைப் பொய்க்கச்செய்தால் நான் என்ன செய்யமுடியும்?
தினைத் தாள் போன்ற சிறிய இளமையான கால்களையுடையன,
ஓடுகின்ற நீரில் இருக்கும் ஆரல்மீனைப் பார்க்கும்
நாரைகளும் இருந்தன தலைவர் என்னைக் களவுமணம் புரிந்தபொழுது.
1.6.
நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே – அகம் 240/9-15
நீயும்
தேன் ஒழுகும் கூந்தலையுடைய தலைவியது அழகிய நெற்றியைத் தடவி
கோங்கு அரும்பினாலொத்த குவிந்த முலையினையுடைய மார்பகத்தே
இனிய துயிலை விரும்பினாயாயின் வண்டுகள் மொய்க்க
விரிந்த பூக்களையுடைய செருந்திமரம் பொருந்திய வெள்ளிய மணல் பரந்த முடுக்கில்
பூக்கள் பொருந்திய புன்னை மரங்களையுடைய அழகிய தண்ணிய சோலைக்கண்
வருவாயாக அவளைக் கூடிச் செல்வதற்கு
2.
மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 151
திருமணம் நடக்கும் வீடு (போன்று) மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே

மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10
திருமணம் நடக்கும் வீடுகளில் முழங்கும் உன் திருமணத்திற்கான முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக்
கலைக்கும்;

மணன்

மணன் – (பெ) பார்க்க :மணம் – 1
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என – அகம் 221/3
பொலிவுற்ற கூந்தலையுடைய எம் மகளுக்குத் திருமணம் என்று கூறி

மணப்பு

மணப்பு – (பெ) 1. ஒன்றுசேர்தல், கூடுதல், the act of uniting
2. எய்துதல், acquiring, attaining
1.
பகலும் நம்_வயின் அகலான் ஆகி
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன்
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண – அகம் 50/5-10
பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி,
(முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்;
இப்பொழுதோ, ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்)
துறந்து
வராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல்,
(இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று
(அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!,
2.
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் – அகம் 112/15
எய்துதற்கு அரிய காமத்தால் நீர் கூடிய களவொழுக்கத்தினை அறியாத எமர்

மணம்

மணம் – (பெ) 1. திருமணம், wedding
2. இனிய வாசனை, fragrance
3. கூடுதல், union
1.
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 19,20
(புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,
(யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய,
2.
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 354
மஞ்சளையுடைய முற்றத்தினையும் இனிய வாசனை கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
3.
கதிர்க்கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/4,5
கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரி முகத்தையுடைய ஏற்றை
நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே கூடி மகிழும்

மணி

மணி – (பெ) 1. கண்டை, bell, gong
2. விலையுயர்ந்த கல், நவரத்தினம், gem, precious stones
3. நீலமணி, sapphire
4. பளிங்கு crystal
5. மணியோசை, sound of a bell
1.
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்,
2.
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 84,85
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்
மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும்,
3.
பொன் கொன்றை மணி காயா – பொரு 201
பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், நீலமணி போன்ற காயா மலரினையும் உடைய,
4.
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க – அகம் 56/2
பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க
5.
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/14
மணியோசையைக் கேட்டாற் போலும் தெளிந்த குரலைக்கொண்ட

மணிச்சிகை

மணிச்சிகை – (பெ) குன்றிமணி, அதன் செடி, பூ, Crab’s eye, Abrus precatorius
செங்கொடுவேரி தேமா மணிச்சிகை – குறி 64

மணிப்புறா

மணிப்புறா – (பெ) புறாவகை, Ring-dove, turtle-dove, spotted dove;
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/14
மணிப்புறா விட்டொழிந்த மரம் சோர்ந்த மாடத்தினையும்

மணிமாடம்

மணிமாடம் – (பெ) அழகுற அமைக்கப்பட்ட உப்பரிகை உள்ள வீடு, மேல்நிலை மாடம்,
beautiful storied house;
நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து
உள் நின்று தூய பனி நீருடன் கலந்து
கால் திரிய ஆர்க்கும் புகை – பரி 10/122-125
செறிந்த மலையிடத்துப் பூங்கொடிகளிடத்தில் தங்குவதற்காக மேலேறிச் செல்லும்,
குளிர்ச்சி மிகுந்த நீராவியான மேகத்தைப் போன்றிருந்தது, மதுரை நகரின் மணிமாடங்களின்
உள்ளேயிருந்து தூவிய பனிநீர் மணத்துடன் கலந்து,
தென்றல் காற்று மணமுடையதாக மாறும்படியாக எழுப்பும் நறுமணப்புகை;

மண்

மண் – (பெ) 1. நிலம், நிலத்தின் மேற்பரப்பு, soil, earth
2. நாடு, country
3. உலகம், பூமி, earth
4. பூமியிலுள்ளோர், world
5. மார்ச்சனை, மத்தள முதலியவற்றிற் பூசும் சாந்து,
Paste smeared on the head of a drum for toning it
1.
மண் திணி ஞாலம் விளங்க – நற் 153/2
செறிவான நிலத்தையுடைய இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க

பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 209,210
பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
2.
தென் புல காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை – சிறு 63,64
தென்னாட்டின் காவலருடைய குடியிலுள்ளானும்; பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்
3.
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும் – புறம் 357/1,2
குன்றுகளோடு கூடிய மலைகளைத் தன்பாற் பிணித்துக்கட்டி நிற்கும் மண்ணுலகத்தில்
பொதுவெனக் கருதப்பட்ட மேவேந்தருடைய நாடு மூன்றையும்
4.
மண் நாண புகழ் வேட்டு – புறம் 384/15
உலகத்திலுள்ளோர் கண்டு நாணும்படியாகப் புகழைச் செய்து
5.
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் – பொரு 109
மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய

மண்டாத

மண்டாத – (பெ) 1. விரும்பாதன, words of disliking
2. பொருந்தாதன, unfitting words
1.
கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா
மண்டாத சொல்லி தொடாஅல் – கலி 90/1,2
கண்டேன், உன் வஞ்சகச் செயல்கள் மறைவாக நடைபெறுவதை; பொய்யாகச் சிரித்து
நான் விரும்பாதவற்றைச் சொல்லி என்னைத் தொடாதே!
2.
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21
பொருந்தாதவற்றைக் கூறிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றாய்!

மண்டிலம்

மண்டிலம் – (பெ) 1. சூரியன், sun
2. மண்டலம், நாட்டின் பெரும்பகுதி, division of a country
3. நிலம், உலகம், earth
4. கண்ணாடி, mirror
5. சந்திரன், moon
6. சூரியப்பாதையின் வான வெளிப்பகுதி, space around sun’s path
7. வட்டமான பாதை, circular path
8. வட்டம், circle
1.
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 442
பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல,
2.
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி – மது 190
அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந்தீவின் நாடுகளை நின்னதாக வளைத்து
3.
கடல் சூழ் மண்டிலம் பெறினும்
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/7,8
கடல் சூழ்ந்த நிலத்தைப் பெற்றாலும்
விட்டுப் பிரிவதை எண்ணிப்பார்க்கமாட்டேன் – உனது நட்பினை
4.
நிழல்_காண்_மண்டிலம் நோக்கி
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் – பரி 21/23,24
தன் உருவத்தைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்து,
தீயினை அணிந்துகொண்டது போன்ற ஒளிவிடும் தன் அணிகலன்களைத் திருத்திக்கொள்வாளின் மெய்ப்பாடும்,
5.
இவட்கே செய்வு_உறு மண்டிலம் மையாப்பது போல்
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/7,8
ஆனால் இவளுக்கோ, செம்மையாகச் செய்யப்பட்டது போன்ற முழுநிலவில் மேகம் படர்வது போல்
மறு இல்லாத ஒளியையுடைய முகத்தில் பசப்பு பரவத் தொடங்கிற்று;
6.
செஞ்ஞாயிற்று செலவும் அஞ்ஞாயிற்று
பரிப்பும் பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்- புறம் 30/2-4
சிவந்த ஞாயிற்றின் வீதியும், அஞ் ஞாயிற்றின்
இயக்கமும், அந்த இயக்கத்தால் சூழப்படும் வானவெளிப்பகுதியும்
7.
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய
கொடி படு சுவல இடுமயிர் புரவியும் – மது 389-391
(கோலைக்)கொண்ட வலவன் தான் பயிற்றுவித்தைக் கூறியபடி ஓட்டலின்,
தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின
ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்
8.
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/17,18
ஓசை பரந்து எழும் பெரிய வாய் உள்ள வட்டத்தையுடைய
ஊதுகொம்பினிடத்து எழுந்த தெளிந்த இசை ஒலிக்க

மண்டு

மண்டு – (வி) 1. படி, அடியில்தங்கு, settle as sediment
2. அழுந்து, அமிழ், புதைபடு, go down, sink
3. ஆர்வத்துடன் உண்/பருகு, eat/drink greedily
4. முனைப்பு கொள், உக்கிரமாகு, vehement, intense
5. ஊடுறுவு, உட்செலுத்து, pierce, thrust in
6. மிகு, அதிகமாகு, abound in, increase
7. விரைந்து செல், rush, move swiftly
8. நெருங்கித்தாக்கு, press upon, close in
9, எதிர், oppse, resist
10. நெருங்கித்திரள், அடர்த்தியாய்க்கூடு, flock densely, throng
11. அடைசலாய் இரு, be crowded
12. கூடு, இணை, சேர், join
13. சேர்த்து இணை, insert and fasten
1.
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/17-19
நகத்திலும், கன்னங்களிலும் பூசப்பட்ட செம்பஞ்சிக்குழம்பும்,
முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற,
தளிரால் செய்யப்பட்ட படலைமாலையும், கூந்தலும், குளிர்ந்த சந்தனத்தை அழிக்க,
2.
பொய்கை வாயில் புனல் பொரு புதவின்
நெய்தல் மரபின் நிரை கள் செறுவின்
வல் வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து
சாகாட்டாளர் கம்பலை – பதி 27/9-14
நெய்தல் பூக்களை மொய்க்கும் வழக்கமுடைய கூட்டமான வண்டுகளைக் கொண்ட வயல்வழிச் சென்ற
வலிமையான மேற்புறத்தையுடைய சக்கரம் திடீரென்று அழுந்திவிடுதலால்
சேற்றில் மாட்டிக்கொள்ள, பதைப்புடன் முடுக்கிவிடப்பட்ட
நல்ல எருதுகள் இழுப்பதற்கு முயலுகின்ற அந்த, சேற்றிலிருந்து மீளும் சிரமத்தின்போது
வண்டியை ஓட்டுபவர்கள் எழுப்பும் ஆரவார ஒலிg
3.
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை
கயம் மண்டு பகட்டின் பருகி – அகம் 37/5-11
வைகறை புலர்ந்த விடியற்காலையில் வைக்கோலைப் பிடித்துப்போட்டு கடாவிட்டு,
வேலைக் களைப்பால் கள்ளுண்ட மயக்கம் தீர, அழகால் மேம்பட்ட,
காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து,
புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,
வெயிலில் குப்புற நிறுத்திய மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில்
குளத்தில் நீரைப் பேரவாவுடன் மிகுதியாகக் குடிக்கும் காளையைப் போலப் பருகி
4.
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272
மிக்குச் செல்கின்ற/உக்கிரமான போர்களை முடித்த வென்று அடுகின்ற (உன்னுடைய)மார்பிடத்தே,
5.
நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே – புறம் 31/7,8
கொம்பினது நுனை முகம் தேய ஊடுருவக்குத்தி பகைவரது
காவலையுடைய மதிலைத் தாக்கும் நின்னுடைய யானைகள் அடங்கா;
6.
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் – கலி 73/19
மிகுந்து வரும் வெள்ளத்தாலும் நிரம்பாமல் பெருக்கமுறும் கடலைப் போல
7.
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் – பதி 48/13,14
உனது மலையில் பிறந்து, உனது கடலில் விரைந்து சென்று கலக்கும்
மிகுந்த நீர் நிறைந்த ஆற்றில் நிகழ்த்தப்பெறும் இனிய நீராட்டு விழாவும்

அரம் போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரையம் கொண்மார்
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/5-7
அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய பற்களையுடைய அம்பினையும்
இடுக்கிக் குறிபார்க்கும் பார்வையினையுமுடையராய், தம் பசுக்களை மீட்கவேண்டி
நெல்லி மரங்களையுடைய நீண்ட இடங்களில் இருளிலே விரைந்துசென்று
8.
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி – பதி 49/8-11
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,
இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின்
மார்பிலிருந்து ஒழுகும் குருதி, நிலத்தில் படர்ந்து ஓடி,
9,10.
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9
புதுப்புனலை எதிர்த்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ,
11.
குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய்
கூர் முக சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/16-18
இயற்றப்பட்ட கைமரங்கள் சிதையுமாறு நெருக்கமாக அடைந்து, வேலின் முனை போன்று
கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக்கொள்தலின்
கூரை மடிந்த நல்ல இறப்பினையுடைய அம்பலத்தின்கண்
12.
திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/4,5
திங்களை உரோகணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில்
13.
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என – மலை 129
காம்பினுள் சேர்த்து இணைக்கப்பட்ட (எஃகினாலான)வேல் (நுனிப்பாகம்)யானையின் முகத்தில் பாய்ந்தது எனும்படி,

மண்டை

மண்டை – (பெ) 1. இரவலர் உண்கலம், mendicants’ begging bowl
2. உண்கலம், vessel for eating/drinking
3. மண்கலம், earthen vessel
4. கபாலம், மண்டையோடு, skull
1.
பொழுது இடைப்படாஅ புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப – புறம் 103/9,10
ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும்படுதலான் ஈரம் புலராத கலம்
மெழுகான் இயன்ற மெல்லிய அடை போல கொழுத்த நிணம் மிக

அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10
அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய பாத்திரத்தின்கண் துளையையுருவி
2.
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/7,8
விழா நிகழா வழியும் உழவருடைய உண்கலத்தில்
பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்

செந்தீ அணங்கிய செழு நிண கொழும் குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு- அகம் 237/9,10
செந்தீயில் சுட்ட வளம் பொருந்திய நினத்தில் கொழிவிய துண்டுகளை
மெல்லிய தினைச்சோற்றிலே சொரிந்த கலத்துடன்
3.
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் – அகம் 86/8,9
உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய மண்டை எனும் அகன்ற கலத்தினை உடையவரும் ஆகிய
மனத்தினைச் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கலப்பெண்டிர்
4.
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/5-9
மனம் பொருந்தாத பகைவர் உடலினின்றும் துண்டித்த தலைகளாற் செய்யப்பட்ட அடுப்பிலே
கூவிளங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க
தலையிற் பொருந்தாத மண்டையோடு அகப்பையாகவும், வன்னிமரத்தின் கொம்பு அதில் செருகப்பட்ட காம்பாகவும்
கொண்டு
ஈனாத பேய்மகள் தோண்டித்துழாவிச் சமைத்த
மாக்களுமுண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை

மண்ணகம்

மண்ணகம் – (பெ) உலகம், earth
உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ
காட்டாயேல் மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என்
கண்ணீர் அழலால் தெளித்து – கலி 144/42-44
இயற்கை நலத்தை நுகர்ந்த பின் தன்னை ஒளித்துக்கொண்டவனைக் கண்டிபிடித்துத்தா!
அவ்வாறு தராவிட்டால், இந்த மண்ணகம் எல்லாவற்றையும் சேர்த்து உன்னையும் சுடுவேன் – என்
கொதிக்கும் கண்ணீரைத் தெளித்து, அதிலிருந்து எழும் அழலால்;

மண்ணல்

மண்ணல் – (வி.வி.மு) மண்ணுக, கழுவுக, ஒப்பனைசெய்க, wash, decorate
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
என் புலந்து அழுதனள் – அகம் 369/11,12
இன்று நினது தழைத்த கூந்தலைப் புனைக என்றதற்கு
என்னை வெறுத்து மனம் உடைந்தவளாகி

மண்ணு

மண்ணு – (வி) 1. கழுவு, wash, clean by wasing
2. குளி, குளிப்பாட்டு, நீராடு, நீராட்டு, bathe
3. ஒப்பனைசெய், adorn, decorate
4. பூசு, smear
5. செய், do perform
6. செம்மைப்படுத்து, polish, finish, perfect
1.
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/13
கழுவிய நீலமணியை ஒத்த கரிய இதழையுடைய பாவை

பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி – புறம் 337/8,9
பெண்மைநலம் நிறைந்த பொற்புடனே, கழுவப்பட்ட
துகிலை விரித்தவழி அது நுடங்குவது போல நுடங்கி
2.
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/10
நெடிது சுழலும் சுழிகளையுடைய வெள்ளத்திற் படிந்து குளிப்பவள் போல

வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய – அகம் 136/8,9
தலைவிக்கு மணநீராட்டிய மகளிர் விரைவாக
தமது கூரிய கண்களாலும் இமையாராய் நோக்கி மறைந்திட
3.
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 19,20
(புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,
(யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய,
4.
தகரம் மண்ணிய தண் நறு முச்சி – அகம் 393/23
மயிர்ச்சாந்து பூசிய தண்ணிய நறிய கூந்தலில்
5.
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 494
யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,
6.
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் – நற் 94/4-6
கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
செம்மைப்படுத்தப்படாத பசுமுத்தைப் போல குவிந்த கொத்துக்களையுடைய
புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற புலவுநாறும் கடற்கரைத் தலைவனான தலைவன்

மண்ணுறு

மண்ணுறு – (வி) 1. கழுவப்படு, be washed, made clean
2. திருநீராட்டப்படு, நீரூற்றிப் பூசிக்கப்படு, bathe as an idol
3. கைசெய், அலங்கரிக்கப்படு, get adorned, decorated
1.
பூசல் ஆயம் புகன்று இழி அருவியின்
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே – குறு 367/5-7
ஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால்
கழுவப்பட்ட நீலமணிபோல் தோன்றும்
குளிர்ந்த நறிய குத்துப்பாறை உயர்ந்துள்ள மலையினை.
2.
காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல்
விண் உயர் அரண் பல வௌவிய
மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/3-5
காண்பேனே, அவளின் அழகுபெற்ற ஒளிவிடும் நெற்றியை;
வானளாவிய அரண்கள் பலவற்றைக் கைப்பற்றிய,
கழுவிப்பூசிக்கப்பட்ட முரசையுடைய வேந்தன் தனது போரைக் கைவிட்டால்.
3.
தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 23-26
தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து,
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் நெற்றியில்தங்க அலங்கரிக்கப்பட்டு,
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்

மண்ணை

மண்ணை – (பெ) மொண்ணை, கூர் முழுங்கியிருத்தல், bluntness
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/11-13
காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து
கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய
சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,

மதகு

மதகு – (பெ) குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை, sluice to let off water from a tank
அணை, ஏரி முதலியவற்றில், தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய
அமைப்பு.

நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் – பரி 24/66
மிக்க நுரையுடன் மதகுகள்தோறும் புகுந்து வெளிவரும் நீர் கரை புரண்டு ஓடும்;

மதன்

மதன் – (பெ) 1. அறியாமை, மடம், ignorance
2. வனப்பு, அழகு, beauty
3. செருக்கு, arrogance
4. மனவெழுச்சி, Enthusiasm, elation
5. மிகுதி, abundace, exces
6. வலிமை, strength
1.
உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
தன்னைச் சேர்ந்தாரின் தீவினையைப் போக்கி அவரைத் தாங்கிய அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய
வலிமையுடைய தாள்
2.
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259
தன் கடுமையால் குதிரையின் செலவைப் பின்னே நிறுத்தும் வனப்புடைத்தாகிய வலியினையுடைய தாளினையும்

அகல் வயல்
அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/5-8
அகன்ற வயலில்
கதிரறுப்போரால் அறுக்கப்பட்டு, அதனைக் கொண்டுவருவோரால் கொணரப்பெற்றும்
குளிர்ந்த சேறு பரவிய அழகுடைய வலிய தண்டினையுடைய
கண் போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும்
3.
மன்னர், மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 277,278
பகைமன்னரின், நிலைபெற்ற மதிலைக் கைப்பற்றும் செருக்கினையும், வலியினையுமுடைய தாளினையும்
4.
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6
அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியையுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய
5.
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1
மடுத்தெழுந்த போரின்கண் பகைவரைக் கொன்ற மிகுதி பொருந்திய வலிய முயற்சியையுடைய
6.
மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென – புறம் 50/12
நினது வலியையுடைய முழவு போலும் தோளை எடுத்து

மதமா

மதமா – (பெ) யானை, elephant
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின்
பெரும் கை மதமா புகுதரின் அவற்றுள் – பதி 43/3,4
உரல் போன்ற பெரிய கால்களையும், ஒளிருகின்ற கூர்மையான கொம்புகளையும்,
பெரிய துதிக்கையையும் கொண்ட யானைகள் தமது காட்டினுள் புகுந்தால்,

மதம்

மதம் – (பெ) 1. யானையின் துணைதேடும் காலத்து வெறி, rut of an elephant,
a state or period of heightened sexual arousal and activity
2. வலிமை, strength, valour
3. செருக்கு, இறுமாப்பு, pride, arrogance
4. வெறி, frenzy, madness
5. கஸ்தூரி,
musk, An odorous glandular secretion from the male musk deer; used as a perfume fixative
1.
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே – குறு 136
காமம் காமம் என்று உலகினர் அதைக் கண்டு அஞ்சுகின்றனர்; அந்தக் காமம்
வருத்தமும் நோயும் அன்று; நுண்ணிதாகி
மிகுவதும் குறைவதும் அன்று; யானை
தழையுணவை மிகுதியாக உண்டு அதனால்கொண்ட மதத்தைப் போல
அது வெளிப்படும் தன்மையும் உடையது காணக்கூடியவரைப் பெற்றால்.
2.
மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி – மலை 42,43
வலிமை குன்றிய நாயின் நாவைப் போன்றதும்,
சோர்வடைந்த தன்மையினால் தளர்வுற்றதும், கற்களை மிதித்து நடந்ததுமான சிறிய பாதங்களையும்,
3.
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த
வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/8-11
இனிய சுவையுள்ள சுனைநீரின் மலர்களைக் கண்ணியாகச் செய்து சூடி, இறுமாப்புடன் செருக்கி,
தனக்கே உரித்தானதாகப் பெற்ற நிலையையுடைய நல்ல போர்களை வென்று, எதிர்ப்போரின் வீரத்தை அழித்து,
மிக்க சினத்தையுடைய வேந்தர்களின் தலைமையினையும் இல்லாமற்செய்த
வெற்றி பொருந்திய பெரிய கழல் அணிந்த வீரர்களுக்குத் தலைவனே!
4.
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் ;36/1-7
பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி,
ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு, குவளையின்
மலர்கின்ற பல மலர்கள் சிதைந்துபோகப் பாய்ந்து எழுந்து,
பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,
தூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல்,
கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளையைப் போல வெறி மிகுந்து,
காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!
5.
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44
மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய்
உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன்,

மதர்

மதர் – 1. (வி) 1. செழி, கொழு, வளப்பமுடன் இரு, be rich, luxuriant
2. செருக்குடன் இரு, be arrogant, be self-conceited
3. இறுமாந்திரு, be elated, feel exulted
2. (பெ) 1. செருக்கு, Pride, arrogance, self-conceit, wantonness
2. களிப்பு, கள்வெறி, state of ecstacy, Intoxication, inebriation
1.1
கடும்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் – புறம் 378/18-20
மிக்க திறலையுடைய இராமனுடன் காட்டிற்குச் சென்ற சீதையை
மிக்கவலிமைபெற்ற அரக்கன் இராவணன் கவர்ந்துசென்றபோது
சீதை கழற்றியெறிய நிலத்தே வீழ்ந்த வளப்பம் மிக்க அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினுடைய
1.2
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து – அகம் 39/11
செருக்குற்ற புலியினைக் கண்டு அஞ்சிய மயக்கம் பொருந்திய யானைக்கூட்டம்

கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/4-8
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேறுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன்,
செம்மையாக நீள உழும் உழவர் தம் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குற்று
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்
1.3
மதர் எழில்
மாணிழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு – அகம் 99/3-5
இறுமாந்த அழகினையும்
மாண்புற்ற அணியினையுமுடைய மகளிரது பூண் அணிந்த முலையினைப் போன்ற
முகைகள் அலர்ந்த கோங்கம்பூக்களொடு

இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில்
பூண் அக வன முலை நனைத்தலும் – குறு 348/4,5
இமையின் விளிம்பைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி, இறுமாந்த அழகினையுடைய
பூண்களின் அகத்தே இருக்கும் அழகிய முலையை நனைக்கின்றதனையும்
2.1
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் – அகம் 140/10
செருக்குள்ள கயல் இரண்டு எதிர்த்துப் பொருவது போன்ற அவள் கண்கள்

நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர்
ஒள் இழை மகளிர் பள்ளி அயர – மது 622,623
பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து மடப்பத்தினையும் செருக்கினையும்
ஒள்ளிய அணிகலன்களையுமுடைய மகளிர் துயிலுதலைச் செய்ய
2.2
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற
கரப்பார் களி மதரும் போன்ம் – பரி 10/63-68
காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் அக் காமக் களிப்பு தோன்ற,
ஊருக்காக மிகவும் அஞ்சி, அக் காமக்களிப்பினை ஒளிப்பார் சிலர், அவரின் நிலை
கள்ளுண்டதால் களிப்பு மிகுந்து எழ, அதைக் கட்டுப்படுத்துவது போன்றிருந்தது; ஆனால் ஊராரின் பேச்சுக்கு அஞ்சி,
உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும்
பரப்பி, தம் களிப்புக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற,
தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி.

மேற்கூறிய வழக்காறுகள் தவிர சங்க இலக்கியங்களில் 21 இடங்களில் மதர் என்ற சொல் பெண்களின் கண்களைக்
குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் 11 இடங்களில் அரி மதர் மழைக்கண் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரி மதர் மழை கண் என்ற தொடரில் வரும் மதர் என்ற சொல் பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்பதில்
குழப்பம் நிலவுகிறது. இத்தொடரில் அரி (செவ்வரி), மழை (குளிர்ச்சி) ஆகிய சொற்கள் பெயர்ச்சொற்களே.
எனவே மதர் என்பதனையும் ஒருபெயர்ச்சொல்லாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், பெரும்பாலான உரையாசிரியர்கள் இத்தொடருக்கு, செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண் என்றே
உரை கொள்கின்றனர். ஆனால், தமது விளக்கவுரையில், மதர் – செருக்கு, மதர் – களிப்பு என்ற
பொருளும் தருகின்றனர். எனவேதான் இத்தொடரில் வரும் ‘மதர்’ என்ற சொல்லை எதில் சேர்ப்பது
என்ற குழப்பம் நிலவுகிறது.

கண் என்ற சொல்லுக்கு அடையாகக்கொடுக்கப்படும் மதர் என்ற சொல் பயன்பாட்டை மூன்று விதங்களாகப்
பிரிக்கலாம்.
1. தலைவி அல்லது ஓர் இளம்பெண்ணின் கண்களைப் பாராட்டும் விதமாக அமைந்திருப்பது.

அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி
மட மதர் மழை கண் இளையீர் – குறி 140,141
தளர்ந்த மென்மையான சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும்
மடப்பத்தையுடைய மதர்த்த குளிர்ந்த கண்ணினையுமுடைய இளையீரே

அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்
பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/1-4
நீங்காத துயரத்தின்வாய்ப்பட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையும்,
பல பூக்களும் மாறுபட்ட தழைகளும் உடைய தழையாடை அசைந்தாடும் அல்குலையும்
அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி
யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!

முது நீர் இலஞ்சி பூத்த குவளை
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/8-10
நாட்பட்ட நீரினைக்கொண்ட பொய்கையில் பூத்திருக்கும் குவளை மலர்களை
எதிர் எதிராக வைத்துக்கட்டியதைப் போன்ற இவளது
செவ்வரி பரந்த செழுமையும் குளிர்ச்சியும் மிகுந்த கண்களைக் காண்பதற்கு முன்னர்

ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – பதி 21/34,35
குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,

கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல்
முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை – பரி 8/74-77
குளத்திடத்து இருக்கும் நெய்தல் பூக்களையும், மலர்ந்து மணங்கமழும் மொட்டுக்களின் மணத்துடனான
மலர்ச்சியினால்
கண்டோர் விரும்புவதற்குரிய நறவம் பூவின் இதழையும் போன்ற மதர்த்த மையுண்ட கண்களையும்,
ஒளிவிடும் நெற்றியையும்,
மொட்டாகிய முல்லையையும் வென்று, அழகிய முத்துக்களைப் போன்றிருக்கும் வெண்மையான பற்களையும்
கொண்ட தலைவி
கூறியது நகைப்பதற்குரிய கனவு அன்று, உண்மையாக நடந்த நிகழ்ச்சியும் அன்று!

திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
அணங்குசால் அரிவையைக் காண்குவம் – அகம் 114/13-15
செல்வமுள்ள மனையில் தங்கிய குற்றமற்ற கற்பினையும்
செவ்வரி படர்ந்த மதர்ந்த குளிர்ந்த கண்களையும் மூங்கிலை ஒத்த பருத்த தோளினையும் உடைய
தெய்வம் போல் சிறந்த நம் தலைவியைக் காண்போம்.

ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை
பெரு மலை நாடன் மார்பு புணையாக
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/4-8
உயர்ந்த மலையினின்றும் வீழும் மிக்க மழையாலான அருவி நீரில்,
காந்தள் பூக்களையுடைய இச்சீறூரின் அலரினைப் போற்றாது
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் சிவந்திட, நாளை
பெருமலைநாட்டினனாகிய தம் தலைவனின் மார்பு தெப்பம் ஆக
விளையாடுவோம் வருவாயாக காதல் மிக்க தோழியே!

கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்
சின் மொழி பொலிந்த துவர் வாய்
பன்மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/16-19
கள்ளால் ஆகிய
மகிழ்வு போல் மகிழ்தற்கு ஏதுவாகிய செவ்வரி படர்ந்த மதர்ந்த குளிர்ந்த கண்களையும்
சிலவாய மொழிகளால் பொலிவுற்ற பவளம் போன்ற வாயினையும்
பலவாய மாண்புகளையும் உடைய நம் தலைவியாகிய பேதைப்பெண்ணைப் பிரிந்த நீ

தூமலர் தாமரை பூவின் அங்கண்
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை – அகம் 361/1-4
தூய மலராய தாமரைப் பூவிடத்தே
கரிய இதழ்களையுடைய குவளை மலர் இரண்டினைப் பிணைத்துவைத்தாற் போன்ற
அழகிய முகத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும்
அழகிய வளைகளையுடைய முன்கையினையும் அழகிய வாய் இதழினையுமுடைய நம் தலைவியின்

நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையா
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று
அரி மதர் மழை கண் அம் மா அரிவை
மரம் படு சிறு தீ போல
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349
தன் கை வேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து
கேட்டார் அஞ்சத்தக்க மொழிகளைக் கூறுகின்றான் வேந்தனும், இவள் தந்தையும்
நெடுமொழிகளைத் தவிர பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றானில்லை,
இது இவர்கள் கொள்கை ஆகும், இதனை ஆராயுங்கால் கூரிய பற்களையும்
அரி பரந்து மதர்த்துக் குளிர்ந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையுமுடைய அரிவையாவாள்
மரத்தைக் கடையுமிடத்துத் தோன்றும் சிறு தீ அம் மரத்தை அழிப்பது போள
வருத்தம் விளைவிப்பவளாயினள் இவள் தான் பிறந்த ஊர்க்கு.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உள்ள ‘மதர்’ என்ற சொல், ஒரு பாராட்டுச்சொல்லாகவே இருக்கக் காண்கிறோம்.
எனவே, இத்தகைய இடங்களில் வரும் மதர் என்பதற்கு, செழிப்பான (luxuriant), வளமைபொருந்திய(rich),
மகிழ்ச்சிநிறைந்த(joyful) போன்ற பொருள்கள் ஒத்துவரும் எனத் தோன்றுகிறது.
மேலும், இவற்றில் சில இடங்களில், மதர்க்கண் என்பதைக் காந்தக்கண்கள், சுண்டியிழுக்கக்கூடிய கண்கள்,
கவர்ச்சியான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

2. அடுத்து, தலைவனை மயக்கி இழுக்கும் பரத்தையரின் கண்களும் மதர்க்கண்கள் எனப்படுகின்றன.
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி – பரி 20/55-58
இணக்கமுள்ள மதர்த்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி, இளமைபொருந்திய விரல்களால்
பொருள்கொடுப்போருக்கு யாழினை இசைத்து இசையெழுப்பி இன்பமூட்டும் பொழுதே, என் அணிகலன்களையும்
அணிந்து, மகிழ்வித்து, இன்பம் வழங்குவதில் பொதுமையுடையவளே!

சேரி
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
செரு ஒழிந்தேன் சென்றீ இனி – கலி 91/12-15
சேரியிலிருக்கும்
செவ்வரி படர்ந்த மதர்த்த மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால்
உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும்
கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது”;

அரி மதர் மழை கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி
புலரா மார்பினை வந்து நின்று எம்வயின்
கரத்தல்கூடுமோ – அகம் 296/3-7
செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்ணினை உடைய மாமை நிறத்தையுடைய பரத்தையுடன்
நேற்றும் மணம் கமழும் பொழிலில் துயின்று இன்றும்
அவளுடன் வையையின் நீர்ப்பெருக்கில் விளையாடி
ஈரம் புலராத மார்பினையுடையையாய் எம்பால் வந்து நின்று
எமக்கு மறைத்தல் இயலுமோ?

பரத்தையரின் கண்ணழகைத் தலைவியர் பாராட்டமாட்டார் என்பது உறுதி.
எனவே இது ஒரு வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கவேண்டும்.
மதர் என்ற சொல்லுக்கு with intense desire என்ற ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு.
வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் தமது சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்புகளில்
இச்சொல்லுக்கு இந்த இடங்களில் luscious என்று பொருள்கொண்டிருப்பார். இதற்கு,
Having strong sexual appeal என்று பொருள்.
இதனை seductive, voluptuous என்றும் கொள்ளலாம். எனவே, இத்தகைய இடங்களில் வரும் மதர் என்ற
சொல்லுக்கு போதை தரும், மயக்கம் தரும், வெறியூட்டும் என்ற பொருள்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.

3. அடுத்து, மிகுந்த துயரத்தில் ஆழ்ந்து கண்ணீர்விடும் ஒரு பெண்ணின் கண்களும் மதர்க்கண் எனப்படுகின்றன.
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 247,248
பெரிய மழைத் துளிகள் ஓங்கிப்பாய்ந்த மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து,
ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன – (இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்),

திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள்
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/3,4
தன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, தான் விரும்பியவனுக்காக வருந்துபவளின்
சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல் தெறிப்பது போல்

ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் – கலி 82/20,21
அப்பொழுது, ‘மகளிரின் செவ்வரிபடர்ந்த, செழித்த, மைதீட்டிய கண்கள் பசந்துபோகும்படி அவருக்கு நோவைத் தரும்
உன் தந்தையின் பரத்தைமைக் குணத்தைப் போலிருக்காதே’ என்றாள்,

மதர் எழில் மழை கண் கலுழ இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே – அகம் 120/6-9
மதர்த்த அழகினையுடைய குளிர்ந்த கண் கலங்கிட, இவள்
மிக்க நாணத்தைக் கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய
தன் மாண்புற்ற அழகு கெட ஏக்கமுற்று அமையாது
அழுதலைத் தொடங்கியுள்ளாள்

வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/17-19
வண்டு வீழ நீண்ட ஆழமான சுனையில் பூத்த நீலப்பூவின்
புதிய மலர் இரண்டின் சேர்க்கை போன்ற இவளது
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரினைக் கொள்ள

நெடிது உயிர்த்து
வருந்துவள்கொல் அளியள் தானே சுரும்பு உண
நெடுநீர் பயந்த நிரை இதழ் குவளை
எதிர் மலர் இணை போது அன்ன தன்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/17-21
பெருமூச்செறிந்து
வருந்தியிருப்பாளோ! இரங்கத்தக்காள்! வண்டு தேனைப் பருக
ஆழமான நீரினால் தரப்பட்ட நிரையாகவுள்ள இதழ்களையுடைய குவளையது
புதிய மலராய இரண்டு பூக்களைப் போன்ற தனது
செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரைக் கொள்ள

திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாய்
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் – அகம் 387/1,2
இவளின் திருந்திய அணி நெகிழவும் பெரிய தோள் நெகிழவும்
அரி பரந்த மதர்த்த கண்களில் நீர் ஒழுகவும் செல்லும் தலைவரே

கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 147/3-5
கார்காலத்து மழையின் இனிய துளி வீழ்கின்ற ஓசையை தமியளாய்க் கேட்டு
நேற்று ஒருபக்கத்துத் தனிமைகொண்டிருந்த
அரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணினையும் அழகிய மாமை நிறத்தினையுமுடைய அந்த அரிவையின்

இவற்றில், சில இடங்களில், தலைவி துயருறுவதற்கு முன்னர் கண்கள் இருந்த நல்ல நிலை சுட்டப்படுவதாகக்
கொள்ள இடமுண்டு. முன்பு மதர்த்திருந்த கண்கள் இப்போது கண்ணீர் மழை சொரிய என்ற பொருள் கொண்டால்
இங்கு மதர் என்ற சொல்லுக்கு நாம் முதன்முதலில் (எண் 1) கண்ட பொருள் ஒத்துவரும். ஆனால்,

நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழை கண் அம் மா அரிவை

என்ற அடிகளில் தனிமைத்துயரில் வாடும் மதர்க்கண்னையுடைய அரிவை என்ற பொருள் அமைவதால்,
பொதுவாக, மதர் என்ற சொல்லுக்குத் தரப்படும், செழிப்பு, களிப்பு, செருக்கு ஆகிய பொருள் ஏற்புடையனவாக
இல்லை.

வான் ஆர் மதி வாள் முகமும் மட மான் மதர் நோக்கும்
கோன் ஆர் மகள்தன் வடிவம் நோக்கி – சிந்தா:12 2456/2,3
வான் நிலவு அனைய ஒளி முகமும், இளம் மானைப் பழிக்கும் மதர்த்த நோக்கும் உடைய
கோவிந்த மன்னனுடைய மகளின் வடிவழகைக் கண்டு

என்ற சிந்தாமணி அடிகள் நமக்கு ஒரு புதுப்பொருளைத் தருகின்றன.
மட மான் மதர் நோக்கும் என்ற தொடருக்கு ’மடமானை வென்ற மதர்த்த நோக்கும்’ என்று
பொருள்கொள்வார் பெருமழைப்புலவர்.

மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 25
மயில் இயல் மான் நோக்கின்
கிளி மழலை மென் சாயலோர் – பட் 149,150
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே – நற் 101/9
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 69/4
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/18
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/6

ஆகிய அடிகள், பெண்கள் மானைப்போன்ற பார்வையைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றன.
மானின் கண்களில் உள்ள சிறப்பு அதன் மருண்ட பார்வைதான்.
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
என்ற அகநானூற்று அடி இதனை உறுதிப்படுத்துகிறது.
எனவே, மதர் என்பதற்கு இங்கு ’மருண்ட’ அல்லது ‘மருட்சி’ என்ற ஒரு பொருளும் உண்டு என்பது இதனால்
புலப்படுகிறது. இந்தப் பொருளே மூன்றாவதாக இங்குக் குறிப்பிடப்படும் துயருள்ள பெண்களின் கண்ணுக்கு
அடையாகக் குறிப்பிடப்படும் மதர் என்ற சொல்லுக்குச் சரியான பொருளாகும்.
ஆனால் எந்த அகராதியிலும் இந்தப் பொருள் கொடுக்கப்படவில்லை. இனிவரும் அகராதிகளில் இந்தப்பொருளும்
சேர்க்கப்பட்டால், இச் சொல்லுக்குரிய பொருள் அட்டவணை முழுமைபெறும்.

மதர்வை

மதர்வை – (பெ) மதர்வு, மதர்ப்பு, செழிப்பு, களிப்பு, இறுமாப்பு, செருக்கு,
luxuriance, exultation, haughtiness, arrogance
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
செம்மாப்பையுடைய நல்ல பசுவின் குற்றமற்ற தெளிந்த மணியோசை

மதலை

மதலை – (பெ) 1. தூண், post, pillar, pop
2. கொடுங்கை, கட்டிட/தூண்களின் உச்சியில் சிற்பவேலைப்பாடமைந்த பிதுக்கம்
Overhanging border, cornices or projections on the sides, front or pillars of a house
3. ஆதரவு, பற்றுக்கோடு, support
4. துணை, உதவி, help, aid
5. மதலை கோல் – இசைப்பவர் தலைவன் தன் கையில் வைத்திருக்கும் கோல்,
மதலை – support to produce music (vaidehi herbert)
1.
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 346-350
வானம் (வீழாதபடி முட்டுக்காலாக) ஊன்றிவைத்த தூண் போல
ஏணியைச் சாத்திய ஏறுதற்கரிய தலையினையுடைய,
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில்,
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்
2.
மனை உறை புறவின் செம் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 45-48
வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்
(தான்)இன்பம் நுகரும் பெடையொடு நாற்சந்தியில் (இரை)தேடி உண்ணாமல்,
இரவுக்காலமும் பகற்காலமும் தெரியாமல் மயங்கி, செயலற்று,
கொடுங்கைகளைத் துயிலிடமாய்க் கொண்டு, (அவற்றிற்கிடையே)தாவிக்கொண்டிருக்க;

3.
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்ஒருவிர் ஓம்பினர் கழிமின் – மலை 214-218
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,
பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,
செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள் –
4.
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின்
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/13-15
நம்மைச் சுற்றிப் பழிச்சொற்கள் மிகுந்தன, அவரோ என்னை விட்டுப் பிரிந்து இருக்கிறார்,
துணையில்லாத நெஞ்சுடன் இவள் துயர் தாங்கும் ஆற்றல் இல்லாதவள் என்றிராமல்,
என் நெற்றியில் பசலை படர்கின்றது, நொடித்திறங்கும் தோளினாய்! அவரின் அன்பால் என்ன பயன்?
5.
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/14-18
முழவுக்கு மண்சாந்து பூசுங்கள், யாழை மீட்டுங்கள்
கந்தூம்பு என்ற யானையின் துதிக்கை போல்வடிவமைந்த பெருங்குழலை ஊதுங்கள்
சல்லரியைத் தட்டுங்கள், சிறுபறையை அறையுங்கள்
ஒரு பக்கமுள்ள மதலையைக் கொட்டுங்கள்
இசைப்புலமைக்குச் சான்றாக அமையும் கோலை என் கையில் தாருங்கள் – ச.வே.சுப்பிரமணியன்

இறுதி அடிக்கு மட்டும் வேறு உரை:

place in my hand the black rod that foretells the future – Vaidehi Herbert
நமது பிறப்புணர்த்தும் கரிய கோலைக் கையின்கண்ணே தாருங்கள் – ஔவை துரைசாமி.

இதற்கு
கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும் பதி 43:27
என்று பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் நுண்கோல் என்ற சொல்லை எடுத்துக்காட்டுவார் உரையாசிரியர்.
இந்த நுண்கோல் என்பதை இசைஞர்கள் தம் கையில் வைத்திருந்தனர் என்று அகம் 152/4, அகம் 208/3, புறம் 70/3
ஆகிய பாடல்களால் அறிகிறோம்.
இன்றைக்கும் மேற்கத்திய இசை இசைக்கும் இசைக்குழுவுக்குத் தலைவர், தம் குழுவினர் பாடும்போது கையில்
ஒரு சிறு கோல் வைத்திருப்பதைக் காணலாம். ஒருவேளை, இதைப்போன்றே, பாணர் தலைவர் தம் கையில்
கோல் வைத்திருந்தார் என எண்ணத் தோன்றுகிறது.

மதவலி

மதவலி – (பெ) மிகுந்த வலிமை, Great strength
ஆகுபெயராக மிகுந்த வலிமையுடைய ஒருவனையும் குறிக்கும்.Person of great strength
சிறப்பாக, முருகன் என்ற தெய்வத்தைக் குறிக்கும், Lord Murugan

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குருசில் – திரு 275,276
சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்,
போர்த்தொழிலில் மிகுகின்ற வீரனே, தலைவனே

ஒன்பதிற்று தட கை மன் பேராள
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/39,40
ஒன்பது பெரிய கைகளைக் கொண்ட புகழ் நிலைபெற்ற பேராளனே!
பத்துக் கைகளைக் கொண்ட மிகுந்த வலிமை கொண்டவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே!

வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/2
வில்லைக்கொண்டு வேட்டையாடி வாழும் வாழ்க்கையையுடைய சீறூருக்குரியவனாகிய மிக்க வலிமையுடைய
தலைவன்

மதவு

மதவு – (பெ) 1. மிகுதியான ஆர்வம், excessive desire, abundance of desire
2. வலிமை, strength
3. மடம் – மென்மை, tenderness, delicacy
மத அல்லது மதவு என்ற சொல்லைத் தொல்காப்பியம் வரையறுத்துள்ளது.

மதவே மடனும் வலியும் ஆகும் – தொல்-சொல்-உரி/79
மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே – தொல்-சொல்-உரி/80

எனவே, மடமை. Ignorance; வலிமை. Strength; மிகுதி. Excess. abundance; அழகு. Beauty;
என்பனவே மதவு என்பதற்குப் பொருளாகும்.

இந்த மதவு என்ற சொல் சங்க இலக்கியத்துல் 5 முறை வருகிறது.
இந்த ஐந்துமே அகநானூறு என்ற ஒரு நூலில் மட்டும் வருவது வியப்பிற்குரிய செய்தி. அவை,

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/9

பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை – அகம் 23/7,8

கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி – அகம் 26/17,18

கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி – அகம் 54/6,7

பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/7,8

1.1
காலையில் வெளியில் மேயச்சென்ற கறவைமாடுகள், மாலையில், மடிநிறைய பாலினை ஏந்திக்கொண்டு
வீட்டிலுள்ள தம் கன்றுக்குப் பாலூட்ட, மிகுந்த ஆர்வத்துடன் வேகநடை போட்டுவருவதையே, மதவுநடை நல்லான்
என்று புலவர் குறிப்பிடுகிறார், எனலாம்.

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/9-11
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய மிகுந்த ஆர்வத்துடனான நடையுடைய நல்ல ஆனினங்கள்
பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற
1.2
கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கை கோவலர்
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/6-12
விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! செருக்கான நடையுடன்
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க
கனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
வளைந்த (வேட்டி)மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட இடையர்,
கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;

இங்கே, மதவு நடை என்பதை, பய நிரை ஆயம் என்பதனோடு பொருத்திக் கன்றினுக்குப் பாலூட்ட
விரைந்து நடக்கும் பசுக்கூட்டம் என்று பொருள்கொள்ளவேண்டும்.
ஆனால், மதவு நடை என்பதை, தாம்பு அசை குழவி என்று அடுத்து வருகின்ற கன்றுக்கும் பொருத்தலாம்.
எனில், தாய்ப்பசுவிடம் பால்குடிக்க மிகுந்த ஆர்வத்துடன் ஓடிவரும் கன்றினுக்கு என்று பொருள் கொள்ளலாம்.
2.1
பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/7,8
அறுகின் கிழங்கையும் வெறுத்து, செருக்கான நடையினை உடைய
தலைமைப் பண்புள்ள ஆண் இரலைமான்கள் தான் விரும்பிய பெண்மானைத் தழுவி

இங்கே, மதவு என்பதற்கு, வலிமை அல்லது அந்த வலிமையினாலுண்டான செருக்கு என்று பொருள் ஏற்றதாகிறது
2.2.
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/6-8
மழை பெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய கலங்கல் நீரினை
அறுகம்புல்லைத் தின்ற அசையும் திமிலையுடைய நல்ல ஏற்களும்
வலிமையுடைய நாவினால் தளர்ச்சி நீங்கக் குடித்து

அதிகமான தாகத்தினால், மிகுந்த ஆர்வத்துடன் நாவைச் சுழற்றி, காளை நீர் குடிக்கிறது என்றும் கொள்ளலாம்.

இங்கே, மதவு உடை நாக்கொடு என்ற தொடர், பாடபேதமாக, மதவு நடை நாகொடு என்றும் கொள்ளப்படுகிறது.
நாகு என்பது இளம் பசு. எனவே இங்கு மதவு என்பதற்கு மிகுந்த ஆர்வம் என்று முதலில் நாம் கண்ட பொருள்
ஏற்புடையதாகிறது.
3.
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் – அகம் 26/17-19
(முன்பு இறுக)அணைத்த கை (இப்போது) நெகிழ்ந்ததைக் கண்டு, மென்மையான நடையுள்ள
செவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி
(என்னைக் காட்டிலும்)நன்றாக இருப்போரிடம் ஒத்துப்போவீர் நீவிர்,

மதாணி

மதாணி – (பெ) கழுத்தணியின் தொங்கல், Large pendant suspended from the necklace
திண் கதிர் மதாணி ஒண் குறு_மாக்களை – மது 461
திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளை

ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அ தகு மதி மறு
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/29-32
ஓங்கி உயர்ந்த வானத்தில் தோன்றும் வளைந்த வானவில்லைப் போன்ற
பலநிறப் பூணாகிய அணிகள் அகத்திடப்பட்ட, நிறைந்த அழகான முத்துக்களால் ஆன
நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று
சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;

மதி

மதி – 1. (வி) 1. உயர்வாகக் கருது, பெருமையாகக் கொள், esteem, value, regard, respect
2. எண்ணு, உறுதிசெய், துணி, decide, ascertain
3. கருது, consider, think
– 2. (பெ) 1. சந்திரன், moon
2. மதிப்பு, சிறப்பு, esteem, value
3. இயற்கை அறிவு, understanding, intellect
4. நல்லறிவு, பகுத்தறிவு, Discrimination, judgment, discernment
– 3. (இ.சொ) ஒரு முன்னிலை/படர்க்கை அசைச்சொல்,
An euphonic suffix of the imperative mood / Expletive of the third person
1.1.
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3
மன்னர்கள் உயர்வாகக் கருதும் மாட்சிமையான போர்வினையில் மேம்பட்ட குதிரைகளின்
1.2.
அணி சிறை இன குருகு ஒலிக்கும்_கால் நின் திண் தேர்
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/6-9
அழகிய சிறகுகள் கொண்ட கூட்டமான குருகுகள் ஒலிக்கும்போது, அதனை, உன்னுடைய திண்ணிய தேரின்
மணியொலி என்று இவள் எண்ணுவாள், அவ்வாறு எண்ணித்துணிந்தபோது
உள்ளுக்குள் அடங்கின ஒலியாக இருக்கக்கண்டு , அவை கடற்கரைச் சோலையின்
பறவைகளின் குரல் என்று தெளிந்து, பின்னர் தனிமை கொண்டு வருந்துவாள்;
1.3.
காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/12,13
காதலைவைத்துக்கொண்டு என்ன செய்ய, பொருள் இல்லாவிட்டால்? என்று
ஊரார் கூறும் சொற்களை ஒரு பொருட்டாக மதித்தாயோ?
2.1
பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 219
பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று
2.2
மதி நிறைந்த மலி பண்டம் – பட் 136
மதிப்பு மிக்க ஏராளமான பண்டங்கள்
2.3
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண்
நன்னன் சேய் நன்னன் – மலை 62,64
தன் அறிவிற்கு மாறாக நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய,
வில்தொழில் பயின்ற பெரிய கையினையும், (தனக்குப்)பொருத்தமான சிறந்த அணிகலன்களையும் உடைய
நன்னன் மகனான நன்னனை
2.4
அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/3-10
அச்சம் தரும்படி நடுக்குகின்ற கொடுமையான பாலைநிலக்காட்டில் சென்றோர்
தான் திரும்பி வருவேன் என்று தெளிவாகக் கூறிய பருவம் மிக்க அழகிதாக
வந்திருக்கும் இதுவோ என்று கேட்கிறாய் மடந்தையே! நல்லறிவில்லாது
பருவகாலத்தை மறந்து, கடல் நீரை முகந்த நிறைவான சூல்கொண்ட கரிய மேகங்கள்,
அதனைத் தாங்கமாட்டாது கொட்டித்தீர்த்த பெருமழையைக்
கார்காலத்து மழை என்று பிறழக்கருதிய உள்ளத்தோடு, தேர்ந்தறியும் அறிவு இல்லாதனவான
பிடவமும், கொன்றையும், காந்தளும்
மடமையுடையனவாதலால் மலர்ந்துவிட்டன பலவாக –
3.
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறி_தொடி உள்ளம் உவப்ப
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487
இதுவே பிரிந்திருப்போர் ஒருவரையொருவர் நினைத்தேங்கும் மாலைக்காலம்;
செறிவான வளையல்களை அணிந்தவளின் உள்ளம் உவக்குமாறு
அறிவுடைய பாகனே! விரைந்து செலுத்துவாய் தேரினை.

மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி – திரு. 290-295
மணம் கமழ்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய இளைய வடிவைக் காட்டி அருளி,
‘அஞ்சுவதை விடுக, அறிவேன் நின் வரவை’ என
அன்புடைய நல்ல மொழிகளைப் பலகாலும் அருளிச்செய்து, கேடு இன்றாக
இருண்ட நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில்
ஒருவனாகிய நீயே (யாண்டுமாகித்)தோன்றுமாறு, சீரிய
பெறுதற்கரிய பரிசில்(ஆன வீடுபேற்றினைத்) தந்தருளுவான்

மதிநாள்

மதிநாள் – (பெ) முழுமதிநாள், பௌர்ணமி, full moon
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதிநாள் திங்கள் – நற் 62/3-7
வெம்மையான கோடைக்காலம் நீடிய மூங்கில்கள் மிகுந்த காட்டுவழியில்
குன்றினை நோக்கி ஊர்ந்துசெல்லும் முழுநிலவை நோக்கி, நின்று, அவளை நினைந்து
மனத்துள் எண்ணிப்பார்த்தேன் அன்றோ நான்! முள் போல் கூர்மையான பற்களையும்,
திலகமிட்ட இனிய மணமுள்ள சிறப்பான நெற்றியையும் கொண்ட ஒருத்தியாக
எம்முடையவளும் உண்டு ஒரு நிறைநாள் திங்கள்(போன்றவள்),

மதியம்

மதியம் – (பெ) 1. திங்கள், சந்திரன், moon
2. முழுநிலவு, full moon
1.
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு – கலி 121/17,18
ஒளிரும் சுடரினைக் கொண்ட ஞாயிற்றின் பிரகாசத்தால் தன் ஒளி மங்கித் தோன்றும்
நண்பகலில் காணப்படும் திங்களைப் போல் தன் பொலிவிழந்த இந்த அழகிக்கு;
2.
கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு – பதி 31/12
பிறைநிலவின் கொம்புகள் கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று

மதில்

மதில் – (பெ) கோட்டைச்சுவர், wall round a fort, fortification
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/7
ஆழமான இடத்தையுடைய அகழிகளைக் கொண்ட கோட்டைச் சுவர்கள் பலவற்றை வெற்றிகொண்டு

மது

மது – (பெ) 1. போதையூட்டும் பானம், Intoxicating drink
2. தேன், honey
1.
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 108
(மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும்,
2.
விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து – பரி 17/5
மலர்ந்த பூக்களினின்றும் ஒழுகும் தேனினால் மரங்கள் நனைந்துபோகும் திருப்பரங்குன்றத்தில்,

மதுகை

மதுகை – (பெ) 1. வலிமை, ஆற்றல், strength, power
2. மனத்திட்பம், mental strength, firmness of mind
1.
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8
மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து

தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/13,14
அவரின்றி
நான் உயிர் வாழும் ஆற்றல் எனக்கில்லை என்பதால்,
2.
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – நற் 110
தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை,
விரிந்து ஒளிவிடும் பொன்னால் ஆன பாத்திரத்தில் இட்டு அதனை ஒரு கையில் ஏந்திக்கொண்டு
அடித்தால் சுருண்டுகொள்ளும் மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை,
‘குடி’ என்று உயர்த்திப்பிடிக்க, அதினின்றும் தப்பிப்பிழைக்க, தெளிவான தன்மையுள்ள
முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்கத் தத்தித்தத்தி ஓடி,
மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்
ஓடித் தளர்ந்து தம் முயற்சியைக் கைவிட, பந்தல்கால்களுக்கிடையே ஓடி
செவிலியரின் கெஞ்சலை மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,
இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ?
தன்னைக் கைப்பிடித்த கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததாக,
தன்னைக் கைப்பிடித்துக்கொடுத்த தந்தை வீட்டின் மிகுதியான சோற்றினை நினைத்துப்பார்க்கமாட்டாள்,
சிறிதாக ஓடும் நீரில் நுண்ணிய வளைவுவளைவான கருமணலைப் போல
வேண்டும்பொழுது உண்ணாமல் கிடைக்கும்பொழுது உண்ணும் சிறியவளான மனத்திட்பமுடையள் ஆயினள்.

மதைஇனள்

மதைஇனள் – (பெ) மதர்த்தவள், செருக்குடையவள், one who is elated with self-pride
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில்
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள்
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்
மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு – கலி 109/4-8
போர்க்குணம் குறையாத காளைக்கு, ஏனைய பசுக்களுக்கு இணையாக இருக்கும் பசுவினிடத்தில் பிறந்த
இளம் எருது
வண்டியை இழுத்துக்கொண்டு போகும்போது பெருமிதத்துடன் செல்வது போல, செருக்குடையவளாய்
பெரிய ஊர்களிலும், சிறிய ஊர்களிலும் தன்னைப் பற்றிய பேச்சு பெரிதாக எழச் செய்பவளைப் போல
மோரோடு வந்தவளின் அழகைப் பார்! ஊரிலுள்ள எந்தவொரு பெண்ணோடும்
ஒப்புமை கூற இயலாத வனப்பையுடையவள்;

மதைஇய

மதைஇய – (சொல்லிசை அளபெடை – பெ.அ) 1. மதர்த்த, மருண்ட, bewildered
2. மதர்த்த, செருக்கிய, proud, elegant
1.
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21
கார்மேகம் விரும்பும் கரும் கூந்தலையும், மருண்ட பார்வையினைக் கொண்ட அழகிய மையுண்ட கண்களையும்
(இராசமாணிக்கனார் உரை)
2.
மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/29-31
மானின்
மடத்தினைக் கொண்டதும் செருக்கினையுடையதுமான நோக்கினையும்
ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலினையும் உடைய மாமை நிறத்தினையுடையோள்
(வேங்கடசாமி நாட்டார் உரை)

மத்தகம்

மத்தகம் – (பெ) தலைக்கோலம், A kind of head-ornament, worn by women
துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம்
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி
வலஞ்சுழி உந்திய – பரி 16/5-7
நீராடும் துறைகளில், முத்துக்களை ஒன்றாகக் கட்டிய வடம், தலைக்கோலம் என்ற முத்தணி,
பொன்னால் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்கள், கலங்கலான அழகிய நீரைப் போன்ற சிவந்த மணிகள்,
ஆகியவை, வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர

மத்தம்

மத்தம் – (பெ) மத்து, Churning stick
மத்து என்பது பெரும்பாலும் தயிரைக் கடைந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகும்.
தயிரைக் கடையும்போது, அதிலுள்ள கொழுப்பு நிறைந்த பதார்த்தம் வெண்ணெயாக மாறிவர, மிகுதியாக இருக்கும்
நீர்த் தன்மையான பதார்த்தம் மோர் எனப்படும்.
இதில் கை மத்து என்பது கையினால் பாத்திரத்திலுள்ள சிறிய அளவு தயிரைக் கடைவதற்கான கருவியாகும்.
பானையில் உள்ள பேரளவு தயிரைக் கடைய பெரிய மத்து பயன்படுத்தப்படும்.
சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடையும் மத்து
ஒரு நீளக் கம்பில் கட்டப்பட்டிருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு
இருக்கும்.
நின்றுகொண்டோ, தரையில் அமர்ந்தவாறோ அந்தக் கயிற்றை இழுத்து மத்தைத் தயிருக்குள் சுழற்றுவார்கள்.

தயிர் கடையும்போது மத்தம் ‘சர் சர்’ என்று ஒலிப்பது புலி உறுமுவதுபோல் இருக்கும் என்கிறது
பெரும்பாணாற்றுப்படை.

இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழ போகி
புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 154-160
கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் ஊரில் –
செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,
புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து,
குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்,

மத்தில் இறுக்கக் கட்டப்பட்டுள்ள கயிறு, மத்தினைச் சுழற்றுபோது ஏற்படும் உராய்வினால் அந்த மத்தின் காம்பு
தேய்ந்துபோவது உண்டு.
விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/1-3
விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால் தறியின் அடிப்பகுதி முழக்கமிடும்

மத்தில் இறுக்கக் கட்டப்பட்டுள்ள கயிற்றை, மத்தினைச் சுழற்றுவதற்காக, இருபுறமும் மாற்றிமாறி
இழுக்கும்போது அந்தக் கயிறு வேகமாகச் சுழலும்.
மெல் இயல் ஆய்_மகள்
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றி சுழலும் என் நெஞ்சு – கலி 110/9-11
மென்மையான இயல்பினையுடைய ஆயர்மகளே!
தயிர் கடையும் மத்தில் கட்டிய கயிற்றினைப்போல் உன் அழகைச்
சுற்றிச் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;

மத்தரி

மத்தரி – (பெ) பறைவகை, a kind of drum
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/40-44
ஒன்றோடொன்று ஒத்து இசைக்கும் குழல் வாத்தியங்களினின்றும் இசை எழ, முழவின் முழக்கத்தோடு
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின்
தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;

மத்தரி என்பதை மத்தளம் என்று கூறுவர்

பம்பை, தொண்டகச் சிறுபறை, தழல், தண்ணும்மை, துடி, பதலை ஆகிய பறைகள் வேட்டைப் பறைகளாக
இயங்கியுள்ளன.

அரிப்பறை, எல்லரி சல்லரி தட்டை, தடாரி, மத்தரி, கிணை ஆகிய பறைகள் வேளாண் பறைகளாக விளங்கியுள்ளன.

முழவு, முரசு, பணை, பெருந்துடி, தண்ணும்மை, கிணை ஆகிய பறைகள் போர்ப்பறைகளாக முழங்கியுள்ளன.

மத்தி

மத்தி – (பெ) ஒரு சங்ககால மன்னன், a chieftain belonging to ssangam period

மத்தி சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் வெண்ணி. மத்திக்கும் கல்லா எழினி என்பவனுக்கும்
இடையே போர் மூண்டது. போரில் கல்லா எழினியின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து மத்தி தன் கோட்டையின்
வாயில் கதவில் பதித்துக்கொண்டான். பதித்த பல் வெண்மணி போல் விளங்கியதால் வெண்மணி என்னும் ஊரின்
பெயரே வெண்மணிவாயில் என வழங்கப்படுவதாயிற்று.
இந்த மத்தியின் நாட்டில் இருந்த ஓர் ஊர் கழார். அது காவிரிக்கரையில் இருந்தது.
வெண்மணிவாயில் என்பது இவன் நாட்டில் இருந்த ஓர் ஊர் என்றும், கழார் என்னும் ஆற்றங்கரையூர் இவனது
தலைநகர் என்றும் கூறுவர்.
இவன் பரதவன் கோமான் என்றும் கூறப்படுதலால்,இவனது ஊர் கடற்கரையை ஒட்டி இருந்த ஆற்றங்கரையூர்
என்பது பெறப்படும்.

கைவண் மத்தி கழாஅர் அன்ன – ஐங் 61/3
வள்ளண்மை உள்ள மத்தி என்பானின் கழார் என்னும் ஊரைப் போன்ற

பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் – அகம் 6/20
பல வேற்படையினையுடைய மத்தி என்பானது கழார் என்னும் ஊரினை ஒத்த

கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை – அகநானூறு 211/11-15
மிக்க சினங்கொண்ட சோழமன்னனது ஏவலாற் சென்று,
நெடும் சேய்மைக்கண்னதாகிய நாட்டில் முதற்படையில் அகப்பட்டுக்கொண்ட
கல்லாத எழினி என்பானின் பல்லைப் பறித்துவந்து பதித்த
வன்மை பொருந்திய கதவினையுடைய வெண்மணி என்னும் ஊரின் வாயிலிடத்தே
மத்தி என்பவனால் நாட்டப்பட்ட கல்பொருந்திய குளிர்ந்த துறையில்

வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/7,8
வலிய வில்லைத் தாங்கிய வலிமைபொருந்திய தோள்களையுடைய பரதவர்கட்குத் தலைவனாகிய
பல வேற்படைகளையுடைய மத்தி என்பானது கழார் என்னும் பதியின் துறையின் முற்றத்தே

மத்திகை

மத்திகை – (பெ) குதிரைச்சவுக்கு, சாட்டை, கசை, horsewhip, whip
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 59-61
கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும்,
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார் – பரி 9/46
மார்பினை அழகுசெய்யும் தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,

மத்து

மத்து – (பெ) பார்க்க : மத்தம்
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – 26/3
தயிர் கடையும் மத்துகள் முழங்கும் வீடுகளில் வேறு இன்னிசைக் கருவிகள் ஒலிக்கத் தேவையில்லை;

மந்தி

மந்தி – (41) 1. குரங்கு, monkey
2. பெண் குரங்கு, female monkey
1.
மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9
விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக
2.
பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே – தொல்-பொருள்-மர/3

நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில் – பெரும் 394,395
நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து மிதித்த கவளத்தை,
முதற் சூலையுடைய மந்தி கவர்ந்துகொண்டுபோகும் சோலையினையும்;

மந்தி கணவன் கல்லா கடுவன் – ஐங் 274/1
மந்தியின் கணவனான, ஒன்றையும் கற்றுக்கொள்ளாத ஆண்குரங்கு

மந்திரம்

மந்திரம் – (பெ) திருமறை வாசகம், vedic hymn
ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 94-96
ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்

முழங்கும் மந்திரத்து
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் – பதி 30/33-35
முழங்குகின்ற மந்திரவொலியால்
அரிய திறல் படைத்த மரபினையுடைய கடவுளை வாழ்த்தும்பொருட்டு,
வழிபாட்டினைச் செய்யும் உயர்ந்தோன் படைத்த பெறுவதற்கரிய பலியினைக் கண்டு

மனன்

மனன் – (பெ) மனம், mind
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/18-21
பொருத்தமாக, நான் அவன் விரும்பிய செயல் ஆர்வத்தினால் விளையும் கேடுகளை நினைந்து கூறிய சொற்கள்,
சீர்படுத்தும் நிலையிலுள்ள உடம்பிற்கு மருத்துவன் ஊட்டிய
மருந்தினைப் போல் நல்ல மருந்தாக வேலைசெய்ய, உன் மனம் களிக்கும்படி,
பெரும் புகழ் கொண்ட நம் தலைவன் கைவிட்டுவிட்டான் தன் பயணத்தை.

மனவன்

மனவன் – (பெ) மனத்தையுடையவன், (mean-)minded person
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/50,51
கூடவருகின்றவர்களுள், பூங்கொம்பு போன்ற ஒரு பெண்ணின் குவிந்த முலையைக் கூர்ந்து பார்ப்பவன்
ஓட்டையான மனத்தையுடையவன், நெஞ்சுரம் அற்றவன் என்று சொல்வோரும்,

மனவு

மனவு – (பெ) அக்குமணி, சங்குமணி, chank bead, mock pearlgb
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132
நாய்(கடித்துக்) கொணர்ந்த அக்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்

மனாலம்

மனாலம் – (பெ) குங்குமம், saffron
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
மனால கலவை போல அரண் கொன்று – பதி 11/7-10
கூரிய வாயினையுடைய வாள்படை குறுக்கே வருவோரை வீழ்த்த,
அவரின் அரிய மார்பு பிளந்த புண்ணிலிருந்து வெளிவரும் குருதியினால்
நீல மணி போன்ற பெரிய கழி தனது நீரின் நிறம் மாறிக்
குங்குமக் கலவை போலாக, அவரின் அரணை அழித்து,

மனும்

மனும் – (பெ.அ) மன்னும் என்பதன் குறுக்கல் விகாரம், the shortened form of the word ‘mannum’
மன்னு – நிலைபெறு
நச்சல் கூடாது பெரும இ செலவு
ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/19-23
பொருள் மீது ஆசை கூடாது பெருமானே!, இந்தப் பயணத்தைக்
கைவிடும்படி வேண்டுகிறேன், ஆராய்ந்து பார்த்தால் இது தவறல்ல,
மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்.

மனை

மனை – (பெ) 1. வீடு, house
2. வீடு கட்டும் இடம், house site
3. களம், field, locality
1.
கானக்கோழி கதிர் குத்த
மனை கோழி தினை கவர – பொரு 222,223
காட்டுக் கோழிகள் நெற்கதிரைத் கொத்தித் தின்னவும்,
வீட்டுக் கோழிகள் தினையைத் தின்னவும்,
2.
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 76-78
(கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து,
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),
பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் நிலத்தைப் பகுத்துக்கொண்டு
3.
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் – நற் 34/9
வேலன் வெறியாடி வேண்டிக்கொள்ள வெறியாடும் களத்துக்கு வந்திருக்கிறாய்

மனையோள்

மனையோள் – (பெ) மனையாள், மனைவி, wife
அகன் பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர – ஐங் 47/2,3
அகன்ற பெரிய வட்டி நிறையும்படியாக, இல்லத்தரசிகள்
நெல்லறுத்த வயலில் விளைந்த பெரும்பயற்றை நிரப்பித்தருகின்ற ஊரைச் சேர்ந்த தலைவனே!

மன்

மன் – 1. (வி) 1. மன்னெனும் ஏவல், நிலைபெறு,
be fixed – V.Viswanatha Pillai, Tamil and English Dictionery
2. மன்னெனும் ஏவல், தங்கு,
remain, be settled – V.Viswanatha Pillai, Tamil and English Dictionery
– 2. (பெ) 1. அரசன், king
2. நிலைபேறு, permanency – கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி
3. பெருமை, greatness – Tamil Lexicon, , உயர்வு, excellence – Pals Tamil Dictionery
4. பன்மை, மிகுதி, multiplicity, plurality, abundance
5. ஆக்கம், prosperity
6. தலைமை, superiority
– 3. (இ.சொ) 1. அசைநிலை, an expletive
2. ஆக்கக் குறிப்பு – an affix particle indicating change from one state to another
3. ஒழியிசை – ellipsis, Indicating words omitted necessary for a full sense
4. இரக்கக்குறிப்பு, an affix particle indicating pity
5. மிகுதிக்குறிப்பு, an affix particle indicating abundance
6. கழிவுக்குறிப்பு, an affix particle indicating what is gone

1.1
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32
அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும்- நச்.உரை
1.2
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – சிறு 247
வெற்றியையுடைத்தாகிய வேலினையுடைய முடிவேந்தர் மன்னும் அரண்களை அழித்து – நச்.உரை
வெற்றியை உடைத்தாகிய வேலினையுடைய முடிவேந்தர் உறையும் அரண்களை அழித்து – பொ.வே.சோ.உரை
2.1
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே – பதி 11/25
மன்னர்களுள் செருக்குற்று மீக்கூறும் மன்னர்களின் மறம் கெட்டழியுமாறு வஞ்சியாது பொருது வென்று
– ஔ.சு.து.உரை

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – அகம் 220/5
மன்னர் வழியை அழித்த பரசுராமன் – ந.மு.வே.உரை

மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/80
அரசனால் தலைக்கோல் பெற்ற மகளிரும் பாணரும் கூத்தாடுதலைத் தொடங்க – பொ.வே.சோ.உரை
2.2
மன் உயிர் அறியா துன் அரும் பொதியில் – குறு 376/1
நிலைபெற்ற உயிர்த்தொகுதியினரால் முற்ற அறியப்படாத அணுகுதற்கு அரிய பொதியில் மலையிலுள்ள
– உ.வே.சா.உரை

மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/35
மண்ணுலகத்தில் வாழும் நிலைபெற்ற உயிர்கட்கு குறைவறக்கொடுத்து – ஔவை.சு.து.உரை

மன் உயிர் முதல்வனை ஆதலின் – பரி 1/56
நிலைபெற்ற உயிர்கட்கு தலைவனும் ஆக – பொ.வே.சோ.உரை

மன் எயில் உடையோர் போல – நற் 150/5
நிலைபெற்ற மதில்களையுடைய குறுநில மன்னர் போல – பின்.நா.உரை

தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23
தன்னைப் பற்றுக்கோடாகவுடைய நிலைபெற்ற மதில்களையுடைய அரண் – ந.மு.வே.உரை

ஒன்பதிற்று தட கை மன் பேராள – பரி 3/39
ஒன்பது பெருங்கைகளையுடைய நிலைபெற்ற புகழோனே – பொ.வே.சோ.உரை
2.3
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/2
மேகம் மழைபெய்துவிட்ட மிக்க நெடிய குன்றத்தின்கண் – பின்.நாரா.உரை

நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5
நின்னைப் பகைத்தோருடைய பெரிய நகர் மதில்கள் வாழ்வாரின்மையின் கதவு முதலிய காப்பு வைக்கப்படாது
அழிந்தன – ஔவை.சு.து.உரை

மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று – கலி 34/1
பெருமையையுடைய உயிர்கள் எல்லாம் உயிர் வாழும்படி அகன்ற உலகிடத்து பாதுகாத்தலை உண்டாக்கி
– நச்.உரை

தன் உயிர் போல தழீஇ உலகத்து
மன் உயிர் காக்கும் இ மன்னனும் – கலி 143/52,53
தன் உயிரைப் பாதுகாக்குமாறு போல உலகத்துப்
பெரிய உயிர்களை எல்லாம் தழீஇப் பாதுகாக்கும் இம் மன்னனும் – நச்.உரை

வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள – அகம் 390/5
வளைந்த சுரிந்த கூந்தலின் முடி முழுதும் பெரிதும் அலையக்கொண்டு – ந.மு.வே.உரை
2.4
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278
நின் தன்மையெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல்லுயிர்க்கும் அரிதாகையினாலே – நச்.உரை

மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27
மிக்குற்ற உயிர்களைப் புரத்தல் வேண்டி வலமாக எழுந்து முழங்கும் – ஔவை.சு.து.உரை

மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே – அகம் 68/10
மன்னுயிர் மடிந்தன்றால் பொழுது என்பதனால், ஊர், காவலர், நாய் முதலியவை துஞ்சுதலும் கூறினாள்
– ந.மு.வே.உரை

2.5
திரு நிலைஇய பெரு மன் எயில் – பட் 291
திருமகள் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய உறந்தையின் மதிலினிடத்தே- நச்.உரை
2.6
திரு நிலைஇய பெரு மன் எயில் – பட் 291
வீரத்திருமகள் என்றும் நிலைபெற்ற பெரிய தலைமையினையுடைய மதில் – பொ.வே.சோ.உரை
3.1
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் – பரி 5/42
குண்டங்களில் எழுந்த முத்தீயும் கொள்ளுதலானே சேடமாகியவற்றை – பொ.வே.சோ
(மன் – பொருள் இல்லை)

அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9
அதுவாகும் எம்முடைய பரிசில் ஆவியருடைய வேந்தே – மன் – அசை
3.2.
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனி
குன்று உறை தவசியர் போல பலவுடன்
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும்
அரும் சுரம் எளிய-மன் நினக்கே – நற் 141/3-7
பொரிந்தது போல் ஆகிய அடிமரத்தின் பட்டை தேய்ந்த, உள்ளே துளையுள்ள காய்களைக் கொண்ட கொன்றை
நீண்ட சடையும் நீராடாத மேனியுமுடைய
குன்றுகளில் வாழும் தவசிமாரைப் போல, பலவாக
வெயில் பரந்த நீண்ட இடைவேளி அழகுறத் தோன்றும்
அரிய காட்டுவழிகள் கடந்துசெல்ல எளிதானவை உனக்கு

எளியமன் என்புழி மன்னைச்சொல் ஆக்கம் குறித்து நின்றது – ஔ.சு.து.உரை
3.3
குடுமி நெற்றி நெடு மா தோகை
————— ———————
கிளிகடி மகளிரின் விளிபட பயிரும்
கார்-மன் இதுவால் தோழி – அகம் 194/11-16
குடுமி பொருந்திய தலையினையுடைய நீண்ட கரிய மயில்
—————— ——————-
கிளிகளை ஓட்டும் மகளிர் போல ஒலியுண்டாக அகவும்
கார்காலம் இதுவேயாகும், தோழி (அவர் இன்னும் வந்திலரே)
3.4
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38
பெரிய பாழ்நிலம் ஆகிவிடும் அவைதாம் அளிக்கத்தக்கன (மன் – இரக்கப்பொருட்டு)
3.5
வண்டன் அனையை-மன் நீயே – பதி 31/23
வண்டன் என்னும் வள்ளலை நீ பெரிதும் ஒத்திருக்கின்றாய் (மன் – மிகுதி குறித்து நின்றது)
3.6
வென் வேல் பொறையன் என்றலின் வெருவா
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/3,4
வெற்றி பொருந்திய வேலையுடைய பொறையன் என்று எல்லாரும் சொல்லுதலால், உளம் அஞ்சி
வெம்மையுடைய ஆண்மகன் என்றே முன்பெல்லாம் கருதினேன் நான் (அது இப்பொழுது கழிந்தது)

மன்னு

மன்னு – (வி) 1. நிலைபெறு, நீடித்திரு, endure, be lasting, permanent
2. பொருந்து, இயைபுடன் இரு, agree, be in accord with
1.
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் – புறம் 165/1
எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலைக் கருதினோர்

2.
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/89
பலவகைப்பட்ட நறுமணங்களும் பொருந்திய பின்னலையுடைய கருங்கூந்தலையுடைய மகளிரும்,

இவள் மன்னும்
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும்
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் – கலி 142/5-8
இவளைப் பொருந்திச் சூழ்ந்திருக்கும்
ஒளிவிடும் நெற்றியையுடைய தோழியர் எல்லாரும் ஒன்றாகக் கூடிச் சிரிக்கும் காலத்திலும்,
முள்ளின் நுனை போன்ற தன் பற்கள் வெளியில் தெரியாமல் புன்முறுவல் கொண்டு, சிரிப்பை அடக்கித் தன்
கண்ணாலும், முகத்தாலும் மட்டுமே சிரிக்கும் இயல்புடையவள்,

மன்னும்

மன்னும் – 1. (வி.அ) மிகவும், பெரிதும், overwhelmingly, exceedingly
2. (இ.சொ) அசைச்சொல், an expletive
1.
அன்பினர் மன்னும் பெரியர் – நற் 224/1
நம்மிடம் அன்புகொண்டவர் மிகுதியும்; மிகவும் பெரியவர்
2.
உண்பது மன்னும் அதுவே
பரிசில் மன்னும் குருசில் கொண்டதுவே – புறம் 333/18,19
உண்பது அதுவேயாகும்
அவன் தன்பால் வரும் பரிசிலர்க்கு நல்கும் பரிசில் குருசிலாகி அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாகும்

மன்பது

மன்பது – (பெ) உயிர்க்கூட்டம், all lives
மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52
உயிர்களின் மயக்கம் தரும் துன்பத்தைக் களைவோன்

மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/9,10
மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும்,
மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,

மன்பதை

மன்பதை – (பெ) உயிரினம், மனித இனம், all life, humanity
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் – கலி 65/3
உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கிவிட்ட இருட்டான நள்ளிரவில்,

வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம்
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி – பதி 40/10,11
வெண்மையான பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும் வேந்தர்களையுடைய
அரிய போரினை
அழித்து, அவரைப் புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த,

மன்ற

மன்ற – (வி.அ) 1. தேற்றமாக, நிச்சயமாக, உறுதியாக, certainly
2. தெளிவாக, clearly
1.
வண்டு படு மலரின் சாஅய்
தமியென் மன்ற அளியென் யானே – குறு 30/5,6
வண்டுகள்மொய்த்து உழக்கிய குவளை மலரைப் போல நலிந்து
தேற்றமாகத் தனித்தவளாயினேன், யான் இரங்குதற்குரியேன்
2.
கல் உயர் நனம் தலை நல்ல கூறி
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/5-7
மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தில் நல்ல சொற்களைக் கூறி
தலைவனோடு சேர்ந்து போதலே செய்யத்தக்க காரியம் என்று
யான் உணர்ந்தேன் தெளிவாக, அவர் உணர்வதற்கு முன்னர்

மன்றம்

மன்றம் – (பெ) மக்கள் கூடும் ஊர்ப்பொது இடம், place for common public gathering
மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ
கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி
பெரும் சினத்தால் புறக்கொடாஅது
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 69-72
அகன்ற இடத்தையுடைய அம்பலங்களில் பலரும் சேரத் திரண்டு,
(வெறும்)கைகளாலும் ஆயுதங்களாலும் உடலில் படும்படி பற்றியும் அடித்தும்,
மிகுந்த சினத்தால் புறமுதுகுகொடாமல்,
நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்

அரு விலை நறும் பூ தூஉய் தெருவில்
முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும்
பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து – பட் 252-255
அரிய விலை(க்கு வாங்கிய) நறுமணமுள்ள பூக்களைச் சிதறி, தெருவினில்
அறிவு வாய்க்கப்பெற்ற கூத்தருடைய மத்தளத்தின் தாளத்தோடு கூடின
முறுக்கப்பட்ட புரி(போன்ற) நரம்பின் இனிய கட்டினையுடைய யாழைக் கேட்கும்
பெரிய திருநாள் முடிந்துபோன, அச்சம் மிகுந்த, மன்றத்தில்

காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து
தூங்கும் குரவையுள் – கலி 108/60,61
காஞ்சிப் பூவின் பூந்தாதுக்கள் உதிர்ந்தது போன்ற சாண எருவையுடைய ஊர் மன்றத்தில்
ஆடுகின்ற குரவைக் கூத்தில்,

மன்றல்

மன்றல் – (பெ) 1. திருமணம், மணவிழா, marriage, wedding
2. நறுமணம், fragrance
1.
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 21
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று

கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/30
கூடல்நகரில்
மணவிழா பொருந்திய மணிநிற முரசுகளின் முழக்கம் எழ,
2.
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர்
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/24,25
கொன்றை மரங்களில் கொடி போன்று பூங்கொத்துக்ள் மலர்ந்திருக்க, கொடிகளில் மலர்கள்
நறுமணம் உடையவாய் மலர்ந்திருக்க, மலரான காந்தள் இடமெல்லாம் மணக்க,

மன்று

மன்று – (பெ) பார்க்க: மன்றம்
மனை உறை புறவின் செம் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 45,46
வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்
(தான்)இன்பம் நுகரும் பெடையொடு நாற்சந்தியில் (இரை)தேடி உண்ணாமல்

அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் – அகம் 75/6,7
கொல்லும் புலி போலும் வலியையும் கட்டப்பெற்ற கழலையுமுடைய மறவர்கள்
பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்தி நிழலிலே கண்படுக்கும்

மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே – அகம் 128/1
ஊர் மன்றம் தன் ஒலி அடங்க மனைகளும் துயின்றன

சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்று-தொறும் நின்ற குரவை – மது 614,615
புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றங்கள்தோறும் நின்ற குரவைக்கூத்தும்

மம்மர்

மம்மர் – (பெ) 1. மனமயக்கம், delusion
2. மனக்கலக்கம், துன்பம், grief, distress, sorrow, affliction
1.
நீர் நீவி கஞன்ற பூ கமழும்_கால் நின் மார்பில்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/10-13
நீர் மட்டத்திற்கும் மேலே நெருக்கமாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணம் பரப்பும் போது, அதை உன் மார்பின்
மாலையிலிருந்து வரும் மணம் என்று இவள் நினைப்பாள், அவ்வாறு நினைத்தபோது,
பூக்கள் மலர்கின்ற வேளையில் அவற்றை அசைத்த காற்று வந்து தன் மேனியில் மோத, கழியில் பூத்த
மலரின் மணமே அது என்று தெளிந்து பின்னர் மனமயக்கம் கொண்டு வருந்துவாள்;
2.
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை
புல்லாது ஊடி புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து
எல்லா துனியும் இறப்ப தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
வல்லதால் வையை புனல் – பரி 12/66-75
அவன் மீண்டும் வலியுறுத்திக்கூறியும், சினந்து மொழிந்தும் அவளைத் தெளிவிப்பானை,
அணைத்துக்கொள்ளாது ஊடல்கொண்டவளாகக் பிணக்குற்றிருப்பவள்
பூவின் மணத்தையும் அழகையும் கொண்ட, அரக்கு வண்ணமூட்டப்பட்ட நீரால் நிறைக்கப்பெற்ற, வட்டினை எறிய,
வேலாகிய அழகிய மையுண்ட கண்கள் வீசிய பார்வை பட்டதுபோல் புண்ணிலிருந்து
பாய்கின்ற குருதியாக வண்ணநீர் வடிய, அவன் அவளிடம் பகைமை கொள்ளாமல் உள்ளம் சோர்ந்துபோக,
அவ்விடத்தில் நிற்காமல் நீங்கிச் சென்று நிலத்தில் வீழ, மனம் கலங்கி,
அவனது மற்போருக்கு இயைந்த மார்பில் பட்ட புண்ணுக்காக அச்சமுற்று, துயரங்கொண்டு
தன் கோபம் தணிந்தவளாய், தன் காதலனின்
நல்ல பொலிவுள்ள அழகிய மார்பினைத் தழுவிக்கொள்ளச் செய்தது, எக்காலத்திலும்
வல்லமை மிக்க வையையின் நீர்,

மயக்கம்

மயக்கம் – (பெ) 1. அறிவின் திரிபு, தடுமாற்றம், Mental delusion: stupor, beweilderment; aberration of mind
2. பிரிவுத்துன்பம், Pining due to separation from one’s beloved;
3. ஒரு மரணச்சடங்கு, a funeral rite
4. கலப்பு, mixture
1.
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ – கலி 147/2,3
தெளிந்த கள்ளையும், மதுவையும் உண்டவரின் மயக்கத்தைப் போல, நன்றான காம உணர்வு
வேறொரு பாதையில் சென்றுவிட்டதோ?
2.
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/19-22
என்னோடிருந்து என் நலனை அனுபவித்துச் சென்றவர் வராமற்போய்விட்டதை நினைத்துக்கொண்டிருத்தலால்
செயலற்ற நெஞ்சத்தினளாய் நான் கலக்கத்தினுள் ஆழ்ந்து அங்கே
மையல் கொண்ட நெஞ்சத்தோடு பிரிவுத்துயரில் இருக்க, மரம் அதனைப் பார்த்து
அந்தத்துன்பத்தால் தாம் பதிக்கப்பட்டது போல் இலைகளைக் குவித்துக்கொண்டதே! அது எதனாலோ?
3.
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன – நற் 395/4,5
பெரும் வலிமை கொண்ட யானையையும், நெடிய தேரினையும் உடைய குட்டுவன்,
பகைவேந்தரைக் கொல்லும்போதான மரணச்சடங்குகளில் முரசுகள் அதிர்வதைப் போல்
மயக்கம் – மரணச்சடங்கினுளொன்று. (யாழ். அக.) A funeral rite – Tamil Lexicon
4.
புன்_புல மயக்கத்து விளைந்தன தினையே – ஐங் 260/4
புன்செய்ப் பகுதியாகப் பதப்படுத்திய நிலத்தில் விளைந்துநிற்கின்றன தினைப்பயிர்கள்.
மயக்கம் – பண்படுத்தப்பட்டமையான், மண்ணும் எருவும் பிறவும் கலந்த நிலம் என்க – பொ.வெ.சோமசுந்தரனார்

மயக்கு

மயக்கு – 1. (வி) 1. உழக்கு, சிதை, damage, ruin
2. நிலைகுலையச்செய், unsettle
3. கல, mix up
4. பிறர் மனத்தைக் கவர், கவர்ந்து தன்வசப்படுத்து, allure, charm, fascinate
5. ஊடலுணர்த்து, clear one’s misunderstanding, as in sulks
6. கீழ்மேலாகப் புரட்டிப்போடு, turn upside down
– 2. (பெ) 1. பொருள் மயக்கம், ambiguity, equivocalness
2. மயக்கம், குழப்பம், confusion
1.1
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
களிற்று செவி அன்ன பாசடை மயக்கி
பனி கழி துழவும் பானாள் – குறு 246/1-3
பெரிய கடற்கரையில் உள்ளன சிறிய வெண்ணிற நீர்க்காகங்கள்,
யானையின் காதைப் போன்ற பச்சை இலைகளை உழக்கி,
குளிர்ந்த கழிநீரைத் துழாவி மீன்தேடும் நள்ளிரவில்
1.2
வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப – பதி 12/1,2
வீரர்கள் தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து
பகைவரின் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க,
1.3
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய
போந்தது வையை புனல் – பரி 10/6-8
மாமரத்தின் காண்பதற்கு இனிமையான தளிரோடு, வாழை இலைகளையும் கலந்து
ஆராய்ந்து அளவிடமுடியாத பல்வேறு ஓசைகள் ஒலிக்க, கரைக் காவலர் பறை அறைய,
போகிறது வையையின் வெள்ளம்;

பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/10,11
பாலின்கண் பெய்து அடப்பட்ட சோற்றை தேனொடு கலந்து உண்டு
குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட
1.4
மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை – பரி 20/49
மாயப் பொய்யுடன் சேர்த்து வந்தவரை மயக்கும் விலைமாதே!
1.5
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்_வழி
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/10,11
நெஞ்சைச் சுடும்படியாக நீ செய்வதைக் கடிந்துகொள்வார் இல்லாதபோது
மனத்தால் நான் தீது இல்லாதவன் என்று எம் ஊடலைத்தீர்க்க வருவாய்
1.6
கானவர், கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை – புறம் 159/15,16
வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தைக் கீழ்மேலாகப் புரட்டி உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண்
சாலமன் பாப்பையா உரை
2.1
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு – புறம் 239/18
பொருள்மயக்கம் தரும் சொற்களைச் சொல்லமாட்டான்
2.2
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/11
மருட்கையினின்றும் நீங்கி, அம் மருள் காரணமாகத் தோன்றும் மயக்கத்தையும் போக்கி

மயக்குறு

மயக்குறு – (வி) 1. கலக்கப்படு, get mixed up
2. மயங்கச்செய், குழம்பச்செய், confuse, confound
3. தடுமாற்றமடை, குழம்பு, get baffled, perplexed
4. போரிடு, fight
5. கிறக்கு, பரவசப்படுத்து, captivate, delight, enthrall
1
தண் புன கருவிளை கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர
உறை மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்து – நற் 262/1-3
குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது
ஆடுகின்ற மயிலின் தோகை போல வாடைக்காற்றில் முன்னும்பின்னும் அசைய,
அத்துடன் சேர்ந்து தூறல்மழையும் கலக்கப்பட்ட, ஊரே துயில்கொள்ளும் நடுயாமத்தில்,
2.
பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்கு_உறூஉம் நுதலும் – குறு 226/1-3
பூவினை ஒத்திருந்தன கண்கள்; மூங்கிலோ என
ஈடில்லா அழகை எய்தியிருந்தன தோள்கள்; இளம்பிறை என்னும்படி
அறிவினை மயங்கச்செய்தது நெற்றி;
3.
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்
வழி மயக்கு_உற்று மருடல் நெடியான்
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/1-5
வையையில் புதிதாக வருகின்ற நீரில் புனலாடுவது இனியதா?
முருகப்பிரான் இருக்கும் தலைமைப் பண்புள்ள திருப்பரங்குன்றத்தினை வணங்கி இன்புறுதல் இனியதா?
கூர்மையான வேலின் நுனி போன்ற கண்களையுடைய பெண்கள் துணையாக வர
இவ்விரண்டினில் எதனைச் செய்வோம் நாம் என்று எந்நாளும்
வழியில் தடுமாற்றமடைந்து மருளுதல், பாண்டியனின்
நெடிய மாடங்களையுடைய மதுரை மக்களுக்கு இயல்பு.
4.
பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்கு_உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/6,7
பெரிய யானைக் கூட்டத்தோடு, பருத்த கழுத்தும் பெரிய உடல்வன்மையும் கொண்ட
பெரிய புலி போரிடுகின்ற மலையினையுடைய நல்ல நாடனே!
5.
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்கு_உறு மக்களை இல்லோர்க்கு
பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/3-7
குறுகக் குறுக நடந்து சென்று, சிறிய கையை நீட்டி
கலத்தின்கண் கிடந்ததைத் தரையிலே இட்டும், கூடப்பிசைந்து தோண்டியும், வாயாற்கவ்வியும், கையால் துழந்தும்
நெய்யையுடைய சோற்றை உடம்பின்கண் படச் சிதறியும்
இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் மக்களை இல்லாதவர்க்கு
பயனாக முடிக்கப்படும் பொருளில்லை தாம் உயிர்வாழும் நாளின்கண்

மயங்கு

மயங்கு – (வி) 1. குழம்பு, தடுமாறு, get confused, baffled
2. நெருங்கியிரு, be crowded together
3. வருந்து, be distressed
4. கல, be mixed up
5. கலங்கு, be perturbed
6. மிகுந்திரு, be in excesss
7. செறிந்திரு, be dense
8. போன்றிரு, ஒத்திரு, resemble
9. கைகலந்து போரிடு, engage in a hand-to hand fight
10. தங்கு, be stagnant, stay
11. அறிவுகெடு, lose one’s senses
12. பின்னிக்கிட, get entwined
13. கீழ்மேலாகப் புரள், roll over
14. மாறுபடு, be changed
15. குன்று, decline, dwindle
16. ஐயங்கொள், be in doubt
17. ஒன்றால் ஈர்க்கப்படு, be charmed, fascinated, enchanted
1.
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 106
மானின் அடிச்சுவடுகள் பதிந்த குழம்பிப்போவதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில்
2.
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட – பரி 15/39
அரும்புகள் நெருங்கியிருக்கின்ற முல்லை மகளிரின் முறையாக நடக்கின்ற கற்புநெறியைக் காட்ட,
3.
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
அரிதே காதலர் பிரிதல் இன்று செல
இளையர் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/5-9
பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகங்கள்
தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும்
அரிதானதாகும் உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிதல்; இன்றைக்குச் செல்லும்
அந்த இளைஞரைத் தடுத்துத் திரும்பும்படி செய்யும் வாடையுடன்
வருந்துகின்ற இமைகளில் மழையாய் நீரைச் சிந்தும் உன் கண்கள் சொல்லிய செய்தியும்.
4.
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/8
பறவைகள் வந்து உட்கார வளைந்து உதிர்ந்த பூக்கள் கலந்த சேறு நிரம்பிய
5.
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற – ஐங் 394/1,2
மாண்பு சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று, உண்மையாய் –

மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6
மழைபெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய கலங்கிய நீரை
புலியூர்க்கேசிகன் உரை
6.
எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/1-3
பகற்போதிலும்
இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடன்றி
பேராரவாரத்தையுடைய மேகங்கள் நீர் நிறைந்து வானத்தில் இயங்க,
பின்னத்தூரார் உரை
7.
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10
இருள் செறிந்த நடுயாமத்தே நெறி தடுமாறலான் விலகி
ந.மு.வேங்கடசாமிநாட்டார் உரை
8
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50
நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன்,
9.
பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன்
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/5,6
பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கும் காட்டினைப் போல துதிக்கைகள் வெட்டப்பட்டு, திரளான
யானைகள் இறந்துகிடக்கும், வாட்படைவீரர் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் கடுமையான முன்னணிக்
களத்தில்

தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/4
எதிர்வோர், உறவினரென்றும் பிறரென்றும் பாராமல் கைகலந்து செய்யும் போர்க்களத்தில்
10.
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6
மழைபெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய நீரை
ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை – ச.வே.சுப்பிரமணியன் உரை – இரா.செயபால் உரை

படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17
படை ஏந்திய மறவர் நின்று காக்கும் அரிய வழிகளையுடைய நெடுய நல்ல ஊரின்கண்
11.
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/19,20
நான் உன்னுடன் வேறுபட்டு நிற்கும்போது நெஞ்சு கலங்குகின்றாய்! உன் கைக்குள் அகப்பட்டுக்கிடந்தால்
என்னோடு மாறுபட்டு பரத்தையர் சேரி புகுந்து அறிவு மயங்குகிறாய்!
மா.இராசமாணிக்கனார் உரை
12.
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க – பரி 6/20
மகளிர் முலையும், மைந்தர் மார்பும் முயங்குவதால் அவற்றிலுள்ள அணிகலன்கள் ஒன்றோடொன்று
பின்னிக்கிடக்க

எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ
நீடு இரும் பெண்ணை தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 347
நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;
வளைந்த சிறகுகளையுடைய தூக்கணங்குருவி
உயரமான கருத்த பனைமரத்தில் கட்டிய
கூட்டைப் பார்க்கிலும் கதைபின்னிக்கொண்டிருந்த இந்த ஊரும் நம்மோடு ஒன்றிப்போயிற்று
13.
பூழி மயங்க பல உழுது வித்தி – புறம் 120/3
புழுதி கீழ்மேலாகப் புரள பல சால்பட உழுது வித்தி
14.
அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே – புறம் 213/20-22
அஞ்சினோர்க்கு
அரணாகும் நின் அடிநிழல், மாறுபடாமல்
செய்தல் வேண்டும் நல்வினையை
15.
கடல் பாடு அவிந்து கானல் மயங்கி
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே – குறு 177/1,2
கடல் ஒலி அடங்கிக் கடற்கரைச் சோலைகள் ஒளிமங்கித்
துறையில் உள்ள நீர்நிறைந்த கழிகள் பொலிவிழந்து காணப்பட்டது.
ச.வே.சுப்பிரமணியன் உரை
16.
அறியாமையின் வெறி என மயங்கி
அன்னையும் அரும் துயர் உழந்தனள் – ஐங் 242/1,2
அறியாமையினால், தீயசக்தி தாக்கியதாக ஐயங்கொண்டு
அன்னையும் நீக்குதற்கரிய துயரத்தில் ஆழ்ந்தாள்;
17.
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/18-21
தேர் ஏறி வரும் சிறப்பால் ஈர்க்கப்பட்டு உன்னிடம் வந்த, தெரிந்தெடுத்த மாலை சூடிய அந்த அழகிய பரத்தையரின்
மாலையை மாற்றி உன் கழுத்தில் சூடி வந்த தவற்றுக்கு அஞ்சி நான் உன்னோடு கொண்ட ஊடல் போரில் கலங்கி
நீ கூறும் பொய்ச்சூள் உனக்குத் தெய்வகுற்றம் ஏற்படுத்துமாயின் அதனால் விளையும் கேடு, இனி
யார்மேல் இறங்குமோ கூறு!

மயர்

மயர் – (பெ) 1. மயக்கம், Bewilderment, confusion
2. மறதி, forgetfulness
1.
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள் – பரி 15/35-37
இருங்குன்றம் என்ற பெயர் பரந்த அந்த மலை
கடல்சூழ்ந்த நிலவுலகில் தொன்மையான இயல்பையுடைய புகழினைக் கொண்டது;
அதனைக் கண்ட அளவில் காண்போரின் மயக்கத்தைப் போக்கும் வழிபடும் கடவுள் அது;
2.
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து
உள்ளுப தில்ல தாமே – அகம் 253/20,21
அயிரி என்னும் யாற்றினைக் கடந்து சென்றனராயினும், மறதி அற்று
என்றும் அவர் நினைந்திருப்பார்
வேங்கடசாமி நாட்டார் உரை.

மயல்

மயல் – (பெ) 1. மயக்கம், Confusion; bewilderment;
2. கலக்கம், perplexity, discomposure
3. மயக்கம், delusion
1.
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள்
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/14-17
மிகவும் அதிமான மெல்லியல்பு கொண்டவளான இவள், விருப்பத்துடன் நீ விளையாட்டாகப்
பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே;
பொருளின் மீது நோக்கம்கொண்டு இவளை விட்டுப் பிரிந்து நீ போகிறாய் என்று கேள்விப்பட்டால்
மருண்ட தன் பார்வை மடிந்துபோக, மயக்கம் கொண்டுவிடுவாள் அன்றோ?
2.
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல்
துப்பு துறைபோகிய கொற்ற வேந்தே – பதி 62/7-9
உயிர்களுக்குப் பொறுக்கமுடியாத கலக்கத்தைத் தந்து, பெரும் முழக்கத்தோடு திரியும்
கூற்றுவனின் இயல்பினைக் கொண்டகடுமையான வலிமைமிக்க,
போர்த்துறையில் சிறப்பெய்திய வெற்றியையுடைய வேந்தனே!
3.
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே – குறு 156
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
தண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன்
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில்
பிரிந்தவரைச் சேர்த்துவிக்கும் தன்மையுள்ள
மருந்தும் இருக்கிறதோ? இது ஒரு மயக்க நிலையோ?

மயிர்குறைகருவி

மயிர்குறைகருவி – (பெ) கத்தரிக்கோல், scissors
மயிர்குறைகருவி மாண் கடை அன்ன
பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 29,30
மயிரைக் குறைக்கின்ற கருவியாகிய கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும்,
பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும்,

மயிலை

மயிலை – (பெ) இருள்வாசிப்பூ, இருவாட்சிப்பூ, Tuscan jasmine, Jasminum sambacflore manoraepleno
கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/1,2
காட்டுக்காக்கையின் தழைத்த சிறகை ஒத்த
இருள்வாசிப்பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியையும் பெரிய தோளையுமுடைய இளையவள்

மரந்தை

மரந்தை – (பெ) சங்ககாலத்துச் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம்,
a port city in cEra country during sangam period
இந்த ஊர் மாந்தை என்னும் பாடமும் கொண்டுள்ளது. (நெடிலுக்குக் கால் வாங்கும் எழுத்தை ‘ர’ என்றும் படித்தனர்.
இதனால் நேர்ந்த வேறுபாடுகளே இவை).

இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந – பதி 90/28
ஒலிக்கின்ற கடற்பரப்பின் கரையிடத்தேயுள்ள மரந்தை நகரில் உள்ளார்க்குத் தலைவனே

இரங்கு நீர் பரப்பின் மரந்தை என்பதால் இது கடற்கரை நகரமாகிறது. இந்தப் பதிற்றுப்பத்துப்பாடல் குடக்கோ
இளஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னனைப் பெருங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் என்பதால், இது சேர நாட்டுப்
பட்டினமாகிறது.

யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/5-8
யானைக்கொக்கு எனப்படும் பறவைகளின் கடற்கரையின் பெருங்கூட்டம்
பகைவரைக் கொன்ற மறவரின் ஆரவார ஓசைக்கு அஞ்சியோடும்
குட்டுவனின் மாந்தை நகரத்தைப் போன்ற எனது
கூந்தல் புரண்டு விளங்கும் ஆய்ந்து நன்றெனக்கண்ட நெற்றியையுடையவளின் தலைவனும் அவனே!

இது குட்டுவன் மரந்தை என்பதாலும், கடற்கரைப்பறவைகள் அங்கிருப்பதாலும் மேற்கூறிய கூற்றுகள்
உறுதிப்படுகின்றன.

தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/1-3
குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட
நாரைக்கூடம் இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்
ஊராகிய மரந்தை இனியது;

இந்நகர் செல்வச் செழிப்புடன் விளங்கியது.
1.
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ – அகம் 127/3-9
வெற்றி தங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன்
கடல் நாப்பணுள்ள பகைவர்களைபுறக்கிடச் செய்து அவர் காவல் மரமாகிய கடம்பினை வெட்டி, இமையமலையில்
தனது முன்னோரை ஒப்ப வளைந்த வில் இலச்சினையைப் பொறித்து
மரந்தை என்னும் ஊரிலுள்ள தனது நல்ல மனையின் முற்றத்தில், பகைவர்
பணிந்து திறையாகத் தந்த பெருமை சான்ற நல்ல அணிகலங்களுடன்
பொன்னானியன்ற பாவையினையும் வயிரங்களையும் ஆம்பலென்னும்
எண்ணளவு இடம் நிறையக் குவித்து
2.
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
—————– ————————- —————–
குரங்கு உளை புரவி குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 376/1-18
செல்லாதே, தலைவனே! நின்பால் செய்யும் கடமைகலை மிகவுமுடையேன்
—————– ———————- ———————-
வளைந்த பிடரிமயிரினையுடைய குதிரைகளையுடைய குட்டுவனது
மரந்தை என்னும் ஊர் போன்ற என் அழகினைத் தந்து செல்க.

மரன்

மரன் – (பெ) மரம், பார்க்க : மரம்
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42
மந்திகளும் ஏறி அறியாத மரம் நெருங்கின பக்கமலையில்,

மரபு

மரபு – (பெ) 1. குடிப்பிறப்பு, வமிசம், ancestral line
2. பாரம்பரியம், lineage
3. முறை, நியதி, Rule, law; established usage or order; that which is sanctioned by custom
4. இயல்பு, தன்மை, nature, property
5. மேம்பாடு, மேன்மை, பெருமை, greatness, ideal
6. பண்பு, characteristic
1.
பல் இய கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு
தாங்க அரு மரபின் தன்னும் தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி
முன் நாள் சென்றனம் ஆக – சிறு 125-129
பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய
நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
(பிறரால்)பொறுத்தற்கரிய குடிப்பிறந்தோர்க்குரிய முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடைய
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக
2.
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 66,67
தமிழ் வீற்றிருந்த பொறுத்தற்கரிய பாரம்பரியத்தையுடைய
மனமகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரையும் சிறிதாயிருக்கும்
3.
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி – சிறு 227-230
அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி,
4.
பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/57,58
பகைவர் இவர், நண்பர் இவர் என்னும்
வேறுபாடு உண்டோ, உன் இயல்பினை அறிவோர்க்கு?
5.
நினைக்கும்_காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக
இனையதோர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/5-7
நினைக்கும்போது வியப்பாய் உள்ளது
எவ்வளவோ பெரிய தலைமையோடு கூடியும் சோழன் அச் சிறப்புகளை எல்லாம் கைவிட்டு இவ்விடம் வருதல்,
ஆனால் அதனினும் வியப்பளிக்கிறது, வேற்று நாட்டில் வாழும்
புகழ்பெற்ற சான்றோன் –
புகழ் மேம்பாடாக, நட்பே பற்றுக்கோடாக – இவ்விரண்டையும் பெரிதாக எண்ணி
இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக் காலத்து இவ்விடத்து வருதல்
6.
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின் – பரி 2/69-71
தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,
மூப்படையாத பண்பும், ஒழியாத ஆற்றலும்,
இறவாத பண்பினையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன;

மரபுளி

மரபுளி – (பெ) முறைமை, நியதி, மரபு உள்ளவை, that which is in established usage or order
ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 94-96
ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்;

குரவை தழீஇ யாம் மரபுளி பாடி
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் – கலி 103/75,76
குரவைக் கூத்தில் தழுவிக்கொண்டு நாம் எமது மரபுப்படி பாடி,
குன்றாத சிறப்பின் புகழையுடைய தெய்வத்தைப் போற்றுவோம்,

மரம்

மரம் – (பெ) 1. விருட்சம், tree
2. மரக்கலம், Ship or boat;
3. மரக்கட்டை, wood, timber
4. வில், bow
1.
பழு மரம் தேரும் பறவை போல – பெரும் 20
பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப் போல,
2.
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 431-433
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல

பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5
பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,
3.
அகல் இலை முருக்கின்
பெரு மர கம்பம் போல
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/10-12
அகன்ற இலையையுடைய முருக்கினது
பெரிய மரக்கட்டையாற் செய்யப்பட்ட தூணமாகிய இலக்கைப் போல
பொருவார்க்குத் தொலையாத நினது வென்றி வாழ்வதாக

சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – கலி 43/3
சந்தன மரத்தின் கட்டையால் செய்யப்பட்ட உலக்கைகளால்
4.
வார் கோல்
கொடு மர மறவர் பெரும – புறம் 43/10,11
நீண்ட அம்பினையும்
வளைந்த வில்லினையும் உடைய மறவர்க்குத் தலைவனே

மரல்

மரல் – (பெ) ஒரு வகைக் கற்றாழை, பெருங்குரும்பை, Bowstring hemp, stemless plant, Sanseviera zeylanica;
A shrub the fibre of which is used for cordage (ropes in the rigging of a ship)
1.
இதன் பழம் சிவப்பாக, சிறிய உருண்டையாக இருக்கும். வெயிலில் நடந்தால் பாதங்களில் உண்டாகும்
கொப்புளங்களுக்கு இந்தப் பழங்களை உவமிப்பர்
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின்
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 42-45
ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)-
சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால்
பரல் கல்லாகைய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி,
மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,

2.
மரல் நாரைக்கொண்டு வில்யாழ் என்ற ஒருவகை யாழைச் செய்வர்.
குமிழின்
புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 180-182
குமிழினது
உள்ளீடற்ற கொம்பிடத்தே வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்பினையுடைய
வில்யாழ் இசைக்கும் விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை,
3.
இந்தக் கற்றாழையின் நாரினால் மலர்களைத் தொடுத்து மாலை செய்வர்.
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 428-431
தேன் உண்டாக மலர்ந்த மராமரத்தின் மென்மையான பூங்கொத்தும்,
யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாம் பூவும்,
தளிர்களோடே இறுகக்கலந்த கட்டழகான மாலையை,
நன்கு காய்ந்த கற்றாழை நாரில் (கட்டி)அழகுபெறச் சூடி,
4.
மரல் நாரினால் நெய்த துணியை ஆடையாக உடுத்திக்கொண்டனர் மலைவாழ் குறவர்கள்.
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4
மரல் நாரினால் செய்த உடையினையுடைய, மலையில் வாழும் குறவர்கள்
5.
இந்த மரல் மடல்களில் வரிவரியான கோடுகள் இருக்கும்.
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி – நற் 92/2,3
வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி
6.
புன்னை மரத்தின் அரும்புகள், மரல் பழங்களைப்போல் மொக்குளாக இருக்கும்.
படு காழ் நாறிய பராஅரை புன்னை
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/1,2
விழுந்த விதை முளைத்து மரமாகிய பருத்த அடிமரத்தைக் கொண்ட புன்னையின்,
அடுத்து வளர்ந்த மரலின் பழம் போல், அரும்புகள் வாய் திறந்து

7.
வறிய காலத்திலும் அற்றுப்போகாமல் இருக்கும் இந்த மரலின் மடல்களை விலங்குகள் உணவாகக் கொள்ளும்
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3
மரல்செடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்

மரையா மரல் கவர மாரி வறப்ப – கலி 6/1
காட்டுப்பசுக்கள் கற்றாழையைத் தின்னும்படியாக மழை வறண்டுபோக

மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/12
இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்

மரவம்

மரவம் – (பெ) குங்குமமரம், saffron, வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa
இது மராமரம் என்பர் பொ.வே.சோமசுந்தரனார்
மரவம் – குங்கும மரம் என்பர் ச.வே.சுப்பிரமணியனார்
இது கடம்பு, வெண்கடம்பு என்பார் ஔவை.துரைசாமியார்
குரவம் மலர மரவம் பூப்ப – ஐங் 357/1
குரா மரங்கள் மலர்ந்தமையானும், மராமரங்கள் மலர்ந்தமையானும்

மள்ளர் அன்ன மரவம் தழீஇ – ஐங் 400/1
மறவரை ஒத்த வன்மையுடைய மராமரத்தைப் பற்றித் தழுவிக்கொண்டு

மரா

மரா – 1. (பெ) 1. மராம், வெண்கடம்பு, பார்க்க : மரவம், செங்கடம்பு ,
Small Indian oak, Barringtonia acutangula
– 2. (பெ.அ) 1. பழகாத, untrained (elephant)
2. இனத்தோடு மருவாத, (elephant) not joined with its herd
1.1.
இந்த வெண்கடம்பு மலர் மாலையினைப் பலராமன் தன் கழுத்தில் சூடியுள்ளார்.
அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின்
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி – பரி 15/19,20
பாம்பாய் நிமிர்ந்து நிற்கும் மென்மையான தலைகளைக் கொண்ட ஆதிசேடனின் அவதாரமாகிய பலராமன்
மார்பில் உள்ள
வெண்கடம்பு மலர் மாலையைப் போன்று மாட்சிமை தோன்றக் காணப்பட்டு,
1.2.
மராமரத்தின் அடிமரம் வளைவுகள் இன்றி செவ்விதாக இருக்கும்.
இலையுடை நறும்பூ
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 201,202
இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்
செவ்விய காலினையும் உடைய மராத்திடத்தனவாகிய வெள்ளிய கொத்துக்களை நடுவே வைத்து
1.3.
மராமரத்தின் பூக்களில் தேன் மிகுதியாக இருக்கும்.
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் – மலை 428
தேன் உண்டாக மலர்ந்த மராமரத்தின் மென்மையான பூங்கொத்தும்,
1.4.
நெடுவழிகளிலும், ஊர் மன்றங்களிலும் உள்ள மரா மரங்களின் அடியில் தெய்வங்களை வைத்து வணங்குவர்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 395,396

மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் – குறு 87/1
1.5.
மரா மரம் முதுவேனிலில் இலையுதிர்த்துக் குறைவான இலைகளைக் கொண்டிருக்கும்
(leafless for a period around June).
அதனால் அந்த மரம்தரும் நிழல் வரிவரியாக இருக்கும்.
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் – அகம் 3/11
குறைந்த இலைகளை உடைய மரா மரங்களை உடைய அகன்ற நீண்ட நெறியை,

செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் – ஐங் 381/2
1.6.
வெண்கடம்பு மரத்தின் பூ வலப்பக்கமாகச் சுழித்திருக்கும்.
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும் – குறு 22/3,4
மலைப்பக்கமானது தனக்கு அழகாகக் கொண்ட வலமாகச் சுரித்த வெண்கடம்பு மலரையுடைய
வேனில்காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில் மணக்கும்

வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ – அகம் 83/1
வலமாகச் சுரித்த வெண்கடம்பினது சுரமெல்லாம் கமழும் புதிய பூக்களை

அவரோ வாரார் தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே – ஐங் 348
அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
வலமாகச் சுழித்திருக்கும் மராமரத்துப் பூக்களை மேற்பகுதியில் பரப்பிக்கொண்டு, நம்முடைய
மணங்கமழ்கின்ற குளிர்ந்த பொழில் மலர்ந்து காட்சியளிக்கும் நேரம்

1.7.
வெண்கடம்பு மலர்கள் வெயில் கதிர்கள் போல் விரிந்திருக்கும்.
சுண்ணாம்பைச் சுற்றிலும் ஊற்றிவிட்டதைப் போலவும் இருக்கும்.
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து – அகம் 317/15
வெயில் போலும் ஒளிபொருந்திய மலர்கள் செறிந்த மராமரத்திலிருந்து

வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2
வெள்ளிய
சுண்ணாம்பு பரந்திருந்தாலொத்த அதன் பலவாய பூக்கள்
பார்க்க : முந்தைய படம்.
1.8.
மராமரத்தின் இன்னொரு வகையானது செங்கடம்பு மரம்.
தழைக்கின்ற காலத்தில் இது செறிவான இலைகளையுடையது. இதன் பூக்கள் உருண்டையாக இருக்கும்.
இருள் பட பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 10,11
இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்
தேர்உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும்
1.9.
மரா என்ற செங்கடம்பு மரத்தின் பூக்கள் நெருப்பைக் கக்குவது போல் இருக்கும்.
எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து – மலை 498
நெருப்பைக் கக்கியது போன்ற பூப்பூத்த கிளைகளையுடைய மரா மரத்தில்,

2.1
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/7,8
பயம்பில் பிடித்த பழகாத யானைகளை
உரிய மொழியால் தொழிலை உணர்த்தும் சிறு பொழுதல்லது
2.2
மராஅ யானை மதம் தப ஒற்றி – அகம் 18/4
இனத்தோடு மருவாத ஒற்றைக் களிற்றியானையை அதன் மதம் கெட மோதி

மராம்

மராம் – (பெ) பார்க்க : மரவம், மரா
வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2
வெள்ளிய
சுண்ணாம்பு பரந்திருந்தாலொத்த அதன் பலவாய பூக்கள்

மரீஇ

மரீஇ – (வி.எ) 1. மருவி, பழக்கமாகக் கொண்டு, becoming accustomed
2. மருவி, பொருந்தி, coming into close contact
3. மருவி, கிட்டிச்சேர்ந்து, having come closely, approaching
4. மருவி, தழுவி, embracing
5. மருவி, இணைந்து, சேர்ந்து, கலந்து, having blended, joined together
1.
புனல் கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால்
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன
நீல பை குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ – பெரும் 380-383
மழைநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய
சோலையிடத்து நிற்கும் கமுகின் சூல்கொண்ட வயிற்றை ஒத்த
நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளையுண்டு – நாள்தோறும்
பெரிய கள் மகிழ்ச்சியின் இருத்தலைப் பழக்கமாகக்கொண்டு
2.
மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி – நற் 52/1-4
கரிய கொடியையுடைய காட்டுமல்லிகையின் மலரோடு, பாதிரியின்
தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின்
மணம் கமழும் நாற்றத்திடத்தே பொருந்தினேனாய், நாம் இவளின்
அழகுத்தேமல் பரந்த மார்பினைச் சேர்த்துத் தழுவி,
3.
பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே – நற் 258/1,2
நிறையப் பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைக் கிட்டிச்சேர்ந்துவிட்டுச்
செல்கிறேன், தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய்
4.
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/3-5
கொல்லைப்புறத்து வேங்கை மரத்துக்கு ஒரு சொல் சொல்ல மறந்துவிட்டாரே!
மறக்கமுடியாத பருத்த தோளைத் தழுவி
நம்மைத் துறந்து செல்லும் ஆற்றலுள்ளோர் பறவைகள் மூலம் விடும் தூதின் வழியாக
5.
அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/1-5
அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி
காட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள,
இளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி
வீட்டில் வாழும் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல்

மரீஇய

மரீஇய – (வி.எ) 1. மருவிய – வழக்கமாகக் கொண்ட, having been accustomed to
2. மருவிய – பொருந்திய, having close contact
3. மருவிய – ஒன்றுகல, be united together, blend
4. மருவிய – தழுவிய, embracing
5. மருவிய – எய்திய, சேர்ந்த, coming near; approaching
6. மருவிய – பொருந்திய, தன்னுள் கொண்டு அமைந்த, constituting, comprising
1.
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே – நற் 171/9-11
பேய்கள் நிலைகொண்டு நடமாடும் பொழுதைக் கொண்ட நள்ளிரவில்
ஆசையுடன் அவனுடைய நெஞ்சோடு கலந்து
அவனது மார்பினைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை வழக்கமாகக் கொண்ட கண்கள்
2.
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்,
3.
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 149-151
(பகைவர்)உள்நாடுகளில் புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு,
ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி, 150
(அந்நிலங்கள்)மேன்மைபெற அந்த நாட்டோடு ஒன்றுகலந்த வெல்லும் போரினையுடைய தலைவனே
4.
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145
(முன்பு)பூப்போட்ட துகில் இறுகத் தழுவிக்கிடக்கும் உயர்ந்த வளைவினையுடைய அல்குலில்

அல்கல்
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட – குறு 30/1-3
நேற்று இரவில்
அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட,
5.
போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்
புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/5-7
மொட்டுகள் விரிந்த
பொன்னிற பூங்கொத்துகளைச் சேர்ந்த பறவைகள் ஒலிக்கும் கிளைகளுள்ள
புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர்
6.
போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்
புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/5-7
செவ்வி அரும்பு மலர்ந்த
பொன் போன்ற பூங்கொத்துக்கள் பொருந்திய, வண்டுகள் ஒலிக்கின்ற கிளைகளையுடைய
புன்னைமரங்கள் உள்ள சேரிகள் உள்ள இவ்வூரார்

மரீஇயோர்

மரீஇயோர் – (பெ) 1. மருவியோர் – தன்னைச் சேர்ந்தவர், people who belong to one
2. மருவியோர் – தன்னைத் தழுவியவர், one who embraced
3. மருவியோர் – பொருந்தியோர், one who had a close contact with
4. மருவியோர் – வழக்கமாகக் கொண்டவர், மேற்கொள்பவர், one whos is accustomed to
1.
களிறே,
—————————– ————————– ——–
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8
யானை
———————– ——————– ——————–
பாகனின் கட்டுக்கு அடங்காமல் அது வெறி கொண்டு உள்ளது.
2.
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4
சான்றோர் அல்லர் நான் தழுவியவர்
3.
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15
பூவிதழ் பொருந்திய கூந்தற்கண்ணே பொருந்தித் துயின்றோராய அவர்
4.
பலரோடு உண்டல் மரீஇயோனே – புறம் 234/6
பலரோடுங்கூடி உண்டலை மேற்கொண்டோன்.

மரு

மரு – (பெ) 1. காதல் மயக்கம், sexual desire
2. நறுமணம், fragrance
1.
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க – கலி 27/17,18
கருமையான அழகிய மலர் போன்ற மைதீட்டிய என் கண்களில் மயக்கத்தை ஊட்டி, அவை மகிழும்படி
கூறிய பொய் மொழிகளால் நெஞ்சைப் பறிகொடுத்த நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
2.
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/5,6
துயில் இன்றி நான் இரவைக் கழிக்க, நீர்நிலைகளில் இனிமையாக நீர்விளையாட்டு ஆடி
மயிலின் தன்மையுள்ள பரத்தையரின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு நம்மை மறந்திருப்பாரோ –

மருஊட்டு

மருஊட்டு – (வி) புணர்ச்சியின்போது ஆடவர் மகளிர் கண்களைத் தம் நாவால் தடவுதல்,
man licking the eyelids of a woman during sexual union
மை எழில் மலர் உண்கண் மருஊட்டி மகிழ் கொள்ள
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க – கலி 27/17,18
கருமையான அழகிய மலர் போன்ற மைதீட்டிய என் கண்களை நாவால் தடவிக்கொடுத்து, நான் மகிழும்படி
கூறிய பொய் மொழிகளால் நெஞ்சைப் பறிகொடுத்த நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
புலவர் அ.மாணிக்கம் உரை

மருகன்

மருகன் – (பெ) வழித்தோன்றல், வாரிசு, Descendant, scion, member of a clan
கடும் பகட்டு யானை சோழர் மருகன்
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் – அகம் 356/12,13
கடிய களிற்றியானைகளையுடைய சோழரது வழிவந்தோனாகிய
நீண்ட நெற்கதிர்களையுடைய வல்லத்தின் தலைவன்

மருங்கு

மருங்கு – (பெ) 1. பக்கம், side
2. விலாப்பாகம், Side of the body
3. இடை, இடுப்பு, waist
4. குலம், Race, tribe, family
5. நூல், science, treatise
6. இருந்த இடம், சுவடு, தடம், trace
7. இடம், land, place
8. எல்லை, limit
9. செல்வம், wealth
1.
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் – நற் 93/7
பக்கங்களை மறைத்த திருந்திய அணிகலன்களால் பெரிதாய்த் தோன்றும் தோள்களையும்,

பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ
இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ – நற் 155/6,7
பெரிய கடற் பரப்பில் அமர்ந்திருக்கும் தெய்வமகளோ?
கரிய கழியின் பக்கத்தே நிலைகொண்டு உறைபவளோ?
2.
தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 141,142
கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய விலாப்பக்கத்தினையும்
சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று
3.
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214
இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்,
4.
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275
சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்
5.
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் – குறி 13-18
முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு(மிகுந்த)
நேர்த்தியாக அமைந்த நகைகள் சீர்குலைந்துபோனால் (மீண்டும்)சேர்த்துக்கட்ட முடியும்;
(ஆனால் தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால்,
கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல்,
குற்றமற்ற அறிவையுடைய பெரியோர்களுக்கும், முன்புபோல இருந்த நிலை
எளிய காரியம் என்னார் தொன்மையான நூலை அறிந்தோர்;
6.
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 269-271
அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும்,
பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய் – இருந்த சுவடே இல்லையாகும்படி,
மலைகளையெல்லாம் மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான்,
7.
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 214,215
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 561
இழை நுழைந்தஇடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை

துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/4
நான் துயரத்தோடு இருந்த நிலையை என் அன்னை அறிந்தவள் போல

நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/17
நீர் இருக்குமிடம் அறியாது, கானல்நீர் தோன்றுமிடமெல்லாம் ஓடி,
8.
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395
போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி,
கல்லைக் கொத்தி எழுதிய, நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில்
9.
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும் – புறம் 391/11
இவன் முன்பேயும் இங்கே வந்தவன் பொருள் இல்லாதன்

மருங்குல்

மருங்குல் – (பெ) 1. வயிறு, Stomach, abdomen
2. விலாப்பக்கம், side of the body
3. இடை, இடுப்பு, நடுப்பக்கம், waist, middle

1.
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளை கை கிணை_மகள் – சிறு 135,136
மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள்
2.
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை – நற் 141/2,3
மழையில் நனையும் யானையின் பக்கங்கள் உராய்தலால்
பொரிந்தது போல் ஆகிய அடிமரத்தின் பட்டை தேய்ந்த, உள்ளே துளையுள்ள காய்களைக் கொண்ட கொன்றை
3.
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல்
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/3,4
நுட்பமான அழகிய ஒளிவிடும் சிறு புள்ளிகளையும், மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும்
இடையினையும்,
வளைந்து இறங்குகின்ற, வளையல் அணிந்த முன்கையினையும், அழகு நிறைந்த அல்குலையும் உடையவளே!

மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/7
நடுப்பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில்

மருங்கூர்

மருங்கூர் – (பெ) ஒரு சங்க காலத் துறைமுகப் பட்டினம், a port city during sangam period
பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள்
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258
நிறையப் பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைப் பார்த்துவிட்டுச்
செல்வாயாக, தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய்
கதிர்கள் கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில்
செல்வம் மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க,
பொன் வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட,
கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய
அகன்ற மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த
பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
அசைவாடிக்கொண்டிருக்கும் தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும்
மருங்கூர்ப் பட்டினத்தைப் போன்ற இவளது
நெருக்கமாயுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் கழன்றோடுவதைக் கண்டு –

தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து
எல் உமிழ் ஆவணத்து அன்ன
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே – அகம் 227/16-22
தூங்கல் எனும் புலவரால் பாடப்பெற்ற மிக உயர்ந்த நல்ல புகழ் வாய்ந்த
பெண்யானை மிதித்தமையால் ஏற்பட்ட வழுதுணங்காய் போலும் தழும்பினையுடைய வழுதுணைத் தழும்பன்
என்பானுடைய
காவல் பொருந்திய மதிலெல்லையையுடைய ஊணூருக்கு அப்பாலுள்ள
மிக்க பொருள் நிலைபெற்றிருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய
பெரிய உப்பங்கழிப் பக்கங்களையுடைய மருங்கூர்ப்பட்டினத்து
ஒளிவீசும் கடைத்தெருவைப் போன்ற
கல்லென்னும் அலரை இவ்வூரிலெழச்செய்து பிரிந்தகன்றோராகிய நம் காதலர்

இவற்றினின்றும் நாம் அறிவன.

1. மருங்கூர்ப்பட்டினத்தில் பெரும்பெரும் அங்காடிகள் இருந்தன.
2. பெரும் அங்காடிகளின் கட்டிட நிழல்களில், கடலில் பிடித்து வந்த இறா மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
3. மருங்கூர்ப்பட்டினத்துக் கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றன.

எனவே, மருங்கூர்ப்பட்டினம் ஒரு பெருவணிகத்தலமாகவும்; சிறந்த துறைமுகமுமாகவும் விளங்கியது என்று
அறிகிறோம்.

நற்றிணை 258-ஆம் பாடலைப் பாடிய இதே நக்கீரர், தனது இன்னொரு பாடலான நற்றிணை 358-இல்
பசும்பூண் வழுதி மருங்கை என்று இம் மருங்கூரைக் குறிப்பிடுகிறார்.
இப்பட்டினம் பசும்பூண் பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதிலிருந்து இது பாண்டிய நாட்டுக்
கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு பட்டினம் என்பது உறுதிப்படும்

இந்த மருங்கூர் எங்கு உள்ளது என்பதில் ஆய்வாளர்களின் கருத்துகள் வேறுபடுகின்றன.

மருங்கூர் என்ற பெயரில் தமிழத்தில் சிலஊர்கள் இன்றும் உள்ள நிலையில் தொண்டிக்கு மேல் உள்ள
மருங்கூர் பட்டினமே சங்க இலக்கியம் குறிப்பிடும் மருங்கூர் பட்டினமாகும்.
இன்றைய இராமநாதபுரம் பகுதியில் உள்ள ‘பாசிப்பட்டின’த்திற்கு மேல் அமைந்துள்ள மருங்கூர் பட்டினமே
சங்ககால துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.
இங்கே சொடுக்குக

இது கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் என்கிறது
விக்கிப்பீடியா கட்டுரை (இங்கே சொடுக்குக )

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் ஒரு சங்ககால நகரம் தான் என்கிறார் திருமதி.சுபாஷினி.
(இங்கே சொடுக்குக)
(இங்கே சொடுக்குக)

சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.
மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்(அகநானூறு 80.), மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் (நற்றிணை 289),
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்(அகநானூறு 327.) ஆகியோர் அந்தப் புலவர்கள்.

மருங்கை

மருங்கை – (பெ) பார்க்க : மருங்கூர்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/10

மருடல்

மருடல் – (பெ) மருளுதல், திகைத்தல், be perplexed, bewildered
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்
வழி மயக்கு_உற்று மருடல் நெடியான்
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/1-6
வையையில் புதிதாக வருகின்ற நீரில் புனலாடுவது இனியதா?
முருகப்பிரான் இருக்கும் தலைமைப் பண்புள்ள திருப்பரங்குன்றத்தினை வணங்கி இன்புறுதல் இனியதா?
கூர்மையான வேலின் நுனி போன்ற கண்களையுடைய பெண்கள் துணையாக வர
இவ்விரண்டினில் எதனைச் செய்வோம் நாம் என்று எந்நாளும்
வழியறியாது மருட்சியடைதல், பாண்டியனின்
நெடிய மாடங்களையுடைய மதுரை மக்களுக்கு இயல்பு.

மருடிர்

மருடிர் – (வி.மு) மருளுகின்றீர், மனம்தடுமாறுகிண்றீர், you become bewildered
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் – கலி 143/19
அறிவுகெட்டுப்போய்விட்டாளோ என்று மருளுகின்றீர், கலங்கவேண்டாம்,

மருட்கை

மருட்கை – (பெ) 1. மருட்சி, மனக்கலக்கம், தடுமாற்றம், Bewilderment
2. வியப்பு, wonder, astonishment
1.
மா மலை நாட மருட்கை உடைத்தே
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்_காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/7-10
பெரிய மலைநாடனே! என் மனம் மருட்சியடைகின்றது,
நிமிர்ந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற கொல்லைக்காடு
கதிர் அறுக்கும் பருவத்தை அடையும் இந்த நேரத்தில், எமது
கருத்த நெய்ப்பசையுள்ள கூந்தலைக்கொண்டவளின் சிறப்பு மிக்க நலம் சிதைந்துவிடுமே என்று –
2.
நினைக்கும்_காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/1,2
கருதுங்காலத்து வியக்கும்தன்மையுடையது
எத்துணையும் பெரிய தலைமையுடனே இவன் சிறப்புகளைக் கைவிட்டு வரத் துணிதல்

மருட்டல்

மருட்டல் – (பெ) 1. காதல் மயக்கம், enticement
2. மயக்கம், கலக்கம், தடுமாற்றம், bewilderment
1.
தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/12-14
மேலும் தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து,
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்குக் காதல்மயக்கத்தையும் ஊட்டி மயக்கினான்;
2.
நனவின்வாயே போல துஞ்சுநர்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே – அகம் 158/10,11
நனவினது உண்மைத் தோற்றம் போல, துயில்வோரைக்
கனவு அவ்விடத்து மயக்கலும் உண்டு

மருட்டு

மருட்டு – (வி) 1. மயக்கிச்சிக்கவை, நயமாகப்பேசி இணங்கவை, coax, allur
2. மயக்கு, தன்வசப்படுத்து, fascinate, seduce, entice
3. ஒத்திரு, resemble
1.
அம்ம வாழி கொண்க எம்_வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே – ஐங் 139
வாழ்க நீ தலைவனே! என்னிடம் உள்ள
சிறந்த அழகினைப் பாராட்டி மயக்குமொழி பேசும் உன்னைக் காட்டிலும்
உன் பாணன் நல்ல மகளிர் பலரின் பெண்மை நலத்தைச் சிதைக்கவல்லான்.

நீ மருட்டும் சொல்கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47
உன்னுடைய மயக்கும் சொற்களுக்கு மயங்குவார்க்கு இதைச் சொல்!
2.
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே – குறு 30/2-4
அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மயக்க, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்!

தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/12-14
மேலும் தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து,
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்குக் காதல்மயக்கத்தையும் ஊட்டி மயக்கினான்;
3.
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும்
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 146-148
அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,
(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னை ஒத்திருக்கவும்,
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,

மருதன்

மருதன் – (பெ) பார்க்க : மாங்குடிமருதன்
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/13-16

மருதம்

மருதம் – (பெ) 1. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகைத் அகத்திணைப்பகுப்புளுள் ஒன்று,
one of the five love-modes of human life
2. மருத நிலத்திற்குரிய நிலம் – வயலும் வயல் சார்ந்த இடம், agricultural tract, wet land
3. மருத நிலப்பண், A morning melody-type peculiar to agricultural tracts;
4. மருது என்ற ஒரு வகை மரம்/பூ, a kind of tree/ its flower,
நீர் மருது அல்லது வெண்மருது (Arjuna., Terminalia arjuna),
கருமருது (Black winged myrobalan,),
பூ மருது(Flowering murdah.), பிள்ளைமருது (terminalia paniculatta)
1,2
மருதம் சான்ற மருத தண் பணை – சிறு 186
மருதத்திணை ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருத நிலத்தில் குளிர்ந்த வயலினையுடையதும்
3.
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 218-221
குறிஞ்சிப்பண்ணைப் பரதவர் பாடவும், நெய்தலாகிய
நறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் சூடவும்,
முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்
4.
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழன பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை – நற் 350/104
வெண்ணெல் கதிர்களை அறுப்பவர்களின் தண்ணுமைப் பறையின் ஒலிக்கு வெருண்டு
பழனத்தில் உள்ள பலவான பறவைகள் பறந்தோட, வயல்வெளியில்
வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற
தேர்க்கொடை கொடுப்பதில் சிறந்த விரான் என்பானின் இருப்பையூர்

இந்த மருதமரங்கள் நீண்ட நாள் வாழக்கூடியவை. நீர்நிலைகளை ஒட்டி நன்கு வளரும்
முடம் முதிர் மருதத்து பெரும் துறை – ஐங் 31/3
தொல் நிலை மருதத்து பெரும் துறை – ஐங் 75/3
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு – புறம் 344/3

இதன் பூவில் நுனியில் முடிபோன்ற அமைப்புகள் இருக்கும்.
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/4
மேலே மயிர் போன்ற நார்முடியைக் கொண்ட பூவினையுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள்
இருக்கும்

மருதி

மருதி – (பெ) சங்க காலத்துப் பெண் ஒருத்தியின் பெயர், the name of a woman of sangam period
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டி
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் – அகம் 222/9-12
திசையெல்லாம் தன் கணவனைத் தேடி மதிமயங்கி வாடிய
அவன் மனையாளாகிய ஆதிமந்திக்கு அவள் காதலனைக் காட்டி
ஒலிக்கும் கடலில் புக்கு மறைந்த பாடுதல் அமைந்த சிறப்பினையுடைய
மருதியை ஒத்த சிறந்த புகழைப் பெரும்பொருட்டு

மருதி வரலாறு.
ஆதிமந்தி என்பவன் சோழநாட்டு நீச்சல்வீரன். அவன் அரச குடும்பத்தினர் முன்னிலையில் காவிரியில் நீச்சல்
நடனம் ஆடியபோது அவனைக் காவிரி ஆற்று வெள்ளம் கொண்டு சென்றது. வெள்ளத்தில் சென்ற
ஆட்டன் அத்தியை மருதி என்பவள் காப்பாற்றி அவனுடன் வாழ்ந்து வந்தாள். ஆட்டன் அத்தியைக் காதலித்த
கரிகாலன் மகள் ஆதிமந்தி தன் காதலனைத் தேடிக்கொண்டு வந்தாள். தன்னோடு வாழும் ஆட்டன் அத்தி
இளவரசியின் காதலன் என உணர்ந்ததும் அவனை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து விட்டு, மருதி கடலில் பாய்ந்து
தன்னை மாய்த்துக் கொண்டாள்.

மருது

மருது – (பெ) பார்க்க : மருதம் – 4
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து
மட நடை நாரை பல் இனம் இரிய
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/1-5
அகன்ற கொம்புகளையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியைக் கொண்ட கரிய ஆணானது,
இள நடையையுடைய நாரையின் பலவான கூட்டம் வெருண்டோட
நெடிய நீர் நிரம்பிய குளிர்ந்த குளத்தில் துடுமென்று விரைவாகப் பாய்ந்து
அந்த நாளிற்செய்த உழும் தொழிலின் வருத்தம் நீங்கும்படியாக நீராடி, நீண்ட கிளைகளையுடைய
இருள் நிரம்பியது போன்ற அடர்ந்த மருதமரத்தின் இனிய நிழலில் படுத்திருக்கும்

மருத்து

மருத்து – (பெ) காற்று, wind
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள – பரி 4/30-32
உனது வெளிப்பாடும், பரப்பும் கடலினிடத்தில் உள்ளன;
உன் உருவமும் ஒலியும் ஆகாயத்தில் உள்ளன;
உன் பிறப்பும், மறைதலும் காற்றினில் உள்ளன;

மருந்துரை

மருந்துரை – (பெ) தேவ மருத்துவர்கள், divine physicians
மருந்து_உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5
தேவ மருத்துவராகிய அசுவனி, தேவர் ஆகிய இருவரும், மக்கள் திருந்துவதற்குக் காரணமான
நூல்களை உணர்ந்த எண்பது வசுக்களும்

மருப்பு

மருப்பு – (பெ) 1. விலங்கின் கொம்பு, horn of a beast
2. யானையின் தந்தம், tusk of an elephant
3. யாழின் ஓர் உறுப்பு, a part of a lute
1.
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110
வளைந்த கொம்பினையுடைய காட்டுப்பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்

வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2
வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99
முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,

தட மருப்பு எருமை மட நடை குழவி – நற் 120/1
அகலமான கொம்புகளையுடைய எருமைகளின் இள நடையினைக் கொண்ட கன்றுகள்

சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய – நற் 131/5
சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளைக் கொண்ட இலைகள் முறிய

தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/4
செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினை ஒப்பச் சுற்றிக் கடை சுருண்ட

கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு – குறு 363/1
கண்ணி போல் வளைந்த கொம்பினையுடைய தலைமைப் பண்புள்ள நல்ல காளை,
2.
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் – அகம் 109/13
பெரிய களிற்றின் கொம்பொடு புலியின் வரி பொருந்திய தோலைத் தண்டமாகத் தான் ஏவலரை இறுக்கச்செய்யும்
3.
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் – பொரு 13,14
பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்;
கருநிறப்பெண்ணின் முன்கையில் (அணியப்பட்ட)அழகிய வளையலை ஒத்ததும்,

மருமான்

மருமான் – (பெ) பார்க்க : மருகன்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 47-49
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் – பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய

மருளி

மருளி – (பெ) மயக்கம், delusion
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின்
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ – கலி 14/10,11
பொருள் இல்லாவிட்டால் நாம் ஒரு பொருட்டாக இருக்கமாட்டோம் என்ற உன்
மாயத்தோற்றம் கொண்ட அறியாமை வயப்பட்ட எண்ணத்தால் மயக்கப்பட்டு உணர்விழந்தாயோ?

மருள்

மருள் – 1. (வி) 1. கலங்கு, மயங்கு, மனம்தடுமாறு, be bewildered, perplexed
2. வியப்படை, wonder, be amazed
3. மிரளு, வெருவு, be frightened, scared
4. ஒப்பாகு, be similar
– 2. (பெ) 1. மனக்கலக்கம், குழப்பம், மனத்தடுமாற்றம், bewilderment, perplexity, confusion
2. மயக்கம், misapprehension
3. பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, Congenital idiocy
– 3. (இ.சொ) ஓர் உவம உருபு, a particle of comparison
1.1, 1.2
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 93-98
வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து,
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி
1.3.
உரவு சினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும்
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 130-134
மிகுகின்ற சினத்தால் செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் வெகுண்டுவரும்,
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
இமையாத கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே வருகையினால்,
அஞ்சிநடுங்கியவராய் (இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட, யாங்கள்
வருத்தம் மிக்க மனத்தையுடையவராய் மிரண்டு (வேறு)இடத்திற்குச் செல்ல
1.4, 3
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1
பொரிந்துபோன அடிப்பகுதியை உடைய கோங்கின் பொன்னை ஒத்த புதிய பூக்களை

முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – நற் 353/4
வளைந்து முதிர்ந்த பலாவின் குடம் போன்ற பெரிய பழத்தை,
2.1
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும்
கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/3-7
நகைக்கிறாள், தன் நாணத்தைக் கைவிட்டு, ஒழுகுகின்ற
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தலையைக் கவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டு,
இவை போல துன்பத்தைக் காட்டும் செயல்கள் பலவற்றைச் செய்து, ஏனென்று தன்னைக்
கேட்பாருக்குத் தொடர்பில்லாத பதில்களைச் சொல்லி, கனவு காண்பவள் போல் காணப்பட்டு,
சிலநேரம் தெளிந்த அறிவோடும், சிலநேரம் குழம்பிய அறிவோடும் மாறிமாறித் தோன்றுபவளிடம்
2.2
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்
—————— ———————————
மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/1-5
ஆண்மான்கள் தம் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிக்கு
காட்டில் சேர்ந்த புதர்களில் மறைந்து ஒதுங்கவும்
—————————- ———————-
கார்காலத்துப் பெரிய மழை இம் மாலைப்பொழுதின்கண் வந்தது

மருள் – மயக்கம், திசை இருண்டு மழை பொழிதலின் மருள்கூர்ந்து ஒடுங்கின என்க – பெருமழைப்புலவர் உரை
2.3
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/1-4
மக்கள் பிறப்பில் சிறப்பு இல்லாத குருடும், வடிவில்லாத தசைத்திரளும்
கூன் உடையவரும், குறுகிய உருவம் படைத்தோரும், ஊமையரும், செவிடரும்
விலங்கு வடிவாகப்பிறப்பவரும், அறிவின்றியே மயங்கி இருக்கும் பிறவிகளும் உளப்பட உலகத்தில்
உயிர்வாழ்பவர்க்கு
எட்டுவகைப்பட்ட பெரிய எச்சம் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம்

மருவு

மருவு – 1. (வி) 1. தழுவு, பின்பற்று, embrace, follow, adopt
2. நெருங்கு, come close
3. வழக்கப்படு, நிலைபெறு, be established
– 2. (பெ) 1. தழுவுதல், பின்பற்றுதல், embracing, following, adhering to
2. வழக்கப்படுதல், பயிலுதல், becomung accustomed to
3. காதல்மயக்கம், பித்துப்பிடித்தல்,
1.1.
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்
இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் – மது 540-542
பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி
கரிய கழியில் தழுவிப் பரப்பதற்காக மிகுந்து எழுந்து,
அச்சம் பொருந்திய நடுயாமத்தே வருவனவாய் மீளுதலால்,

மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி
குருதி துடையா குறுகி மருவ – பரி 16/28,29
அவன் மகிழும்படி, களிப்பு மிக்க தேனால் சமைக்கப்பட்ட தேறலை அவனுக்குத் தர, அவன் அதனை மறுத்து,
அவள் மீது படிந்திருக்கும் சாயநீரைத் துடைப்பான்போல் கிட்டே சென்று அவளைத் தழுவிக்கொள்ள

இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் வழிநாள் காணின்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்
அதுவே மருவினம் மாலை – அகம் 301/23-26
மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர் போய்விட்ட
பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினைப் பின்னாளில் காணின்
அக்காட்சி ஆரவாரம் கொண்டிருந்த முதிய ஊரார்க்கு துன்பம் உண்டாகும்
அத்தகைய துன்பத்தையே தழுவியுள்ளோம் இந்த மாலையில்
1.2.
மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17
நெருங்குதற்கு இனிய பெருமனையின் அகன்ற முற்றத்திடத்து
1.3.
அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு
மருவின் இனியவும் உளவோ
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே – குறு 322
அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி
காட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள,
இளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி
வீட்டில் வாழும் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல்
பழக்கப்பட்டுப்போனால் வேறு இனிமையுடையன உண்டோ?
(தலைவன் இருக்குமிடத்துக்குச்)செல்வோம் தோழி! இயன்ற அளவுக்கு நடந்து
2.1
மறையில் தான் மருவு_உற மணந்த நட்பு அருகலான்
பிறை புரை நுதல் அவர் பேணி நம்
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/22-24
மறைவாகத் தான் தழுவுதலுற மணந்த நட்பு இல்லாமல்போய்விடுமோ என்று
பிறை போன்ற நெற்றியையுடையவளே! அவரைப் பேணி நாம்
அவரிடத்தில் , அவர் விரும்பிய நாளில். தங்குதலை உன் உறவினரிடம் பேசிமுடித்துவிட்டார்.
2.2
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை
மருவுதல் – கேட்டற்பொருட்டும், பயிலற்பொருட்டும் அடிக்கடிஅதனை எய்துதல் – பெருமழைப்புலவர் உரை
2.3
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு
மருவு_உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/14,15
எனக்குக் காதல்மயக்கம் ஊட்டிவிட்டுக் கைவிட்டுச் சென்ற அன்றுமுதல்
என் நெஞ்சு மயக்கம் கொண்டுவிட்டது.

மரூஉ

மரூஉ – (பெ) மருவுதல், பயின்றிருத்தல், becoming accustomed to
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து – அகம் 280/7
நாம் தங்கும் இந்நாட்டில் பயின்றிருத்தலின் நீங்கி

மரை

மரை – (பெ) 1. காட்டுமாடு, ஆமா, bison, wild cow/ox
2. மான் வகை, indian elk sambur
1.
சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 406
வில்லின் ஓசைக்குப் பயந்த சிவந்த கண்களையுடைய காட்டெருது
2.
ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3
மிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று

மரையா

மரையா – (பெ) பார்க்க – மரை
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மென் நடை மரையா துஞ்சும் – குறு 115/4,5
ஆடுகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த குளிர்ந்த மணமுள்ள மலைச் சரிவில்
மெல்லிய நடையையுடைய காட்டுப்பசுக்கள்/மரைமான்கள் துயிலும்

மரையான்

மரையான் – (பெ) பார்க்க : மரை
மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331
மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,

மட கண் மரையான் பெரும் செவி குழவி – மலை 506
பேதைமை மிகுந்த கண்களையுடைய மரைமானின் பெரிய காதுகளைக்கொண்ட குட்டியும்,

மறன்

மறன் – (பெ) பார்க்க : மறம்
1.
மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/15
மனையில் உறையும் கோழியின் தறுகண்மையை உடைய சேவலின்
2.
நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே
அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே – புறம் 213/14-19
நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த
சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின் புதல்வர் தோற்றால்
நினது பெரிய செல்வத்தை யாவர்க்குக் கொடுப்பாய்,
போரை விரும்பிய செல்வனே! நீ அவர்க்குத் தோற்றால்
நின்னை இகழும் பகைவர் உவப்ப பழியை உலகத்தே விட்டுச்செல்வாய்
அதனால், ஒழிவதாக நின்னுடைய கொலைவெறி
3.
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/42,43
திறனில்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மாற்றாரை எதிர்த்தழிக்கும் வலிமையும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!

மறப்பு

மறப்பு – (பெ) 1. மறத்தல், failing to remember
2. கவனக்குறைவு, carelessness, absent-mindedness
3. அசட்டை செய்தல், புறக்கணித்தல், நீங்குதல், overlooking, disregarding, getting rid of
1.
மறப்பு அரும் காதலி ஒழிய
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/4,5
மறத்தல் என்பது அரியதான காதலியை விட்டுப்பிரிந்து
செல்வேன் என்று சொல்வது இங்கு நம் இளமைக்கு இறுதியாகும்.
2.
யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/8
எமது தாயின் கவனத்தைவிட்டுச் சிறிதும் அகலாத மடந்தை,
3.
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9
அகிலின் நெய்ப்பூச்சு நீங்குதல் இல்லாத மணங்கமழ்கின்ற கூந்தலையுடையவள்.

மறம்

மறம் – (பெ) 1. வீரம், bravery, valour
2. கொலைத்தொழில், murder, killing
3. வலிமை, strength, power
1.
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 134-136
யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும்,
நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,
சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத வீரத்தைப் பூண்ட வாழ்க்கை
2.
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் – கலி 38/18-20
வழியில் கொள்ளையர்கள் கொலைச்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில்
வந்தபோது
அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில்
நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள்,
3.
நீயே பிறர் ஓம்பு_உறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு – புறம் 40/1,2
நீ, பகைவரது பாதுகாத்த வலிமை நிலைபெற்ற அரண்களைப்
பாதுகாவாது எதிர் நின்று அழித்து

மறலி

மறலி – (பெ) கூற்றுவன், Yama, the god of death
மறலி அன்ன களிற்று மிசையோனே – புறம் 13/4
கூற்றம் போன்ற களிற்றின்மேலோன்

மறலு

மறலு – (வி) 1. போர்வெறிகொள், எதிர், மாறுபடு, oppose, differ
2. எதிரிட்டுத் தாக்கு, oppose and attack
1.
மறவர் மறல மா படை உறுப்ப – பதி 82/7
வீரர்கள் போர்வெறிகொண்டு திரிய, குதிரைகள் போர்க் கவசங்கள் பூண்டு இருக்க,

வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் – பரி 9/54
ஒருவரின் கண்களாகிய அம்புகள் மற்றவரின் கண்களாகிய அம்புகள் மேல் நிலைத்து நிற்குமாறு எதிர்த்து
நோக்குவார்,
2.
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது
கரும் கால் வேங்கை ஊறுபட மறலி
பெரும் சினம் தணியும் குன்ற நாடன் – நற் 217/2-5
காணுந்தோறும் பொலிவுற்று விளங்கும், விரைவான செயற்பாடு வாய்க்கப்பெற்ற யானை
கரிய நிறமுள்ள வலிமையான புலியை வெருட்டி ஓடச் செய்து, அருகிலிருக்கும்
கரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கை மரம் சிதையுமாறு மோதித்தாக்கி
தன்னுடைய பெரும் கோபத்தைத் தணித்துக்கொள்ளும் குன்றுகளையுடைய நாட்டினன்,

மறவன்

மறவன் – (பெ) 1. வீரன், brave man, warrior
2. படைத்தலைவன், head of an army
1.
பீலி கண்ணி பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து – புறம் 274/2,3
பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையுடைய பெருந்தகையாகிய வீரன்
தன் மேல் கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்தி
2.
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – அகம் 13/6
செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான

இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9
அணிகலன் அணிந்த யானையையுடைய சோழனின் படைத்தலைவன்

வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10
பழியில்லாத கொடிய போர் வல்ல சேரனின் படைத்தலைவன்

மறவர்

மறவர் – (பெ) 1. வீரர், brave men, warriors
2. பாலை நில மக்கள், inhabitants of the desert tract
3. கொடியோர், cruel, wiked persons
4. வேடுவர், persons of hunters tribe
1.
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர்
கடும் களிறு ஓட்டலின் – மது 596,597
வண்டுகள் நிறைந்த போர்ப்பூவினையும், பெரிய விருப்பத்தையுமுடைய வீரர்கள்
கடிய களிறுகளை (ஒன்றோடொன்று பொருமாறு)செலுத்துதலால்,
2.
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/5,6
காட்டினை அழகுசெய்த பூவின் மணம் கமழும் கற்கள் பரந்த வழியில்
‘கிடின்’ என்று ஒலிக்கும்படி மோதிக்கொள்ளும் திரண்ட தோள்வளை அணிந்த பாலைமக்கள்
3.
விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர்
எழுத்து உடை நடுகல் அன்ன – ஐங் 352/1,2
சிறப்பாக அம்பினைத் தொடுப்பதில் வல்ல கொடிய மறவர்கள் வில்லால் எய்ய, இறந்துபட்டோரின்
பெயர் பொறித்த எழுத்துகளைக் கொண்ட நடுகல்லைப் போன்று
4.
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்
விசைத்த வில்லர் வேட்டம் போகி
முல்லை படப்பை புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே – அகம் 284/8-11
தினையினால் ஆக்கிய கள்ளினை உண்ட நாணினைத் தெறித்து விடுக்கும் அம்பினையுடைய மறவர்கள்
வேகமாக இழுத்து நாண் புட்டிய வில்லினராய் வேட்டையாடி
முல்லைநிலத் தோட்டத்தே மானை அறுத்து உண்ணும்
அழகிய காட்டின்கண்ணது

மறவலேன்

மறவலேன் – (வி.மு) மறவேனாயினேன், I had not forgotten him
அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே – புறம் 395/32
அவனை மறவேனாயினேன், பிறரை நினைப்பது இல்லேன் ஆயினேன்

மறவல்

மறவல் – (பெ) மறத்தல், forgetting
மறவல் ஓம்பு-மதி எம்மே – அகம் 19/9
எம்மை மறத்தலை நீக்குவாயாக

மறவி

மறவி – (பெ) 1. மறதி, Forgetfulness
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
————– ——————- —————-
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ – நற் 70/1-7
சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!
——————- —————————— —————————
எமது ஊருக்கு வந்து எமது உண்துறையில் புகுந்து தேடி
சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்!
அதற்கு நன்றியுள்ள அன்போடு இருப்பாயோ? இல்லை பெரிய மறதியைக் கொண்டிருப்பாயோ?

மறவை

மறவை – (பெ) 1. கொடுஞ்செயல், that which is cruel by nature
2. வீரம் மிக்க செயல்புரிவோன், a person possessing bravery
1.
அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
—————————— —————————-
விழவு அணி வியன் களம் அன்ன – புறம் 390/1-4
அறம் புரியும் நெஞ்சினையுடைய ஆயர்களும், பெருகுகின்ற
கொடுஞ்செயல் பொருந்திய நெஞ்சத்தினையுடைய சிறுகுடியில் வாழ்பவரும் கூடி எடுக்கும்
——————————– ————————-
விழாவால் பொலியும் அகன்ற மன்றத்தை ஒத்த
2.
அறவை ஆயின் நினது என திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆக – புறம் 44/11-13
அறத்தை உடையையாயின் இது நினதன்றோ என்று சொல்லித் திறத்தல் செய்வாயாக
மறத்தை உடையை ஆயின் போரால் திறத்தல் செய்வாயாக
அவ்வாறன்றி, அறத்தையும், மறத்தையும் உடையை அல்லை ஆக

மறா

மறா – (பெ.அ) மறவாத, not forgeting
மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று – கலி 147/44
கடமை மறவாத அரசனாகிய ஞாயிறே! உன் மாலைக் காலமும் வந்துவிட்டது,

மறாதீவாள்

மறாதீவாள் – (வி.மு) மறுக்கமாட்டாள், (she) wont deny
சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10
சொன்னால் மறுக்கமாட்டாளோ இவள்?

மறாமை

மறாமை – (பெ) மறவாதிருத்தல், not forgetingu
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – கலி 133/11
செறிவு எனப்படுவது கூறிய எதனையும் மறக்காதிருத்தல்,

மறாற்க

மறாற்க – (வி.மு) மறவாதிருக்கட்டும், let it not forget
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/54,55
மறவாதிருக்கட்டும் வானம், மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம்
வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு.

மறி

மறி – 1. (வி) 1. தலைகீழாகு, be turned upside down
2. மடங்கு, get folded
3. முறுக்கப்படு, be twisted
2. (பெ) ஆடு, மான் இவற்றின் இளமை, young of sheep, deer, etc.,
1.1
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று
கருமறி காதின் கவை அடி பேய்மகள் – சிறு 196,197
தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
1.2
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை – முல் 59
குதிரைச் சவுக்கு வளைந்துகிடக்கின்ற, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
1.3
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/5,6
வலிமை மிகுந்த கழுத்தினையும், வன்மையான பார்வையினையும், கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,
2.
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
கரிய கண்ணையுடைய வெள்ளாட்டின் அழகிய குட்டியாகக் கொடுத்தான்;

செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/1,2
செம்மையான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
தன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து

மறிதரு(தல்)

மறிதரு(தல்) – (வி) மாறி மாறித் திரி(தல்), roam or wander here and there repeatedly
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிற தும்பி
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும்
பூ பொறி யானை புகர் முகம் குறுகியும்
வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட – கலி 46/1-9
தான் இருந்து தேனுண்ட மலர்களைத் தனியே விட்டுவிட்டு, வேறு பூக்களை நாடிச் சென்ற
பெரிய, அழகிய சிறகுகளைக் கொண்ட நீல மணி போன்ற நிறத்தையுடைய தும்பிகள்,
வாயிலிருந்து வடியும் மதத்தையும், வெண்மையான கொம்பையும் உடைய தலைமை யானையுடன்
அழகிய வரிகள் கொண்ட புலி தாக்கிய போது
வேங்கை மரத்தின் அழகிய கிளை என்று எண்ணி ஆற்றல் வாய்ந்த புலியைச் சூழ்ந்துகொண்டும்
நெற்றியில் புள்ளிகள் பொறித்த யானையின் புள்ளிபுள்ளியான முகத்தைச் சேர்ந்தும்,
வலி மிகும் சினத்தால் வாளை உருவிக்கொண்டு நின்ற மன்னர்களைச்
சமாதானம் செய்யும் வழியை நாடி அவர்களை நண்பர்களாக்க முயல்பவர்கள் போல மாறி மாறித் திரியும்,
சுனை மீது விழுகின்ற அருவியை உடைய, அழகிய மலையைச் சேர்ந்த நல்ல நாட்டினனே!

மறு

மறு – 1. (வி) 1. வேண்டாம்/இல்லை என்று கூறு, refuse, deny
2. இல்லாமல் போ, cease to exist
– 2. (பெ) 1. குற்றம், fault, blemish
2. மச்சம், mole
3. களங்கம், கறை, blot, stain
– 3. (பெ.அ) மீண்டும், மறுபடியும், further, once more
1.1
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – நற் 110/1-8
தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை,
விரிந்து ஒளிவிடும் பொன்னால் ஆன பாத்திரத்தில் இட்டு அதனை ஒரு கையில் ஏந்திக்கொண்டு
அடித்தால் சுருண்டுகொள்ளும் மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை,
‘குடி’ என்று உயர்த்திப்பிடிக்க, அதினின்றும் தப்பிப்பிழைக்க, தெளிவான தன்மையுள்ள
முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்கத் தத்தித்தத்தி ஓடி,
மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்
ஓடித் தளர்ந்து தம் முயற்சியைக் கைவிட, பந்தல்கால்களுக்கிடையே ஓடி
செவிலியரின் கெஞ்சலுக்கு வேண்டாம் என்று மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே – புறம் 180/1,2
நாள்தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வமும் உடையானல்லன்
இரந்தோர்க்கு இல்லை எனச் சொல்லி மறுக்கும் புன்மையுமுடையன் அல்லன்
1.2
கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் – நற் 203/4-6
சங்கினை நீட்டிவைத்தது போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது,
ஓங்கி வீசும் அலைகள் மோதுவதால் சிலிர்த்து வாய்திறக்கத் தாது உதிர்ந்து
சிறிதளவு மக்கள் உள்ள கடற்கரை ஊரின் தெருவில் எழும் புலவுநாற்றத்தைப் போக்கும்

தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து – பதி 13/17
சாணப்பூச்சு இல்லாமற்போன, ஆரவாரம் அழிந்துபோன ஊர்ப்பொதுவிடங்கள்,
2.1
மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
குற்றமற்ற கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கொழுநன்
2.2
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை – பெரும் 29,30
பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருமகளாகிய மறுவை அணிந்த
கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய்
2.3
நித்தில மதாணி அ தகு மதி மறு
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/30,31
நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று
சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;

ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறு தலைய நெய்த்தோர் வாய
வல்லிய பெரும் தலை குருளை – நற் 2/3-5
வழியே செல்லும் மக்களின் தலையைத் தாக்கியதால்
சிவந்து கறையேறிய தலையையும், குருதியொழுகும் வாயையும் உடைய
வலிமையுடைய பெரிய தலையினைக் கொண்ட புலிக்குட்டிகள்
3.
மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2
மீண்டும் சாகுபடிக்காக உழுத ஈரமான வரப்புள்ள பாத்திகளில்

மறுகால்

மறுகால் – (பெ) இரண்டாம் முறை சாகுபடி, second crop
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால்
கொழும் கொடி அவரை பூக்கும் – குறு 82/4,5
பெரும் தினைப்புனத்தையுடைய குறவனின் சிறுதினையை அறுத்த மறுகாலில்
கொழுத்த கொடியுள்ள அவரை பூத்து நிற்கும்

மறுகு

மறுகு – 1. (வி) 1. அலைந்துதிரி, wander, roam about
2. கோது, தேய்த்துவிடு, preen, stoke, rub on
3. உள்ளம் வேறுபடு, dissent
4. எடுத்துச்செல், கொண்டுபோ, carry
5. தேய்த்துக் கூழாக்கு, grind to paste
6. கூடிக்குலாவு, துள்ளித்திரி, உகளு, jump with joy
7. வருந்து, grieve, be distressed
8. துளும்பு, ததும்பு, brim over
9. முறுகு, become hardened
10. சுழலு, whilrl
– 2. (பெ) தெரு, சாலை, street, road
1.1
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 95-98
கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து),
மழை (பெய்து)தன்னிடத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தின அகன்ற பாறையில் குவித்து,
1.2
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி
புன் புறா உயவும் வெம் துகள் இயவின் – நற் 66/1-5
மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,
தனித்திருந்த நீண்ட கிளையில் ஏறி, தன் பெடையை நினைத்து, தன்
புள்ளிகள் விளங்கும் பிடரிமயிர் மணங்கமழத் தேய்த்துவிடும்
புல்லிய புறா வருந்தும் வெம்மையான புழுதியையுடைய காட்டுவழியில்
1.3
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி
ஒல்லாது உடன்று எமர் செய்தார் – கலி 105/53-55
நறிய நெற்றியையுடையவளே! என்ன ஆயிற்று இப்போது? நாம் நம் கூந்தலை அவிழ்த்து ஆற்றிவிட,
அது முல்லைமணம் கமழக் கண்டதற்கு, உள்ளம் வேறுபட்டு,
பொறுக்காமல் சண்டைபோட்டு என் சுற்றத்தார் கொண்டாரே,
1.4
சிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த – அகம் 377/2,3
சிறிய புல்லரிசியை ஒழுங்குபட எடுத்துச்சென்று
சிறிய பலவாய எறும்புகள் கொண்டுவந்து தம் வளையில் தொகுத்துவைத்த

தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்
தீம் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும் – பொரு 214-217
தேனாகிய நெய்யோடு, கிழங்கை(யும்) விற்றவர்கள்
மீனின் நெய்யோடு நறவையும் மாறாகக் கொண்டுபோகவும்,
இனிய கரும்போடு அவலைக் கூறுபடுத்தி விற்றோர்,
மானின் தசையோடு கள்ளையும் மாறாகக் கொண்டுபோகவும்,
1.5
நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக – மது 553
கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க
1.6
ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/1,2
இடிகள் மாறுபட்டு முழங்க, எருதுகள் அவற்றுக்கு எதிர்முழக்கமிட,
காதலையுடைய பெண்மான் தன் குட்டியோடு கூடிக்குலாவ

பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276
பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்
மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே கூடிக்குலாவுவனவாய் துள்ள
1.7
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை – அகம் 300/1-4
நாள் காலையில் வலையினால் மீன்களை முகந்துகொண்ட மீன் பிடித்தலில் வல்ல பரதவர்கள்
நுண்ணிய மணலிடத்தே புலரும்படி பெய்வாராய்
பறியால் கொண்ட மிக்க மீனினையுடையவர் வருந்தும்படி சொரிந்த
மீன்களைத் தின்னும் பறவைகளையுடைய சோலையையுடைய அழகிய பெரிய கடல் துறையில்

தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள்
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த – அகம் 29/1-3
தொடங்கிய வினையைக் கைவிடாத – தளர்ச்சியற்ற – வலிமையான முயற்சியை உடைய –
(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்து
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,
1.8
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 45
மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,
1.9
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெம் வெம் கலுழி தவ்வென குடிக்கிய
யாங்கு வல்லுநள்-கொல் தானே – குறு 356/1-5
நிழல் அடங்கி அற்றுப்போன நீர் அற்ற கடக்கமுடியாத பாலைவெளியில்
காலில் கழல் அணிந்த தலைவன் காத்துவர, விரைந்து சென்று
நீர் அற்றுப்போன சுனையின் பக்கத்தில் முறுகிப்போய்ச் சூடான
மிகுந்த வெப்பமுடைய கலங்கிய நீரைத் தவ்வென்று குடிப்பதற்கு
எவ்வாறு முடியும் அவளால்?
1.10
அவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமன் தகுதியும் அதுவே – புறம் 238/18,19
துன்பமாகிய மறுசுழியின்கண் சுழலுவதைக்காட்டிலும்
இறந்துபடுதலே நன்று, நமக்குத் தக்க செய்கையும் அதுவே
2.
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின் – பெரும் 322,323
மாடங்கள் உயர்ந்து நின்ற மணல் மிக்க சாலைகளையும்,
பரதவர் மிக்கு வாழ்கின்ற பலவாய் வேறுபட்ட தெருக்களையும்,

கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி – நற் 311/6
கொழுத்த மீனைச் சுடுகின்ற புகை தெருவெங்கும் பரக்க

மறுக்கம்

மறுக்கம் – (பெ) மயக்கம், bewilderment, dismay
மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52
உயிர்களின் மயக்கம் தரும் துன்பத்தைக் களைவோன்,

மறுக்குந்து

மறுக்குந்து – (வி.மு) மயங்கச்செய்யும், would make one perplexed
மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனை மறுக்குந்து – புறம் 343/1,2
மீன்களை விற்று விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவைகளால்
வீடும் உயர்ந்த தோணிகளும் பிரித்தறியாதவாறு காண்பார் மயங்கச்செய்யும்

மறுதரல்

மறுதரல் – (பெ) 1. மீண்டு வருதல், returning
2. மறுத்தல், denying
1.
சென்ற தேஎத்து செய்வினை முற்றி
மறுதரல் உள்ளத்தர் எனினும் – அகம் 333/20,21
தாம் சென்றுள்ள நாட்டில் தாம் செய்யும் தொழிலை முடித்துக்கொண்டு
மீண்டு வரும் எண்ணமுடையவராயினும்
2.
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி – நற் 32/3-7
அழகிய மலைக்கு உரியவனான தலைவன் நம்மை விரும்பி எப்போதும்
வருந்தினான் என்ற ஒரு வாய்ச்சொல்லை உணரமாட்டாய்;
நீயாகவே நேரில் கண்டும், உன்னைச் சேர்ந்தவரோடு கலந்துகொண்டும்
அறியவேண்டியவற்றை அறிந்து அளவளாவ வேண்டும்; அவனது நிலையை மறுப்பதற்கு
அரியது ஆகும், வாழ்க தோழியே!

மறுத்தரல்

மறுத்தரல் – (பெ) திருப்பித்தருதல், returning, giving back
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம்
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த_கால்
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/12-15
அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலம், அந்த நலம்
பசலை நோயால் பாழடிக்கப்பட்டு அதன் பண்டைய இயல்பு அழிந்தபோது –
பொய்யற்ற கேள்வியறிவால் உயர்ந்த சான்றோரைச் சார்ந்து நீ பெறப்பொகும்
மாசற்ற நோன்புநெறிகளால் திருப்பித்தர முடியுமா?

மறுத்தரவு

மறுத்தரவு – (பெ) திரும்பி வருதல், மீளுதல், coming back, retreading
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/33-35
இப்போது, ஏடி! நான் தீது இலேன் என்று தெளிவாக எடுத்துரைக்கவும், கைமீறிப்போய்,
சிறிதளவும் என்னிடம் கொண்ட கோபத்திலிருந்து மீளுதல் இல்லை என்றால்
சிறப்புடைய எம் தந்தையின் பெயர்கொண்டவனை நான் எடுத்துச் செல்கிறேன்,

மறுப்படு

மறுப்படு – (வி) 1. சிதைவுறு, be injured, spoiled
2. களங்கமடை, get stained
1.
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா_கால்
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்_வழி
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/12-15
சுழலுகின்ற மைதீட்டிய கண்களையுடைய பரத்தையரின் அழகிய மாலைகளைத் துவளச் செய்த உன்
மலர்ந்த மார்பில் பூசிய கலைந்துபோன சந்தனம் வந்து சொல்லாதபோது;
எப்படிப்பட்ட தவறுகளை நீ செய்தாலும் அதைப் பற்றிப் பேசமாட்டாதார் இல்லாதபோது
காலுக்கு முன்னால் பணிந்து எம் சினத்தைத் தீர்ப்பதற்கு வருவாய் –
2.
பரதவர்
எறி உளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட – அகம் 210/1-3
பரதவரால்
எறியப்பட்ட உளி தாக்கிய களிப்புப் பொருந்திய பெரிய மீன்
தன் புண்ணிலிருந்து ஒழுகிய உதிரத்தால் புலால் நாறும் கடல் நீர் களங்கமடைய

மறுமை

மறுமை – (பெ) 1. மறு பிறவி, next birth
2. மறு உலகம், சுவர்க்கம், the next world, heaven
1.
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/3,4
இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்
2.
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/1,2
இவ்வுலகத்தே புகழொடும் விளக்கமுற்று
மேல் உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர்

மறுமொழி

மறுமொழி – (பெ) மறுசொல், பதில், reply, answer
ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் – நற் 106/3-6
அங்குமிங்கும் அலைந்துதிரியும் புள்ளிகளைக் கொண்ட நண்டுகள் ஓடுவனவற்றைப் பிடிக்க மாட்டாது
சோர்வுற்று அதன் மீது விருப்பம் நீங்கிய குற்றமற்ற சிறுமகளுக்காக
வருத்தமுற்றவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற
அதற்கு மறுசொல் சொல்வதற்கும் முடியாதவளாய்

மறுவரல்

மறுவரல் – (வி) 1. மனம் கலங்கு(தல்), be distressed
2. சுழலு, சுற்றிச்சுற்றி வா, whirl, run around
1.
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில் – அகம் 22/2-4
திரண்ட நீர் உள்ள அருவிகளை உடைய காடுகள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த தலைவனின்
மணங் கமழும் அகன்ற மார்பைத் தழுவியதால் ஏற்பட்ட துன்பத்தை,
இன்னது என்று அறியாமல் (தாய்) மனக்கலக்கம் அடைந்த போழ்து,

காலை எழுந்து கடும் தேர் பண்ணி
வால் இழை மகளிர் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என
மறுவரும் சிறுவன் தாயே – குறு 45/1-4
காலையில் எழுந்து, வலிமையான தனது தேரைப்பூட்டி
ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த மகளிரைத் தழுவுவதற்குச் சென்ற
வளமிக்க ஊரனாகிய தலைவன் ஒப்பனையுடன் நன்கு விளங்கினான் என்று
மனம் கலங்குகின்றாள் சிறுவனின் தாய்!
2.
முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி
முன்_நாள் இனியது ஆகி – குறு 394/1-4
முழந்தாளையுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று
கள் மிகுதியாக உள்ள பாக்கத்தில் உள்ள குறத்தி ஈன்ற
குட்டையான கைகளையுடைய புதல்வரோடு சுற்றிச்சுற்றி ஓடி,
முற்காலத்தில் இனியதாக இருந்து

மறுவித்தம்

மறுவித்தம் – (பெ) மறுதாயம், casting a ‘one’ again in dice
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால்
மறுவித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள்
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள்
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – கலி 136/13-16
நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
பிரிந்து போவேன் என்று அறிவித்து நீ பிரியக் கருதிய உன் பொருட்டாய்
பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ

மறை

மறை – 1. (வி) 1. பார்வையிலிருந்து நீங்கு, become invisible, vanish, disappear
2. பார்வையிலிருந்து நீக்கு, make invisible, hide
3. மூடு, cover
4. ஒளித்துவை, hide
5. காப்பாற்று, save, protect
6. தடு, block
– 2. (பெ) 1. வேதம், scripture
2. இரகசியம், secret
3. மறைவிடம், மறைத்துக்கொள்ளும் இடம், place of concealment, place which one conceals
4. மறைவிடம், மறைந்து/ஒளிந்து கொள்ளும் இடம், place where one conceals
5. மறைத்தற்குரிய உறுப்புகள், parts of the body for concealment
6. மச்சம், mole
7. மறைத்தல், concealing
8. களவு வாழ்க்கை, pre marital secret love career
9. வஞ்சனை, ஏமாற்று, fraud, deceit
1.1
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு
மணி நிற மால் வரை மறைதொறும் இவள்
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/3-5
பொன்னிற மிக்க புதிய மலர்கள் பரவிக்கிடக்கும் அவருடைய நாட்டின்
நீலமணி போன்ற நிறமுள்ள பெரிய மலை, மாலையில் மறையும்போதெல்லாம் இவளின்
சிறப்பித்துச் சொல்லக்கூடிய மலரைப் போன்ற நீண்ட கண்களில் நிரம்பின கண்ணீர்.
1.2
சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/6-8
மலைச் சாரலில்
அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
அசைகின்ற மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும்
1.3
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் – சிறு 59,60
தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மூடுகின்ற
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர்
1.4
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என் ஐ வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவி
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/3-9
மருந்தினை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவனைப் போல
என் தந்தை வாழ்க பல்லாண்டு! புகழ்ச்சிமிக்க
மலையைப் பொருந்திய நாட்டவனுக்கும் நமக்கும் இடையே சிறிதளவு
பிரிவு உள்ளதை அறிந்திருப்பவர் போல,
காதலன் நீங்கியவழித் தானும் நீங்காமல், அவன் வந்தால் தன் எல்லைக்குள் நின்று
தோளில் உண்டாகும் மெலிவு பிறர்க்குத் தோன்றாமல் ஒளிக்கும் உதவியையுடைய
கழன்று போகாத பொன்னாலான வளையல்களை என் கைகளில் செறித்தார்
1.5
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே – புறம் 311/4-7
பலரது குறைகளைத் தீர்த்துதவிய மாலையை அணிந்த இத் தலைவனுக்கு
போர்க்களத்தில் ஒருவரும் இல்லையோ,
சிறப்புடைய கண்கள் சினத்தால் சிவந்து புகையெழ நோக்கி, தன் ஒரு
கேடகத்தைக் கொண்டு காப்பாற்றும் வலிமையுடையவன்
1.6
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே – புறம் 290/7,8
மழை பெய்யுமிடத்து இடைநின்று நம்மை அதனின்றும் காக்கும் பனையோலை போல
தான் இடைநின்று தடுத்திடுவான், பெருமானே, பகைவர் நின்னைக்குறித்து எறிய வரும் வேலை
2.1
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 203-206
கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,
அரிய வேதத்தை ஓதும் நாவினையுடைய அந்தணர்க்கோ,
கடவுள் – பெருமையுடைய (மேரு)மலை வாழும் – (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற
மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணு
2.2
யானே ஈண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97
நான் இவ்விடத்தில் இருக்கின்றேன்; என் பெண்மை நலமோ
பொறுக்கமுடியாத காதல் நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது;
தலைவன் தனது ஊரில் இருக்கின்றான்;
இரகசியமான எங்கள் நட்போ பலரும் தூற்றும் பழிச்சொல்லாகி தெருவிற்கிடக்கிறது
2.3
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து – கலி 52/1
தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து
2.4
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை – புறம் 196/12
கல்லால்செதுக்கப்பட்டது போன்ற எனது வறுமைமிக்க, காற்றுக்கு மறைவிடமான எனது வீடு
2.5
ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே —
————————- —————————
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/25-29
விரைவாக
நாணியவளாய் இறைஞ்சினாள்,
—————— —————————–
பெரிய பலவான கூந்தலின் இருளினால் மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து.
2.6
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றும் அவன் – கலி 103/38,39
மச்சத்தையுடைய காளையின் மேலேயிருந்து ஆட்டம்காண்பித்துக்கொண்டு, நீர்த்துறையில் தோணியில்
செல்பவன் போலத் தோன்றுகின்றான்;
2.7
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே – புறம் 60/11,12
வெயிலை மறைத்தற்கு எடுத்த அச்சம் பொருந்திய தலைமையையுடைய
தாமம் பொருந்திய வெண்கொற்றக்குடையை ஒக்கும் எனக் கருதி
2.8
மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்
சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 143/14-16
களவு வாழ்க்கையால் என்னுடைய
மென்மையான தோள்களை மெலிவித்தவனை விரும்பி, அவனிடம்
சென்று எனக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது என் நெஞ்சு;
2.9
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் – கலி 143/10-12
வஞ்சனையாக யாழ்வாசித்து, அந்த யாழிசையைக் கேட்டு மயங்கிநின்ற அசுணமாவை, இரக்கமில்லாமல்,
வஞ்சனையால் அதனைக் கொல்லும்படியாக, அதன் அருமையான உயிர் போகும்படி
பறையால் மிகுந்த ஒலியை எழுப்பியது போன்று, ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான்

மறைகம்

மறைகம் – (வி.மு) மறைந்துகொள்வோம், let us hide
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/4-7
உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு
வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன்!
நம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின்
கரிய அடிப்பகுதியில் மறைந்துகொள்வோம் வா!

மறைகு

மறைகு – (வி.மு) மறைந்துகொள்வேன், (I) hide myself
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/12,13
(நான்) வெல்லிய நெடிய மணற் கரையில்மறைந்துகொள்ளுவேனோ
தோழியே, நீ கூறுவாயாக.

மற்று

மற்று – 1. (இ.சொ) 1. பிரிநிலை இடைச்சொல், disjunctive
2. வினைமாற்று, disjunctive
3. பிறிதுப்பொருள் குறிப்பு, A term meaning other, another
4. அசைநிலை, an expletive
2. (வி.அ) பின்னர், afterwards
1.1
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ
கருவி வானம் கடற்கோல் மறப்பவும் – பொரு 233-236
பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினாலே
கஞ்சங்குல்லை தீயவும், மரங்களினுடைய கொம்புகளை நெருப்புத் தின்னவும்
அருவி பாய்தலைப் பெரிய மலைகள் தவிர்ப்பவும், இவை ஒழிந்த
அந்தத் தொகுதியையுடைய முகில்கடலிடத்தே நீர் முகத்தலை மறந்தொழியவும்
1.2
தேம்படு சாரல் சிறுதினை பெரும் குரல்
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/2-4
தேன் பொருந்திய மலைச் சாரலிடத்தேயுள்ள புனத்தின்கண் விளைந்து நிற்கும் சிறுதினையின் பெரிய கதிர்களை
சிவந்த வாயும், பசிய நிறமுமுடைய கிளிகள் கவர்ந்துகொண்டு செல்ல, நீ
எங்கே சென்றிருந்தாய் அவ்விடத்தினின்றும் நீங்கி என்று சொல்லியழைத்து
1.3
நின்று
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/6-8
நின்று
மலை சூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது
உண்மையோ, இல்லையோ, வேறு யாதோ என
1.4
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/1-5
ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
எப்படிச் சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!
2
செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி – பொரு 89,90
மகிழ்ச்சியுடனே யான் நின்ற அந்தப் பொழுதிலே, பின்னர் அம் மன்னனுடைய
செல்வம் விளங்குகின்ற அரண்மனையின் அகத்தே ஒரு பக்கத்தே கிடந்து

மற்றும்

மற்றும் – (வி.அ) மீண்டும், again
மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/11
மீண்டும் (பிறிதொரு காலத்தினும்) கூடும், நீ மனையின்கண் வந்து துயிலுகின்ற துயில்

மற்றை

மற்றை – (பெ.அ) மற்ற, பிற, ஏனைய, other
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 651-653
தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
மற்ற யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி,

மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/8,9
நீலமணி போன்ற பீலியைக் கட்டிய நூலில், ஏனைய
அழகிய பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி,

மலக்கு

மலக்கு – (பெ) கலக்கம், மயக்கம், குழப்பம், bewilderment, confusion
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்கு_உறுமே – குறு 194
(இந்த நெஞ்சின் நிலையை)என்னவென்று சொல்வது தோழி? மின்னல்வர
முகில்கள் எழுந்து ஒலிக்கும், அதுமட்டுமோ? அதற்கு எதிராக
காட்டு மயில்கள் விரைவாக ஏக்கத்துடன் கூவும்
ஒன்றற்கொன்று தொடர்பிலாது கலந்த இந்த இரண்டு ஒலிகளாலும் என்
பேதை நெஞ்சம் பெரிய அளவில் கலக்கமடையும்.

மலங்கு

மலங்கு – (பெ) விலாங்கு மீன், true eel
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளை பரூஉ கண் துணியல் – புறம் 61/3,4
விலாங்கு மீன் பிறழ்கின்ற செய்யின்கண்ணே கட்டிகளை உடைக்கும் கருவி வெட்டிப்போட்ட
பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை

மலர்

மலர் – 1. (வி) 1. பூவின் மொட்டு விரி, open, as a flower; to bloom
2. விரிந்து அகலு, be wide open
3. தோன்று, appear
4. வாய்ப்புறம் மேலாக நிமிரச்செய், turn the face or mouth upward, as of a pot
– 2. (பெ) 1. பூ, full blown flower
2. அகற்சி, breadth
1.1
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,
1.2
மலர திறந்த வாயில் பலர் உண – குறி 203
அகலத் திறந்துகிடக்கின்ற வாயிலில் (வந்து)பலரும் உண்ணும்படி,

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 231-234
முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்’ என்றும்,
‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும்,
‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்’ எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்,
1.3
மா கண் மலர்ந்த முலையள் தன்னையும் – புறம் 352/14
கரிய கண் தோன்றிய முலையையுடையளாயினாள் தமையனும்
1.4
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/4,5
சோறு சமைத்தற்கண் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய மட்பானையை நிமிர்த்துச் சமைக்கச்செய்யும்
பரவுக்கடனை அறிந்தாளும் செல்வர் பிற நாட்டிலும் இல்லாராதலால்
2.1
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,
2.2
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் – பெரும் 410,411
அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரங்களினுள்ளும், பலரும் தொழும்படி,
விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய காஞ்சிநகர்

மலர்பு

மலர்பு – (பெ) விரிதல், wide open as the palms
இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/11,12
வேண்டிக் கைநீட்டுவோருக்காகக் கவிகிறதேயன்றி, பிறரிடம் வேண்டி
உன் கைகள் விரிந்திருப்பதை அறியமாட்டா என்பதைக் கேள்விட்டிருக்கிறோம்;

மலர்ப்பு

மலர்ப்பு – (பெ) வெளிக்காட்டுதல், exposing
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – பதி 63/4,5
வளைந்த வானவில்லோடு போட்டிபோடும் பூமாலையின் மணம் கமழ்கின்ற உன் மார்பானது
மகளிரைத் தவிர வேறு யாருக்கும் திறந்து காட்டுவதனை அறியாது;

மலர்ப்போர்

மலர்ப்போர் – (பெ) நிமிர்த்துவோர், one who turns the face or mouth upward, as of a pot
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார் என வினவலின் – புறம் 179/1-3
உலகத்தின் மேல் வண்மையுள்ளோர் இறந்தாராக
பிறர்பால் ஏலாது கவிழ்ந்த என் இரத்தலையுடைய மண்டையை
நிமிர்த்தி வாய்திறக்க வைப்போர் யார் என்று கேட்டலின்

மலி

மலி – 1. வி) 1. மிகுந்திரு, அதிக அளவில் காணப்படு, be plentiful, abound
2. நிறைந்திரு, be full
3. பெருக்கமடை, swell
– 2. (பெ) மிகுதி, plenty
1.1.
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71
மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில்
1.2.
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர – பதி 31/10
நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;
1.3
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் – அகம் 262/12,13
அன்னி மிஞிலி என்பாளைப் போல உடல் பூரிக்கப்பெற்று
அமையாத மகிழ்ச்சி உடையேம் ஆயினம்
2.
வீயா யாணர் நின்_வயினானே
தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/1,2
குன்றாத புதுச்செல்வங்கள் வந்தடையும் உன்னிடத்தில்
குறைபடாததாகும், மிகுதியாகப் பெற்ற வலிமை;

மலிதரு(தல்)

மலிதரு(தல்) – (வி) நிறைவாக இரு(த்தல்), be full, plenty
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன்
மலை புரை நெடு நகர் கூடல் ஆடிய
மலிதரு கம்பலை போல – அகம் 296/11-13
கடிய பெரிய யானையினையும் நெடிய தேரினையும் உடைய பாண்டியன் நெடுஞ்செழியன்
மலையைஒத்த நீண்ட கோயிலையுடைய மதுரைக்கண் வெற்றிக்களிப்பால் ஆடும்போது
நிறைவாக எழுந்த ஆரவாரம் போல

பூத்த புகையும் அவியும் புலராமை
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/53-55
பொலிவுற்ற அகிற்புகையும், பலியுணவும், குறையாமலிருக்கும்பொருட்டு
மறவாதிருக்கட்டும் வானம், மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம்
வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு.

மலிர்

மலிர் – (வி) 1. வழிந்தோடும்படி நிரம்பு, பெருக்கெடு, flood
2. நீர் முதலியன ஒழுகு, கசி, flow, leak, drop
3. பயின்று வா, come frequently
1.
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை – அகம் 37/7-9
காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து,
புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,

நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை – குறு 99/4
உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொள்ளப் பெருக்கெடுத்த வெள்ளம்
2.
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு – குறு 351/2-4
வளையில் வாழும் நண்டு தன் கூர்மையான நகத்தால் கீறிய
ஈரமான மணலையுடைய நீரொழுகும் வழி சிதைந்துபோகும்படி, இழும் என்று
இடியோசை போன்ற முழக்கத்தையுடைய அலைகள் உடைக்கும் கடல்துறைத் தலைவனுக்கு

வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும்
அனற்றினை – பரி 6/82-84
வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும்,
மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல, இங்கு வந்த பின்னும்
அவரை வெம்மையுறச் செய்தாய்!
3.
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/53,54
பெரிதும் வருந்தாதே! மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம்
பழங்களிலும், மலர்களிலும், பயின்றுவந்த காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது,

மலிவனம்

மலிவனம் – (த.ப.வி.மு) மிக்க அவா கொண்டிருந்தோம், we were filled with great desire
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 95-97
கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து

மலிவு

மலிவு – (பெ) உவகை, உற்சாகம், happiness, cheerfulness
மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் – பரி 19/88
மகிழ்வுடைய நெஞ்சத்தால் அன்பர்கள் வந்து செய்கின்ற பூசையில்,

மலை

மலை – 1. (வி) 1. சூடு, அணி, wear, put on
2. மாறுபடு, முரண்படு, be in conflict with, be in dispute with
3. போரிடு, சண்டையிடு, fight, war
4. மாறுபடு, be opposed, unfriendly
5. எதிர்கொள், encounter
6. மேற்கொள், undertake, take upon oneself
7. தலையில் தூக்கிவை, (போற்று), raise one to head – idiom – praise, fete
– 2. (பெ) பர்வதம், mountain, hill
1.1
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 305,306
முதல்நாளில்(=முதன்முதலில்) பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச்
சூடுவதற்குப் (பெண்கள்)போடும் (தீங்கற்ற)மகிழ்ச்சி ஆரவாரமும்;
1.2
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14
இந்திர வில் போலும் மாலையையுடைய மார்போடும் மாறுபடுவோர் உளர் எனின்
1.3
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ – புறம் 197/3,4
கடலைக் கண்டாற்போலும் ஒள்ளிய படைக்கலத்தையுடைய சேனையுடனே
மலையோடு மாறுபட்டுப் பொரும் களிற்றினையுடையர் எனவும்
1.4
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/3,4
எதிர்த்துப் போரிட்ட பகைவரின் வீரம் அழியும்படி வென்ற,
காஞ்சித்திணைக்கு அமைந்த வீரர்களுக்குத் தலைவனே!
1.5
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப – புறம் 10/9,10
பெண்களை எதிர்கொள்ளுதல் அன்றி, பகைவரை
எதிர்கொள்ளல் என்பது இல்லாமல் போன இந்திர வில் போலும் மாலையையுடைய மார்பினனே
1.6
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை
புலி பல் தாலி புதல்வன் புல்லி
அன்னா என்னும் அன்னையும் அன்னோ
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161
பொழுதோ இருண்டுவிட்டது; மழையும் ஓயாமல்
பேய்களும் கண்களை மூடிக்கொள்ள ஓங்கியடிக்கின்றது. அதற்குமேலும்
புலிப்பல் தாலியுடைய மகனைத் தழுவிக்கொண்டு
‘அடி பெண்ணே’ என்று கூப்பிடுகிறாள் அன்னையும்;
அவன் எதனைச் செய்ய மேற்கொண்டானோ? தனது மலையின்
சந்தனம் மணக்கும் மார்பினன்
மழையில் நனைந்துநிற்கும் யானையைப் போல வந்து நின்றுகொண்டிருந்தான்

அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/5,6
நல்லன அல்லாதவற்றை மேற்கொண்டு அற நெறிகளை நிலைநிறுத்தாத
ஆற்றல் குறைந்த மன்னனின் அரசாட்சியைப் போல மயக்கும் இருள் கவிய,
1.7
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/1,2
பொன் வளம் மிக்க மேற்கு மலையில் ஞாயிறு மறைய, அதற்காக வருந்திய உலகை நோக்கி,
தன்னைத் தலையில் தூக்கிவைத்து உலகம் கொண்டாடும்படியாக, அதற்கேற்ற தகுதியையுடைய திங்கள் எழ
2.
மணி மலை பணை தோள் மா நில_மடந்தை – சிறு 1
மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்

மலைப்பு

மலைப்பு – (பெ) போரிடல், warring
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் – அகம் 140/10
மதர்த்த கயல் இரண்டு எதிர்த்துப் பொருவது போன்ற அவள் கண்கள்

மலைமகள்

மலைமகள் – (பெ) மலையரசனின் மகளான உமை, uma, the daughter of the king of hills
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257
மலைமகளின் மகனே, பகைவருக்குக் கூற்றுவனே,

மலையன்

மலையன் – (பெ) மலையமான் திருமுடிக் காரி, a chieftain during sangam period, a great philanthropist
மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும்.
அதில் மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன்.
இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
இவர்கள் திருக்கோயிலூர் என்று இப்போது அழைக்கப்படும் திருக்கோவலூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக்
கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். மலையமான் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

தொலையா நல் இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/3,4
கெடாத நல்ல புகழ் விளங்கும் மலையன்
மது நுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர்

மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7,8
மாரி போலும் வண்மையையும், மிக்க போரினையுடைய மலையனும்

மலைவு

மலைவு – (பெ) தடை, இடையூறு, obstruction, hindrance, hurdle
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/5-7
பெரிய கடல் அலையைப் போன்று முழங்கி, வலப்பக்கமாய் எழுந்து,
கொலைசெய்யும் புலி திரியும் சோலை
எத்தனை என்று எண்ணுவேன், தலைவியை முயங்குவதற்கு இடையிலே உள்ள அந்தத் தடைகள்-

மல்

மல் – (பெ) 1. வளம், Fertility, richness;
2. மற்போர், wrestling
1.
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/4
வளப்பம் கொண்டது இந்த மலைகள் பொருந்திய மலைத்தொடர் என்று
2.
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72
அவனது மற்போருக்கு இயைந்த மார்பில் பட்ட புண்ணுக்காக அச்சமுற்று, துயரங்கொண்டு

மல்கு

மல்கு – (வி) 1. மிகு, அதிகமாகு, increase, abound
2. நிறை, ததும்பு, be filled up, well up
1.
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி
துணை சுறா வழங்கலும் வழங்கும் – நற் 67/6,7
திரண்ட தண்டினையுடைய கரிய மலர்கள் மறைந்துபோகும்படி நீர் பெருகும் கழிகளில்
துணையோடு சுறாமீன்கள் நீந்தவும் செய்யும்
2.
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1
நீர் ததும்பும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலைநிலத்தின் தொடக்கத்தில்

மல்லன்

மல்லன் – (பெ) மற்போர் வீரன், werstler
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/2
வலியையுடைய மல்லனது மிக்க வலியைக் கெடுத்து

மல்லர்

மல்லர் – (பெ) மற்போர் வீரர், wrestler
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1
மற்போர் வீரர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய
திருமால்

மல்லல்

மல்லல் – (பெ) 1. வளப்பம், செல்வம், wealth, fertility, richness
2. மிகுதி, பெருக்கம், abundance, fullness
3. வலிமை, power, strength
1.
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29
மாடங்கள் உயர்ந்துநிற்கும் வளப்பமுள்ள பழைய ஊரில்,
2.
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல்
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/43,44
மிக்க வெள்ளத்தையுடைய வையையே! உன் பெரிய மலையை விட்டு நிலையாகத் தங்கியிருக்கும்
இல்லமாகிய கடலுக்கு நீ தனியே சென்றடைவது சிறப்பானதன்று
3.
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை
கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/10-15
வடித்தல் செய்த அம்பினையுயைய ஏவலராய மறவர்
வழிப்போகும் ஆட்களைக் கொன்று அவர்களை இட்டு மூடிய கண்டார்க்கு அச்சம் வரும் கற்குவியல்களில்
கூரிய அலகினைக் கொண்ட சிவந்த வாயினையுடைய ஆண் பருந்துகள்
இறந்துபட்ட பிணங்களின்பசிய தலையினைத் தோண்டுவனவாகிக் கூடி
வலிய நெருங்கிய விரலால் தோண்டி கண்மணியைப் பெயர்த்துக்கொண்டு
வலிய வாயினையுடைய தம் பேடைக்குச் சொரியும் அவ்விடத்தே

மல்லிகா

மல்லிகா – (பெ) மல்லிகை, jasmine
கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை
நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலை வளாய் – பரி 11/103-105
குளிரிப்பூவால் தலைமாலை தொடுக்கும் ஒருத்தியை
அவ்வாறு தொடுப்பதை நிறுத்துக என்பாள் போல் நெய்தல் மலரைத் தொடுத்தாள்
மல்லிகை மாலையில் இடையிடையே கலந்து;

மல்லிகை

மல்லிகை – (பெ) பூங்கொடி வகை, Himalayan heart-leaved smooth jasmine, m.cl., Jasminum anestomosans;
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/77

மள்ளன்

மள்ளன் – (பெ) பார்க்க: மள்ளர் – 1, 2
1.
யார்கொல் அளியர் தாமே யார் நார்
செறிய தொடுத்த கண்ணி
கவி கை மள்ளன் கைப்பட்டோரே – புறம் 81/3-5
இரங்கத்தக்கவர் தாம் யார்கொல், நாரால்
பயிலத் தொடுக்கப்பட்ட ஆத்திக்கண்ணியையும்
இடக் கவிந்த கையினையுமுடைய வீரனது கையின்கண் பட்டோர்
2
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடும் கால் மராஅத்து குறும் சினை பற்றி
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே – ஐங் 383/1-4
தேனை உண்ணும் சுரும்பினங்கள் ஒலிக்கும் நாள் காலையில் பாலைவழியில் செறிவான
நெடிய அடிப்பகுதியைக் கொண்ட குட்டையான கிளையைப் பிடித்து
வலமாகச் சுழித்துப் பூக்கும் வெண்மையான பூங்கொத்துகளைத் தன் காதலி பறித்துக்கொள்வதற்கு நின்ற
இளைஞனின் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது,

மள்ளர்

மள்ளர் – (பெ) 1. படைவீரர், soldiers
2. திண்ணியர், strong powerful persons
3. குறவர், குறிஞ்சிநில மக்கள், the inhabitants of mountainous tract
1.
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை – புறம் 77/9,10
வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை
மதித்தலும் அவமதித்தலும் இலன்
2.
மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/1-3
உடல் வலிமையுடையவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும்,
மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும்,
எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!
3.
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/1,2
குறவர்களின் கொட்டுமுழக்கத்தைக் கேட்டு மயில்கள் களித்து ஆடுகின்ற
உயர்ந்து நீண்ட குன்றுகளிலெல்லாம் தொங்கும் மேகங்கள் மழைபெய்து

மழ

மழ – (பெ) 1. இளமை, youth
2. குழந்தைப்பருவம், tender age, infancy
1.
குருதி வேட்கை உரு கெழு வய_மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் – நற் 192/1,2
இரத்த வெறிகொண்ட அச்சம் பொருந்திய வலிய புலியானது
வலிமை மிகுந்த ஆற்றலுடைய இளமையான களிற்றினை எதிர்பார்த்திருக்கும்

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் – பரி 11/88,89
மையோலையைக் கையில் பிடித்து சுவடி தூக்கி ஆடும் இளம் சிறுவரின் ஆட்டத்திற்கு மாறாக எழுந்து,
பொய்யாக ஆட்டத்தை ஆடுகின்ற தோழியரைக் கொண்ட அந்தக் கன்னி மகளிர்,

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்_காறும்
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/120,121
கிழவர், கிழவியர் என்று சொல்லப்படாமல், எமது ஏழாம் பருவத்தினை யாம் அடையும்வரைக்கும்
இளமையைத் தந்து யாம் செல்வத்தோடும் சுற்றத்தோடும் நிலைபெறவேண்டும் என்போரும்
2.
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21
பொருந்தாத சொற்களைச் சொல்லிக் குழந்தைப் பருவத்து அறியாமையைக் காட்டுகிறது உன் செயல்

மழபுலம்

மழபுலம் – (பெ) மழவர்கள் நிலம், the land of the mazahavas
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி
Region north of the Cauvery on the western side of Thiruchirapally;
(using https://thanithamizhakarathikalanjiyam.github.io)
மழபுலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12
மழவரது நிலத்தை வணங்கச் செய்த மிக்க வண்மையையுடைய புல்லி என்பானது

மழவர்

மழவர் – (பெ) மழநாட்டைச் சேர்ந்தவர், those belonging to mazha naadu.
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல்
பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர்,
அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும்
கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு.
1.
இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர்.
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/3,4
2.
வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும், வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர்
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் – புறம் 88/3
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9
3.
பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவனான பல்யானைச் செல்கெழு குட்டுவன், மழவர்களைக் காக்கும்
கவசமாக விளங்கினான்.
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24
4.
பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவர்களைக் காக்கும்
கவசமாக விளங்கினான்.
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8
5.
மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள்
மேய்த்து வருவர்
வீளை அம்பின் விழு தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/6,7
6.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய
மழவர்களை விரட்டினான்
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 686,687
7.
பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தன்னைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான்
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவ குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/1-4
8.
சிற்றூரைச் சேர்ந்த ஆயர்கள் கையைத் தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினைக் கவர்ந்து
அதன் இறைச்சியைப் பாலைத்திணை மழவர் உண்டனர். கன்றினையுடைய பசுவினைக் கொன்று உண்டனர்.
கடவுளுக்கும் காணிக்கையாகப் பலியிட்டனர்.
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/1-6
9.
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி, மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன்
ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.
மழபுலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12
10.
இவர்கள், இன்றைய ஜிலேபி போன்ற, இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட
கழலணிந்த காலினையுடையவர்கள்.
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395
11.
பாலைத்திணை மழவர்கள் கொடியவர்கள். அவர்கள் களவினையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர்.
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – அகம் 91/11

மழி

மழி – (வி) முடியை வழி, சிரை, shave
கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய
கழி கல மகடூஉ போல – புறம் 261/17,18
கொய்யப்பட்ட மொட்டையாகிய தலையுடனே கைம்மை நோன்பு மிகக் கலக்கமுற்ற
ஒழிக்கப்பட்ட அணிகலத்தையுடைய அவன் மனைவியை ஒப்ப

மழு

மழு – (பெ) 1. சிறிய கைப்பிடி கொண்ட கோடலி போன்ற ஆயுதம், axe-like weapon
2. போர்க்கோடரி, battle-axe
1.
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170
விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,
2.
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455
மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,

மழுகு

மழுகு – (வி) 1. கூர் மழுங்கு, become blunt
2. ஒளி மங்கு, be dim, obscure
1.
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/3
கூர்மையான நுனியும் மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய
2.
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி – புறம் 376/1,2
விசும்பின்கண்ணதாகிய நீத்தத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றினுடைய
பரிய கதிர் ஒளி குறைந்த செந்நிறங்கொண்டு மேற்றிசையில் வளைந்து தோன்றும் அந்திமாலைப்போதின்

மழுங்கல்

மழுங்கல் – (பெ) மொன்னை, ஒளி குன்றல், bluntness, dullness
உர உரும் உரறும் நீரின் பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் – நற் 238/8,9
வலிய இடி முழங்கும் இயல்பினால், பரந்த
பாம்புகளின் படங்கள் அடங்கிப்போகின்றன, அதற்குமேலும்

மழுங்கு

மழுங்கு – (வி) 1. கத்தி முதலியன கூர்மை கெடு, become blunt as edge or point of a weapon
2. ஒளி குறை, become dim, obscure
3. தேய்வுறு, become worn out
4. அறிவின் கூர்மை, உணர்வாற்றல், உள்ள உறுதிப்பாடு முதலியன குறைவாகு,
lose keenness of intellect or determination
1.
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119
கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
2.
ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து
சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு
குட முதல் குன்றம் சேர – மது 545-547
ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் குன்ற, சினம் குறைந்து,
(மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு,
மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர,
3.
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து – பொரு 117-119
கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
பகலும் இரவும் இறைச்சியைத் தின்று தேய்வுற்று,
மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து,
4.
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/4-6
தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து தோற்றத்தில் தொய்வுபட்டு,
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக,

மழுபு

மழுபு – (பெ) சேறு, mud
மழுபொடு நின்ற மலி புனல் வையை – பரி 24/80
சேற்றோடு கலங்கிய மிக்க வெள்ளத்தையுடைய வையை ஆற்றில்

மழை

மழை – (பெ) 1. கருத்த மேகங்களினின்றும் இறங்கும் நீர், rain
2. நீருண்ட மேகங்கள், clouds charged with rain
3. குளிர்ச்சி, coolness
1.
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து – அகம் 13/13
மிகுந்த மழையைப் பொழிந்த ஞாயிறு கொண்ட அதிகாலைநேரத்தில்
2.
கண மழை பொழிந்த கான் மடி இரவில் – அகம் 392/12
கூட்டமான மேகங்கள் மழையைச் சொரிந்த கானமெல்லாம் அடங்கிய இரவில்
3.
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248
ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன – இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்

மா

மா – 1. (பெ.அ) 1. பெரிய, large, extensive
2. கரிய, dark
3. அழகிய, beautiful
4. சிறந்த, fine, cexcellent
– 2. (பெ) 1. மாமரம், mango tree
2. நில அளவை – நூறு குழி, a land measure equal toone third of an acre
3. குதிரை, horse
4. விலங்கு, animal, beast
5. இலக்குமி, திருமகள், Lakshmi
6. அரிசி, கிழங்கு போன்றவற்றின் மாவு, பொடி, flour, powder
7. மாமை நிறம், மாந்தளிர் போன்ற நிறம், colour as that of a tender mango leaf
8. மான், deer
9. வண்டு, bee
1.1
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
பெரும் இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்
1.2
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7
கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்ட கரிய மேகங்கள்,

மா முக முசு கலை பனிப்ப – திரு 303
கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க
1.3
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகிய தழையை
1.4
மாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர் – அகம் 206/7,8
மாரிக் காலத்து ஈங்கைச் செடியில் தோன்றும் சிறந்த தளிரினை ஒத்த
அழகிய மாமை நிறத்தினையுடைய மேனியினையும் ஆய்ந்த அணியினையும் உடைய மகளிரது
(ந.மு.வே.நாட்டார் உரை)
2.1
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்
2.2
மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180
ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின்
2.3
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாண் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 259,260
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து
2.4
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெரும் 497
மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முற்றத்தில்
2.5
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்

மா மறுத்த மலர் மார்பின் – புறம் 7/5
திருமகள் பிறர் மார்பை மறுத்தற்கேதுவாகிய பரந்த மார்பினையும்
2.6
மா இருந்து
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 126-128
(முற்றி)மாவாகும் தன்மை பெற்று,
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;
2.7
செயலை அம் தளிர் அன்ன என்
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/10,11
அசோகமரத்தின் அழகிய தளிரைப் போன்ற என்
வலிமை அற்ற மாமைநிறங்கொண்ட மேனியில் பசலை நோயையும் பார்த்துவிட்டு

நறும் தண்ணியளே நன் மா மேனி – குறு 168/4
மணமும் குளிர்ச்சியுமுள்ளவள் நல்ல மாமைநிறமுள்ள மேனியுள்ள தலைவி
2.8
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
மானின் பார்வையை ஒத்த மருண்ட பார்வையையும் கொண்டு, மயில் போன்ற சாயலில் நடமாடி,
2.9
மனை இள நொச்சி மௌவல் வால் முகை
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் – அகம் 21/1,2
இளமையான, வீட்டு நொச்சிச் செடியில் (படர்ந்த) காட்டுமுல்லையின் வெள்ளிய மொட்டுகளை
இரண்டிரண்டாய் வரிசையாக வைத்ததைப் போன்ற, வண்டுகள் விரும்பும் வெள்ளைப் பற்கள்

மா என்ற சொல் பொதுவாக எந்தவொரு விலங்கையும் குறிக்குமாதலால், இதனுடன் பல அடைமொழிகளைச்
சேர்த்து அந்தந்த விலங்குகளைக் குறிப்பிட்டனர்.
அ. கடுமா – குதிரை,
கடு மா பூண்ட நெடும் தேர் – நற் 91/11

ஆ. கலிமா – குதிரை
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா – நற் 121/8

இ. பரிமா – குதிரை
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2

ஈ. வயமா – குதிரை
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18

உ. கயமா – யானை
கய_மா பேணி கலவாது ஊரவும் – பரி 20/19

ஊ.கைம்மா – யானை
இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1

எ. மதமா – யானை
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18

ஏ. கோட்டுமா – காட்டுப்பன்றி, யானை
கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி – நற் 75/6
கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5

ஐ. முளவுமா – முள்ளம்பன்றி
முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 176

ஒ. கோள்மா – சிங்கம், புலி
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி – புறம் 58/30

ஓ. மடல்மா – காதலியின் கவனத்தைக் கவர்வதற்காக இளைஞர் ஊர்ந்து வரும் பனை மடலால் செய்த குதிரை
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி – நற் 377/1

மாகதர்

மாகதர் – (பெ) அமர்ந்த நிலையில் அரசனின் புகழ் பாடுவோர், Professional ministrels who assuming a
sitting posture in the presence of sovereigns sing their praises and exploits,
சூதர் வாழ்த்த மாகதர் நுவல – மது 670
நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல

மாகம்

மாகம் – (பெ) 1. திசைகள், directions
2. நிலத்திற்கும், விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடம், the space between earth and the
upper space.
1,2
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல் நாள் – பதி 88/37,38
திசைகளெல்லாம் ஒளியால் விளங்க கரிய வானத்தில் உயரே எழுகின்ற
ஞாயிற்றைப் போல சிறப்புடன் வாழ்வாயாக, பல நாட்கள்;

மாகம் – திசை, இனி, நிலத்துக்கும் விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடமென்றுமாம் – ஔவை.சு.துரை. உரை

இந்த மாகம் என்ற சொல் விசும்பு என்ற சொல்லுடனேயே பயின்று வருகிறது.

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய – மது 454

வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50

மழை கால் நீங்கிய மாக விசும்பில் – அகம் 141/6

கடல் கண்டு அன்ன மாக விசும்பின்
அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க – அகம் 162/3,4

மாக விசும்பின் மழை தொழில் உலந்து என – அகம் 317/1

ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு – புறம் 35/17,18

இங்கு, மாகம் என்பது எழிலி, மழை, கொண்மூ ஆகிய மேகங்களைக் குறிக்கும் சொற்களுடனும், மின்னலுடனும்
சேர்த்துக் குறிப்பிடப்படுவதால், இச்சொல் நிலத்தை ஒட்டி இருக்கக்கூடிய வானவெளியைக்
குறிப்பதாகக் கொள்லலாம்.

அடுத்து,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திருமுகத்து – அகம் 253/24,25
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2
பன் மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 270/1
மாக விசும்பின் வெண் திங்கள் – புறம் 400/1

என்ற அடிகளில், திங்கள், கோள்மீன், நாள்மீன் ஆகியவை உள்ள பகுதி மாக விசும்பு என்று குறிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றும் நிலவுலகிலிருந்து வெவ்வேறான தொலைவுகளில் விசும்பில் உள்ளவை என்று இன்று நாம்
அறிந்திருப்பினும், அன்றைய மக்கள் இவை அனைத்துமே விண்ணில் ஒரே தொலைவில் உள்ளனவாக
எண்ணியிருந்தனர் என்று கொள்ளமுடிகின்றது. எப்படியிருப்பினும் இவை மூன்றும் மேகங்களுக்கும் அப்பால்
வெகுதொலைவில் உள்ளனவாதலால், மேகங்களுக்கு அப்பால் உள்ள விசும்பின் பகுதியும் மாகம் என்பதைக்
குறிக்கும் எனக் கொள்ளவேண்டியுள்ளது.

மாக்கள்

மாக்கள் – (பெ) 1. மனிதர், men, people, human beings
2. சிறுவர், குழந்தைகள், children
1.
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும் – குறு 207/3,4
தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி
அவ்வழியில் செல்லும் மக்களுக்கு வழித்துணையாகும்
2.
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் – நற் 95/6
குறவர்களின் இளஞ்சிறுவர்கள் தாளம் கொட்டும்

மாங்காடு

மாங்காடு – (பெ) மகளிர் மட்டும் வழிபடும் ஓர் இறையிடம்.
an worship place where only ladies worship.
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே – அகம் 288/12-15
மெல்லிய தலையினையுடைய மந்தியின் வருத்தும் பசியினை நீக்குமாறு
அதன் குட்டியினது தந்தையான கடுவன் பலாப்பழத்தின் சுளையினைத் தோண்டினும்
மிக்க துன்பம் வந்து பொருந்தும் நடுக்கம் மிக்க (தெய்வமுடைய) பக்கமலையில் உள்ள
கன்னியர் உறையும் மாங்காடு என்னும் ஊரின் காவலை ஒத்தது.

விலங்கினத்திற்குட்பட்ட குரங்கு இன்றியமையாக கடப்பாடுபற்றிப் பழச்சுளை தொட்டதாயின், ஆண்டுறையும்
தெய்வத்தால் அதற்கும் துன்பம் உண்டாகும். எனவே மகளிரே உறையும் மாங்காடு என்னும் பதி, தெய்வத்தின்
காப்பு மிக்குடையதென்பது போதரும்.- ந.மு.வே.நாட்டார் உரை

மாங்குடி

மாங்குடி – (பெ) ஒரு சங்ககால ஊர், a city in sangam period
மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/14

சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார் , இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில்
இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து
ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது.
மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

மாங்குடிமருதன்

மாங்குடிமருதன் – (பெ) ஒரு சங்ககாலப் புலவர், a poet in sangam period
மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/14

சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார்.
மாங்குடி மருதனார் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர்.
பாண்டிய மன்னரான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரசவையில் புலவராக இருந்தவர்,
புறநானூற்றில் இவரது பெயர் ‘மாங்குடி கிழார்’ என்று உள்ளது. மதுரைக்காஞ்சி தவிர,
நற்றிணையில் இரண்டு பாடல்கள் (120, 123), குறுந்தொகையில் மூன்று பாடல்கள் (164, 173, 302),
அகநானூற்றிலே ஒரு பாட்டு (89), புறநானூற்றிலே ஆறு பாடல்கள் (24, 26, 313, 335, 372, 396) என மொத்தம் 13
பாடல்கள் இவர் பெயரில் உள்ளன.
திருவள்ளுவமாலையில் ஒரு பாடல் மாங்குடி மருதன் பெயரால் இடம் பெற்றுள்ளது.
இவர் பாடல்களில், கோதை, குட்டுவன், எவ்வி, பழையன் மாறன், மானவிறல்வேள், வாட்டாற்று எழினியாதன்,
வாணன், கோசர், மழவர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

மாசு

மாசு – (பெ) 1. குற்றம், fault, defect
2. தூசு, அழுக்கு, தூய்மைக்கேடு, dirt, stain
3. களங்கம், blot, blemisg, spot
1.
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
குற்றமில்லாத மகளிரோடு கறை இன்றி விளங்க
2.
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் – திரு 127,128
வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும்,
அழுக்கு அற மின்னும் உருவினரும்

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும்
3.
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157
திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்

மாசுணம்

மாசுணம் – (பெ) மலைப்பாம்பு, python
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261
விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி

களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் – நற் 261/6
யானையை இறுக வளைத்த பெரிய சினங்கொண்ட மலைப்பாம்பு

மாடம்

மாடம் – (பெ) 1. மேல்தளங்களைக் கொண்ட வீடு, storeyed house
2. அரண்மனை போன்றவற்றின் மாடிப்பகுதி, upper storey
3. பள்ளி ஓடம், a kind of boat
4. மொட்டை மாடி, terrace
1.
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71
மாடிவீடுகள் மிகுந்திருக்கும் தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில்
2.
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 355,356
முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு,
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்

கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/5,6
கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறைக்கண், நாவாய் ஓட்டுவான்
மாடத்தின் மீதுள்ள ஒள்ளிய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த
3.
நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/27
புதுவெள்ளத்தின் அழகைக் காண்போரும், வரிசையான நீரணி மாடங்களில் ஊர்ந்துசெல்வோரும்
4.
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 348-350
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது மாடத்தில்,
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்

மாடோர்

மாடோர் – (பெ) மேலுலகத்தார், தேவர்கள், celestials
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/23,24
தேவர்கள் வாழும் விண்ணுலகத்திலும் கேட்கும்படியாக
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை

மாடு – பொன். அந்தப் பொன்னுலகினையுடைய தேவரை ‘மாடோர்’ என்றார் – ஔவை.சு.துரை. உரை

மாட்சி

மாட்சி – (பெ) 1. மகிமை, மாண்பு, பெருஞ்சிறப்பு, Glory, greatness, magnificence, splendour, majesty
2. அழகு, loveliness, beauty
3. இயல்பு, தன்மை, nature
1.
நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நன்_நுதல் கணவ – பதி 42/3-7
நெடிய வெண்மையான ஊசி
நீண்ட பிளவினில் தைத்த தழும்பு இருக்கின்ற மார்பினைக் கொண்ட,
அம்புகள் தைத்த உடம்பினையுடையவராய்ப் போரிட வந்தவரோடு அல்லாமல்,
மற்றவரோடு தும்பை மாலை சூடிப் போரிடாமல், மேற்சொன்னவரோடு மட்டும் போர்செய்யும் மாட்சியையுடைய
அத்தகையவருக்குத் தலைவனே! நல்ல நெற்றியையுடைவளுக்குக் கணவனே!
2.
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 487,488
(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், திருமாலின் பாற்கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்
3.
காணுநர் கைபுடைத்து இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/26,27
காண்போர் கைகொட்டிப் பிசைந்து வருந்த
கெட்டழிந்த தன்மையுடையவாயின, பலவகையாலும் மாட்சிமையுற்றிருந்த இந் நாடுகள்

மாட்டு

மாட்டு – 1. (வி) 1. தீமூட்டு, விளக்கேற்று, make fire, light a lamp
2. (தீயினைத்)தூண்டிவிடு, kindle (a fire)
3. செருகு, insert, thrust
4. இணை, பொருத்து, fasten
5. அழி, destroy
6. கொல், kill
7. தாழிடு, bolt, latch
8. திறன்பெறு, be proficient
– 2. (இ.சொ) பால்,மீது, மேல், இடம்
1.1
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்
கரும் புகை செம் தீ மாட்டி – சிறு 155,156
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்
கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி

கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 246,247
சிறைப்பிடித்துவந்த மகளிர் நீருண்ணும் துறையில் சென்று முழுகி,
(அவர்கள்)அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய
1.2
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 48-50
நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி
(பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட –
நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்,
1.3
திண் திமில்
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர்
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன்
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை – அகம் 340/18-21
வலிமை பொருந்திய படகுகளுடன்
பகற்பொழுதில் கடலிலே மீன்வேட்டைக்குச் சென்ற வலிய செயலையுடைய மீன்பிடிப்போர் எறிந்த
கூர்மையான உளி கடிய விசையுடன் செருகிக்கொண்டதால், ஒருங்கே பாய்ந்து
கொலைத்தொழிலையுடைய சுறாமீன்கள் கிழித்த வளைந்த முடிகளைக் கொண்ட நீண்ட வலைகள்
1.4
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 112-115
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
குவிந்த இடத்தையுடைய வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி,
முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும்
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து

விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 193,194
விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப்
பயந்து,
(அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார்
1.5
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 24-28
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி,
வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்டிலுள்ள
இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,
ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் –
1.6
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிர கெண்டி
நாள்_இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/8-12
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில்
புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று
தன் பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை
1.7
காவல் செறிய மாட்டி ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே – நற் 320/8-10
வீட்டுக்கதவுகளை இறுக்கத் தாழிட்டு, அழகிய வளையணிந்த
எழில் மிக்க மாந்தளிர் மேனியையுடைய மகளிர்
தப்பித்தனர் தமது கணவன்மாரைக் காத்துக்கொண்டு
1.8
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி
என் வாய் நின் மொழி மாட்டேன் – நற் 342/1-3
குதிரை எனக் கருதிப் பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வருவாரைப் போலவும்
கோட்டை மதில் எனக் கருதி பேய்த்தேரைத் தாக்கி மோதுவதைப் போலவும் என்னிடம் வருதலால்,
என் வாயால் நீ கூறவேண்டியதைக் கூற வல்லேனல்லேன்
2.
நின்_மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது – பதி 89/13,14
நின்பால்
அன்புகொண்டு அடங்கிய நெஞ்சம் குற்றப்படுதலை அறியாமல்

நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்_மாட்டு
இவளும் இனையள் ஆயின் – அகம் 2/12,13
கட்டுப்படுத்த எண்ணியும் அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம்
இவளும் இத்துணை காதல் கொண்டவளாயின்,

மாட்டுமாட்டு

மாட்டுமாட்டு – (பெ) ஆங்காங்கு, இடந்தோறும், every place
மாட்டுமாட்டு ஓடி மகளிர் தர_தர
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் – கலி 98/4-7
அங்கேயும் இங்கேயும் ஓடிச் சென்று மங்கையரைக் கொண்டுவந்துகொண்டேயிருக்க,
எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் உன் திண்ணிய தேர் ஓடுகின்ற தெருக்களிலெல்லாம்
உன்னைப் பற்றிய பேச்சுத்தான் எழுவதற்குக் காரணமான உன் மாய்மாலப் பரத்தைத்தன்மையைக்
காட்டுவதற்காக வந்திருக்கிறதைக் கையும்மெய்யுமாகப் பிடித்துவிட்டேன்!

மாட்டை

மாட்டை – (பெ) பங்கு, உரிய பகுதி, share
பருகீத்தை
தண்டுவென் ஞாயர் மாட்டை பால் – கலி 85/35,36
பருகுவாயாக
வற்புறுத்திக்கேட்கிறேன், செவிலித்தாயின் பங்காக இருக்கின்ற பாலை.

மாணாக்கன்

மாணாக்கன் – (பெ) மாணவன், படிக்கும் சீடன், pupil, student
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ – குறு 33/1,2
தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?

பாணன் வாயிலாகப் புக்குத் தலைவன் பெருமையைச் சொல்வன்மை புலப்படப் பாராட்டினளாதலால், அவன்
கல்வியைச் சிறப்பிக்க எண்ணி, ‘இளமாணாக்கன்’ என்றாள் – உ.வே.சா. உரை விளக்கம்

மாணை

மாணை – (பெ) கட்டுக்கொடி, a creeper used for binding/bundling, Cocculus hirsutus(Linn)Diels
துறுகல் அயலது மாணை மா கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன் – குறு 36/1,2
குத்தாக நிற்கும் பாறாங்கல்லுக்குப் பக்கத்திலுள்ள மாணை என்னும் பெரிய கொடி
துயிலும் ஆண்யானையின் மேல் ஏறிப்படரும் குன்றுகளுள்ள நாட்டுக்காரத் தலைவன்

மாணை என்பது ஒருவகைக் கொடி. இக்காலத்தில் அதனைக் கட்டுக்கொடி (Cocculus hirsutus(Linn)Diels) என்பர்.
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி,
விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு.
இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர்
விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும். இது கிராமங்களில் எளிதில் கிடைக்கக்
கூடியது. இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும். நீண்டு வளர்ந்து இருக்கும். இதன் இலை நாக்கு
வடிவத்தில் காணப்படும். பனை மரம், ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும்.

வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால்
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – கம்பராமா.அயோ.வனம்புகு.36/1,2

கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்க குத்தி
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கி – கம்பராமா.யுத்.ஒற்று.26/1,2

என்ற அடிகள் மாணைக்கொடி ஒரு கட்டுக்கொடி என்பதனை உறுதிசெய்யும்.

மாண்

மாண் – 1. (வி) 1. மாட்சிமைப்பட்ட குணங்களைக்கொண்டிரு, மேன்மையடை, சிறப்புறு,
possess excellent character, become great, glorious, excellent
2. நன்கு அமையப்பெறு, be formed well, be formulated well, be established well
3. நிறை, be full, abundant
4. உயர், be lofty, great
– 2. (பெ) 1. மாட்சிமை, பெருமை, சிறப்பு, சீர்த்தி, Greatness; glory; splendour; excellence; dignity
2. தடவை, மடங்கு, அளவு, turn, times
3. அழகு, beauty
1.1
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/2,3
காப்புடைய சகடந்தான் அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்
ஊறுபாடு இல்லையாய் வழியை இனிதாகச் செல்லும்

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3
மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினர்

கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/15,16
தெய்வமாக அமைந்த கொல்லிப்பாவையினைப் போன்ற
மடப்பத்தால் சிறப்புற்ற கரியளாய தலைவி

கடும் இனத்த கொல் களிறும் கதழ் பரிய கலிமாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும் நெஞ்சு உடைய புகல்மறவரும் என
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/11,12
கடிய சினத்தை உடையவாகிய கொல்களிறும், விரைந்த செலவையுடையவாகிய மனம் செருக்கிய குதிரையும்
நெடிய கொடியை உடையவாகிய உயர்ந்த தேரும் நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென
நான்கு படையும் கூட மாட்சிமைப்பட்டதாயினும், மாட்சிமைப்பட்ட
அறநெறியை முதலாக உடைத்து வேந்தரது வெற்றி

ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன்
வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/19-21
ஓயாமல் அடுத்தடுத்து ‘அப்பா, அப்பா’ என்று சொல்லும் மகனை, மாட்சிமைப்பட
நம் மூங்கில்போன்ற மென்மையான தோள்களில் தூக்கி அமர்த்திக்கொண்டாலும், இவன்
வாயிலிருந்து போகமாட்டான் நம் தலைவன்?

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ – கலி 117/1
மாட்சிமைப்பட உருக்கிய பசும்பொன்னின் நடுவே நீலமணிகளை அழுந்தப் பதித்து
1.2
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194
குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை

வினை மாண் பாவை அன்னோள் – நற் 185/11
செயல்திறன் நன்குகொண்ட கொல்லிப்பாவையைப் போன்றவள்
1.3
மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2
இளமையுடைய பெரிய பெண்குரங்கு, வளர்ச்சி முற்றாத தன் வலிய குட்டியோடு
1.4
காணுநர் கைபுடைத்து இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/26,27
காண்போர் கைகொட்டிப் பிசைந்து வருந்த
தாழ்வுற்ற தன்மையுடையவாயின, பலவகையாலும் மாட்சிமையுற்றிருந்த இந் நாடுகள்
2.1
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3
மன்னர்கள் மதிக்கும் மாட்சிமையான போர்வினையில் மேம்பட்ட குதிரைகளின்

நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18
நாணம் மிக்க நம் தலைவியின் மாண்புள்ள அழகினை நுகர்வதற்கு
2.2
அம்ம வாழி தோழி பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் – ஐங் 115/1-3
கேட்பாயாக, தோழியே! பல தடவை
நுண்மணல் செறிந்த கரையில் நம்மோடு விளையாடிய
குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்

விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/7,8
விழுமிய கடல்சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் கருவியாகக் கொண்டு
அந்த அளவில் ஏழு மடங்கு பெறுமான விழுமிய நிதியைப் பெற்றாலும்
2.3
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய் பேஎய் – நற் 73/1,2
வேனில்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற
அழகற்ற விரல்களைக் கொண்ட, வலிய வாயைக் கொண்ட பேய்,

மாண்பு

மாண்பு – (பெ) மாட்சிமை, பெருமை, சிறப்பு, சீர்த்தி, Greatness; glory; splendour; excellence; dignity
பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே – நற் 128/1-5
பகற்பொழுதில் எரிகின்ற விளக்கின் ஒளியைப் போல் மேனியழகு மங்கித் தோன்றவும்
பாம்பு கவர்ந்த மதியைப் போள நெற்றியின் ஒளி மறைபடவும்.
எனக்கு நீ கூறினாய் இல்லை, உனக்கு யான்
ஓருயிரை இரு உடம்புகளுக்குள் பிரித்து வைத்தாற் போன்ற சிறப்புற்றவளாதலினால்
நீ மறைத்துவைத்திருப்பதை அறிந்திருக்கிறேன் நான்

மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று – ஐங் 394/1,2
மாட்சிமை சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று

மாதரார்

மாதரார் – (பெ) பெண்கள், women
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4
மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்,

மாதராள்

மாதராள் – (பெ) பெண், woman
என்
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது
ஆணையால் வந்த படை – கலி 139/20-23
என்
ஆண்மைப் பொலிவு என்ற கோட்டையை முற்றுகையிட்டு அதனை உடைத்து என் உள்ளத்தை அழிக்கிறது,
சிறந்த அணிகலன்களையுடைய மங்கையின் அழகு என்ற வடிவில் காமனது
ஆணையால் வந்திருக்கும் படை;

மாதர்

மாதர் – (பெ) 1. அழகு, beauty
2. காதல், love
3. பெண், பெண்கள், woman, women
1.
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/3,4
பூக்கின்ற மலரும், மூங்கிலும் போன்ற உன்
அழகிய மையுண்ட கண்களும், வனப்புள்ள தோள்களும்
2.
பயில் இதழ் மலர் உண்கண்
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ – கலி 103/60-62
நிறைந்த இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மைதீட்டிய கண்களையுடைய
காதலையுடைய மகளிரும் அவரின் கணவர்களும் விருப்பத்துடன்
சாணம் மெழுகிய மன்றத்தில் குரவைக்கூத்து ஆடுவதற்காகத் தழுவிக்கொண்டு,
3.
ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய்
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் – கலி 111/14-17
யாரோ ஒருவர் கொடுத்த பூவைக் கையில் கொண்டிருக்கிறாய், மிக மிகப்
பெரிய பேதையாய் இருக்கிறாயே! என்றேன், பெண்ணே!
வியக்கும் வகையில் பரந்திருக்கும் அழகுத்தேமல் புள்ளிகளை அழகாக உடைய மென்மையான முலைகளின் மேல்
தொய்யில் குழம்பால் கோலம் வரையவோ? என்றான்,

சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல்
சே இழை மாதரை உள்ளி நோய் விட
முள் இட்டு ஊர்-மதி வலவ நின்
புள் இயல் கலி_மா பூண்ட தேரே – ஐங் 481
வளைந்து இறங்கிய பருத்த தோள்களையும், அழகிய வரிகளைக் கொண்ட அல்குலையும் கொண்ட,
சிவந்த அணிகலன் அணிந்த தலைவியை எண்ணி, அவளின் நோய் தீர,
தார்க்குச்சியின் முள்ளால் குத்தி, விரைவாகச் செலுத்து, பாகனே! உன்
பறவைகளின் தன்மை கொண்டு விரைந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய தேரை.

உணர்த்த உணரா ஒள் இழை மாதரை
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து – பரி 7/36,37
ஊடலைத் தீர்ப்பதற்கு உணர்த்திக்கூறியும் உணராத ஒளிரும் இழையணிந்த பெண்களைச்
சேர்வதற்கான எழும் ஆடவரின் ஆசைப் பெருக்கினைப் போல வெள்ளம் பெருகி விரைய,

மாதவர்

மாதவர் – (பெ) முனிவர், Ascetics, as observing great austerities
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் – பரி 5/46
குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்

மாதிரம்

மாதிரம் – (பெ) 1. விசும்பு, வானம், atmosphere, sky
2. திசை, direction, point on the compass
1.
வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5
வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல
2.
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை
மாதிர நனம் தலை புதைய பாஅய் – நற் 347/1,2
முழங்குகின்ற கடல் முகந்த நிறைந்த கருக்கொண்ட கரிய மேகம்
திசைகளெங்குமுள்ள பரந்த இடங்கள் மறையுமாறு பரந்து

மாது

மாது – (இ.சொ) அசைநிலை, an expletive
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
கலங்கிற்று, அவரைப் பிரியாரென்று தெளிவுற்றிருந்த என் மனம்

மாதுளம்

மாதுளம் – (பெ) மாதுளை, Pomegranate, Punica granatum
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்பு_உறு பசும் காய் போழொடு கறி கலந்து – பெரும் 306,307
சிவலைப் பசுவின் நறிய மோரில், வெண்ணெயில் (வெந்த)மாதுளையின்
வெம்மையுற்ற பசிய காயின் வகிரோடு, மிளகுப்பொடி கலந்து,

மாதோ

மாதோ – (இ.சொ) மாது + ஓ, அசைநிலை, an expletive
பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ – குறு 144/5
பருக்கைக்கற்கள் தன் அடியின் அழகைச் சிதைக்கும் வண்ணம் சென்றனள்

மாத்திரம்

மாத்திரம் – 1. (பெ) அளவு, எல்லை, limit, extent
– 2. (இ.சொ) மட்டும், only
1.
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ_வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24
அவன் நின்னை முயங்கும் அளவைத் தன் நெஞ்சாலே கைக்கொண்டுவிட்டான், வா என்று
கூறுவாள் போல அவனுக்கு ஒரு பொய்க்குறியைக் காட்டி
அவன் மேவின வழியிலே நெஞ்சே மேவுவாயாக என்றாள். – நச். உரை
2.
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ_வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24
அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று
கூறுவது போல் காட்டி
பின்னர் அவன் விருப்பப்படி நடந்துகொள்வாய் நெஞ்சமே! – புலி.கேசிகன் உரை

மாத்திரை

மாத்திரை – (பெ) கால எல்லை, அளவு, measure, limit – as of time
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி
முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 139-142
சிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது –
இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் செருக்கி,
முலையுண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து,
(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று

இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற – புறம் 376/7,8
இமைத்த கண் விழிக்கும் அளவிலே விரைவாக
கிழக்கேஎழுந்த மதியம் செறிந்திருந்த இருளை நீக்க

மாந்தரஞ்சேரல்

மாந்தரஞ்சேரல் – (பெ) ஒரு சேர மன்னன், a cEra king
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே – புறம் 22/34
மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாதுகாத்த நாடு

இவனது முழுப்பெயர் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இவன் சேரமான் அந்துவஞ்சேரல்
இரும்பொறை என்பவனின் மகன். சேரமான் கடுங்கோ வாழியாதன் இவனின் மூத்த உடன் பிறந்தோன்
இவன், கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன். யானை போலப் பெருமித நோக்கு
உடையவன் ஆதலால் இவனை ‘யானைக்கட் சேய்’ என்றனர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான்.
குழியில் விழுந்த யானை குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்தது போல இந்தப் பொறையன் சிறையைத்
தகர்த்துக்கொண்டு தன் நாட்டுக்கு வந்து அரசனானானாம். இவன் கொடைமுரசு முழக்கிப் இரவலர்களை
வரவழைத்துப் பரிசில் நல்குவானாம் (புறம் 17).
புறநானூற்றில் பாடப்பட்டிருக்கும் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (புறம் 50), சேரமான்
குடக்கோச் சேரல் இரும்பொறை (புறம் 210,211), சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறம் 53),
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறம் 125), கோச்சேரமான் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறை (புறம் 220), சேரமான் கோக்கோதை மார்பன் (புறம் 48,49 ), சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாள்
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை (புறம் 5) ஆகிய அனைத்துப் பெயர்களும் இவன் ஒருவனையே குறிக்கும் என்பர்
(பேரா.சாலமன் பாப்பையா – புறநானூறு புதிய வரிசை வகை – பக்.31)

குறுங்கோழியூர் கிழார் (புறம் 17,20,22), பேரிசாத்தனார் (புறம் 125),
பொருந்தில் இளங்கீரனார் (புறம் 53), கூடலூர் கிழார் (புறம் 229) ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

மாந்தரன்

மாந்தரன் – (பெ) ஒரு சேர மன்னன், a cEra king – பார்க்க :மாந்தரம்
விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/13
விறலையுடைய மாந்தரன் என்னும் சேரமானது மேம்பட்ட வழித்தோன்றலே.

மாந்தரம்

மாந்தரம் – (பெ) சேரநாட்டைச் சேர்ந்த ஒரு மலை/ஊர், a hill/city in cEra country
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற
குறையோர் கொள்கலம் போல – அகம் 142/4-6
நிறுத்துதற்கரிய சேனையினையுடைய போர்வெல்லும் மாந்தரம்
பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற
வறியோரது பிச்சை ஏற்கும் கலம்போல

பொறை நாடு என்பது, மலையாள மாவட்டத்தில் உள்ள பொன்னானி, பாலைக்காடு, வைநாடு, வள்ளுவ நாடு,
குறும்பர் நாடு, கோழிக்கோடு, ஏர் நாடு ஆகிய வட்டங்களைத் தன்கண் கொண்டது.
இப் பொறை நாட்டில், குறும்பர் நாட்டுப் பகுதியில், மாந்தரம் என்றொரு மலைமுடியும் அதனை யடுத்து மாந்தரம்
என்றோர் மூதூரும் உண்டு.
அவ் வூரைத் தலைநகராகக் கொண்டு வேந்தர் சிலர் ஆண்டு வந்தனர். அவர்களும் பொறை நாட்டரசர்களேயாதலால்,
மாந்தரன் என்றும், மாந்தரம் பொறையன் என்றும், மாந்தரம் சேரல் இரும்பொறை என்றும் சான்றோர்களால்
அவர்கள் வழங்கப்பெற்றனர்.
மாந்தரம் மாந்தை எனவும் வழங்கிற்று

மாந்தர்

மாந்தர் – (பெ) 1. மக்கள், human beings, people
2. ஆடவர், male persons
1.
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சா செய்யார் உயர் தவம் – நற் 226/1,2
ஒரு மருந்துமரம் பட்டுப்போகும் அளவுக்கு அதினின்றும் மருந்தைக் கொள்ளமாட்டார்கள்; மக்கள்
தம் உடல்வலிமை கெட்டுப்போகுமாறு செய்யமாட்டார்கள் உயர்ந்த தவத்தை
2.
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13
மகளிரின் தோளைச் சேர்ந்த ஆண்கள், அவரின் வருத்தம் மிகும்படியாக அவரைவிட்டுப் பிரிதலும்

மாந்தி

மாந்திர் – (வி.வே) மாந்தர்களே, Oh, people!
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம்
கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும்
புதுவது அன்றே புலன் உடை மாந்திர் – கலி 22/1-4
உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம்
வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல்
பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை, அது இக்காலத்தவர்க்கும்
புதியது அன்று, அறிவுடைய மாந்தர்களே!

மாந்தீர்

மாந்தீர் – (வி.வே) மாந்தர்களே! Oh, people!
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/28,29
பொன்னால் புனையப்பட்ட ஆடையினை அணிந்திருப்போன் தன் முன்னோனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் நிலையை
நினையுங்கள் மாந்தர்காள்! கேளுங்கள்! மணம்பொருந்திய அதன் சிறப்பை!

மாந்து

மாந்து – (பெ) அளவுக்கதிகமாய் உண்/குடி, eat/drink excessively
பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் – புறம் 61/4-8
பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை
புதிய நெல்லினது வெள்ளிய சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு
விலாப்புடைப் பக்கம் விம்ம உண்டு
நெடிய கதிரையுடைய கழனியிடத்துச் சூட்டை இடுமிடமறியாது தடுமாறும்
வலிய கையையுடைய உழவர் புல்லிய தலையையுடைய சிறுவர்

தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம் – நற் 388/8,9
தேன் மணக்கும் தெளிந்த கள்ளைச் சுற்றத்தாரோடு நிரம்பக் குடித்து,
பெருமகிழ்ச்சிகொள்ளும் துறையைச் சேர்ந்தவனாகிய காதலன்

மாந்தை

மாந்தை – (பெ) பார்க்க : மாந்தரம்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய – நற் 35/7,8
நீர்த்துறை பொருந்திய மாந்தைநகர் போன்ற இவளது மேனி நலம்
முன்பொழுகிய களவுக்காலத்தும் இப்பெற்றியே இருந்தது, காண்

மாந்தை சேரநாட்டுக் கடற்கரை நகரங்களுள் ஒன்று. இடைக்காலத்தே அது மாதை எனக் குறுகி மறைந்து, இப்போது
பழையங்காடி என்ற புகைவண்டி நிலையத்துக்கு அண்மையில் உள்ளது.- ஔவை.சு.து – உரை விளக்கம்

கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனையல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/9,10
கடற்கரையில் உள்ள மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை
விரும்பினாயல்லையாகலான் நின்பொருட்டாலிழந்த எம் நலத்தைத் தந்து செல்வாயாக

இங்கு வரும் மாந்தை என்ற சொல்லை, மரந்தை என்று கொள்வார் ஔவை.சு.து. அவ்வாறு கொண்டு,
மரந்தை, சேரநாட்டுக் கடற்கரை ஊர்களுள் ஒன்று. இது மருண்டா (Marunda) என யவனர் குறிப்புக்களுள்
காணப்படுகிறது என்பார்

இங்கு சொடுக்குக : மரந்தை

மான

மான – (இ.சொ) ஓர் உவம உருபு, A word of comparison
புலவு நுனை பகழியும் சிலையும் மான
செ வரி கயலொடு பச்சிறா பிறழும் – பெரும் 269,270
புலால் நாறும் முனையினையுடைய அம்பையும் வில்லையும் ஒப்பச்
சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற,

கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து – மது 568
மழைக்கு மலர்ந்த மலர்களின் குவியலைப் போல (ஏனைப்)பூக்களையும் பரக்கச்சூடி

மானும்

மானும் – (வி.மு) பார்க்க : மான் – 1.1, 1.2
1.
வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/1,2
வேங்கை மரங்களும் புலிபோல் தோன்றும் பூக்களை விளைவித்தன; அருவிகளும்
தேன் மணம் மிகுந்த நெடிய மலையில் நீலமணி போலத் தோன்றுகின்றன – புலியூர்க் கேசிகன் உரை

மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது – வைதேகி ஹெர்பெர்ட் உரை
2.
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும் – உ.வே.சா உரை

6. கண்ணின் – இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உவம உருபோடு வந்தது (தொல்.உவம.11.பேர்);
மான என்பது வினை, உவமத்தின் கண் வந்தது (தொல்.உவம.12.பேர்) – உ.வே.சா உரை விளக்கம்
3.
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல்கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோ – அகம் 265/1-3
புகை போலப் பொலிவுற்று அகன்ற வானில் உயர்ந்து
பனி தவழும் தீச்சுடரை ஒப்பத் தோன்றும்
இமயமாய செவ்விய மலையினை ஒக்குமோ

மான்

மான் – 1. (வி) 1. ஒப்பாகு, equal, resemble
2. தோன்று, appear
– 2. (பெ) 1. விலங்கு, animal
2. deer, antelope
3. குதிரை, horse
1.1
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும் – உ.வே.சா உரை

6. கண்ணின் – இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உவம உருபோடு வந்தது (தொல்.உவம.11.பேர்);
மான என்பது வினை, உவமத்தின் கண் வந்தது (தொல்.உவம.12.பேர்) – உ.வே.சா உரை விளக்கம்

புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல்கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோ – அகம் 265/1-3
புகை போலப் பொலிவுற்று அகன்ற வானில் உயர்ந்து
பனி தவழும் தீச்சுடரை ஒப்பத் தோன்றும்
இமயமாய செவ்விய மலையினை ஒக்குமோ
1.2
வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/1,2
வேங்கை மரங்களும் புலிபோல் தோன்றும் பூக்களை விளைவித்தன; அருவிகளும்
தேன் மணம் மிகுந்த நெடிய மலையில் நீலமணி போலத் தோன்றுகின்றன – புலியூர்க் கேசிகன் உரை

மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது – வைதேகி ஹெர்பெர்ட் உரை
2.1.
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139
சிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது
2.2.
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
2.3.
பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே – நற் 311/1,2
மழை பெய்தால், விடுபட்ட குதிரையின் பிடரிமயிரைப் போன்று செறிவாகச் சாய்ந்து அடித்து,
பெரிய கதிர்களையுடைய நெல்லின் புது அறுவடையைக் கொடுக்கும்;

மான் என்ற சொல்லுக்கு அடைமொழி கொடுத்து, அது இன்ன விலங்கு என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.
1. சிஙகம் – வயமான், அரிமான்
பொறி வரி புகர்_முகம் தாக்கிய வய_மான் – பெரும் 448
‘ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா

அரி மான் வழங்கும் சாரல் பிற மான்
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு – பதி 12/5,6
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில், பிற விலங்குகளின்
திரளாகக் கூடும் இனங்களைக் கொண்ட கூட்டம் நெஞ்சதிர நிற்பதைப் போல
2. குதிரை – கடுமான், கலிமான்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/11
கடிதாகச் செல்லும் குதிரையையுடைய புல்லி என்பானது வேங்கடமலையைக் கடந்து சென்றவர்

விரி உளை கலி_மான் தேரொடு வந்த – கலி 75/16
அடர்ந்த பிடரி மயிரும், மன ஊக்கமும் கொண்ட குதிரை பூட்டிய தேரோடு அவன் கூட்டி வந்த
3. முள்ளம்பன்றி – முளவு மான், எய்ம்மான்
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு – நற் 285/3,4
ஆற்றல் மிக்க கைகளையும் கொண்ட கானவன், தன் கடுமையான வில்லை வளைத்து,
மார்பில் செலுத்தி வீழ்த்திய ஆண் முள்ளம்பன்றியோடு

எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/13
மறவர் எய்து கொடுவரப்பட்ட முள்ளம்பன்றியினது கடியப்பட்ட தசையினது
4. யானை – நெடும் கை வன் மான், அடுமான்
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த – குறு 141/4
நீண்ட கையையுடைய யானையின் கடிய பகையினால் வருந்திய

அனையை அல்லை அடு_மான் தோன்றல் – புறம் 213/8
அத்தன்மையாகிய பகைவனல்லை, பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ
5. வரையாடு – வருடை மான்
செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
செம்மையான மலையில் வாழும் வரையாட்டின் குட்டி
6. புலி – வரி கிளர் வயமான்
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/14,15
கோடுகள் அழகுடன் விளங்கும் வலிய புலியின் தோலை உடுத்த;
யாழ் (இசையின் இனிமை)வாய்ந்த நீலமணி(போன்ற) மிடற்றை உடைய அந்தணன்

மான்மதசாந்து

மான்மதசாந்து – (பெ) கஸ்தூரி, musk
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து
வடு படு மான்மதசாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44
மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய்
உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன்,

மான்ற

மான்ற – (பெ..எ) மால் என்ற வினையின் அடியாக எழுந்தது.
மயங்கிய, விரவிய, கலந்த, mix, mingle, bled
1.
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் – நற் 239/1,2
மேற்றிசையில் சாய்ந்த ஞாயிறு மேலை மலையில் மறையவும்
இருள் மயங்கிய மாலைப்போதில் கள்குடித்து மகிழ்ந்த பரதவர்கள்

ஞான்ற, மான்ற என்பன ஞால், மால் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்ச வினை
இருள் விரவிய அந்திமாலை மான்ற மாலை எனப்பட்டது. – ஔவை.சு.து.உரை/உரை விளக்கம்
2.
மாலை மான்ற மணல் மலி வியல் நகர் – நற் 361/6
மாலையொளி மயங்கிய மணல் பரந்த அகன்ற மனைக்கு
மான்ற : மால் என்பதல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினை – ஔவை.சு.து.உரை/உரை விளக்கம்
3.
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என்
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/4-7
சன்றோர்களே! உங்களுக்கு ஒன்றனை எடுத்துச் சொல்வேன்! மயங்கவைக்கும்
மழையிடையே வரும் மின்னலைப் போல் தோன்றி, ஒருத்தி
தன் ஒப்பனையுடன் தன் உருவத்தையும் எனக்குக் காட்டுமளவுக்கு என்மேல் கருணைகொண்டாள், என்
நெஞ்சத்தை வழியாகக் கொண்டு என்னுள் வந்துவிட்டாள், அது முதல் துயில்கொள்ளேன்,

பார்க்க :மால் – 1. (வி) 1,2,3

மான்றன்று

மான்றன்று – (வி.மு) 1. மயக்குகின்றது, confuses
2. (மழை)பெய்கின்றது, rains, showers
3. (பொழுது)மயங்கிவிட்டது, வேறாகிவிட்டது, has changed, (day) has darkened
1.
ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/6-10
மிடுக்கான நடையையும்
மிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி
இரக்கமுள்ள நெஞ்சத்தோடு, தனது புகழ் நெடுந்தொலைவுக்கு விளங்க
தேர்களை வாரிவழங்கும் அவனது அரசிருக்கை காண்போரை மயங்க வைப்பதைப் போல
மழைமுகில் மாரியைப் பெய்து நின்று என்னை மயக்குகின்றது – ஔவை.சு.து.உரை

மான்றன்று: மால் என்பதன் அடியாகப் பிறந்த இறந்தகால முற்றுவினைத் திரிசொல் – ஔவை.சு.து.உரை விளக்கம்
2.
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/9-10
இரவலர்க்குத் தேர்களைப் பரிசுகொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் போல
மேகம் மழைபெய்யத் தொடங்கி மாறாது ஒரு தன்மையாய்ப் பெய்யாநின்றது – பின்னத்தூரார் உரை.
3.
துறையும் மான்றன்று பொழுதே – அகம் 300/16
நீர்த்துறையிலும் பொழுது மயங்கிவிட்டது

மான்றமை

மான்றமை – (பெ) மயங்கினமை, blending
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 238/1
மரங்கள் ஒன்றோடொன்று பின்னியிருத்தல் அறியப்படாதவாறு நெருங்கியுள்ள காட்டின்கண்

மான்றால்

மான்றால் – (வி.எ) மான்று + ஆல் , ஆல் அசை, பார்க்க மான்று – 1.
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13
தொங்குவது போலத் தோன்றும் ஞாயிறு மயங்கி மறைந்திட்டதாக

மான்று

மான்று – (வி.எ) 1. (இருளோடு மயங்கி) கலந்து, இருட்டிக்கொண்டு, mixed with darkness, darkening
2. (கார்காலம் என்று மயங்கி) குழம்பி, getting confused
3. (மனம் மயங்கி) வருந்தி, being distressed
1.
மான்று உடன்
உரவுரும் உரறும் நீரில் – நற் 238/7,8
எங்கும் இருள் மயங்க
வலிய இடி முழங்கும் இயல்பினால் – ஔவை.சு.து.உரை
2.
மழையும் தோழி மான்று பட்டன்றே – குறு 289/5
தோழி! மழையும் (கார்ப்பருவம் என்று) மயங்கிப் பெய்கின்றது
3.
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/2-5
கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மயங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,

மாமை

மாமை – (பெ) மாந்தளிர் போன்ற நிறம், the colour of a tender mango leaf, reddish or yellow black
1.
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 35-37
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், மாமை நிறத்தில்
களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை

இந்த உவமையை வைத்து, களங்கனி கருப்பாக இருப்பதால், மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்வர்.
ஆனால், களங்கனி மிகவும் பழுத்து கருப்பாக ஆவதற்கு முன்னர், பச்சை நிறக் களாக்காய், நிறம் மாறி சற்று
சிவப்பு அல்லது மாநிறத்துக்கு வரும். அதனையே மாமை களங்கனி என்று புலவர் அழுத்திக் கூறுகிறார் எனலாம்.
இங்கு, களங்கனி மாமை என்னாமல், மாமை களங்கனி என்று புலவர் குறித்திருப்பதை ஊன்றிக் கவனிக்க
வேண்டும். எனவே மாமை களங்கனி என்பதை மாந்தளிர்நிறக் களங்கனி என்று கொள்வது சிறப்பாகும்.

2.
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை – குறு 147/1,2
வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாநிறமும்

பாதிரியில் மூன்று வகை உண்டு. அவை 1. பழுப்பு நிறம் (purple) 2. வெள்ளைநிறம் 3. பொன் நிறம்.
இவற்றில் இங்கு புலவர் குறிப்பிடுவது பழுப்பு வகைப் பாதிரியே. அதுவே மாமை நிறத்தை ஒட்டி உள்ளது.

3.
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற் 205/9-11
வளைந்த முள்ளையுடைய ஈங்கையின் நீண்ட கரிய அழகிய தளிரின் மீது
மிக்க நீருடன் விரைவாகப் பெய்யும் மழை பொழியும்போது உண்டாகும்
அழகிய நிறம் போன்ற இவளின் மாமையின் அழகுதானே

பொதுவாக, தளிர்கள் இளம் பச்சைநிறத்திலோ, மாநிறத்திலோ தான் இருக்கும். கருமையாக இருக்க
வாய்ப்பில்லை. எனவே ஈங்கையின் தளிரும் மாநிறத்ததுவே எனக் கொள்லலாம்.

4.1
மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர்
தாதின் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய
நுண் பல் தித்தி மாஅயோளே – அகம் 41/13-16
மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய குளிர்ச்சியையுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள
தாதுடன் கூடிய தேன் துளி தளிரில் ஒழுகியது போல
சிறிய பல தேமல்புள்ளிகளையுடைய நம் கிழத்தி

இங்கே குறிப்பிடப்படும் தளிர் இன்ன மரத்தது என்று குறிப்பிடப்படாவிடினும், இது மாந்தளிர் என்று கொள்வதில்
தவறில்லை. இதனை மாமரம் என்றே கொள்வர் ச.வே.சு
4.2
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க – அகம் 135/1
இந்தத் தளிரையும் மாந்தளிர் என்றே கொள்வர் ச.வே.சு
5.
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/1,2
நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின்
நாரை உரித்து நீக்கினாற் போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும்,

அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35
தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.

ஆம்பல் மலரில் இருவகை உண்டு. 1. நீல ஆம்பல், 2. செவ்வாம்பல். செவ்வாம்பல் தண்டு சிவப்பு நிறத்தில்
இருக்கும். இதனை உரித்தால் அது சற்றே நிறம் வெளுத்து இருக்கும். இதுவே குறைந்த மாமைநிறம்.
எனவே செவ்வாம்பல் தண்டின் சிவப்பு நிறத்துக்கும், அதனை உரித்த பின் இருக்கும் வெளிர் சிவப்புக்கும்
இடையிலான நிறமே மாமை என்பது பெறப்படும். இதனை மாந்தளிர் நிறம் எனக் கொள்ளலாம்.

ஆம்பல் மலரைப் பார்ப்பதே அரிது. அதன் தண்டை எடுத்து அதன் நாரை உரித்து யார் பார்ப்பர் என்று
எண்ணத்தோன்றும். இன்றைய கேரளாவில் நாரை உரித்த ஆம்பல் தண்டினை நறுக்கிச் சமையலுக்குப்
பயன்படுத்துவர். படத்தைப் பாருங்கள். புலவரின் உவமை கற்பனையல்ல என்பது தெரியும்.

6.
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணிநலம் சிதைக்குமார் பசலை – நற் 304/6,7
நீலமணி இடைப்பட்ட பொன் போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட என்
அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும் – பின்னத்தூரார் உரை.

இங்கே, மணி – பொன், மாமை – பசலை என்ற இரண்டு இணைகள் (pairs) உள்ளன. பசலையால் மாமை கெட்டது
என்பது உண்மை. ஆனால் மணியினால் பொன் கெட்டதா, பொன்னினால் மணி கெட்டதா என்பது விளக்கமாகக்
கூறப்படவில்லை. பசலை பொன் நிறத்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே, பொன் போன்ற பசலை
மணி போன்ற மாமையைக் கெடுத்தது என்று கொள்வதற்கு ஏதுவாகும். இங்கே மணி என்பது நீலமணி என்று
கொள்ளப்படுகிறது. எனவே, மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்ள ஏதுவாகிறது. ஆனால் ஔவை.சு.து.
அவர்களின் உரை,
மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல என் மாமைக்கவின் ஒளியிழக்குமாறு என்
அழகிய நலத்தைப் பசலை போந்து கெடுக்கும்( – ஔவை.சு.து)
என்று கூறுகிறது. இதனையே,
மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல, பசலை படர்ந்ததால் என் மாமைக்கவின் ஒளியிழந்தது
என்று கொள்ளலாம். எனவே மணி என்பது பசலைக்கும், பொன் என்பது மாமைக்கும் ஒப்பு ஆகின்றன. ஆனால்
மாமை பொன் நிறத்தது அல்ல. எனவே இங்கு மணியின் நிறமோ, பொன்னின் நிறமோ ஒப்பிடப்படாமல்,
பதித்தலும் படர்தலும் ஆகிய செய்கைகள் ஒப்பிடப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம். பதித்த மணி பொன்னின்
அழகைக் கெடுப்பது போல் படர்ந்த பசலை மாமையைக் கெடுத்தது என்று கொள்ளலாம்.
7.
இதே போன்று, ஆனால் இதற்கு மாறுபட்ட உவமையைக் கலித்தொகையில் காண்கிறோம்.
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/16,17
பலநாளும் நினைவு வருத்துகையினாலே பசலையாலே நுகரப்பட்டவளுடைய
பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண்.
அது செய்த பழிகள் உண்டோ? (இல்லையே) – நச்சினார்க்கினியர் உரை
மணி மிடை பொன்னின் மாமை என்ற நற்றிணை உவமை போல் அன்றி, பொன் உரை மணி அன்ன மாமை
என்று இங்குக் காண்கிறோம்.
பொன்னை உரைத்த மணியும், பசலை படர்ந்த மாமையும் ஒப்பிடப்பட்டுள்ளன. எனவே பசலை பொன்னுக்கும்,
மாமை மணிக்கும் ஒப்பிடப்பட்டுள்ளன.
பசலை பொன் நிறத்தது என்பது உண்மை. எனவே மாமை மாநிறத்தது எனக் கொள்ளலாம். இங்கே மணியை
நீலமணி என்று கொண்டால், மாமை கருமை நிறமாகிறது. ஆனால், இவ்வுரைக்கு விளக்கம்
எழுதிய பெருமழைப்புலவர், மணி – ஈண்டு நீலமணி, மாமை – மாநிறம் என்று எழுதுகிறார். மணி என்பது
நீலமணியாயின் அதனைப் போன்ற மாமை என்பது எவ்வாறு மாநிறம் ஆகும்?

எனவே, நச். உரைக்கு மாற்று உரை காணவேண்டும், அல்லது பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று விளக்கம்
காணவேண்டும்.

முதலில் நச். உரைக்கு மாற்று காண்போம்.
’பொன் உரை மணி அன்ன மாமை’ என்பதற்கு, ’பொன்னை உரைத்த மணியை ஒத்த’ என்று நச். உரை காண,
புலியூர்க்கேசியார், இதனை, ‘பொன்னிலே பொதிந்த மணி போன்ற அவளது தேமல்’ என்று பொருள்
கொண்டிருக்கிறார்.
செங்கை பொதுவன் அவர்கள், இதனை , ’பொன்னில் பதிக்கப்பட்டிருக்கும் மணிக்கல் போல அவளது மாமை
நிறக் கண் பசலை நோயால் வருந்துகிறது’ என்று பொருள் கொண்டிருக்கிறார்.
எனவே இங்கு மணி, பொன்னில் பொதிந்தது அல்லது மணி, பொன்னில் பதிக்கப்பட்டது என்று
கொண்டு, மாமையில் படர்ந்த பசலையைப் பொன்னிலே பொதிந்த மணிக்கு ஒப்பிடவேண்டியுள்ளது. இப்படிக்
கொண்டால், இது மேற்கூறிய நற்றிணை உவமை போல் ஆகும்.. அதன்படி, மாமை மாந்தளிர் நிறம் ஆகிறது
அடுத்து, பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று காண்போம்.
அவர், மணி – ஈண்டு நீலமணி, மாமை – மாநிறம் என்று எழுதுகிறார். இது குழப்பத்தைத் தரும் என்று கண்டோம்.
இப்போது,
திரு மணி புரையும் மேனி மடவோள் – நற் 8/8
என்பதற்கு, ஔவை.சு.து. அவர்கள்,
அழகிய மணி போலும் மேனியையுடைய இளமகள்
என்று பொருள் கொள்கிறார். அத்துடன்,
மணி, ஈண்டுச் செம்மணியின் மேற்று என்றும் விளக்குகிறார்.
ஆக, பொருத்தமான இடங்களில் மணி என்பது செம்மணியையும் குறிக்கும் என்றாகிறது. எனவே,
பெருமழைப்புலவர் மணி – நீலமணி என்று கொண்டிருப்பதைவிட ஔவை.சு.து. அவர்களின் விளக்கத்தை இங்குக்
கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. எனவே,
பொன் உரை மணி அன்ன மாமைக்கண் – கலி 48/16,17
என்ற அடிக்கு,
பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண்.
என்ற பொருளில், மணி என்பதைச் செம்மணி என்று கொண்டால், பொன்னிறப் பசலை படர்ந்த மாமையை
பொன் துகள் படர்ந்த செம்மணி என்று கலித்தொகைப் புலவர் கூறியிருக்கிறார் என்று கொள்வது பொருத்தமாகத்
தோன்றுகிறது. எனவே இங்கும், மாமை என்பது செம்மணியின் மாந்தளிர் நிறம் என்றாகிறது.
8.
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்ற என் மாமை கவினே – ஐங் 146
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள்
நறுமணத்தோடு கமழும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இன்பமானது, உறுதியாக, என் மாநிற மேனியழகு.

ஞாழல் மலர்ந்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் மாமைக் கவின் இனிக்கிறது என்கிறார்
புலவர். எத்தனையோ மலர்கள் இருக்க, புலவர் ஞாழல் மலரைத் தேர்ந்தெடுப்பானேன்? இந்த இரண்டுக்கும் ஏதோ
ஒற்றுமை இருப்பது போல் தெரிகிறது.
ஞாழல் மலர் பெரும்பாலும் பொன் நிறத்தில் இருக்கும். சிவப்பு நிற ஞாழலும் உண்டு.
செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை – அகம் 240/1
என்ற அகநானூற்று அடியால் இதனை அறியமுடிகிறது. படத்தைப் பாருங்கள்.

சிவந்த ஞாழல் மலர்கள் பூத்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் சிவப்பு நிறத்தை ஒட்டிய
மாந்தளிர் நிற மாமையின் கவின் இனித்திருப்பதில் வியப்பென்ன?

இதைத்தவிர, ஞாழலுடன் மாமையை முடிச்சுப்போடும் மேலும் இரண்டு பாடல்கள் உண்டு.
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே
தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே – ஐங் 103
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு
ஞாழலும் பூக்கும் குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்
இவளுக்கு உரியவனாக அமைந்துவிட்டான்; எனவே
இவளிடம் நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு.

எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்
தனி குருகு உறங்கும் துறைவற்கு
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 144
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில்
தனியே ஒரு நாரை உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி,
இப்போது பசந்துபோகிறது என் மாநிற மேனியழகு.

பாருங்கள், செந்நிற ஞாழல் மலர்கள் பூத்துக்கிடக்கும் அழகை, ஒரு பழுப்பு நிறக்கொக்கு கெடுப்பது போல
மாந்தளிர் நிற மாமையின் அழகைப் பொன்னிறப் பசலை கெடுக்கிறதாம்.

மாமை எனப்படும் மாந்தளிர் நிறம் இதுதான்.

மாயம்

மாயம் – (பெ) 1. பொய், falseness
2. வஞ்சனை, கபடம், deception, deceit
3. ஏமாற்று, treachery
4. பொய்த்தோற்றம், false appearance
5. அழகு, beauty
6. மாமை நிறம், the colour of tender mango leaf
7. மயக்கம், மந்திரம், வசியம், charm, spell
8. கனவு, dream, vision
1.
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி ——————-
——————- ————————
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294
தீயையும் தென்றலையும் ஒன்றுசேர ஆகாயம் பெற்றிருப்பதைப் போல,
நோயையும், இன்பத்தையும் கொண்டிருக்கிறதல்லவா!
பொய் இல்லை இது தோழி! ——————–
——————————— —————-
இலங்குகின்ற மலைநாடனின் அகன்ற மார்பு
2.
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற_கால் – கலி 2/3-5
கூற்றுவன் போல் சினங்கொண்டு, வஞ்சனையைச் செய்கின்ற அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது
3.
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம் மருள்வார் அகத்து – கலி 88/6,7
வேலை மெனக்கிட்டு உண்மையல்லாத பிதற்றல்களை இங்கே சொல்லாதே! அவற்றைக் கூறு உன்
ஏமாற்றுவேலையைக் கண்டு மயங்குவாரிடம்;
4.
பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/5,6
பகைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது
பல ஞாயிறுகளைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,
5.
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11
அழகிய இளம்புதல்வியின் மலர் போன்ற கண்கள் – பின்னத்தூரார் உரை
6.
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11
மாமை நிறமுடைய என் இளமகளின் மலர் போன்ற கண்கள் – ஔவை.சு.து. உரை
7.
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து – நற் 323/4
நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழியவிட்டு- பின்னத்தூரார் உரை
8.
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும்
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க
சேய் உயர் வெற்பனும் வந்தனன் – கலி 39/49-51
மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களின் பசலையும், ஊரார் பழிச்சொல்லும்,
பொய்யாகக் கனவில் காணும் சந்திப்புகளும் எல்லாம் ஒருசேர நீங்கிப்போகும்படியாக,
மிக உயர்ந்த மலைக்கு உரியவன் பெண்கேட்டு வந்தான்;

மாயவன்

மாயவன் – (பெ) திருமால், Lord Vishnu
பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர – கலி 145/63,64
அவளது தூக்கத்தை வாங்கிக்கொண்டு அவளை நினையாமற் போனவர் திரும்பி வரக்கண்டு,
திருமாலின் மார்பில் திருமகள் சேர்ந்தது போல் அவள் அவனிடம் சேர,

மாயவள்

மாயவள் – (பெ) மாமை நிறத்தவள், woman with a colour as that of a tender mango leaf
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/7,8
மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல,
அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க,

மாயோன்

மாயோன் – (பெ) 1. திருமால், Lord Vishnu
2. கரு நிறத்தவன், black coloured man
1.
மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591
திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில்,
2.
தூ வெள் அறுவை மாயோன் குறுகி – புறம் 291/2
தூய வெள்ளிய ஆடையையுடைய கரியவனை அணுகி

மாயோய்

மாயோய் – (வி.வே) 1. மாயவனே!, Oh! Lord Vishnu!
2. மாநிறத்தவளே!, Oh! woman with a colour as that of a tender mango leaf!
3. கருப்பு நிறத்தவளே!, Oh! dark coloured woman!
1.
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/10
மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்
2.
பருவரல் எவ்வம் களை மாயோய் என – முல் 21
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’, என்று
3.
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/38,39
மயில் கழுத்தின் நிறத்தையுமுடைய கருப்பழகியே! இந்த
வெயிலில் எங்கே விரைந்து செல்கிறாய்? இங்கே அருகில் பார்!

மாயோள்

மாயோள் – (பெ) மாமை நிறத்தவள், woman with a colour as that of a tender mango leaf
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் – நற் 139/7,8
நுனிசுருண்ட செழித்த கூந்தலையுடைய மாமைநிறத்தவளோடு
சேர்ந்து இனிமையை அனுபவித்த மலைச்சரிவையுடைய நல்ல ஊரில்

வல்லோன்
எழுதி அன்ன காண்_தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே – நற் 1460/8-11
சித்திரம் வரைவதில் வல்ல ஒருவன்
தீட்டிவைத்ததைப் போன்ற காண்பதற்கினிய அழகினையுடைய
மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவள் வருத்திய
மயக்கத்தையுடைய நெஞ்சமே! என் சொல்லை ஏற்றுக்கொள்ள விரும்பினால்

மாய்

மாய் – (வி) 1. மறை, hide, conceal
2. ஒளிகுன்று, lose brightness
3. கொல், kill
4. அழி, சிதை, destroy, devastate
5. முடிவுக்கு வா, come to an end
6. ஒழி, இல்லாமற்போ, cease to exist, disappear
7. இற, உயிர்விடு, die
8. தீட்டு, கூராக்கு, grind and sharpen
9. கெடு, தப்பு, become spoiled, fail
1.
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 452
மேகங்களில் மறையும் திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய

களிறு மாய்க்கும் கதிர் கழனி – மது 247
யானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,
2.
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை – நற் 321/5
மலையில் ஞாயிறு சேரும் கதிர்கள் மழுங்கிய மாலையில்
3.
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா – மலை 220
விழுந்தவரைக் கொல்லும் ஆழமான பொய்கையின் அருகே
4.
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/6
சுரத்தின்கண் தங்கியிருந்தபோது நமது உள்ளத்தின் திண்மை சிதையத் தோன்றிய மாலை
5.
பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து – அகம் 48/23
பகற்பொழுது முடியும் அந்தியாகிய ஞாயிறு மறையும் பொழுதிலே
6.
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் – அகம் 395/7
தீ கவர்ந்து உண்டமையால் மரங்களின் நிழல் ஒழிந்த நெறியில்
7.
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை – புறம் 242/5
வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு
8.
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர – அகம் 5/12-14
(சாணையால்) தேய்க்கப்பட்டது போல் மழுங்கிய நுனைகளை வெளியே காட்டி,
பாத்திகட்டியதைப் போல் இருக்கும் குடுமியை உடைய கூர்மையான கற்கள்
விரல்களின் நுனியைச் சிதைக்கும் நிரைத்த நிலையிலுள்ள வழிகள் உடைய

கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/6,7
வன்கண்மையுடைய மறவர் தம் அம்புகளைத் தீட்டியதாக
பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில்
9.
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன் – நற் 103/6,7
பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
குறிதப்பாத/கெடாத வேட்டையை மேற்கொண்டு சென்ற, கணவனான ஆண்நாய்

பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்
மாயா இயற்கை பாவையின் – நற் 201/10,11
பெரிய இந்த நிலம் நடுங்கி மேலே எழுந்தாலும், தன் அழகிய நல்ல வடிவம்
கெடாத தன்மையுள்ள கொல்லிப்பாவை போல

மாரன்

மாரன் – (பெ) மன்மதன், காமன், Kama, the god of love
கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடு
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி – பரி 8/118,119
கூர்மையான பற்களைக் கொண்டோரின் குவிந்த முலையில் அணிந்திருந்த பூண்களோடு
மன்மதனைப் போன்றவராகிய கணவன்மார்களின் மார்பில் அணிந்த அணிகலன்கள் கலந்திருக்க,

மாரி

மாரி – (பெ) 1. மழைக்காலம், rainy season,the monsoon
2. மழை, rain
3. மேகன், cloud
4. மழை நீர், rain water
1.
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன – பெரும் 49
மழைக் காலத்து மலை முகிலைச் சுமந்தாற் போன்று,
2.
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2
மழை காலம் தவறாமல் பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும்
3.
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் – கலி 131/21,22
கார்மேகமும் விரும்பும் கருங்கூந்தலையும், மதர்த்த பார்வையைக் கொண்ட அழகிய மைதீட்டிய கண்களையும்,
ஆழமான கடலில் பிறந்த முத்தின் அழகைப் போன்ற முறுவலையும் உடையவளே!
4.
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/1-3
குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!

மார்க்கம்

மார்க்கம் – (பெ) நடை, walking style
வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51
வெற்றிக்குக் காரணமான ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர்,

மார்பம்

மார்பம் – (பெ) மார்பு, chest, bosom
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல
இடைச் சுரத்து இறுத்த மள்ள – புறம் 254/2,3
யான் எழுப்பவும் நீ எழுந்திராயாய், நினது மார்பு நிலத்தைப் பொருந்த
சுரத்திடை மேம்பட வீழ்ந்த இளைஞனே

மார்பினை

மார்பினை – 1. (வி.வே) மார்பினையுடையவனே!, oh! you with (a broad) chest!
– 2. (பெ) மார்பினையுடையவன், (you) having your chest (smeared with sandal)
1.
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியா அளவை – சிறு 232-235
’வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும்,
‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்’ எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்,
நீ சில (புகழினைக்)கூறி முடிக்காத அளவில்
2.
ஆரம் கமழும் மார்பினை
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/10,11
சந்தனம் கமழும் மார்பினையுடையவனாகிய நீ
மலைச் சாரலிலுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்துக்கு நீ வருவது –

மார்பு

மார்பு – (பெ) 1. நெஞ்சு, bosom, chest
2. உயரமான, உருண்டையான பொருள்களின் கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி, வடிம்பு
the portion lower to the neck of a tall, cylindrical object
3. தடாகம், சுனை,
1.
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12
வானத்தைத் தொடும் மலைநாட்டினனின் மார்பு என்னை வருத்தியது என்று

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே – ஐங் 255/4
சிவந்த வாயினை உடையவள், மார்பினில் அழகுத்தேமலைக் கொண்டவள்
2.
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 243-247
எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைக்
கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,
ஏணிக்கும் எட்டாத மிக நெடிய வடிம்பினையும்,
தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய,
கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்

தானியங்கள் சேர்த்துவைக்கும் உயர்ந்த குதிர்களில், அதன் கழுத்துக்குக்கும் கீழ்ப்பட்ட பகுதி
இங்கே மார்பு எனப்பட்டது.
3.
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே – பரி 15/8-10
அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும்
மலர்களையுடைய அகன்ற சுனைகளையுடைய மேகங்கள் படியும் உச்சிகளையுடைய
குலமலைகள் சிலவே

இங்கு உள்ள மார்பின் என்ற சொல்லுக்குச் சுனைகள், தடங்கள் என்று உரைகள் கூறுகின்றன.
தமிழ்ப் பேரகராதியும் (Tamil Lexicon) அவ்வாறே குறிப்பிடுகிறது. ஆனால், இந்தச் சுனைகள்
மலையின் மார்புப்பகுதியில் (உச்சிக்கும் கீழே, அடிவாரத்துக்கு மேலே) இருப்பதால்
இங்கு மார்பு என்று குறிக்கப்பட்டிருப்பதற்கு எண்-2 -இல் உள்ள பொருளையும் கொள்ளலாம்.

மார்வம்

மார்வம் – (பெ) மார்பு, chest, bosom
மைந்தர் மார்வம் வழி வந்த – பரி 8/122
அந்த மைந்தரின் மார்பினைத் தழுவிப்பெற்ற இன்பத்தின் வழியாக வந்த பெருமகிழ்ச்சி

மாறன்

மாறன் – (1) 1. பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களிலொன்று, a title name of the Pandiya kings.
2. பாண்டிய மரபைச் சேர்ந்த சங்க காலக் குறுநில மன்னன், a chieftain of sangam period
with Pandiya lineage
1.
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்
உரு கெழு கூடலவரொடு வையை
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால் – பரி 24/91-93
அச்சம் வரக்கூடிய கொல்லும் தொழிலையுடைய யானைகளையும், புடைத்த தோள்களையும் உடைய பாண்டியன்
அழகு பொருந்திய தன் மதுரை மாந்தருடனே, வையையில்
வருகின்ற நீரில் புனலாடிய தன்மையை ஒப்பிடுங்கால்

மாறன் என்பது பாண்டியர் பெயர்களுள் ஒன்று. முடத்திருமாறன், பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்,
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், மாறன் வழுதி, கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, மாலைமாறன்,
ஆகியோர் மாறன் என்ற பெயர் கொண்ட சங்க காலப் பாண்டிய மன்னர்கள்
2
பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்
பெரும் பெயர் மாறன் தலைவனாக – மது 771,772
பொய்யாக்கப்படாத நல்ல புகழை உலகிலே நிறுத்தின, அலங்கரித்த மாலையினையும்,
பெரிய பெயரினையும் உடைய மாறன் (எனும் பழையன் தமக்குத்)தலைவனாயிருப்ப,

இந்த மாறன் மோகூர்ப் பழையன் மாறன் எனப்படுவான். இவன் ஒரு குறுநில மன்னன். இவன் பாண்டிய
மரபினன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்கு நண்பன். இவன் அவையகத்தே
இளம்பல் கோசர் என்பார் சிறந்த வீரராய்த் திகழ்ந்தனர்.

மாறு

மாறு – 1. (வி) 1. நீங்கு, cease
2. தவிர், விலகு, abstain, refrain
3. பண்டமாற்றாக வில், sell in exchange
4. வேறுபடு, become changed, altered
5. பின்னிடு, பின்வாங்கு, withdraw, retreat
6. இடம் வேறாகு, have a change of place
7. உரு, தோற்றம், தன்மை ஆகிய ஒன்றில் வேறாகு, be transformed, converted

– 2. (பெ) 1. மறுதலை, எதிர்ப்பக்கம், oppsoite side
2. மாறுபாடு, பகை, enmity
3. மாறானது, ஒவ்வாதது, that which is not acceptable, that which is unsuitable
4. கூற்று, பதில், statement, reply
5. ஒரே ஆள்/பொருள் இரண்டு செயல்களை மாறிமாறிச் செய்வது, one person or object
doing two things one after another continuosly, Do something in turns, alternate
6. வற்றி உலர்ந்த முட்கள், dry thorn
– 3. (இ.சொ) இடைச்சொல், a particle
1.1
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவன் – குறு 49/3,4
இப் பிறவி நீங்கப்பெற்று இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்,
1.2
தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி – பட் 3-6
தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழையைப் பெய்தலைத் தவிர்ந்து
மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற),
(குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்)
1.3
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனி சென்றனள் – குறு 269/5,6
உப்பை விற்று அதற்கு மாற்றாக வெண்ணெல் வாங்கி வருவதற்காக
உப்பு விளையும் உப்பளத்திற்குச் சென்றாள்

புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 159-163
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்,
சிறிய குழை அசைகின்ற காதினையும், மூங்கில் போன்ற தோளினையும்,
குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்,
மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி,
1.4
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 170,171
முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து,
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து
1.5
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம் – நற் 164/6-10
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னிட்டுத் திரும்பிச்செல்லும் பாலைவழியில்

ஒண் பொறி கழல் கால் மாறா வயவர் – பதி 19/3
ஒளிரும் புள்ளிகளையுடைய கழல் அணிந்த கால் முன்வைத்ததைப் பின்னால் எடுக்காத வீரர்கள்
1.6
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின் அகன்று மாறி
—————– ———————————–
நல் புறவின் நடை முனையின்
சுற வழங்கும் இரும் பௌவத்து
இறவு அருந்திய இன நாரை – பொரு 197-204
தளிர்விட்ட ஞாழலோடு, (ஏனை)மரங்களும் கூட்டமாய் உள்ள
அந்நாட்டை வெறுத்தனவாயின், அவ்விடத்தைவிட்டு அகன்று மாறிப்போய்,
——————————- ———————————————-
நல்ல முல்லைக் காட்டில் சென்றும் (அந்நில ஒழுக்கத்தையும்)வெறுத்தனவாயின்,
சுறாமீன் திரியும் கரிய கடலில்
இறவினைத் தின்ற திரண்ட நாரைகள்
1.7
பல் பூ செம்மல் காடு பயம் மாறி
அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு – பதி 30/26,27
பலவகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக்கிடக்கும் காடுகளின் பயன்படும் தன்மை மாறிப்போய்,
செவ்வரக்கு போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மண்மேடுகளைக் கொண்டு,
2.1
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம் – நற் 164/6-10
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னிடும் பாலைவழியில்

புறக்கொடுத்தல் என்பது முதுகாட்டிச் செல்லுதல். மாறு புறக்கொடுத்தல் என்பது அதன் மறுதலை. அதாவது,
முதுகைக் காட்டாமல் எதிரில் பார்த்தவாறே சிறிது சிறிதாகப் பின்னாக அடியெடுத்து வைத்துச் செல்லுதல்.

மாறு புறக்கொடுக்கும் – (நாற்றம் பொறாது) பின்னே சென்று நிற்கும் – ஔவை.சு.து. உரை

மாறு – ஏதுப்பொருள்பட வந்த இடைச்சொல் என்பர் ஔவை.சு.து. தம் விளக்கவுரையில்.
வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் இதனைக் காரணப் பொருள் உணர்த்தும்) இடைச்சொல்,
a particle which implies reason என்பார்

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரி பழம் கயிறு போல – நற் 284/9,10
ஒளிவிடும் ஏந்திய கொம்புகளைக் கொண்ட யானைகள் ஒன்றோடொன்று மாறாகப் பற்றி இழுத்த
தேய்ந்த புரிகளைக் கொண்ட பழைய கயிற்றினைப் போல – பின்னத்தூரார் உரை
களிறு மாறு பற்றிய – இரண்டு களிறுகள் இருதலையும் தனித்தனியே பற்றி ஈர்த்தலால்
2.2
ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 63-65
பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்,
கண்ணுக்கு அழகான கண்ணியினையும் உடையானும் ஆகிய கடிய தேரினையுடைய பாண்டியனின்
2.3
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 62
தன் அறிவிற்கு மாறானவற்றை நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய
2.4
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால்
தலை தொட்டேன் தண் பரங்குன்று – பரி 6/94,95
இந்த வையை ஆறு என்ற கூற்று எதனால்? என் கையால்
உன் தலையைத் தொட்டுக் கூறுகிறேன், குளிர்ந்த திருப்பரங்குன்றத்தின் மீது ஆணை
2.5
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/5,6
நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க

நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர
உண்கும் – புறம் 125/2-4
நெருப்பு தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய நிணம் அசைந்த கொழுவிய தடிகளை
பெரிய உடலிடத்தையுடைய கள் வார்ந்த மண்டையொடு முறை முறையாக ஒன்றற்கொன்று மாறுபட
உண்பேமாக
2.6
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் – புறம் 359/1
முற்றவும் கெட்டுத்தேய்ந்தழிந்த பல முட்கள் கிடக்கின்ற பக்கத்தில்

மாறு – வற்றியுலர்ந்த முட்கள் – ஔவை.சு.து. உரை விளக்கம்
3.
அம்ம வாழி தோழி நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன்
இன் இனி வாரா மாறு-கொல்
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/3
தோழியே கேள்! நம் ஊருக்கு
அடுத்தடுத்து வந்து நம்மோடு தங்கும் நறிய குளிர்ந்த மார்பினையுடையவன்
இப்போதெல்லாம் வருவதில்லையாதலாலோ என்னவோ
சிலவாய் ஒழுங்குபட்ட கூந்தலையுடைய என் நெற்றியில் பசலை பாய்ந்தது.

மாறு – ஏதுப்பொருட்டாகிய ஓர் இடைச் சொல் – பொ.வே.சோ. உரை விளக்கம்
(பார்க்க : 2.1)

அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/10,11
அன்னையானவள் எடுப்பித்த முருகவழிபாடு உன்
பொன்னைப் போன்ற பசலைக்கு பயன்படாததால்

மாறு – ஏதுப்பொருள்பட வந்ததோர் இடைச்சொல். ஔவை.சு.து உரை விளக்கம்

சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/12
சிறந்த தந்தையின் பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் –

மாறு – மூன்றனுருபின் பொருள்படுவதோர் இடைச்சொல். பின்னத்தூரார் உரை விளக்கம்

மாறுகொள்

மாறுகொள் – (வி) 1. மாறுபடு, எதிராகு, be opposed
2. பகைமைகொள், be inimical
3. வேறுபடு, be different
1.
தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி
குருதியொடு பறித்த செம் கோல் வாளி
மாறு கொண்டு அன்ன உண்கண் – குறு 272/4-7
தன் தமையன்மார்
முழக்கமிடும், மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த,
குருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்புகள்
எதிரிட்டு நின்றதைப் போன்ற மையுண்ட கண்களையும்
2.
மாறுகொண்டோர் மதில் இடறி – புறம் 387/5
பகைமைகொண்டோருடைய மதில்களைத் தகர்த்து
3.
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136
(குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, ஊறுகின்ற நீரையுடைய உயவைக்கொடி

நீரோடே மாறுகொள்ளுமாறு படர்ந்தன விடாய்க்காலத்தே உண்டார் வாய் நீர் ஊறுதற்குக் காரணமான
உயவைக்கொடி – நச். உரை

தாகத்தைத் தணிக்க நீரிலிருந்து மாறுபட்டுப் படர்ந்திருந்த,உண்டால் வாயில் நீர் ஊறும் தன்மை கொண்ட
உயவைக் கொடி. – பொ.வே.சோ. உரை

மாறுபடு

மாறுபடு – (வி) 1. மாறிப்போ, be changed
2. எதிராகு, be opposed
1.
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டு ஆங்கே மயங்குதி – கலி 91/19,20
நான் உன்னுடன் வேறுபட்டு நிற்கும்போது நெஞ்சு கலங்குகின்றாய்! உன் கைக்குள் அகப்பட்டுக்கிடந்தால்
மனம் மாறிப்போய் வேறு மங்கையர்பால் மயங்கித்திரிகின்றாய்!

நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் – மலை 241
ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக எட்டெடுத்துவைக்கும் காலடிகள் வழி மாறிப் போகலாவீர்
2.
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே
பூ போல் உண்கண் பொன் போல் மேனி
மாண் வரி அல்குல் குறு_மகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – குறு 101
விரிந்த அலைகளையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலகமும்,
மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,
இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இதற்கு ஒப்பாகமாட்டா –
பூப்போன்ற மைதீட்டிய கண்களும், பொன்னைப் போன்ற மேனியும்,
சிறப்பு மிக்க வரிகளைக் கொண்ட அல்குலும் உடைய தலைவியின்
தோள்கள் (தழுவுதலால்)மாறுபடும் நாளொடு எமக்கு-

தோள் மாறுபடுதலாவது – ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும், ஒருவர் வலத்தோள் மற்றவர்
இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல். – உ.வே.சா உரை விளக்கம்.

மாறுமாறு

மாறுமாறு – (பெ) பதிலுக்குப்பதில், tit for tat – An equivalent given in return
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/19,20
அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;
அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் பதிலுக்குப்பதில் அதிர முழங்கும்

மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
குன்றம் குமுறிய உரை – பரி 8/34,35
மணவிழா முரசுகள் முழங்க முழங்க, அம் முழக்கத்திற்குப் பதிலுக்குப்பதில் முழங்கும் உன்
திருப்பரங்குன்றம் முழங்கிய முழக்கம்;

சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப
அல்லாந்தான் போல பெயர்ந்தான் – கலி 111/20,21
அவன் சொல்லிய சொற்களுக்கெல்லாம், பதிலுக்குப்பதில் நான் சொல்ல,
மனம் கலங்கியவன் போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்,

மாற்கு

மாற்கு – (விகாரம்) மானுக்கு – மான்+கு – புணர்ச்சியில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய விகாரங்கள்,
Change in the letters of words in canti, of three kinds, viz., tōṉṟal, tirital, keṭutal
அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/7,8
பாலைவழியில் இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு விளைந்த பழம்
துள்ளிக்குதிக்கும் இளைய மானுக்கு உணவு ஆகும்

மாற்றம்

மாற்றம் – (பெ) வஞ்சினமொழி, World of challenge; vow
மாற்றம் மாறான் மறலிய சினத்தன் – புறம் 341/7
தான் கொண்ட வஞ்சின மொழிகளைத் தப்பானாய், போர்குறித்து உண்டாகிய சினமுடையனாய்

மாற்றலர்

மாற்றலர் – (பெ) பகைவர், enemies
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/42,43
திறனில்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மறப்பண்பும், உனக்குப் பகையாயினாருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!

மாற்றல்

மாற்றல் – (பெ) மாற்றுதல், changing
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம்
ஏகுவர் என்ப தாமே தம்_வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/9-12
வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில்
செல்வேன் என்கிறார் அவர்; தம்மிடத்தில்
இல்லையென்று கேட்போரின் இன்மையை மாற்ற முடியாத
இல்வாழ்க்கையை வாழமாட்டாதார்.

மாற்றார்

மாற்றார் – (பெ) பகைவர், enemies
மா இரு விசும்பில் பன் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி – பதி 64/12-14
கரிய பெரிய வானத்தே பலவாகிய விண்மீன்களின் ஒளி கெட்டுப்போக
ஞாயிறு எழுந்து தோன்றியதைப் போல, பகைவரது
மிக்க மாறுபாட்டைக் கெடுத்த நின்னுடைய வலிய தாளை வாழ்த்தி

மாற்றாள்

மாற்றாள் – (பெ) சக்களத்தி, co-wife, rival wife
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/34,35
தலைவியின் காணாமற்போனதாகச் சொல்லப்பட்ட அந்த நகைகளை அந்தப் பரத்தை மேனியில் அணிந்திருப்பதைக்
கண்டு,
நொந்துபோய் தலைவியின் மாற்றாள் இவள் என்று அந்தப் பரத்தையைக் கூர்ந்து நோக்க,

மாற்று

மாற்று – 1. (வி) 1. விலக்கு, தடு, prevent, obstruct
2. பதிலீடு செய், substitute, replace
3. வேறுபடுத்து, change, alter
– 2. (பெ) 1. நோயின் தீயவிளைவுகளை மாற்றும் மருந்து, remedy
2. கொல்லுதல், ஒழித்தல், killing, exterminating
3. மறுமொழி, reply
4. மறுதலை, மாறுபாடான நிகர், equal rivals
1.1.
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 81,82
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி
1.2.
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார் – மது 459
பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு
1.3
வச்சிய மானே மறலினை மாற்று – பரி 20/84
வசிகரிக்கும் மானே! இவ்வாறு எதிர்த்து உரையாடுவதை மாற்றிக்கொள்,
2.1
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே – குறு 377
மலர் போன்ற அழகிய மையுண்ட கண்களின் சிறப்புமிக்க நலம் தொலைய,
வளையல்கள் அழகிய மென்மையான தோள்களில் நெகிழ்ந்துபோனபோதும்
என் நோய்க்கு மாற்றான மருந்துஆகின்றது தோழி! உனக்குப் பொறுக்கமுடியவில்லையா?
நம்மால் அறிந்துகொள்வதற்கு முடியாத தலைவனோடு
நாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பு
2.2
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/52,53
உன்னைப் போற்றாதவரின் உயிரிடத்திலும், போற்றுவாருடைய உயிரிடத்திலும்
முறையே கொல்லுதலும் காப்பாற்றுதலும் செய்வதில்லை, உனக்கு
2.3
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/5
கடுமையாயிருப்போர்க்கு யாரால் சொல்ல முடியும் மறுமொழி?
2.4
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24
நினக்கு மறுதலையாகிய இரு வேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய்

மாற்றுமை

மாற்றுமை – (பெ) மாறுபாடு, எதிர்நிலை, contrariety
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமை கொண்ட வழி – கலி 12/16-19
பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து
உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை

மாற்றோர்

மாற்றோர் – (பெ) பகைவர், enemies
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை
உளன் என வெரூஉம் ஓர் ஒளி
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/5-7
கெடுதற்கரிய வலியினையுடைய பகைவர், பாசறைக்கண்ணே
உள்ளான் எனக் கேட்டு நெஞ்சு நடுங்குதற்கேதுவாகிய சிறந்ததோர் ஒளியானது
வெற்றியால் உயர்ந்த நெடிய வேலையுடைய என் தலைவன் பாலே உளது

மாலிருங்குன்றம்

மாலிருங்குன்றம் – (பெ) திருமாலிருங்குன்றம், a hill called azhagarmalai near Madurai
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் – பரி 15/22-24
சிலம்பாற்றினை அழகு செய்ய, அழகு பொருந்திய திரு என்ற சொல்லோடும்
சோலை என்ற சொல்லோடும் தொடர்மொழியாக வருகின்ற மாலிருங்குன்றத்தில்
மக்கள் தாம் விரும்பும் இச்சைகளை உன்முன்னே விதைத்து, அதன் விளைவான பயனைக் கொள்வர்;

மதுரைக்குக் கிழக்கே 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை
என்றழைக்கப்படும்.
அழகர் மலை என்று வழங்கும் இடம், இரண்டு அழகர்களுக்கும் உரிய தலமாக விளங்குகிறது.
ஒர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தரராஜப் பெருமாள்; மற்றொருவர், ‘என்றும் இளையாய் அழகியாய்’
என்று போற்றப்படும் முருகன்.
சோலைமலை, திருமாலிருஞ்சோலை மலை, திருமாலிருங்குன்றம் என்றும் இந்த மலைக்குப் பெயர்கள் உண்டு.
பரிபாடல் இதன் புகழைப் பாடுகிறது.
அழகர் கோயில் மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை ‘நூபுர கங்கை’ என்றும்
சொல்வர்.
மதுரையைச் சுற்றிச் சமணர்கள் வாழ்ந்த எட்டுக் குன்றுகளில் இது இருங்குன்றம் என்று அழைக்கப்படுகிறது.

மாலை

மாலை – (பெ) 1. அந்திநேரம், evening
2. பூ, மணிகள் போன்றவை தொடுக்கப்பட்டது
3. ஒழுங்கு, வரிசை, order, row
4. இயல்பு, தன்மை, nature, quality, proprty
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் – பொரு 96,97
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
2.
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த
பல் நூல் மாலை பனை படு கலி_மா – குறு 173/1,2
பொன்னைப்போன்ற நிறமுடைய ஆவிரையின் புதிய பூக்களைச் செறித்துக் கட்டிய
பலவாகிய நூல்களையுடைய மாலையை அணிந்த பனைமடலால் இயற்றிய குதிரையில்

நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184
நூலால் சட்டத்தே கட்டின முத்துமாலையை உடைய கொற்றக்குடை

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
3.
அருவி தாழ் மாலை சுனை – பரி 8/16
அருவிநீர் தங்கும் வரிசையாக அமைந்த சுனை;

முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் – நற் 58/6
முரசு இருக்கும் கட்டிலிடத்தே ஏற்றி வரிசையுற வைத்த விளக்கினைப் போன்ற
4.
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/112-114
திங்களானது, மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் கூட்டித்தள்ள, மதுரை நகருக்குள்
தங்கும் இயல்பினை நினைத்து, அவ்விடத்தைவிட்டு நீங்கிப்போகும் செயலால், புதிய இயல்பினையுடைய
நீராட்ட நாளுக்கான அணிகலன்களை நீக்கி, சிரிக்கும் இயல்பினையுடைய மலர்ந்த பூக்களைச் சூடிக்கொண்டு,

குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை – கலி 9/4,5
ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய
அந்தணர்களே!
வெப்பம் மிக்க இந்தக் காட்டு வழியில் செல்வதை இயல்பாகக் கொண்டு ஒழுகிநடப்பவர்களே!

மால்

மால் – 1. (வி) 1. மயங்கு, கல, get mixed up
2. மயங்கு, மனம் கலங்கு, get baffled, be distressed
3. மயக்கு, மருளவை, bewilder, mystify
– 2. (பெ) 1. திருமால், Lord Vishnu
2. பெருமை, greatness
3. கருமை, blackness
4. மயக்கம், மருட்சி, மனத்திரிபு, confusion,
1.1
மான்ற மாலை வழங்குநர் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/4,5
இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்
1.2
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/2-5
கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மனம் கலங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,

மான்று – மயங்கி; தன் பெட்டையைப் பிரிதலால் ஆண் கழுகு மயங்கி – புலவர் மாணிக்கம் உரை
1.3
ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/6-10
மிடுக்கான நடையையும்
மிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி
இரக்கமுள்ள நெஞ்சத்தோடு, தனது புகழ் நெடுந்தொலைவுக்கு விளங்க
தேர்களை வாரிவழங்கும் அவனது அரசிருக்கை காண்போரை மயங்க வைப்பது போல
மேகங்கள் மழையைப் பெய்து நிலைகொண்டு என்னை மயக்குகின்றன.
2.1
நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 1-3
சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
(மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல,
2.2
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,
2.3
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 487,488
(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், கரிய கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்
2.4
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 95-97
கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து)
2.5
மால் கொள
———————— —————————————-
கொடு வாய் பேடை குடம்பை சேரிய
உயிர் செல கடைஇ புணர் துணை
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/6- 12
எனது காம மயக்கம் பெருகிட,
———————– ————————————–
வளைந்த வாயையுடைய தன்னுடைய பேடையைக் கூட்டுக்கு வரும்படி
உயிரே போகும்படியாக கூவிக்கொண்டு, தான் சேரும் துணையை
மீண்டும் மீண்டும் விடாது அழைக்கிறது, துயரத்தைக் கொண்ட அழகிய குருகு –

சங்க இலக்கியத்தில் மால் என்ற சொல் 54 முறை வருகிறது. அவற்றுள் மால் வரை என்ற தொடர் 26 முறை
வருகிறது என்பது உற்றுநோக்கற்குரியது.

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 21
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 205
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் – பெரும் 330
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/10
மாயோன் அன்ன மால் வரை கவாஅன் – நற் 32/1
மால் வரை மறைய துறை புலம்பின்றே – நற் 67/2
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை – நற் 225/5
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி – நற் 373/3
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி – குறு 95/1
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/4
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/9
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து – கலி 44/2
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/8
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே – புறம் 151/12
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து – புறம் 200/4
பொன் படு மால் வரை கிழவ வென் வேல் – புறம் 201/18
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் – புறம் 374/5

மால்பு

மால்பு – (பெ) கண்ணேணி, ஒற்றை மூங்கிலில் கணுக்களில் புள்(படி) செருகியிருக்கும் ஏணி,
பொதுவாக மலைநாட்டு மக்கள் தேன் எடுக்கப் பயன்படுத்துவது,
ladder made of a single bamboo with steps inserted at the joints,
used by hill people to take honey.
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை – மலை 315-317
ஆண்கருங்குரங்கு(ம்) (ஏறமுடியாதென்று)கைவிட்ட, பார்ப்பதற்கு இனிய உயர்ந்த மலையில்,
உறுதியாக நட்டுச் சார்த்திய கணுக்களைக்கொண்ட மூங்கிலே வழியாகக்கொண்டு,
பெரும் பலனாக எடுத்துச்சேர்த்த இனிய (தேன் கூட்டினின்றும்)கொள்ளையாகக் கொண்ட பொருட்காக

பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/5,6
பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின் மேல்
அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல

மாள

மாள – (இ.சொ) முன்னிலை அசைச்சொல், An expletive used with verbs in second person
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே – நற் 11/5
பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/32
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10

மாழா

மாழா – (வி) 1. மயங்கு, become unconscious
2. மயங்கு, be confused, bewildered
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேர் அஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி
—————– ———————————-
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 85-98
இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்,
குற்றம் அற்ற பொன்(னால் செய்த)வட்டில் நிறைய, பல முறையும்
வார்த்துத் தந்துகொண்டே இருக்க, (வழிப்போன)வருத்தம் போம்படி,
நிறைய உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி,
மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது – மேலும், அம் மன்னனுடைய
செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து,
————————————- —————————————————-
வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து,
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி,
1.
மாழாந்து – மயங்கி என்னும் பொருட்டு; ஈண்டுப் பொறிகள் மயங்குதற்குக் காரணமான துயிலை ஆகுபெயரான்
உணர்த்தி நின்றது – பொ.வே.சோ.உரை.
2.
நச். இதனை,
காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
மாழாந்து –
அவனைக் கண்ட மற்றை நாட்காலத்தில்
என்னைக் கண்டவர் …… …மருளுதற்குக் காரணமான வண்டுகள் இடையறாது மொய்க்கின்ற தன்மையையும்
யான் கண்டு மயங்கி
என்று பொருள்கொள்வார்.

மாழை

மாழை – (பெ) 1. இளமை, youth
2. மாவடு, tender unripe mango fruit
1.
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் – கலி 131/12,13
இளமையும், மடமையும் உள்ள பெண்மானின் தன்மையை வென்றவளே! நீ உட்கார்ந்திருக்கும் ஊஞ்சலைத்
தள்ளிவிட்டு நான் தாழ்த்தி ஆட்டிவிட, நெடுநேரம் ஆடிக்கொண்டிருப்பாய்,
2.
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8
மாவடுப் போன்ற கண்ணினையும் முத்துவடம் அசையும் அழகிய முலையினையும்

மாழ்கு

மாழ்கு – (வி) சா, die, மயங்கு, faint
பூ கொடி அவரை பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய
புன் தலை சிறாரோடு உகளி – அகம் 104/8–11
பூவையுடைய அவரைக் கொடியிலுள்ள பொய்த்தோல் போன்ற
உள்ளீடல்லாத வயிற்றினையுடைய வெள்ளாட்டின் வெள்ளிய குட்டிகள்,
மயங்கிக்கிடந்தாலொத்த தாழ்ந்து தொங்கும் பெரிய செவியினைக் கொண்டனவாய்,
புற்கென்ற தலையினையுடைய சிறுவர்களோடு குதித்துச் சென்று

மாவன்

மாவன் – (பெ) ஒல்லையூர் தந்த பூதப்பண்டியன் அரசவையில் இருந்தவன், a person in the chamber of council
of a Pandiyan king
மலி புகழ்
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் – புறம் 71/9-12
மிக்க புகழையுடைய
வையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களில்
பொய்யாத புதுவருவாயையுடைய மையலென்னும் ஊர்க்குத் தலைவனான
மாவனும் நிலைபெற்ற எயிலென்னும் ஊரையுடைய ஆந்தையும்

இவன் பாண்டிய மன்னன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நண்பர்களுள் ஒருவன்.
மாவன் என்னும் பெயர் குதிரையை உடையவன் என்ற பொருளைத் தருகிறது. எனவே இந்த மாவன்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் குதிரைப்படைத் தலைவன் எனலாம் என்கிறது விக்கிப்பீடியா கட்டுரை.

மாவிலங்கை

மாவிலங்கை – (பெ) ஒரு சங்க கால ஊர், a city during sangam period.
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை
உடையை – புறம் 176/6-8
பெரிய மாவிலங்கை என்னும் ஊர்குத் தலைவன், சிறிய யாழையுடைய
வறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனைத்
துணையாக நீ உடையை.

இன்றைய திண்டிவனம் பகுதி சங்க காலத்தில் ஓய்மாநாடு என்று அழைக்கப்பட்டது. அந்த நாட்டை ஆண்ட
ஓய்மான் நல்லியக்கோடன் என்ற அரசனின் தலைநகரம் மாவிலங்கை.

மிகீஇ

மிகீஇ – (வி.எ) சொல்லிசை அளபெடை – மிகுந்து, (force) exceeding
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல
உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/11-13
நீண்ட மேகத்தின் முழக்கம் போல இளமையான களிறுகள் வன்மை மிக்கு, தன்
காலில் அகப்பட்ட முளையாகிய மூங்கிலின் கவர்த்த கிளையைப் போல,
தப்பிப்பிழைப்பது எவ்வாறு உன்னைச் சினமூட்டியவர்கள்?

மிகீஇ – மிக்கு – வலிமை மிகுந்து – முனைவர் அ. ஆலிஸ்

மிகீஇயர்

மிகீஇயர் – (வி.எ) சொல்லிசை அளபெடை , மிகுந்து வரும் பொருட்டு, in order to be plentiful
அருவி அற்ற பெரு வறல் காலையும்
நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர்
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை
செம் நீர் பூசல் அல்லது – பதி 28/9-13
அருவிகள் வற்றிப்போன பெரும் வறட்சியான காலத்திலும்
– உயர்ந்து, கரையை மீறிக்கொண்டு இறங்கும் அகன்ற பரப்புள்ள பேரியாறு பாயும்
சிறப்புப் பொருந்திய அகன்ற நிலங்களில் இடங்கள்தோறும் பரந்து மிகும்பொருட்டு
காய்ந்த இலைதழைகளைச் சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் வருவதுபோன்ற மிகுந்துவரும் வெள்ளத்தின்
சிவந்த நீர் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி

மிகுபு

மிகுபு – (வி.எ) மிகுந்து, செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், (with the elegance) increased
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு
நம்_வயின் புரிந்த கொள்கை
அம் மா அரிவையை துன்னுகம் விரைந்தே – அகம் 154/13-15
ஓட்டுவாயாக தேரினை, பாகனே! சீர் மிக்கு
நம்மிடத்து விரும்பிய கொள்கையினையுடைய
அழகிய மாமை நிரத்தையுடைய நம் தலைவியைச் சென்று அடைவோம், விரைந்து

மிகுப்ப

மிகுப்ப – (வி.எ) மிகுதியாக்கிக்கொள்ள, to augment
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப
வாள் அமர் உழந்த நின் தானையும்
சீர் மிகு செல்வமும் ஏத்துகம் பலவே – புறம் 161/30-32
நினது தாள் நிழற்கண் வாழ்வார் நல்ல ஆபரணத்தைப் பெருக்கிக்கொள்ள
வாளால் செய்யும்போரின்கண்ணே உழக்கப்பட்ட நினது படையையும்
நினது சீர்மிகு செல்வத்தையும் பலபடப் புகழ்வேம்

மிகூஉம்

மிகூஉம் – (வி.எ) மிகும் என்பதன் இன்னிசை அளபெடை, plentiful
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து – நற் 46/9
துன்பம் மிகுதியாக இருக்கும் அரிய வறண்ட பாலை நிலத்தைக் கடந்து

மிகை

மிகை – (பெ) மிகுதி, அதிகம், excess
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது – பட் 210
(தாம்)கொள்வனவற்றை அதிகமாகக் கொள்ளாது, கொடுப்பனவற்றைக் குறையாகக் கொடாமல்

மிகைபடு

மிகைபடு – (வி) அதிகப்படு, increase, be excessive
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து – பதி 63/9
பகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள் மிகுந்திருக்க, அருளுள்ளம் கொண்ட தமிழ்வீரர்களை நிறையக் கொண்டு

மிசை

மிசை – 1. (வி) 1. உண்ணு, 2. பருகு, 3. தின்னு, eat, drink, eat away
– 2. (பெ 1. உணவு, food
2. உச்சி, உயரமான இடம், மேடான இடம், top, elevation, mound
3. மேலே, elevated place
4. வானம், sky
– 3. (இ.சொ) ஏழாம் வேற்றுமை உருபு, locative case marker
1.1.
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2
மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை
1.2
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்
1.3
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப – புறம் 160/1,2
உட்குப் பொருந்திய ஞாயிற்றினது ஒள்ளிய சுடர் தின்னப்பட்ட
முஇந்த புல்லையுடைய காடு தளிர்ப்ப
2.1
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/8
பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்
2.2
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 172-175
மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்
2.3
மிசை படு சாந்தாற்றி போல எழிலி
இசை படு பக்கம் இரு பாலும் கோலி
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட – பரி 21/30-32
மேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல, மேகங்களின்
முழக்கம் எழுகின்ற திசையில் இரு சிறகுகளையும் விரித்துக்கொண்டு
ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மயில் இடம்பெயர்ந்து ஒன்றாக ஆட,pl,
2.4
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின்- கலி 46/20
மழைத்துளியை விரும்பிய வேட்கையால் வானத்தில் பாடித்திரியும் பறவையைப் போல
3.
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை

மிசைவு

மிசைவு – (பெ) உணவு, food
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் – புறம் 236/1,2
முசுக்கலை கழித்துண்டலாற் பீறிய முழவு போலும் பெரிய பலாப்பழம்
வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாலைக்கு இட்டுவைத்துண்ணும் உணவாம்

மிச்சில்

மிச்சில் – (பெ) 1. மீந்துபோனது, எஞ்சியிருப்பது, remainder, leftover
2. ஒருவர் உண்டபின் உண்ணாது விட்டுச்சென்ற உணவு, எச்சில்பட்ட உணவு,
leavings of a meal
1.
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது – குறி 206,207
விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே,
உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்
2.
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில்
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் – நற் 290/2,3
கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை
ஓய்ந்துபோன நடையையுடைய முதிய காளை ஆவலுடன் தின்னும் ஊரைச் சேர்ந்தவனின்

புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை
குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலை
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் – நற் 168/3-5
தேனீக்கள் மொய்த்ததால் கசிந்த இனிய தேன், கீழே பாறையின் மேலுள்ள குழிகளில் வழிய,
அதனைக் குறவர்களின் சிறுவர்கள் உண்டபின் எஞ்சியதைப்
புல்லிய தலையைக் கொண்ட மந்தியின் வலிய குட்டிகள் நக்கும்

மிஞிறு

மிஞிறு – (பெ) வண்டு, தேனீ, beetle, honey bee
1.
இது எழுப்பும் ஓசை சீறியாழின் இசையைப் போல் இருக்கும்.
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் – புறம் 308/1,2
பொற்கம்பியினை ஒத்த முறுக்கடங்கின நரம்பினையும்
மின்னலைப்போலும் தோலினையும் வண்டிசை போலும் இசையினையுமுடைய சீறியாழ்
2.
சுவை மிக்க பழங்களின் நறுமணத்தால் அந்தப்பழங்களையும் மொய்த்திருக்கும்
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி – பதி 60/4,5
வண்டுகள் புறத்தே மொய்த்துநிற்கவும், இனிய சுவையில் மாறுபடாது,
அரம்பத்தால் அறுக்கமுடியாத மரத்தில் உண்டாகிய சுவையான கனியாகிய
3.
தும்பி, வண்டு, மிஞிறு ஆகியவை வெவ்வேறானவை.
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர – பரி 8/23
விரும்புகின்ற தும்பியும், வண்டும், மிஞிறும் ஆரவாரிக்க, சுனைகளில் பூக்கள் மலர்ந்து நிற்க,

நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத – கலி 33/22,23
யாழ் நரம்பின் இனிய இசையைத் தாளம் கெடாதவாறு நிறுத்த உதவும் குழலோசை போல்
இனிதாய் இசைக்கும் தேனீக்களோடு தும்பிகளும் ஒலித்தபடியே தேனை அருந்த,
4.
இது நிறத்தில் காமனை ஒத்தது. காமன் நிறம் கருமை.
மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் – கலி 26/3
சுறாமீன் கொடியைக் கொண்ட காமனின் நிறம் போன்ற வண்டுகள் மொய்க்கும் காஞ்சியும்,
5.
யானையின் கன்னத்தில் (கவுள்) வடியும் மத நீரை (கடாம்) இவை மொய்க்கும்.
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை – அகம் 159/16
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள – அகம் 207/8
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து – புறம் 22/6

மிஞிலி

மிஞிலி – (பெ) ஒரு சங்ககால வீரன், A warrior of sangam period
இவனைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.
1.
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன – நற் 265/3-5
சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவனான,
பொலிவுள்ள தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும்
பாரம் என்னும் ஊரைப் போன்ற
2.
கறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்கு
ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/9-14
உரல் போலும் அடியினையுடைய யானையைஉடைய நன்னனது பாழியிலுள்ள
பலியிடற்கு அரிய தன்மையுடைய அஞ்சத்தக்க பேய்க்கு
ஊட்டுதலை ஏற்றுக்கொண்ட வாய்மை பொருந்திய மிஞிலி என்பான்
புட்களுக்குப் பாதுகாவல் ஆகிய பெரும் புகழினையுடைய
வெள்ளம் போன்ற சேனையினையுடைய அதிகன் என்பானைக் கொன்று மகிழ்ந்து
ஒள்வாள் அமலை என்னும் வென்றிக்கூத்தை ஆடிய போர்க்களப் பூசலைப்போல
3.
ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என – அகம் 181/3-7
பகைவர்
பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிக்க பெரிய சேனைகளையுடைய
போர் அடுதல் வல்ல மிஞிலி என்பான் அழிக்கின்ற வேலைச் செலுத்தியதால்
முருகனைப் போன்ற வலிமையுடனே போரிட்டு, போர்க்களமெல்லாம் குருதியால் சிவந்துபோகுமாறு
ஆய் எயினன் என்பவன் தோற்று மடிய
4.
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள்வாள் மயங்கு அமர் வீழ்ந்து என – அகம் 208/5-9
வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான்
அருள் பொருந்தும் வாழ்கையினையுடைய பாழி என்னும் ஊரின்கண்ணதாகிய
ஓடையை அணிந்த யானையினையும் இயன்ற தேரினையும் உடைய மிஞிலி என்பானோடு
நண்பகற் பொழுதில்செய்த போரின்கண் புண் மிக்கு
ஒள்ளிய வாட்படை மயங்கிய போரினாலேயே வீழ்ந்தனனாக
5.
கொடி தேர்
பொலம் பூண் நன்னன் புன்னாடுகடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் – அகம் 396/2-6
கொடியணிந்த தேரினையும்
பொன்னாலாய பூண்களையுமுடைய நன்னன் என்பான் புன்னாடு என்னும் நாட்டிலுள்ளாரை வெகுண்டெழுந்தானாக
யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் நகரிடத்தே நின்று
அஞ்சாதீர் என்று கூறிய ஆஅய் எயினன் என்பான்
போரில்வெல்லும் பயிற்சியையுடைய மிஞிலி என்பானோடு பொருது
தன் உயிரையும் தந்தான்.

அகம் 148-இல் சில பதிப்புகளில் மிஞிலியொடு என்பது ஞிமிலியொடு என்று காணப்படுகிறது.

கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/7,8
கடிய செலவினையுடைய குதிரைகளையுடைய ஆய் எயினன் என்பான்
நெடிய தேரையுடைய ஞிமிலி (மிஞிலி) என்பானோடு போர்புரிந்து களத்தில் இறந்தானாக

இவற்றினின்றும் நாம் பெறுவது:
மிஞிலி என்பவன் அரசன் நன்னனின் படைத்தலைவன். சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் ஆங்காங்கே
அவ்வப்போது பல மன்னர்கள் இருந்தனர். அவர்களில் இந்த நன்னன் பெண்கொலை புரிந்த நன்னன் எனக் கொள்வது
பொருத்தமானது.
மிஞிலி பாரம் என்னும் நகரைக் காவல்புரிந்துவந்தான். அவன் வில்லோர் பெருமகன் என்று போற்றப்படுகிறான்.
மிஞிலி “வாய்மொழி மிஞிலி” என்று போற்றப்படுகிறான். சத்தியம் தவறாதவன் என்பது இதன் பொருள்.
இவன் ‘இகல் அடு கற்பு’க் கலையில் வல்லவன்..போரில்வெல்லும் பயிற்சியையுடையவன் என்பது இதன் பொருள்.
ஆய் எயினனைப் போலவே அதிகன் என்பவனும் பறவைகளைப் பாதுகாத்துவந்தான்.
மிஞிலி நன்னனுக்குத் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் பெரும்படையுடன் வந்து தாக்கிய அதிகனைப்
பாழி நகரில் இருந்த பேய்த்தெய்வத்துக்கு (காளிக்கு) உயிர்ப்பலி கொடுத்தான்.
இந்த அதிகன் என்னும் பெயர், ஆய் எயினனின் இன்னொரு பெயராதல் வெண்டும் என்பார் ந.மு.வே.நாட்டார்.
ஆய்-எயினன் என்பவன் வெளியன் வேள் என்பவனின் மகன். வேண்மான் என்பது வேள் மகன் என்னும்
பொருளைத் தரும். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் இந்த ஆய்-எயினன், மிஞிலியால்
கொல்லப்பட்டான். புன்னாட்டின் தலைநகரம் வாகை. இந்த வாகைநகரை மீட்கும் போர் இவ்வூரில் நடைபெற்றதால்
இதனை வாகைப்பறந்தலை என்றனர்.
புன்னாடு என்பது கொள்ளு விளையும் நாடு. இது புன்செய் நாடு ஆதலால் புன்னாடு எனவும் வழங்கினர்.
தேர்ப்படையுடன் வந்த பொலம்பூண் நன்னன் இதனைத் தனதாக்கிக்கொண்டான். புன்னாட்டு அரசனை
“அஞ்சவேண்டாம்” என்று கூறிக்கொண்டு ஆய்-எயினன் என்பவன் நன்னனின் படைத்தலைவனான மிஞிலியைத்
தாக்கினான். ஆனால் ஆய்-எயினன் போரில் மாண்டான்.

மிடறு

மிடறு – (பெ) 1. கண்டம், தொண்டை, குரல்வளை, throat, larynx, trachea
2. கழுத்து, neck
1.
கரும் தார் மிடற்ற செம் பூழ் சேவல் – அகம் 63/7
கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழின் சேவல்

அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி
காமரு தகைய கான வாரணம் – நற் 21/7,8
அரித்தெழும் குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான பொறிகளைக் கொண்ட
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
2.
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/9
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்

மிடல்

மிடல் – (பெ) வலிமை, strength, might
தொடங்கல்_கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் – கலி 2/1,2
உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,
அடங்காத அவுணர்களின் வலிமையை அழிக்குமாறு, தேவர்கள் வந்து வேண்டியதால்

மிடா

மிடா – (பெ) பெரிய மண்பானை, large earthen vessel
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி – குறி 201
விழா கொண்டாடினால் போன்று, பெரிய பானையில் (வைக்கப்பட்ட)சோற்றை

மிடை

மிடை – 1. (வி) 1. அணிவகு, draw up in an array
2. முடை, பின்னு, சேர்த்துக்கட்டு, braid, tie together
3. நெருங்கு, செறி, be close together, dense
4. கல, be mingled, mixed
– 2. (பெ) 1. இடம், place
2. பரண், raised platform
1.1.
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு
புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி – மது 369,370
கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே(பகைவரை)
புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்து
மிடை தோல் – அணிவகுக்கப்பட்ட யானை – பொ.வே.சோ.உரை
1.2.
ஒலி கா ஓலை முள் மிடை வேலி – நற் 38/8
ஒலிக்கின்ற காய்ந்த பனையோலையும், முள்ளும் சேர்த்துக்கட்டிய வேலியை ஒட்டி
பின்னத்தூரார் உரை, முடை < மிடை - பின்னுதல் - தமிழ்ப்பேரகராதி கடவுள் மரத்த முள் மிடை குடம்பை - அகம் 270/12 தெய்வத்தினையுடைய மரத்திடத்தவாகிய முள்ளால் மிடையப்பெற்ற கூட்டில் ந.மு.வே.நாட்டார் உரை மென் கழை கரும்பின் நன் பல மிடைந்து பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி - அகம் 346/7,8 மெல்லிய தண்டினையுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் கட்டிக் குறுக்கேவைத்து அடைத்து பெரிய நெற்பயிரையுடைய செய்யாகிய பசிய பள்ளங்களில் நீரைத் தேக்கி ந.மு.வே.நாட்டார் உரை 1.3 மடலே காமம் தந்தது அலரே மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே - நற் 152/1,2 பனைமடலால் செய்யப்பட குதிரையைக் காமம் தந்தது; ஊரார் பேசும் பழிச்சொற்களோ நெருங்கிய இதழ்களையுடைய எருக்கம்பூமாலையைத் தந்தது; - ஔவை.சு.து.உரை கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட பல் பூ மிடைந்த படலை கண்ணி - பெரும் 173,174 கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும், 1.4 மடலே காமம் தந்தது அலரே மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே - நற் 152/1,2 பனைமடலால் செய்யப்பட குதிரையைக் காமம் தந்தது; ஊரார் பேசும் பழிச்சொற்களோ பல பூக்களைக் கலந்து கட்டிய எருக்கம்பூமாலையைத் தந்தது; - பின்னத்தூரார் உரை 2.1 நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை நொதுமலாளன் கதுமென தாக்கலின் - நற் 50/4,5 நெடிய நிமிர்ந்த தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில் நமக்கு அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட கொடு மிடை - வளைந்த இடம் - பின்னத்தூரார் உரை 2.2 நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை பேணி நிறுத்தார் அணி - கலி 104/27,28 அன்றைக்குரிய விண்மீன்கள் அருகே சூழ்ந்திருக்கும் திங்களைப் போல, பரண் மீது விரும்பி நிறுத்தினர் அழகாக;

மிண்டு

மிண்டு – (வி) நெம்பு, குத்திக்கிளப்பு, turn over with a lever, dig out
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 92-94
உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் கீழ்மேலாகக் குத்திப் புரட்டி,
கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்

மிதப்பு

மிதப்பு – (பெ) மிதந்து வருவது, that which comes floating
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் – அகம் 224/5-7
காற்றின் வேகத்தை ஒத்த விரைந்த ஓட்டத்தினையுடைய குதிரைகளின்
பால் கடையுங்கால் நுரையைப் போல எழுந்து மிதந்துவரும் பெரிய வெண்ணெய் உருண்டையை ஒத்த
மிக்க வெள்ளியதான வாயின் தெவிட்டலாய பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை

மிதவை

மிதவை – (பெ) 1. தெப்பம், float
2. ஒரு வகை உணவுப்பொருள், a kind of preparation of food
1.
வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் – பரி 6/35
வெண்மையான சாரம் அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும்
2.1.
செ வீ வேங்கை பூவின் அன்ன
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் – மலை 434-436
2.1.1
இதனைப் பலவாறாகத் திரித்தும், மாற்றி எழுதியும் நச்சினார்க்கினியர் பொருள்கொள்வார்.

செ வீ வேங்கை பூவின் அன்ன அவரை – சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினையொத்த
நிறத்தையுடைய அவரை விதை
வேய் கொள் அரிசி – மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசி
சுவல் விளை நெல்லின் அரிசி – மேட்டுநிலத்தே விளைந்த நெல்லின் அரிசி
சொரிந்த மிதவை புளிங்கூழ் – இவற்றைப் புளிக்கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங்கூழை
இவர் மிதவை என்பதற்குக் குழைவான (சோறு) என்று பொருள்கொள்கிறார்.
2.1.2
இதனை ஆற்றொழுக்காகவே, இருக்கிறபடியே, பொருள்கொள்வார் பொ.வே.சோமசுந்தரனார்

சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினை ஒத்த
மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசியினாலாய சோற்றின்கண் சொரிந்த
மேட்டு நிலத்தின் விளைந்த நெல்லின் அரிசியை விரவி அவரை விதையினாற் சமைத்த புளிக்கரைத்த
புளியங்கூழை
இவர் மிதவை என்பதற்குச் சோறு என்று பொருள்கொள்கிறார்
2.1.3
சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினைப்போன்ற மூங்கில் அரிசிச் சோற்றில், மேட்டு நிலத்தில் விளைந்த
நெல்லின் அரிசியை விரவி அவரை விதையாற் புளியைக் கரைத்துச் செய்த புளிங்கூழை –
ச.வே.சு – உரை
இவரும் மிதவை என்பதற்குச் சோறு என்றே பொருள்கொள்கிறார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்தப்பகுதி, ’புல் வேய் குரம்பை’-களில், அதாவது குடிசைகளில் வாழும்
முல்லைநில மக்களின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக்கூறும் வகையில் அவர்களின் வீட்டுக்கு இரவில் சென்றால்
கிடைக்கக்கூடியது என்று புலவர் குறிப்பிடுவது.
2.2
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை – அகம் 37/12-14
2.2.1
கொள்ளும் பயறும் அழகு பொருந்தப் பாலுடன் கலந்து ஆக்கிய, வெள்ளிக்
கம்பியை ஓர் அளவாக நறுக்கிய வெள்ளிய அவிழ்க் கஞ்சியை
வளைத்துண்ட கை போதும் எனத் தடுத்த பின்னர்
– ந.மு.வே.நாட்டார் உரை.
இவர் மிதவை என்பதற்குக் கஞ்சி என்று பொருள்கொள்வார். பின்னர் மிதவை – கூழ் என்று விளக்குவார்.
2.2.2
கொள்ளும் பயறும் பாலோடு விரவிச் சமைத்த,
வெள்ளிக்கம்பியை ஓரளவாகத் துணித்துப்போகட்டாற் போன்ற வெள்ளிய பருக்கைகளைக் கொண்ட கூழையும்
வயிறாரப் பருகி, இனி வேண்டா என்று வளைந்த கையால் தடுத்த பின்றை
– பொ.வே.சோமசுந்தரனார் உரை
இவரும் மிதவை என்பதற்குக் கூழ் என்று பொருள்கொள்வார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இது பாலைத்திணைப் பாடலாயினும், உழவர்கள் ’வைகு புலர் விடியலாகிய’
அதிகாலையில் நெல் கதிரடிக்கும் களத்தில் வேலை செய்கையில், இந்தக் கஞ்சியை வாங்கிக் குடித்துவிட்டுத்
தம் பணியைத் தொடர்வர் என்று பாடல் கூறுகிறது.
2.3
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
பெரும் சோற்று அமலை நிற்ப – அகம் 86/1,2
2.3.1
உழுத்தம் பருப்புடன் கூட்டிச்சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு
பெரிய சோற்றுத் திரளையுடைய உண்டல் இடையறாது நிகழ
– ந.மு.வே.நாட்டார் உரை
2.3.2
உழுத்தம் பருப்புப் பெய்து சமைத்த கொழுவிய களியாகிய மிதவையோடு மிக்க சோற்றினையும் சுற்றத்தாரும்
பிறரும் உண்ணுதலாலே உண்டாகும் ஆரவாரமும் இடையறாது நிற்பவும்
– பொ.வே.சோமசுந்தரனார் உரை
விளக்கம் – உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை என்பது ஒருவகைத் துணை உணவு; அஃதாவது உழுத்தம்
பருப்புப் பொங்கல் என்றவாறு.
எனவே இருவரும் மிதவை என்பதற்குப் பொங்கல் என்றேபொருள் கொண்டிருக்கின்றனர்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்த நிகழ்ச்சி, பாடலில், ’கனை இருள் அகன்ற கவின்பெறு காலை’-யில்
நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
2.4
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340/14,15
2.4.1
பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெல்லின் மாவைத்
தயிரிட்டுப் பிசைந்த கூழினைக் கொடுப்போம் உனக்கு
– ந.மு.வே.நாட்டார் உரை
இங்கு, தயிர் மிதி மிதவை மா ஆர்குநவே என்று பாடங்கொண்டு, கூழினை உன் குதிரைகள் உண்பனவாகும்
என்று பொருள்கொள்கிறார்.
2.4.2
தயிர் மிதி மிதவை – gruel mixed with curds – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு
2,4.3
பச்சையான மீனை விற்றுப் பெற்ற வெண் நெல்லினது மாவைத் தயிர்விட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை
உன் குதிரைகள் உண்ணத் தருவோம்.
ச.வே.சு – உரை.
இவர், தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே என்று பாடங்கொண்டும் ,குதிரைகளுக்கு என்று வலிந்து
பொருள்கொள்கிறார்.
இங்கும் மிதவை என்பதற்குக் கூழ் என்றே பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது.

இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, தலைவன் இரவில் தங்கினால் இரவு உணவாகத் தலைவன் தனக்கோ,
தன் குதிரைக்கோ தலைவியிடம் பெறும் உணவாகவே இந்த நெய்தல் திணைப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.
2.5
கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் – புறம் 215/1-5
2.5.1
கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்
தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த
வேளையினது வெள்ளிய பூவை வெள்ளிய தயிரின்கண் பெய்து,
இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும்
அவரை கொய்வார் நிறைய உண்ணும்
ஔவை.சு.து. உரை
விளக்கம் – வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத்
தாளிதம் செய்யப்பட்ட புளிங்கூழ் ஈண்டு அம்புளி மிதவை யெனப்பட்டது.
2.5.2
பிளவைக் கொண்ட வரகுக் கதிரின் அரிசியைக் குற்றி வடிக்கப்பெற்ற சோற்றையும் பூப்பொடி எருப்போலக்
கிடக்கும் தெருவில் புழுதியில் மலர்ந்த வேளைப் பூவினைத் தயிரில் கலந்து ஆயர்மகள் ஆக்கிய இனிய
புளிங்குழையும் அவரை பறிப்பார் நிரம்ப உண்ணும்
ச.வே.சு – உரை.

இங்கும் நாம் கவனிக்கவேண்டியது இந்த மிதவை ’ஆய்மகள்’ சமைத்தது, அதாவது, இடையர் வீட்டு மக்கள்
உண்ணுவது.
2.6
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – மலை 416,417
2.6.1
பல ஆட்டினங்களையுடைய திரள்களிலே இராக்காலத்தையுடையிராய்ச் செல்லின்
பாலும் பாற்சோறும் நுமக்கு என்று சமையாமல் தமக்குச் சமைத்திருந்தவற்றைப் பெறுகுவீர்
– நச்சினார்க்கினியர் உரை.
2.6.2
. பொ.வே.சோமசுந்தரனாரும் இதனையே பொருளாகக் கொள்வார்.
பின்னர், விளக்கத்தில், மிதவை – பாற்சோறு, இனி, மிதவை வெண்ணெயுமாம் என்பார் அவர்.

இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, இந்த மிதவை இடைக்குல மக்களின் இரவு உணவு என்பதை. இரவில்
திடீரென்று அவர்கள் வீட்டுக்குப் போனாலும், உடனே கிடைப்பது.

மேற்கண்ட குறிப்புகளினின்றும் நாம் பெறுவது :
1. மிதவை என்ற உணவுப்பொருள் குறிப்பது: 1) சோறு, 2) கூழ் அல்லது கஞ்சி, 3) பொங்கல், 4) பால்சோறு,
5) வெண்ணெய்.
2. இது 1) அரிசியினால் செய்யப்படுவது, 2) கொள்ளும் பயறும் கலந்து செய்வது, 3) உழுந்தங்களியினால் ஆனது,
4) அரிசிமாவினால் ஆனது, 5) வரகுச்சோறு, வேளைப்பூ கடைந்தது ஆகியவை கலந்தது.
3. இது உழைப்பாளிகளான நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் (middle/lower middle class people) உணவு.
4. இந்த உணவு காலையிலோ, இரவிலோ உண்னப்படுகிறது.
5. எதிர்பாராமல் திடீரென்று வீட்டுக்கு வருகிற விருந்தாளிகட்கு உடனடியாக எடுத்து உண்ணக்கொடுப்பது.

எந்தவோர் உரையாசிரியரும் இந்த உணவுப் பொருள் ஏன் மிதவை எனப்படுகிறது என்பதற்கான விளக்கம்
அளிக்கவில்லை. மிதவை என்பதன் அடிச் சொல் மித (float). மிதப்பது மிதவை என்ற பொருளில் நீரின் மேல்
மிதக்கும் தெப்பம் போன்றவைகளை மிதவை எனலாம். பரிபாடலில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதைக் கண்டோம்.
ஆனால் இந்த உணவுப்பொருள் எதன் மீது மிதக்கிறது?
பொதுவாகச் சிற்றூர்களில் உள்ள உழைப்பாளிகள் வீட்டில் ஒருநேரம் மட்டும்தான் சமையல் நடக்கும். அவரவர்
தொழிலைப் பொருத்து, காலையிலோ, மாலையிலோ ஒருநேரம் சமைப்பர்கள். அவ்வாறு காலையில் சமைத்து
மீந்ததை மாலையிலோ, மாலையில் சமைத்து மீந்ததைக் காலையிலோ உண்பார்கள். ஆக்கிய சோறு
கெட்டுவிடாமல் இருக்க அதன்மேல் நீர் ஊற்றி வைப்பார்கள். சில இடங்களில் இதனை வெந்நிப்பழசு என்பார்கள்.
சில சமயங்களில் இந்தப் பழைய சோறும் கெட்டுப்போய்விடும்.
எனவே சோறைக் குழைவாக ஆக்கி, கைச்சூட்டில் உள்ளங்கையில் உருட்டி, உருண்டைகளாக ஆக்கி, ஒரு பெரிய
சட்டியில் மோரிலோ, புளிச்சதண்ணி எனப்படும் புளித்த நீரிலோ போட்டுவிடுவார்கள். தேவைப்படும்போது ஒரு
உருண்டை அல்லது ஒரு மிதவையை எடுத்து, பால், தயிர், மோர், புளிச்சதண்ணி அல்லது புளிப்பாகக் கடைந்த
கீரை ஆகியவற்றை ஊற்றிகூழாகப் பிசைந்துகொண்டு உண்பார்கள். அந்தக் காலத்தில் மிகவும் ஏழைமக்கள்
கேப்பைக் களியைக் கிண்டி, இவ்வாறு உருண்டைகளாக்கி ஏதாவது ஒரு நீர்மப்பொருளில் மிதக்கவிட்டு
வைத்திருப்பார்கள். அதுவும் இடையர் வீடுகளில் பாலுக்கா பஞ்சம்? திடீரென்று இரவில் விருந்தாளிகள்
வந்துவிட்டால், அந்த நேரத்தில் அடுப்புப் பற்றவைக்க மாட்டார்கள். இருக்கிறது பால், மிதக்கிறது களி மிதவை.
பாலும், மிதவையும் பண்ணாது கொடுத்துவிடுவார்கள். பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் என்ற
மலைபடுகடாம் வரிக்கு இதுதான் சிறந்த பொருளாகலாம்.
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற ஒரு பாடல் உண்டு. நெல்லை யாராவது சோறாக ஆக்குவார்களா? நெல்லைக்
குற்றி அரிசியாக்கி, அதனை நீரிலிட்டு வேகவைத்த சோறுதான் நெல்லுச்சோறு. கேப்பைக்களி என்கிறோம்.
கேப்பையைத் (கேழ்வரகு) திரித்து,மாவாக்கி, நீரில் கரைத்து, கிண்டிவிட்டு வேகவைத்து, சற்று இறுகிய பின்னர்
உருண்டையாக்கினால் அது கேப்பைக்களி. அதை மோரில் மிதக்கவிட்டால் களி மிதவை.
’வெண்ணெல் மாஅ தயிர் மிதி மிதவை’ என்ற அகநானூறு அடிக்கு இவ்வாறுதான் பொருள்கொள்ளவேண்டும்.
எனவே, பச்சரிசிச் சோற்றைக் குழைய ஆக்கியோ, அரிசி அல்லது பயறுகளின் மாவைக் களியாகக் கிண்டியோ,
சூடாக முதலில் உண்டுவிட்டு, மீந்ததை உருண்டைகளாக்கி ஒரு நீர்ப்பொருளில் மிதக்கவிடுவதே மிதவை.
பின்னர் இதனைப் பாலிலோ, தயிரிலோ, புளித்தநீரிலோபுளிப்பான கீரைக்கடைசலிலோ கரைத்துக் கூழாகக்
குடிப்பது வழக்கம்.
இந்தப் பொருளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மிதவை என்றசொல் வரும் பாடல்வரிகளைப் படித்தால் பாடல்
அடிகளின் முழுப்பொருளையும் நுண்ணிதின் உணரலாம்.

மிதி

மிதி – 1. (வி) 1. கால் பதி, அடி வை, tread on, walk, step
2. காலால் துவை, அழுத்து, tread down, trample on
– 2. (பெ) மிதித்துத் திரட்டப்பெற்ற கவளம், Food trampled and formed into a ball
1.1.
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன – பெரும் 207
மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த

மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே
1.2.
நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394
நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து காலால் துவைத்த கவளத்தை
2.
நெய்ம் மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை – அகம் 400/7
நெய் பெய்து மிதித்து இயற்றிய கவளத்தை வெறுத்த கொழுவிய சோற்றை உண்ணுதலையுடைய

மிதுனம்

மிதுனம் – (பெ) மிதுனராசி, Gemini of the zodiac;
புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப – பரி 11/6,7
புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில்
கார்த்திகை உச்சமாக நிற்க

மின்

மின் – 1. (வி) மின்னு, விளங்கு, ஒளிர், பிரகாசி, glitter, shine, gleam, sparkle
– 2. (பெ) 1. ஒளி, சுடர், பிரகாசம், light, flash, glitter
2. மின்னல், lightning
– 3. (இ.சொ) முன்னிலை ஏவல் பன்மை விகுதி, A verbal suffix of the imperative plural;
1.
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5
விளங்குகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து
மின் இரும் பீலி – மின்னுகின்றதும், கருநிறமமைந்ததுமாகிய மயிலிறகு – பொ.வே.சோ. உரை
2.1
மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 168,169
ஒளி மின்னும்
நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையின்
2.2
மின் நேர் மருங்குல் குறு_மகள் – அகம் 126/21
மின்னலையொத்த இடையினையுடைய இளைய தலைவியின்
3.
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/34,35

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25

எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14

மின்னு

மின்னு – 1. (வி) 1 ஒளிவிடு, ஒளிர், சுடர், விளங்கு, shine, glitter, gleam, glisten, flash
2. மின்னல் அடி, emit lightning
– 2. (பெ) மின்னல், lightning
1.1
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கரும் கல் கான்யாற்று அரும் சுழி – நற் 292/6,7
ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் ஒளிரும்
கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும்
1.2
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மா மழை கடல் முகந்தனவே – நற் 329/10,11
பெரிய வானம் அதிரும்படியாக மின்னலடித்து
கூட்டமான பெரிய முகில்கள் கடல்நீரை முகந்துகொண்டுவருகின்றன
2.
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு – பெரும் 484
பகலில் பெய்கின்ற துளிமழையின்கண் மின்னல் ஓடினாற் போன்று,

மின்னுக்கொடி

மின்னுக்கொடி – (பெ) மின்னல், lightning
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 665,666
கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று
ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து

மின்மினி

மின்மினி – (பெ) ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி, firefly
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி
சிறு பல் மின்மினி போல பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட – அகம் 202/2-8
மெல்லிய தலையினையுடைய இளைய பிடி இனத்துடன் இன்பமடைய
புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண் யானை
கற்களை இடத்தே கொண்ட பக்க மலையில் கையை உயர்த்தி பெருமூச்செறிதலால்
வேங்கை மரத்தினது நல்ல கொத்துக்களிலுள்ள நறுமணமுடைய பூக்கள், கொல்லன்
துருத்தியை மிதித்து ஊதும் உலையில் பிதிர்ந்து எழும் தீப்பொறி போலப் பொங்கி எழுந்து
சிறிய பலவாய மின்மினிப்பூச்சிகளைப் போல பலவும் ஒருங்கே
நீலமணியின் நிறத்தின் ஒத்த பெரிய புதரில் பரவி விழும்

மிரியல்

மிரியல் – (பெ) மிரியம், மிளகு, pepper
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை – பெரும் 78-80
சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பலாப்பழத்தை ஒப்ப, மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய

மிறை

மிறை – (பெ) வளைவைச் சரிசெய்யும் அமைப்பு, the structure for straightening a bent rod
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக
திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/5-7
போரில்பகைவரை மேற்செல்லாதவாறு தடுத்து, தான் முன்னேநின்று வாளால் வெட்டி வீழ்த்தின
களிறாகிய பிணத்தினது கொம்புகளையே அமைப்பாகக் கொண்டு
கோணிய கூரிய வாளை நிமிர்த்துக்கொண்டு

வாள் திரிந்ததாயினும் அதன் வாய் மடியாமையின் எயிற்றின் இடையே தொடுத்து வளைவு போகத்
திருத்தினான் என்பர் என்கிறார் ஔவை.சு.து. அவர்கள்.
அதாவது, போரில் யானையின் துதிக்கையை வெட்டி யானையை வீழ்த்திய வீரனின் வாள் வளைந்துவிட்டது.
வளைந்த வாளை, விழுந்துகிடக்கும் யானையின் இரண்டு தந்தங்களுக்கு நடுவே செருகி, அந்த வாளின்
வளைவைச் சரிசெய்கிறான் அந்த வீரன். எயிறு என்பது இங்கே யானையின் தந்தங்கள்.
வளைந்து போன நீண்ட இரும்புக் கம்பிகளைச் சரிசெய்வதற்காக, நட்டுக்குத்தாக இறுக்கப்பட்ட இரண்டு சிறிய கம்பி
அல்லது முளைகளுக்கு நடுவே அந்தக் கம்பியைச் செருகி கம்பியின் வளைவினை நிமிர்ப்பார்கள்.இந்த அமைப்பே
இங்கு மிறை எனப்படுகிறது எனலாம்.

ச.வே.சு அவர்கள் மிறை என்பது தீட்டுப்பலகை என்பார். வாளைத் தீட்டிக் கூர்மையாக்குவது
தீட்டுப்பலகை. அந்தத் தீட்டுப்பலகையின்மீது வாளை வைத்து சம்மட்டி அல்லது சுத்தியலால் தட்டி வளைவை
எடுப்பார்கள்.
இங்கு யானையின் கொம்புகளின் மீது வாளை வைத்து எதனாலோ அடித்து வாளின் நெளிவைச் சரிவெய்வதாகக்
குறிப்பிடப்படவில்லை.
எனவே படத்தில் காட்டியவாறு, வளைவைச் சரிசெய்யும் இரண்டு சிறிய கம்பிகளைக் கொண்ட அமைப்பு என்பதே
மிறை என்பதற்கான பொருள் எனக் கொள்ளலாம்.

படத்தில் உள்ள யானையின் துதிக்கையை நீக்கிவிட்டுப் படத்தைப் பாருங்கள். அதுதான் வெட்டப்பட்டுவிட்டதே!
யானையின் தந்தங்களுக்கிடைய சிவப்பாகக் காட்டப்பட்டுள்ளதுதான் வீரனின் வாள்.

ஔவை.சு.து. அவர்கள் மிறை என்பதற்கு வளைவு என்று பொருள்கொள்வார். தமிழ்ப்பேரகராதியும் அவ்வாறே
கொள்கிறது.
ஒரு கை இரும்பிணத்து எயிறு மிறை ஆக திரிந்த வாய் வாள் திருத்தா, என்பதில் மிறை என்பதனை எயிறு
என்ற சொல்லுடன் இணைத்து மேற்கூறிய விளக்கத்தில் பொருள்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் ஔ.சு.து. அவர்கள் இதனை,

ஒரு கை இரும் பிணத்து எயிறு,
மிறையாக திரிந்த வாய் வாள் திருந்தா

எனப் பிரித்து, மிறையாக என்பதனை வாளுக்கு ஏற்றிச் சொல்வார்.
அவர் கூற்றின்படி, களிறாகிய பிணத்தினது கோட்டிடையே
வளைவாகக் கோணிய கூரிய வாளை நிமிர்த்திக்கொண்டு
என்று அவரின் உரையில் காண்கிறோம்.

இனி,
கம்பராமாயணம், பாலகாண்டத்தில் மிறை என்பது ஒரு வினைச்சொல்லாக வருகிறது.
ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின – கம்ப – பாலகாண்டம் – 43
பயந்து ஓடிய அரக்கர்களை; அவர்களைக் கொல்லுமாறு ராமபிரானால் ஏவப்பட்ட கொடிய அம்புகள்;
உரிய இலக்கைப் போய்ச் சேர்ந்தன; அவர்களது குறையுடல்களான கவந்தங்கள் விறைத்து நின்று ஆடலாயின;

இங்கே மிறைத்து என்ற சொல்லுக்கு விறைத்து என்று பொருள்கொள்ளப்பட்டுள்ளது. விறைத்தல் என்பது
வளைவு இல்லாமல் நேராக நிமிர்ந்திருத்தல். எனவே, மிறை என்ற பெயர்ச்சொல் வளைவு இல்லாமல் நேராக
நிமிர்த்தும் ஓரமைப்புக்குத்தான் பொருந்தி வரும்.

மிறை என்ற வினைச்சொல்லுக்கு, துன்புறுத்துதல், விறைத்தல். மிடுக்காயிருத்தல், துன்பப்படுதல். பாடுபடுதல்
என்ற பொருள்களே பேரகராதியில் உள்ளன. வளை(த்)தல் என்ற பொருளில்லை. ஆனால் மிறை என்ற
பெயர்ச்சொல்லுக்கு மட்டும் அச்சம், குற்றம், வருத்தம், வேதனை, அரசிறை ஆகிய பொருள்களோடு
வளைவு என்ற ஒரு பொருளையும் சேர்த்துக்கொள்கிறது. இது பொருத்தமானதாகத் தெரியவில்லை.

யானையின் துதிக்கையை வெட்டிய வாள் வளைந்தபோது, இறந்து விழுந்த யானைக் கொம்புகளிடையே வாளைக்
கொடுத்து நிமிர்த்திய காட்சியைப் போலவே சீவக சிந்தாமணியிலும் இரண்டு காட்சிகள் வருகின்றன. அங்கே
மிறைக்கொளி திருத்தினான் என்ற தொடருக்கு வளைவினைத் திருத்தினான் என்றே உரையாசிரியர்கள் பொருள்
கொள்கின்றனர். அவ்விடங்களிலும் மிறைக்கொளி என்ற தொடருக்கு மிறையாகக் கொண்டு என்று பொருள்
கொள்வது சிறப்பாகத்தெரிகிறது.

புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள் வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே – சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – 284

குஞ்சரம் குனிய நூறி தடாயின குருதி வாள் தன்
நெஞ்சகம் நுழைந்த வேலை பறித்து வான் புண்ணுள் நீட்டி
வெம் சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு
அஞ்சி மற்ற அரசர் யானை குழாத்தொடும் இரிந்திட்டாரே – சிந்தாமணி – மண்மகள் இலம்பகம் – 2293

மிலேச்சர்

மிலேச்சர் – (பெ) துருக்கர், people from Beluchisthan
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக – முல் 65,66
உடம்பை ஆட்டிப் பேசும், (வாய்)பேசாத நாவினையுடைய (ஊமைகள்)
சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக

மிலேச்சர் – துருக்கர். இவர் பெலுச்சித்தானத்தினின்றும் வந்தவர் என்றும் பெலுச்சர் என்பதே மிலேச்சர் எனத்
திரிந்து வழங்கிற்றென்றும் கூறுப என்பார் பொ.வே.சோ. அவர்கள்.
இவர்கள் போர்ப்பாசறையில் அமைக்கப்பட்ட மன்னனின் பள்ளியறைக் காவலர் என முல்லைப்பாட்டு கூறுகின்றது.
இவர்கள் பேசமுடியாதவர்களாக இருந்திருப்பர் போலும். எனவே சைகையினால் பேசுவதையே ‘உடம்பின்
உரைக்கும் உரையா நாவின்’ என்கிறார் புலவர் என்பர்.
ஆனால் இவர்கள் வெளிநாட்டினராதலால், தமிழ் மொழி தெரியாத காரணத்தால், சைகையில் பேசினர் என்பதால்
உடம்பின் உரைக்கும் என்று புலவர் கூறுகிறார் என்றும் கூறுவர்.

யவனர்களின் மேற்சட்டையை மெய்ப்பை என்பர்.

மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 60,61

என்று இதே முல்லைப்பாட்டு யவனர் சட்டை பற்றிக் கூறுகிறது. இந்த யவனரின் உடையினின்றும் மிலேச்சரின்
உடை வேறுபட்டதாக இருந்ததால் இதனைப் படம் என்கிறார் புலவர்.

இன்று நாம் சட்டை ‘போடுவது’ என்று சொல்கிறோம். அன்றைய நாளில் சட்டைக்குள் ‘புகுவதாக’ச்
சொல்லியிருக்கின்றனர். மெய்ப்பை புக்க யவனர் – படம் புகு மிலேச்சர்.

மிலை

மிலை – (வி) அணி. சூடு, wear, put on
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் – புறம் 24/8
மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட தலைமாலையைச் சூடிய ஆடவர்

தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 115-116
தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,
அழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி

மிளிர்

மிளிர் – (வி) 1. ஒளிர், பிரகாசி, சுடர்விடு, shine, gleam, glitter, sparkle
2. பிறழ், புரளு, turn, roll
3. கீழ்மேலாகு, be upset, turn topsy-turvy
4. புரட்டித்தள்ளு, roll, turn over
1.
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர
உருமு சிவந்து எறியும் பொழுதொடு – நற் 104/9,10
பாம்புகளை உடைய மலைப் பிளவுகளையுடைய உயர்ந்த மலைகள் ஒளிர்ந்து மின்னும்படியாக
இடியேறு சினந்து இடிக்கும் பொழுதோடு
2.
மலங்கு மிளிர் செறுவின் – புறம் 61/3
விலாங்குமீன் பிறழ்கின்ற செய்யின்கண்ணே
3.
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 92-94
உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் கீழ்மேலாகக் குத்திப் புரட்டி,
கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்
4.
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/9,10
காற்றோடு கலந்த பெருமழை பெய்யும்போது
பெரிய மலைப்பாறைகளைப் பெயர்த்துத்தள்ளும் பேரிடியினும் கொடியதாகும்

மிளிர்ப்பு

மிளிர்ப்பு – (பெ) புரட்டிவிடுதல், rolling, turning over
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல் – கலி 45/4
பெரிய மலையையே புரட்டிவிடுவதைப் போன்று காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்யும் நேரத்தில்

மிளிர்வை

மிளிர்வை – (பெ) குழம்பிலிடுங் கறித்துண்டு, Pieces of flesh and vegetables in sauce
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/4,5
கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை
உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்

மீன்குழம்பில் கிடக்கும் மீன்துண்டுகளைத்தான் இங்கு மிளிர்வை என்கிறார் புலவர். மிளிர் என்றால்
சுழலு, புரளு என்ற பொருள் உண்டு. போர்க்களத்தில் வாள்கள் சுழலுவதை,

கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/10

என்கிறது புறநானூறு. கொதிக்கிற குழம்பில் புரண்டு புரண்டு சுழன்று வெந்த மீன்துண்டுகள் அல்லது
கறித்துண்டுகளே மிளிர்வை எனப்படுகின்றன.

மிளை

மிளை – (பெ) 1. காவற்காடு, Wood, forest, serving as a defence
2. குறுங்காடு, thicket, copse
3. காவல், watch, guard
4. ஒரு நாடு, a province
1.
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் – புறம் 21/5,6
வெயிற்கதிர் நுழையாத மரம் செறிந்த காவற்காட்டினையுடைத்தாய்
அணைதற்கரிய சிற்றரண்களால் சூழப்பட்ட கானப்பேர் என்னும் அரண்
2.
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று – அகம் 228/9
பிரம்பு காடாக வளர்ந்திருக்கும் சாரல் பொருந்திய வழியிலே
3.
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் – மலை 409,410
சங்கு (போன்ற வெண்மையான)பசுக்களின் இனிய பாலை, கிடையைக் காவல் சூழ்கின்ற இடையர்களின்,
வளையல்கள் அணிந்த பெண்கள், (நீவிர்)மகிழும்படி கொண்டுவந்து (உள்ளங்கையில்)ஊற்றுகையினால்
4.
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மட பிணை – அகம் 133/16,17
மிளை என்னும் நாட்டின் பாலை நெறியிலீரமுடைய மோட்டு நிலத்தே தழைத்த
வரிகளையுடைய மரலைக் கடித்துண்ணும் மடப்பத்தையுடைய பெண்மானுடன்

மிழற்று

மிழற்று – (வி) மென்மையாகப்பேசு, speak softly and gently
இனிமையான குரலில் பேசு, speak with a sweet voice
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/15,16
புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,

மிழலை

மிழலை – (பெ) 1. மென்மையான/இனிமையான பேச்சு, soft/sweet talking
2. மிழலைக்கூற்றம், சோழநாட்டின் ஒரு பகுதி, a section of the chozha country
1.
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் – நற் 209/5
மழலைச் சொல் கொண்ட அழகிய இளமகளின் மென்மையான பேச்சான இனிய குரலை
2.
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு – புறம் 24/18,19
பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது
நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக்கூற்றத்துடனே

மிழலைக்கூற்றம் அல்லது மிழலைநாடென்பது சோழ நாட்டின் கடற்கரைப் பகுதியாம்.

மீ

மீ – (பெ) 1. மிகுதி, abundance
2. மேன்மை, உயர்வு, greatness, eminence
3. மேல், மேல்பரப்பு, upper side, surface
4. மிகுந்த உயரம், great height,
1.
இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் – குறி 27
பகைமையை மிகுதியாகச் செலுத்தும் இரு பெரிய அரசர்களின்
2.
வென்றி ஆடிய தொடி தோள் மீ கை
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/12-14
வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும்,
பகைவர் ஏழுபேரின் கிரீடப்பொன்னால் செய்த பதக்கம் அணிந்த வெற்றித்திருமகள் தங்கியிருக்கும் மார்பினையும் உடைய,
பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்
3.
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்
பண் அமை தேரும் மாவும் மாக்களும் – பதி 77/5,6
பகைவரின் பிணத்தின் மீது உருண்டோடியும் தேய்ந்துபோகாத சக்கரங்களையுடைய
சிறப்பாகச் செய்யப்பட்ட தேரினையும், குதிரைகளையும், காலாட்படையினரையும்

மீ பால் வெண் துகில் போர்க்குநர் – பரி 10/79
உடலின் மேல் வெண்துகிலைப் போர்த்திருந்தனர் சிலர்

காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9
முத்துக்களும், மணிகளும் பரவலாகப் பதிக்கப்பட்ட மாலை மேலே கிடந்து அசையும் என் இளம் முலைகளைப்

அரி மலர் மீ போர்வை – பரி 11/26
அழகிய மலர்களான மேற்போர்வையினையும்

மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/40,41
நீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை
ஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட,

மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 396/2
நீரின் மேற்பரப்பில் குவளையும் தாமரையுமாகிய மகளிர் கண்போலும் பூக்கள் மலர்ந்திருக்கும்
4.
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப – பரி 17/30,31
முருகன் ஆவியாகக் கொள்கின்ற, அகிலிட்டு எழுப்பிய மணங்கமழும் புகை
இடங்கள்தோறும் மிகவும் மேலுயர்ந்து போவதால், கண்ணிமைக்காத வானவர்கள் கண்ணிமைத்து அகல,

கூம்பொடு
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர்புகுந்த பெரும் கலம் – புறம் 30/11-13
கூம்புடனே
உயரத்தில் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல், அதன் மேல் பாரத்தையும் பறியாமல்
ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை

மீகை

மீகை – (பெ) 1. தோள் மேல் அணியும் சட்டை, a shirt put on shoulders
2. மேம்பட்ட கை, be great
3. மேலெடுத்தகை, மேலே தூக்கிய கை, uplifted arm
1.
தோள் பிணி மீகையர் – பதி 81/11
தோளிடத்தே பிணிக்கப்பட்ட மீகையினையுடையராய்

மீகை – தோள்மேலணியும் சட்டை. சட்டையின் கை தோளை மூடி அதன்மேலே உயர்ந்து தோன்றலின் மீகை
எனப்பட்டது – ஔவை.சு.து. உரை – உரைவிளக்கம்
2,3
வென்றி ஆடிய தொடி தோள் மீகை
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/12-14
வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும்,
பகைவர் ஏழுவரின் முடிப்பொன்னால் செய்த ஆரம் அணிந்த திருமகள் தங்கியிருக்கும் மார்பினையும் உடைய,
பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்
ஔவை.சு.து – உரை.
ஔவை.சு.து – விளக்கம் – மீ கை என்பதற்குப் பழையவுரைகாரர் ”மேலெடுத்தகை” யென்றும், வென்றியாடிய
என்னும் பெயரெச்சத்திற்கு மீ கை யென்னும் பெயரினை அவன் தான் வென்றியாடுதற்குக் கருவியாகிய கை
எனக் கருவிப்பெயராக்குக என்றும் கூறுவர்.

மீக்கூர்

மீக்கூர் – (வி) மிகு, அதிகமாகு, increase
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள் – அகம் 305/3,4
மேகம் மழையைச் சொரிந்தமையால் குளிர்ந்து வருதலையுடைய வாடைக்காற்றால்
நடுக்கம் மிகும் வருத்தத்தையுடைய பாதியிரவில்

மீக்கூறு

மீக்கூறு – (வி) போற்று, சிறப்பித்துக்கூறு, praise, adore, admire
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 34,35
விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக்கூறப்படும்
வலம்புரி(ச் சங்கை) ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும்

பல் வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 22,23
பல வெள்ள காலத்திற்கு புகழ் மிகுந்து சொல்லப்பட,
உலகத்தை ஆண்ட உயர்ந்தவர் குடியில் தோன்றியவனே –

வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/6,7
இவர் நம்மில் வலியர் என்று கருதி அவரைப் பணிந்து பேசமாட்டான்
இவர் நம்மில் எளியர் என்று கருதி அவரிடம் தம்மைப் பெருமையாகப்பேசமாட்டான்

மீக்கூற்றம்

மீக்கூற்றம் – (பெ) 1. புகழ்ச்சி, adoration, praise
2. மேலே கூறும் சொல், word said over and above (this)
3. மேலாகிய சொல், Speech or word which wins regard, word deserving praise, regard
1.
வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/20-22
பகைவரது
மிக்க மாறுபாட்டை வென்ற வலியையுடைய
யாவரும் ஒப்பும் புகழ்ச்சியையுடைய நாட்டையுடையாய்
2.
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்_வயின்
ஊடுதல் என்னோ இனி
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/11-16
மான் போன்ற பார்வையை உடையவளே! நீ அழும்படியாக உன்னைப் பிரிந்தவன், பரத்தைமையில் அமையாமல்
வெட்கமற்று இருப்பவன் என்றால் உன்னை வருத்திக்கொண்டு அவன்மேல்
ஊடல் கொள்ளுதலால் என்ன பயன், இப்போது?
இனிமேல் ஒன்றும் இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் இல்லை என்கிற
நிலைமையைக் காண்பாய் நெஞ்சே!, கண்ணீர் எல்லைகடந்த,
தூக்கம் இல்லாத கண்கள் சிறிதே படுத்துறங்கும்படி.

மீக்கூற்றம் – மேலே கூறும் சொல் – நச்.உரை
3.
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த – சிறு 212
வாள் வலியாலே மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,

வாள் மீக்கூற்றத்து வயவர் என்றது வாள் வலியாலே ஒப்பிலா மறவர் எனத் தம்மை உலகம் புகழ்தற்குரிய
மறவர் என்க, மீக்கூற்றம் – மேலாகிய சொல்; அஃதாவது புகழ் – பொ.வே.சோ. உரை

மீட்சியும்

மீட்சியும் – (வி.அ) மீண்டும் மீண்டும், repeatedly
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து_உழி
செல்குவள் ஆங்கு தமர் காணாமை
மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை – பரி 19/58-66
தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்
வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
ஏஎ ஓஒ என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,
ஏஎ ஓஒ என்பதைக் கேட்காமல், அந்தக் கூவலின்
ஒலியைமட்டும் மலையின் பிளவுகள் ஏற்று எதிரொலிக்க, அந்த அழைப்பொலியைக் கேட்டு
அங்குச் சென்றவள், அங்கே தன் சுற்றத்தைக் காணாமல்
மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது
அடியவரின் வாழ்த்தினைக் கேட்டு மகிழ்வானாகிய முருகனின் குன்றத்தின் தன்மை;

மீட்டல்

மீட்டல் – (பெ) மீளச்செய்தல், திரும்பப்பெறுதல், bring pack, recover
கடும் கை கொல்லன் செம் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/7,8
வலிய கையையுடைய கொல்லனால் செந்தீயின்கண்ணே மாட்டப்பட்ட
இரும்பு உண்ட நீரினும் மீட்டற்கு அரிது எனக் கருதி

மீட்டு

மீட்டு – (வி.எ) மீளச்செய்து, திருப்பி, cause to turn back
விழையா உள்ளம் விழையுமாயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/9,10
எதனையும் விரும்பாத பெருந்தன்மையுடைய தம் உள்ளமானது ஒரோவழி மயங்கி ஒன்றை விரும்புமாயினும்
நாள்தோறும் தாம் கேட்ட அறிவுரைகளைத் அங்குசமாகக் கொண்டு உள்ளம் என்ற யானையை அதன் போக்கிலே
கட்டுமீறிச் செல்லாது திருப்பி.
அறமும் பொருளும் வழுவாமையை ஆராய்ந்து

இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு
தார் போல் தழீஇயவன் – கலி 103/33-35
சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
எருமைக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! இனி அதன் வலியை மீளப்பண்ணி அதனை நீங்கான்
போரிடுவதில் மிகவும் விருப்பமுள்ள காளையின் சொரசொரப்பான கழுத்தில் பாய்ந்து
அதற்கு இட்ட மாலையைப் போல அதனைத் தழுவிக்கொண்டவன்

மீன்

மீன் – (பெ) 1. ஒரு நீர்வாழ் உயிரினம், fish
2. நாள்மீன், கோள்மீன் ஆகிய ஒரு விண் பொருள், a celestial object like a star or planet
1.
மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி – அகம் 40/3
மீனை உண்ணும் கொக்குகளின் குறும்பறப்புக் கூட்டம்
2.
பல் மீன் நாப்பண் திங்கள் போல – பதி 90/17
பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல

நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68
(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல

மீமிசை

மீமிசை – 1. (வி.அ) 1. மேலே, above, over
2. உச்சியில், உயர்ந்த இடத்தில், on the top, on very high altitude
– 2. (வி.அ.இ.சொ) மேலாக, மீதாக, on, over
1.1.
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114
கீழ்நோக்கி நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல ஒரு கை
1.2.
ஆசினி முது சுளை கலாவ மீமிசை
நாக நறு மலர் உதிர – திரு 301,302
ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, (மலையின்)உச்சியில்
சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர,

பிறங்கு மலை
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது – குறி 208,209
பெரிய மலையின் உயர்ந்த இடத்தே உறைகின்ற இறையாகிய முருகனை வாழ்த்தி
2.
பவ்வ மீமிசை பகல் கதிர் பரப்பி – பொரு 135
கடலின் மீதே பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி

மீளி

மீளி – (பெ) 1. கூற்றம், யமன், God of death
2. தலைமை, சிறப்பு, distinction, superiority, greatness
3. தலைவன், chief, Lord, Master
4. திண்மை, உறுதி, hardness, firmness
5. வலிமை, strength
6. மறம், வீரம், courage, valour
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி – பொரு 139,140
1.
ஆளியாகிய நல்ல மானினது வருத்துதலையுடைய குருளை
கூற்றுவனுடைய வலியிற்காட்டில் மிகுகின்ற வலியாலே கலித்து – நச் உரை
2.
ஆளியாகிய நல்ல மானினது வருத்துதலையுடைய குருளையினது
தலைமை சான்ற மிக்க வலிமை போன்ற வலிமையுடைமையாலே செருக்குக்கொண்டு – பொ.வே.சோ. உரை
3.
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானை கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி – பரி 16/20-23
பீச்சாங்குழலைக் கொண்ட தோழியர் சுற்றிலும் வளைத்துக்கொண்டு ஒரு பரத்தையின் மீது சாய நீரைப் பாய்ச்ச,
அதனால், சிறிய இளநீரைப் போன்ற முலைகளில் பட்ட அந்தச் சாயநீரைத் துடைக்காமலிருந்தவள்,
பெருந்தகையான தலைவன் வருவதனைக் கண்டு,
நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க,
4.
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள் – அகம் 373/5-9
அரிய சுரத்தைக் கடந்துவந்த வருத்தத்தால் செயலிழந்தவராக
பெரிய புற்கென்ற மாலைக்காலத்தே தனிமைத்துயரமும் வந்தடைய
திண்மையுடைய நம் உள்ளம் மேற்கொண்டு செல்லுதலை வலியுறுத்த
முழந்தாள்களைக் கையாற் பூட்டிய தனித்த நிலையினதாகிய இருப்புடன்
தனது நிலையினையே எண்ணியிருக்கும் நம் காதலி நம்முடைய இந்த நிலையினை உணரவேமாட்டாள்
5.
நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே – அகம் 379/3,4
மிக்க வன்மையுடன் பொருளை விரும்பி
அதுபற்றி முயலுதற்கு முற்பட்ட வலிய நெஞ்சமே
6.
மீளி முன்பின் ஆளி போல – புறம் 207/8
மறம் பொருந்திய வலியையுடைய யாளியை ஒப்ப

மீளியாளர்

மீளியாளர் – (பெ) மறம் மிகுந்தவர், persons with valour
தன்னூர்
நெடு நிரை தழீஇய மீளியாளர்
விடு கணை நீத்தம் துடி புணை ஆக
வென்றி தந்து – புறம் 260/12-15
தன்னுடைய ஊரின்கண்
மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர்
எய்யப்பட்ட அம்பு வெள்ளத்தைத் தன் துடியே புணையாகக் கடந்து
வெற்றியைத் தந்து

மீள்

மீள் – (வி) 1. பழைய இடத்திற்கு அல்லது பழைய நிலைக்குத் திரும்பு, go back, return
2. திரும்பி வா, come back, return
1.
காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்_வயின்
மீள்குவம் போல தோன்றும் – நற் 313/6-9
காந்தளின்
கமழ்கின்ற பூங்கொத்துக்கள் மலர்ந்த விருப்பந்தரும் மலைச்சாரலின்
கூதளம் படர்ந்த நறிய சோலை நாமின்றித் தனித்திருக்க, ஊருக்குத்
திரும்பிச் செல்வோம் போலத் தோன்றுகிறது
2.
ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30
ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் திரும்பி வந்தால்
நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்

முக

முக – (வி) 1. நீரில் உள்ள மீன் போன்றவற்றை, எண்ணெயில் பொரியும் கறி/மீன் துண்டு போன்றவற்றை
வலையால், அரிகரண்டியால் அள்ளு, மொள்ளு, draw, bail
2. நிரம்பப்பெறு, obtain in large/full measure
1.
வலைஞர்
————– ——————— —————
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் – புறம் 249/3-7
வலையை வைத்து மீன்பிடிப்பவர்
——————— —————— ————–
பனையினது நுகும்பை ஒத்த சினை முற்றிய வரால் மீனொடு
மாறுபடும், வேல் போன்ற ஒள்ளிய கயலை முகந்துகொள்ளும்

நெடுநீர் நிறையகத்து
படு மாரி துளி போல
நெய் துள்ளிய வறை முகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/1-4
மிக்க நீர் நிறைந்த நீர்நிலையின்கண்
வீழ்கின்ற மழைத்துளி போல
நெய்யில் துள்ளி எழுந்த வறுவல்களை முகந்துண்ணவும்
சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட ஊனைத் தின்னவும்

முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 347/1
முழங்குகின்ற கடலிலிருந்து நீரை வாரியெடுத்ததினால் நிறைந்த கருக்கொண்ட கரிய மேகம்

நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் – அகம் 300/1
நாள் காலையிலே வலையினால் மீனை அள்ளிக்கொண்ட மீன் பிடித்தலில் வல்ல பரதவர்கள்
2.
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே – புறம் 368/4
கொடுஞ்சியொடு கூடிய நெடிய தேர்களை நிறையப் பெற்றால்

முகடு

முகடு – (பெ) 1. உச்சி, top, highest part
2. மலையுச்சி, peak, summit
3. முகப்பு, முன்பக்கம், front side

1.
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 246,247
உச்சியைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய,
கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்;
2.
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை – நற் 89/1-3
கீழைக் காற்றினால் செலுத்தப்பட்டு, விண்ணிடத்து ஒன்றுகூடிச் செறிந்து
அலைகளின் பிசிர் போல மலையுச்சிகளில் மகிழ்ந்து ஏறி
ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்
3.
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ – பரி 10/73,74
அவர்கள் தம் முலையின் முன்பக்கத்தில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல்
திசைகள் முழுதும் கமழ,

துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 94/42,43
குற்றமற்ற அறிவினைக்கொண்ட அவையிலுள்ளோரின் ஓலைச்சுவடிக்கட்டின்
முகப்பைக் கயிற்றினால் இறுக்கக் கட்டியதைப் போல

முகப்படு

முகப்படு – (வி) எதிரில் தோன்று, appear in front
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது – பதி 53/12,13
உன் முன்னோர்களுக்கு முன்னிருந்தோராலும், அவருக்குப் பின்வந்தோராலும் பேணிப் பாதுகாக்கப்பட்ட
கோட்டையின் எதிரில் நிற்பது எதற்காக?

முகமன்

முகமன் – (பெ) புகழுரை, praise, adoration
முருகு என உணர்ந்து முகமன் கூறி – அகம் 272/13
முருகனே என்று எண்ணி, புகழுரை கூறி

முகம்செய்

முகம்செய் – (வி) தோன்று, appear
முலை முகம்செய்தன முள் எயிறு இலங்கின – அகம் 7/1
முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன

முகவை

முகவை – (பெ) 1. நீர் முகக்கும் வாளி, bucket for drawing water
2. வாளி / குடத்தில் முகக்கப்பட்ட நீர், water drawn in a bucket or pot
3. முகந்து கொடுக்கப்படும் பொருள், anything given by a measuring vessel
4. மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள், anything given in large numbers / quantities
1.
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு – பதி 22/13-15
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்
கயிறுகட்டி மேலிழுத்து நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும்
பசுக்கள் நிறைந்த கொங்கர் நாட்டினை
2.
தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11
தெளிந்த உவரையுடையதாகிய குறைக்குடமாக முகக்கப்பட்ட நீரை
3.
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம்பெறூஉம் – அகம் 126/10-12
நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க தெருவில்
பழைய செந்நெல்லை முகந்து தருதலைக் கொள்ளாளாகி
கழங்கினை ஒத்த பெரிய முத்துக்களுடன் சிறந்த அணிகளையும்பெறும்
4.
வேழ முகவை நல்கு-மதி – புறம் 369/27
களிறுகளாகிய மிகுந்த பரிசிலை நல்குவாயாக

முகில்

முகில் – (பெ) மேகம், cloud
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை
முற்றுபு_முற்றுபு பெய்து சூல் முதிர் முகில் – பரி 20/1-3
கடல் குறைவுபடும்படியாக முகந்துகொண்ட நீரை, பாறைகள் பிளக்க வேகமாக வீசி,
கோபங்கொண்டதைப் போல் இடியேற்றுக்கூட்டம் ஆரவாரிக்க, அடுத்தடுத்து இருக்கும் மலைகளை
நன்றாக வளைத்துக்கொண்டு மழையைப் பொழிந்தன நன்றாய்க் கருக்கொண்ட மேகங்கள்;

முகிழ்

முகிழ் – 1. (வி) 1. அரும்பு, மொக்குவிடு, bud
2. குவி, fold
3. தோன்று, appear, show up
– 2. (பெ) 1. அரும்பு, bud
2. தயிர் முதலியவற்றின் கட்டி, Mass, as of curds
3. மொக்குள், நீர்க்குமிழி, bubble
1.1
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ்
முயங்கல் இயைவது மன்னோ – அகம் 242/16,17
அரும்பி வருதலையுடைய இளைய முலை மூழ்கிட பலமுறை
தழுவுதல் தக்கது
1.2
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – சிறு 231,232
முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்’ என்றும்,
‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும்,
1.3
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை – பரி 13/47,48
முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும்
கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை;
2.1
முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே – குறு 337/1,2
முலைகள் அரும்பாய் முகிழ்த்தன; தலையின்
கிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன;
2.2
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து – பெரும் 157,158
குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
2.3
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24
மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பெரியதாய் நிற்கும் உன் இளமையான முலைகள்,

முகை

முகை – 1. (வி) மலர்வதற்காக அரும்பு, bud for blossoming
– 2. (பெ) மலரும் நிலையிலுள்ள அரும்பு, opening bud
1.
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும் – புறம் 117/8,9
இளைய வெருகினது கூரிய பல்லை ஒப்ப
பசிய இலையையுடைய முல்லை அரும்பியிருக்கும்
2.
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த – கலி 119/7
புன்முறுவல் பூப்பவை போல் மொட்டுக்கள் தம் முறுக்கு அவிழ்ந்து புதர்களில் பொலிவுடன் விளங்க

முக்கண்செல்வன்

முக்கண்செல்வன் – (பெ) சிவன், Lord Shiva
நான்மறை முது நூல் முக்கண்செல்வன்
ஆலமுற்றம் கவின் பெற தைஇய – அகம் 181/16,17
நான்கு வேதங்களாய பழைய நூலை அருளிய முக்கண்ணையுடைய பரமனது
ஆலமுற்றம் என்னுமிடத்தே அழகுபெற இயற்றப்பெற்ற

முக்காழ்

முக்காழ் – (பெ) மூன்று புரிகள் கொண்ட முத்து/மணி வடம்,
A chain with three stands made of pearl or gems
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
கை புனை முக்காழ் கயம் தலை தாழ – கலி 86/1,2
கருமை படர்ந்த தலையையுடைய இளம் களிற்றின் நெற்றிப்பட்டத்தைப் போல,
கையால் அழகாகச் செய்யப்பட்ட மூன்று வடங்கள் மென்மையான தலையிலிருந்து தொங்க,

முக்கு

முக்கு – (வி) உணவை வாய் நிறைய இட்டு உண், eat in large mouthfuls
திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் – நற் 22/5,6
சுருக்கம்விழுந்த கன்னத்து மயிர்களையுடைய வளைந்த உள்வாய் நிறைய அமுக்கிக்கொண்டு
வானிலிருந்து விழுகின்ற மழையில் நனைந்த முதுகினையுடையவாய், நோன்பிருப்போர்

கழனி
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
பாசவல் முக்கி தண் புனல் பாயும் – புறம் 63/11-13
வயலிடத்து
ஆம்பல் தண்டினால் செய்த வளையணிந்த கையையுடைய மகளிர்
செம்மையான அவலை வாய் நிறையக் கொண்டவராய் குளிர்ந்த நீரில் பாய்ந்தாடுவர்

தத்திங்கம் தத்திங்கம் கொட்டுவாளாம்
தயிரும் சோறும் தின்பாளாம்
ஆப்பம் சுட்டால் தின்னுவாளாம்
அவல் இடிச்சால் முக்குவாளாம்

என்ற இந்த நாட்டுப்புறப்பாடலை எடுத்துக்காட்டுவார் ஔவை.சு.து. அவர்கள் தம் புறநானூறு உரை விளக்கத்தில்.

முக்கோல்

முக்கோல் – (பெ) திரிதண்டம் என்பதன் தமிழ்ச்சொல், The trident staff carried by ascetics
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் – கலி 9/2-4
உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும்,
முறையாகத் தோளில் சுமந்து, நன்மையைத் தவிரே வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன்,
ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய
அந்தணர்களே!

முசிறி

முசிறி – (பெ) மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம்,
Muziris, an ancient sea-port, near Cranganore
முசிறி சேர நாட்டின் துறைமுகப் பட்டினம். இது பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இருந்தது.
கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவைப் பற்றிய பெரிப்ளஸ் குறிப்பில் பத்தி 54-ல் இது முசிறிஸ் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
தாலமி (இரண்டாம் நூற்றாண்டு) என்னும் கிரேக்க மாலுமி இதனைக் குறிப்பிடுகிறார். Muziris என்பது அவர்
குறிப்பிடும் பெயர். ரோமானியர் இந்தியா வந்தபோது இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்நகரின் வணிக முக்கியத்துவத்திற்காகப் பாண்டியன் இதனைக் கைப்பற்றினான் என்று ஓர் அகப்பாடல்
குறிப்பிடுகிறது.

கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/14-16
கொய்த பிடரிமயிரினையுடைய குதிரைகளையுடைய கொடி கட்டிய தேரினையுடைய பாண்டியன்
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து
யானைகள் மடியக் கொன்ற கல்லென்னும் ஒலியையுடைய போரில்

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடுபோர் செழியன் – அகம் 149/7-13
சேர அரசரது
சுள்ளியாகிய பேர் யாற்றினது வெள்ளிய நுரை சிதற
யவனர்கள் கொண்டுவந்த தொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்
பொன்னுடன் வந்து மிளகொடு மீளும்
வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை ஆரவாரம் மிக வளைத்து
அரிய போரை வென்று அங்குள்ள பொற்வாவையினைக் கவர்ந்துகொண்ட
நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையுமுடைய செழியனது

முசு

முசு – (பெ) கருங்குரங்குவகை, Langur, Semnopithecus priamus
இதன் முகம் கருப்பாக இருக்கும்.

மை பட்டு அன்ன மா முக முசு கலை – குறு 121/2
மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு

கரு முக முசுவின் கானத்தானே – அகம் 121/15

முசுண்டை

முசுண்டை – (பெ) 1. கொடிவகை, Leather-berried bindweed, Rivea ornata
2. ஒரு சங்ககாலச் சிற்றரசன்
1.1.
முசுண்டை செழிப்பான கொடியினைக் கொண்டிருக்கும்
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – சிறு 166
1.2.
இதன் கொடி அழகின்றி இருக்கும்
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13
1.3.
இதன் பூ வெண்மையாக இருக்கும்.
வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 101
1.4.
இதன் இலை செறிவாக அடர்ந்து இருக்கும்
குவை இலை முசுண்டை வெண் பூ குழைய – அகம் 94/2

குழை அமல் முசுண்டை வாலிய மலர – அகம் 264/2
தழை நிறைந்த முசுண்டையின் பூக்கள் வெள்ளியவாக மலர
1.5.
இதன் மொட்டு சுருங்கியிருக்கும்
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ – அகம் 235/9

2.
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால்பதம் குவைஇ
நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் – அகம் 249/6-10
சந்தனம் பூசிய உயர்ந்து அசையும் அழகிய திமிலினையுடைய
காளையினை முன்னர் நிறுத்தி மிக்க உணவினைக் குவித்து
நீண்ட தேரினை யானையுடன் சேர அளிக்கும் வளைந்த பூணையும்
பல வேற்படையையுமுடைய முசுண்டை என்பானது வேம்பி என்னும் ஊர் போன்ற
எனது நல்ல அழகிய இளமைச் செவ்வி

முச்சி

முச்சி – (பெ) 1. தலை உச்சி, crown of head
2. உச்சிக்கொண்டை, Tuft of hair on the head
3. மயில் கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை, சூட்டு, Peacock’s crest, cock’s comb
1.
வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர்
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ – பரி 16/7,8
வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர, வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும் சிறுவரின்
மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு அவை சேர்ந்துகொள்ள,
2.
துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ – திரு 26,27
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி,
3.
வாகை ஒண் பூ புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் – பரி 14/7,8
வாகையின் ஒளிரும் பூவினைப் போன்ற கொண்டையைக் கொண்ட
மயில்களின் நிறைந்த அகவல் குரல்

முஞ்சம்

முஞ்சம் – (பெ) குழந்தைகளின் உச்சியிலணியும் அணிவகை,
Ornament worn in the crown of head by children
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி
வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர்
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ – பரி 16/6-8
பொன்னால் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்கள், கலங்கலான அழகிய நீரைப் போன்ற சிவந்த மணிகள்,
ஆகியவை, வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர, வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும்
சிறுவரின்
மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு அவை சேர்ந்துகொள்ள,

முஞ்ஞை

முஞ்ஞை – (பெ) ஒரு மர வகை, firebrand teak, Premna mollissima, the dusky fire brand mark
முஞ்ஞை என்பது ஒரு புதர்ச்செடி. இது இப்போது முன்னை, பசுமுன்னை என்று அழைக்கப்படும்.
இது Lamiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்
இது 8 மீட்டர் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும் அல்லது புதர் ஆகும்.
முசுண்டைக் கொடியும் இதனிற் படரும். அதனால் இது நல்ல நிழல் தரும்; இதனடியில் பலர் சேர்ந்து
துயிலுதற்கும் உதவும்: இதன் இலைகள் சிறியன; ஒருவகையான நறுமணம் தருவன: இலைகளை ஆடும்,
முயலும் தின்பதுண்டு: ஆடு மேய்ந்தொழிந்த இவ்விலைகளை எளியோர் வரகரிசிச் சோற்றுடன் தின்பதுண்டு

இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு
புன் புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/10-12
இடப்பட்ட முள்வேலியையுடைய தோட்டத்து, ஆட்டுக்குட்டி தின்ன ஒழிந்து நின்ற
குறிய நாற்றத்தையுடைய முஞ்ஞையது கொழுவிய கணுவில் கிளைக்கப்பட்ட குறிய இலையை
புல்லிய நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற

தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
முயல் வந்து கறிக்கும் முன்றில் – புறம் 328/14,15
தாளி மரத்தின் அடியில் நீண்டு வளர்ந்திருக்கும் சிறிய நறிய முன்னை மரத்தை
குறு முயல்கள் வந்து மேயும் முற்றத்தையுடைய

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி
பந்தர் வேண்டா பலா தூங்கு நீழல் – புறம் 320/1,2
முற்றத்திலுள்ள முன்னை மரத்தோடு முசுண்டைக் கொடியும் செறிந்திருத்தலால்
வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தலாய்ப் பலவின் கனி தொங்கும் நீழலில்

இது ஒரு கொடிவகை என்பர் ஔவை.சு.து. அவர்கள் தம் உரையில்.

முடங்கர்

முடங்கர் – (பெ) 1. பிள்ளைப்பேற்று நிலையில் தோன்றும் அசதி, Physical exhaustion, as in confinement
2. முடக்கமான இடம், space with bends
1. தமிழ்ப்பேரகராதி இந்தப் பொருள் கொள்ளுகிறது. சான்றாக இந்த அடிகளைக் குறிப்பிடுகிறது..
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளை பிணவு பசிகூர்ந்து என – அகம் 147/3-5
தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள்
மூன்றை ஒரு சேரப்பெற்ற அசதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய
பாறையின் பிளப்பாகிய குகையிலுள்ளதுமாகிய பெண்புலி பசி மிக்கதாக
2.
ந.மு.வே.நாட்டார் இதே அடியின் வரும் இந்தச் சொல்லுக்கு முடக்கமான இடம் என்று பொருள் கொள்வார்.
தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள்
மூன்றை ஒரு சேரப்பெற்றதும், முடக்கமான இடத்திலே ஓய்ந்த
பாறையின் பிளப்பாகிய குகையிலுள்ளதுமாகிய பெண்புலி பசி மிக்கதாக

முடங்கல்

முடங்கல் – (பெ) முடங்கிக்கிடப்பது, that which is bent
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல்
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம் – நற் 358/8,9
பெரிய சிவந்த இறாமீனின் பஞ்சு போன்ற தலையையுடைய முடங்கிய உடலை
சிறிய வெண்ணிறக் கடற்காக்கை அன்றைய உணவாகப் பெறும்

இறாமீன் கால்களையும் உணரிகளையும் ஒடுக்கிக்கொண்டிருப்பது முடங்கிக்கிடப்பது போறலின் முடங்கல்
எனப்பட்டது என்பார் ஔவை.சு.து. தம் உரைவிளக்க்த்தில்.

முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ – குறு 374/5
வளைவான சிறகுகளையுடைய தூக்கணங்குருவி

முடங்கு

முடங்கு – 1. (வி) 1. சுருண்டுகிட, lie down with a bent body
2. வளை, bend, curve
1.1
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/6
பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
1.2
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை
பொறுக்கல்லா நோய் செய்தாய் – கலி 94/9,10
சிறப்பான கலப்பையில் இறுக்கப்பட்ட கொழுவினைப் போல் முடங்கியும், மடங்கியும்
சுருட்டிவிட்டதைப் போன்ற நிறைந்த அழகால், எனக்குப்
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்!

கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி – அகம் 63/4,5
கடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து
வளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை

கூனலாக வளைந்திருக்கும் இறால் மீனை முடங்கு இறா என்று அழைக்கின்றன பல சங்கப்பாடல்கள்.
பார்க்க : முடங்கல் – படம்

முடி வலை முகந்த முடங்கு இறா பாவை – நற் 49/3
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/17
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை – அகம் 376/16

முடந்தை

முடந்தை – (பெ) வளைந்தது, anything bent
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு – அகம் 284/3
வளைந்து கிடக்கும்வரகினது பருத்த குருத்தினைத் தின்று

முடந்தை நெல்லின் கழை அமல் கழனி – பதி 32/13
வளைந்த நெல்லின் மூங்கிலைப் போன்ற தாள் செறிவாக இருக்கும் வயல்வெளிகளையுடைய

முடம்

முடம் – (பெ) 1. கை, கால் மடங்கிச் செயலிழந்த நிலை, leg or arm being bent and crippled
2. வளைவு, bend, curve
1.
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/13-15
இடிந்து விழும் மண்ணின் இடையூற்றினை அஞ்சுவதான ஒரே துறையினையுடைய ஓடையிலுள்ள
இன்னாததாகிய ஏற்றங்கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து முடம்பட்டு
தன்னந்தனியே ஒழிந்து கிடக்கும் உடல்வலி வாய்ந்த தன்மையுடையன பொறுக்கும் பகட்டினை

2.
ஒரு சில மரங்களின் அடிப்பகுதி நேராக மேல்நோக்கிச் செல்லாமல், வளைந்து பக்கவாட்டில் செல்லும். அத்தகைய
மரங்களை முடமான மரங்கள் என்கின்றன இலக்கியங்கள்.

முடம் முதிர் மருதத்து பெரும் துறை – ஐங் 31/3
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும் – அகம் 91/16
முட காஞ்சி செம் மருதின் – பொரு 189
பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமை – நற் 137/7
களரி ஓங்கிய கவை முட கள்ளி – நற் 384/2
கடற்றில் கலித்த முட சினை வெட்சி – குறு 209/5
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை – கலி 133/4
படப்பை நின்ற முட தாள் புன்னை – அகம் 180/13
தொகு முகை விரிந்த முட கால் பிடவின் – அகம் 344/3
முட பனையத்து வேர் முதலா – புறம் 229/3

முடலை

முடலை – (பெ) முறுக்கு, திருக்கு, twist in the fibre
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – பெரும் 61
முறுக்குண்ட உடம்பினையும் நிரம்பிய மெய்வலியினையுமுடைய மாக்கள்

முடவு

முடவு – (பெ) முடம், வளைவு, bend
முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை – அகம் 10/3
முடம்பட்ட முதிர்ந்த புன்னை மரத்தின் பெரிய நிலையையுடைய கரிய சினையில்

முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – அகம் 352/1
வளைதல் மிக்க பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தினை

முடி

முடி – 1. (வி) 1. நிறைவேறு, be accomplished
2. நிறைவேற்று, accomplish
3. முடிச்சுப்போடு, கட்டு, tie, fasten, make into a knot
4. சூடு, அணி, put on, adorn
5. இறுதிநிலை அடை, முற்றுப்பெறு, end, come to a close, terminate
– 2. (பெ) 1. நாற்றுக்கட்டு, bundle of (paddy) seedlings for transplantation
2. முடிச்சு, knot
3. கிரீடம், crown
4. முடிச்சுப்போடுதல், fastening into a knot
5. மயிர், hair
1.1
இன்னா அரும் படர் தீர விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம ———
———————————— —————————
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 167-188
தீதாக இருக்கின்ற ஆற்றுதற்கரிய துயரம் தீரும்படி, வெற்றியைக் கொடுத்து
இப்பொழுதே முடிவதாக ————-
———————————– ————————
நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் பள்ளிகொள்ளாதவனாய்,
ஒருசில வீரரோடு திரிதலைச் செய்யும் அரசன்,
பலரோடு மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்துப் போர்த்தொழில்
1.2
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு
அவண் நீடாதல் ஓம்பு-மின் – நற் 229/5,6
அதனால் செல்லுங்கள், சென்று பொருளீட்டும் வினையை முடியுங்கள், சென்றபின் அங்கு
அவ்விடத்திலேயே நீண்டநாள் தங்காமல் காத்துக்கொள்ளுங்கள்
1.3
துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ – திரு 26,27
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி
1.4
இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 200,201
பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,
தலையிலே அணிந்த கஞ்சங்குல்லையினையும், இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்,
1.5
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை – பரி 13/47,48
முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும்
கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை;
2.1
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 210-212
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்
2.2
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் – பெரும் 273,274
தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
வளைந்த முடிச்சுகளையுடைய வலைகளையுடையோருடைய குடியிருப்பில் தங்குவீராயின் –
2.3
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள்
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை – பட் 229-231
காவலையுடைய அரண்களைப் பிடித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும்,
கிரீடங்களையுடைய கரிய தலைகளை உருட்டும் முன்காலின்
நகமுடைய அடிகளையும் கொண்ட உயர்ந்த அழகினையுடைய யானை,
2.4
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் – நற் 207/9
வலையை முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள்
2.5
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை
பொறி அழி பாவையின் கலங்கி – நற் 308/6,7
மணங்கமழும் அடர்ந்த கூந்தல் அசைய, நல்ல வேலைப்பாடான,
செலற்றுப்போன பாவையைப் போலக் கலங்கி

முடிநர்

முடிநர் – (பெ) 1. செய்து முடிப்பவர், one who accomplishes
2. முடிச்சுப்போடுபவர், one who knots
1.
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3
எங்கு இருக்கின்றாரோ? வேண்டிய செயலை முடிக்கச் சென்றவர்,
2.
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயும் மாக்களும் – மது 514,515
செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்

முடியன்

முடியன் – (பெ) சங்க காலச் சிற்றரசன்/வள்ளல், a chieftain/philanthropist of sangam period
வரை போல் யானை வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்
அளிய தோழி தொலையுந பலவே – நற் 390/9-11
மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின்
மலையில் உள்ள மூங்கிலைப் போன்ற பிற பெண்களின் நல்ல தோள்கள்
இரங்கத்தக்கன தோழி, தம் அழகினையும் இழப்பன மிகப் பல.

இந்த முடியன் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த ஒரு வள்ளல்
என்பார் ஔவை.சு.து, தம் உரை விளக்கத்தில். இவன் பெயரைத் தாங்கிய முடியனூர் என்னும் ஊர் இன்றும்
உள்ளது. இம் முடியனுக்குரிய மலைகள் கள்ளக்குறிச்சிப் பகுதியில் உள்ளன.

முடுகு

முடுகு – 1. (வி) விரைந்து செல், hasten, move quickly
– 2. (பெ) விரைவான இயக்கம், quick movement
1.
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/10
முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்

குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/2
குன்றிலிருந்து விழும் அருவியைப் போல வெள்ளிய தேர் விரைந்து செல்க;
2.
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே – அகம் 48/20-22
தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக
நின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச்
சென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;

முடுக்கர்

முடுக்கர் – (பெ) 1. நீர்நிலைக்கரையில் நீர் அரித்த இடம்,
place where water presses against the bank and erodes
2. குறுகலானதும் கோணியதுமான இடம், narrow winding space
1.
குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை – மலை 213,214
நீர்க்குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழமான பொய்கையின் நீர் அரித்த கரையின்(மறுபக்கத்தில்),
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
2.
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல – அகம் 97/4-6
இரவிலே காட்டரண்களிலுள்ளோர் அலற அவர்களைக் கொன்று, தாம் கொண்ட ஆநிரைகளைப் பகுத்துக்கொண்டு
பெரிய கற்பாறையின் முடுக்கிலே தசையினை அறுத்துத்தின்னும்
கொலைத்தொழில் வல்ல வில்லினையுடைய வெட்சி வீரர் போல

முடுக்கு

முடுக்கு – (வி) 1. ஆணி, திருகாணி முதலியவற்றை உட்செலுத்து, drive in as a screw or nail
2. தூண்டு, urge, induce
3. இயக்கத்தைத் தூண்டு, drive
1
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 85,86
கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் இடைவெளியற்று,
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய

இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து – மலை 27,28
மின்னுகின்ற துளைகள் முற்றிலும் அடையுமாறு ஆணிகளை இறுகப் பதித்து,
புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து
2
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 177
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக்கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,
3
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முது சாடி – பரி 20/53,54
பெண்ணின் தன்மையைக் கொண்ட அழகு என்னும் வயலில், காமவெறியாகிய கலப்பையைக் கட்டி
எம் தலைவரான எருமையைச் சோம்பிக்கிடக்காமல் முடுக்கிவிட்டு உழுகின்ற பலமுறை உழப்படும் உழவே

முடுவல்

முடுவல் – (பெ) பெண் நாய், female dog
முடுவல் தந்த பைம் நிண தடியொடு – மலை 563
பெண்நாய் (கடித்துக்)கொண்டுவந்த இளங்கொழுப்புள்ள தசைகளும்,

முடை

முடை – (பெ) 1. கெட்ட மணம், offensive odour
2. புலால், மாமிசம், flesh
1.
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
2.
வளை வாய் பருந்தின் வள்ளுகிர் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/13,14
வளைந்த வாயினையும் கூரிய நகத்தினையும் உடைய பருந்தின் சேவல்
தன் கிளையினைத் தருகிற்கும் தெளிந்த குரலால் ஆண்டுப் பொருந்திய ஊன் உண்ணற்கு அழைக்கும்

முட்டம்

முட்டம் – (பெ) சிறிது சிறிதாகத் தேய்ந்து பின்னர் இல்லாமற்போகும் பாதை,
path which disappears gradually
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258
வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள
முட்டுப்பாதைகளும்

காட்டினுள் நடை பாதை போல் தோன்றிச் செல்லச் செல்லத்தேய்ந்து பின்னர் நெறியே காணப்படாது
மாறிவிடும் நெறியை ஊழ் அடி முட்டம் என்றார் என்பர் பொ.வே.சோமசுந்தரனார் தம் உரையில்

முட்டு

முட்டு – 1. (வி) 1. மோது, dash or hit against
2. குறைவுபடு, குன்று, be defficient, fall short
– 2. (பெ) 1. தடை, obstacle, hindrance
2. குறைபாடு, deficiency, shortage
1.1
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/1-3
தலையைப் பிடித்து முட்டுவேனோ! கையால் தாக்குவேனோ!
என்ன செய்வதென்று அறியேன்! நானும் ஏதாவது சாக்குவைத்து
ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ!
1.2
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் – சிறு 105-107
குறையாமல் கொடுத்தவனும், போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும்,
சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய
செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்;
2.1
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே – அகம் 122/23
பல தடைகளையுடையதாகின்றது, தோழி, நமது இந்தக் களவொழுக்கம்
2.2
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக – புறம் 166/8,9
இருபத்தொரு வேள்வித்துறையையும் குறை இன்றாகச் செய்து முடித்த
புகழ் அமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபிலுள்ளானே

முட்டுப்பாடு

முட்டுப்பாடு – (பெ) இக்கட்டு, சங்கடம், predicament
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய்
தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல்
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பாடு ஆகலும் உண்டு – கலி 93/29-36
நீ கண்ட கடவுள்களுக்குள், உன்னுடைய
மணங்கமழும் அகன்ற மார்பினைச் சிதைத்து
அதில் வடுக்களை உண்டாக்கியவர் யார்? சொல், அவர்களுள் எவரும்
சிறிதுநேரம்கூட நீ இங்குத் தங்கினால் கோபித்துக்கொள்வர், வெறுக்கத்தக்கவனே!
உன்னைத் தெரிந்துகொண்டேன்! நீ செல்வாயாக! ஒருவேளை நீ செல்லாமல் இருந்துவிட்டால்
உன் நல்ல மாலையையுடைய மார்பினில் ஒன்றாக ஒட்டியிருக்கும்படி பொருந்திக்கிடந்த
நீண்ட கரிய கூந்தலையுடைய அந்தக் கடவுளர் எல்லார்க்கும்
சங்கடம் ஏற்படவும் செய்யும்.

முணக்கு

முணக்கு – (வி) புதை, அடக்கம் செய், bury
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் – நற் 114/1-3
வெண்மையான கொம்பினை வெட்டி எடுத்து அகன்ற பாறைகளில் வைக்கவும்,
பசிய ஊனைத் தோண்டியெடுத்து பெரிய நகத்தினைப் புதைத்துவைக்கவும்,
தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் சிறுகுடியில் எழும் ஆரவாரத்தை

முணங்கு

முணங்கு – (பெ) சோம்பல் முறித்தல், shaking of drowsiness or lazyness by stretching ones limbs
இது முணங்கு நிமிர்தல் எனப்படுகிறது. இதனை மூரி நிமிர்தல் என்றும் அழைப்பர்.

தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து
புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி – அகம் 357/4-6
பெரிய கோட்டினையுடைய யானையை வலப்பக்கத்தே விழக் கொன்று
அகன்ற பாறைகள் குருதியால் சிவக்கும்படி கிழித்திழுத்து வந்து சோம்பல் முறித்து
புலால் நாறும்புலி கிடந்து புரண்டதால் புற்கள் சாய்ந்துகிடக்கும் சிறிய நெறிகள்.

அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து
அளை செறி உழுவை இரைக்கு வந்தன்ன – புறம் 78/2,3
வருந்துதற்கரிய மிக்கவலியையுடைய என் இறைவன் மூரி நிமிர்ந்து
முழையின்கண் கிடந்த புலி தான் விரும்பியதோர் இரையை நோக்கி வந்தாற்போன்ற

முணங்கு நிமிர்தல் – மூரி நிமிர்தல். அஃதாவது தூங்கி எழுந்தவுடன் கைகளையும் உடம்பையும் நீட்டித்
திமிர்விட்டுச் சோம்பலைப் போக்குதல் என்பார் ஔவை.சு.து. தம் உரை விளக்கத்தில்.

முணை

முணை – (வி) முணவு, வெறு, be averse, hostile
வங்கா வரி பறை சிறு பாடு முணையின்
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து – நற் 341/1-3
வங்கா எனும் வீட்டுப்பறவையை ஓடவிட்டும், பறக்கவிட்டும் விளையாடி சிறிதுபோது இருத்தலை வெறுத்தலால்
சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினால் செய்யப்பட்ட வட்டு எனும் விளையாட்டுக் கருவியை நாவில் தேய்த்து
விளையாட்டாக இனிய நகை குறையாமல், பாலைக் குடித்து,

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் – நற் 279/1-3
வேம்பின் ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின்
தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி,
நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவால்

பணை நிலை முணைஇய வய_மா புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே – ஐங் 449/2,3
கொட்டகையில் நிற்பதை வெறுத்த வலிய குதிரைகள் பூட்டப்பெற்று,
திண்மையாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளது தேர்;

முண்டகம்

முண்டகம் – (பெ) 1. கழிமுள்ளி, indian nightshade, Acanthus ilicifolius
1.
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர் – குறு 51/1
வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/1,2
அணிலின் பல்லைப்போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்திருக்கும் கழிமுள்ளிச்செடியுள்ள
நீலமணியின் நிறம் போன்ற பெரிய கழியினுக்கு உரிமையாளனே!

அணில் பல் முண்டகத்தின் முள்ளுக்கு உவமை. முண்டகம் – கழிமுள்ளிச்செடி – உ.வே.சா – உரை விளக்கம்

கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 148
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்

முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2
கழி முள்ளிகளால் மேலே வேயப்பட்ட குறுகிய கூரையையுடைய வீடு

இம் முள்ளி வகை கழிக்கரையிலும் கடற்கரையிலும் காடுபோல் வளர்ந்திருக்கும். இவற்றை அறுத்து ஆண்டு
வாழும் நுளையர் தம் வீடுகட்குக் கூரையாகவேய்வது இயல்பு – ஔவை.சு.து. உரை விளக்கம்.

சங்க இலக்கியங்களில், மருதத்திணை சார்ந்து குறிப்பிடுகையில் நீர்முள்ளி செடிகள் ”முள்ளி” எனவும்,
நெய்தற்திணை சார்ந்து குறிப்பிடுகையில் கழிமுள்ளி செடிகள் ”முண்டகம்” எனவும் வழங்கப்பட்டுள்ளன.
மருதத்திணையின் நன்னீர்நிலைகளில் வளரக் கூடிய நீர்முள்ளியும் [Hygrophila auriculata], அதனையடுத்துள்ள
நெய்தற்திணையின் உப்பங்கழி ஓரங்களில் வளரக்கூடிய கழிமுள்ளியும் [Acanthus ilicifolius]
”அக்காந்தேசி” [Acanthaceae] எனும் ஒரே தாவரவியல் குடும்பதைச் சேர்ந்தவை.
இவ்விரு தாவரங்களும் முட்களைப் பெற்றுள்ளதோடு, நீலநிறப் பூக்களையும் கொண்டுள்ளன.

இது ஐந்தடி வரை நிமிர்ந்தும் அடர்ந்தும் வளரக் கூடிய முட்புதற்செடி. இலைப்பரப்பு வளைந்தும் நெளிந்தும்
பிளவுற்றும், விளிம்பில் முட்களையும் பெற்றுள்ளது. நுனியிலும் இலைக்கோணத்திலும் பெரிய அளவில்
நீலநிறப் பூக்களை தோற்றுவிக்கும். கடலும் கடல்சார்ந்த பகுதியாகிய நெய்தற்திணையில் உப்பங்கழியின்
ஓரங்களில் முண்டகம் வளர்கின்றன.

சங்க இலக்கியங்களில் கண்டுள்ளவாறு இதன் பண்புகள்

1. உப்பங்கழியில் வளர்தல்
2. உப்பங்கழியில் கண்டல் மரங்களுடன் காணப்படுதல்
3. உப்பங்கழியில் தில்லை மரங்களுடன் வளர்தல்
4. அணில் பற்களை போன்று முட்களைப் பெற்றிருத்தல்
5. நீலநிற மணிகளைப் போன்று மலர்கள் பெற்றிருத்தல்
6. மீன் முட்களைப் போன்று முட்கள் கொண்டிருத்தல்
7. வளைந்த முட்கள் [கூன் முள்] கொண்டிருத்தல்

பயன்பாடுகள்

1. முண்டகச் செடிகளைக் கூரை வேய்தல்
2. முண்டக மலர்களை மகளிர் சூடுதல்

முண்டை

முண்டை – (பெ) முட்டை, egg
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் – பதி 60/6
அழகிய குழைவான சதைப்பற்று அமைந்த முட்டை போன்ற முதிர்ந்த பழங்கள்

முதற்று

முதற்று – (வி.மு) முதலாகக் கொண்டது, has (this) as first
உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20
உணவை முதலாக உடையது அவ்வுணவால் உள்ளதாகிய உடம்பு

அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/12
அறநெறியை முதலாகவுடைத்து வேந்தரது வெற்றி

முதலாட்டி

முதலாட்டி – (பெ) முதன்மையானவள், the first lady
யாய் ஆகியளே விழவு முதலாட்டி – குறு 10/1
தாய் போன்ற இயல்பினள் ஆயினள், (வீட்டின்)விழாக்களுக்கு முதலானவள்!

முதல்

முதல் – (பெ) 1. அடிப்பாகம், base, foot, bottom
2. முதல்வன், தலைவன், chief, head
3. தொடக்கம், beginning
4. வேர், கிழங்கு, root
1.
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து
எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 60,61
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்,
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின்

சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு
குட முதல் குன்றம் சேர குண முதல்
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு – மது 546-548
(மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு,
மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர, கிழக்கில் அடிவானத்தில்
(பதினாறு)நாள் முதிர்ந்த (நிறை)மதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுகையினால்,

ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
பாதுகாப்பானது இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் வழி.
2.
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்
3.
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ – சிறு 12
காட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி
4.
முதல் சேம்பின் முளை இஞ்சி – பட் 19
கிழங்கையுடைய சேம்பினையும், முளையினையுடைய இஞ்சியினையும் உடைய

முதல்வியர்

முதல்வியர் – (பெ) முதிய பெண்டிர், old women
முனி துறை முதல்வியர் முறைமை காட்ட – பரி 11/82
சடங்குகளை அறிந்த முதுபெண்டிர் நோன்பு செய்யும் முறையினைக் காட்ட

முதாரி

முதாரி – (பெ) முதுமையையுடையது, one which is old
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண – புறம் 138/5
சிதாராகிய உடையையுடைய மூத்த பாணனே!

முதியன்

முதியன் – (பெ) முதியவன், old man
செல்வு_உழி எழாஅ நல் ஏர் முதியன் – புறம் 389/12
செல்லுமிடமெல்லாம் சேறற்கு எழாத நல்லேர் முதியனேன்

முதியை

முதியை – (மு.ஒ.வி.மு) முதியவனாயிருக்கிறாய், you are elder
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் – பரி 2/22,23
எதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு
முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும்

முதிரம்

முதிரம் – (பெ) ஒரு மலை, a hill
அதிரா யாணர் முதிரத்து கிழவ
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண – புறம் 158/25,26
தளராத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவனே
உலகம் முழுவதிலும் விளங்குகின்ற தலைமையினையும் இயற்றப்பட்ட தேரினையுமுடைய குமணனே!

இன்றைய முதுமலைக்குரிய சங்க காலப்பெயர் முதிரமலை. குமணன் என்னும் வள்ளல் சங்ககாலத்தில்
இதன் அரசன்.

முதிரை

முதிரை – (பெ) அவரை, துவரை முதலியன, pulse
செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/7,8
தன்னில் கலந்த சிவந்த இறைச்சி வெளியில் தெரியாதவாறு அரைத்த வெண்மையான துவரைச் துவையலையும்,
வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!

முதிர்

முதிர் – (வி) 1. முதிர்ச்சியடை, grow old
2. பழு, முற்று, பக்குவமடை, become ripe, mature
3. நன்கு வளர்ந்திரு, full-grown
1.
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 45,46
பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று,
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல் –
2.
பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 317
பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான்
3.
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்

முதிர்ப்பு

முதிர்ப்பு – (பெ) முதிர்ச்சி, நிறைவான நிலை, advanced stage (of confinement)
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/2,3
கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற
பருத்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி

முதுகாடு

முதுகாடு – (பெ) சுடுகாடு, இடுகாடு, cremation or burial ground
ஈம விளக்கில் பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு – புறம் 356/3,4
பிணம் சுடு தீயாகிய விளக்காலும், பேய் மகளிராலும்
காண்பார்க்கு அச்சம் வரப்பண்ணுகிறது இந்தப் புகை தவழும் சுடுகாடு

முதுகுடி

முதுகுடி – (பெ) தொன்றுதொட்டு வரும் பெருமைக்குரிய குடி, ancient and respected family
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த
முரைசு கெழு முதுகுடி முரண் மிகு செல்வற்கு – கலி 105/1,2
பகையரசர்கள் தோல்வியுறும்படி அவர்களை வென்று, கொன்று, அந்த வழியில் கொணர்ந்த
மும்முரசுகளுக்கு உரிமைபூண்ட முதுமையான குடியில் வந்த பகைமையுணர்வு மிக்க பாண்டியர்க்கும்

முதுகுடுமி

முதுகுடுமி – (பெ) ஒரு பாண்டிய மன்னன், a Pandiya king
பல்_சாலை_முதுகுடுமியின்
நல் வேள்வி துறைபோகிய – மது 759,760
(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,

இவன் கடைச்சங்க காலத்துக்கும் முற்பட்ட முற்காலப் பாண்டியருள் ஒருவன் என்பார் சிலர்.
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான்.
மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான். பல யாகங்களை நடத்திய காரணத்தினால்
பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்
வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும்
பெற்றிருந்தான்.
இவனை நெட்டிமையார் (புறம் 9,12,15), காரிகிழார் (புறம் 6), நெடும்பல்லியத்தனார் (புறம் 64) ஆகிய புலவர்கள்
பாடிய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

முதுக்குறை

முதுக்குறை – (வி) அறிவு முதிர், become ripe in wisdom
முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை – நற் 366/9
அறிவு முதிர்ந்த குருவி முயன்று செய்த கூட்டை

முதுக்குறைமை

முதுக்குறைமை – (பெ) அறிவு முதிர்ச்சி, ripened wisdom
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள் – கலி 62/9
ஒளிவிடும் வளையணிந்தவளே! கைவிடுவாயாக உன் அறிவு முதிர்ச்சியை, கவனமாகக் கேள்,

முதுக்குறைவி

முதுக்குறைவி – (பெ) அறிவு முதிர்ந்தவள், lady with ripened wisdom
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி – அகம் 17/9
சிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள்

முதுநீர்

முதுநீர் – (பெ) கடல், sea
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/14-16
கொய்த பிடரி மயிர்க் குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன்
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்

முதுநூல்

முதுநூல் – (பெ) பழைமையான வேதம், the ancient vedas
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்-மார் – புறம் 166/3-5
அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றையுடைத்தாய்
ஆறு அங்கத்தாலும் உணரபட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு
மாறுபட்ட நூல்களைக் கண்டோரின் மிகுதியைச் சாய்க்கவேண்டி

முதுபாழ்

முதுபாழ் – (பெ) முதுநிலம், வரண்ட பாழ் நிலம், barren tract, waste land
உயவு நடை பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/4,5
வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக, அரசர்
போர் முனையில் கவர்ந்ததால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும் நெல்மணியைக்
கொத்திக்கொணரும்

வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் – அகம் 77/4-6
வெம்மை மிக
இடிகளை உமிழும் மேகம் நீங்கி எவ்விடத்தும்
குடிகள் தத்தம் பதிகளிலிருந்து பெயர்ந்து போகறு ஏதுவாக பலரும் சுட்டிக்கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில்

முதுமொழி

முதுமொழி – (பெ) வேதம், the vedas
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ – பரி 3/42
பதினாயிரம் கைகளைக் கொண்ட வேத முதல்வனே!

முதுர்வினள்

முதுர்வினள் – (பெ) வயதில் முதிர்ந்தவள், old aged woman
முன்றில் போகா முதுர்வினள் யாயும் – புறம் 159/5
கண் மறைந்துமுற்றத்திடத்துப்புறப்படமாட்டாத மூப்பையுடைய தாயும்

முதுவாய்

முதுவாய் – (பெ.அ) அறிவு வாய்க்கப்பெற்ற, possessing intelligence
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய் கோடியர் முழவின் ததும்பி – குறு 78/1,2
பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது
அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து

அறிவு முதிர்ந்த வாய்மையையுடைய எனலும் ஆம்.- உ.வே.சா விளக்கம்

முதுவெள்ளிலை

முதுவெள்ளிலை – (பெ) ஒரு சங்ககாலத்துத் துறைமுகப்பட்டினம், a port city during sangam period
கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று சுறவு கலித்த
புலவு நீர் வியன் பௌவத்து
நிலவு கானல் முழவு தாழை
குளிர் பொதும்பர் நளி தூவல்
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு
ஒலி ஓவா கலி யாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
வியன் மேவல் விழு செல்வத்து
இரு வகையான் இசை சான்ற
சிறு குடி பெரும் தொழுவர்
குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 106-124
பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும்,
(நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும்,
மிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக,
நெற்கதிரின் ஓசையும், (அதனை)அறுப்பாரின் ஓசையும், 110
பறவைகள் ஆரவாரித்து ஒலிக்கும் ஓசையும், என்றும்
பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற
புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,
நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக்கொண்ட
குளிர்ந்த சோலையின் செறிந்த நீர்திவலையின் ஓசையும், 115
வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்,
பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே புது வருவாயையுடைய
முதுவெள்ளிலை (என்னும் ஊரில் வாழும்) – புகழப்படுகின்ற
மிகுதியாய் விரும்பப்படும் சிறந்த செல்வமாகிய, 120
(கல்வி, கேள்வி என்னும்)இரண்டு வகையாலும் புகழ் நிறைந்த
சிறிய ஊர்களின் பெரிய ஊழியர்கள்,
குடிகள் மிக்க நான்கு நிலங்களிலும் வாழ்வாரோடு
பழைமையைக் கூறி ஏவல் கேட்டுநிற்க;

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி
பெற்றதை முதுவெள்ளிலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ்வூரில் மீன் நிற்கும் கோள்நிலை மாறினும் மழை பொழிந்து வெள்ளம் வரும்.
நெல் அறுப்போர் அறுவடைப் பாட்டோடு புள்ளினங்களின் பாட்டும் சேர்ந்து ஒலிக்கும்.
இவ்வூர் மக்கள் கடலில் மீன் பிடிக்கத் திமிலில் செல்வார்கள். உப்புக் காய்ச்சுவார்கள்.

எனவே, இது ஒரு பாண்டியநாட்டுத் துறைமுகப் பட்டினம் என்பது பெறப்படும்.
இது இன்றைய தூத்துக்குடி என்று சொல்வர்.

முதை

முதை – (பெ) பழமை, oldness
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி
பகடு பல பூண்ட உழவுறு செம் செய் – அகம் 262/1,2
பழமை மேவிய பசிய காட்டிலே பின்னிய கொடிகளை உழக்கி
எருதுகள் பூண்ட பல ஏரால் உழவினைப் பொருந்திய சிவந்த புன்செய் நிலத்தில்

இந்த முதை என்ற சொல் பெரும்பாலும் சுவல் அல்லது புனம் என்ற சொல்லுக்கு அடையாக வருகிறது.
சுவல் என்பது மேடான நிலம்.

முதை சுவல் கிளைத்த பூழி மிக பல – நற் 389/9
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல் – குறு 204/3
முதை சுவல் கலித்த மூரி செந்தினை – அகம் 88/1
முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை – அகம் 359/14
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு – அகம் 393/4

முதைப்புனம் என்பது நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்.

முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர் – குறு 155/1
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் – அகம் 94/10

முதையல்

முதையல் – (பெ) பழங்காடு, ancient dry land
விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் – நற் 121/1,2
விதை விதைப்பவர்கள் உழுது புரட்டிப்போட்ட பழமையான கொல்லையின் புழுதியில்
இடுகின்ற முறைப்படி விதைக்கப்பட்ட ஈரப்பசையுள்ள இலைகளையுடைய வரகின்

முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/8,9
உலர்ந்துபோன ஓமை மரங்களுள்ள பழமையான (அழகிய) காட்டில்
பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்

முத்தன்

முத்தன் – (பெ) பாவைத் திருமணத்தில் வரும் ஆண்பாவை,
the puppet bridegroom in children’s marriage play
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்_கால்
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/19-21
வருத்தம் இல்லை இவளுக்கு என்று அயலார் உன்னைப் பழிக்கும்போது
ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ
நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ?

இதனைச் சிறுமுத்தன் என்று அழைப்பர்.

முத்தம்

முத்தம் – (பெ) முத்து, pearl
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் – மது 315
ஒலிக்கும் கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும்

முத்தீ

முத்தீ – (பெ) காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகை வேள்வித்தீ,
The three sacrificial fires, viz., kārukapattiyam, ākava-ṉīyam, taṭciṇākkiṉi
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – திரு 180-182
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற –

முத்து

முத்து – 1. (வி) முத்தமிடு, kiss
– 2. (பெ) 1. சிப்பியிலிருந்து கிடைப்பது, Pearl
2. கண்ணீர்த்துளி, tears
1.
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல்மாக்களொடு – புறம் 41/14,15
தம் பிள்ளைகளுடைய பூப்போலும் கண்ணை முத்தங்கொண்டு, தம் மனைவியர்க்குத்
தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும்துன்பத்தையுடைய ஆடவரோடு
2.1
முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை – நற் 23/6
முத்துக்கள் விளையும் கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்துத் துறையின் முன்
2.2
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 23
பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப

முத்தூறு

முத்தூறு – (பெ) பாண்டியநாட்டின் ஒரு பிரிவு,
a tract of land annexed by the Pandiya king from the vELir class
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய – புறம் 24/21-23
பொன் அணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது
திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக் கொண்ட
வெற்றி பொருந்திய உயர்ந்த குடையினையும் கொடியால் பொலிந்த தேரினையும் உடைய செழியனே!

இந்த முத்தூறு இப்போதுள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஊர்.
இந்த ஊரில் நெல் விளைச்சல் அதிகம். வேளிர் குடி மக்கள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் இந்த ஊரில்
தொன்றுதொட்டு வாழ்ந்துவருவதால் ‘தொன்முதிர் வேளிர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
மிழலை நாட்டைக் கைப்பற்றிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மிழலை நாட்டை
வென்றபின் முத்தூறு நாட்டையும் கைப்பற்றினான்.
மிழலை என்பது இக்காலத்தில் திருவீழிமிழலை என வழங்கப்படுகிறது.
மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) என்னும் புலவர் இந்த வெற்றியைப் பாடியுள்ளார்.
சங்ககாலத்தில் வேளிர் முத்தூற்றுக் கூற்றத்துத் துவரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர்.

முத்தை

முத்தை – (பெ) முன்பகுதி, front
ஒன்னா பூட்கை சென்னியர் பெருமான்
இட்ட வெள் வேல் முத்தை தம் என – பதி 85/3,4
எம்மோடு ஒன்றிவராத கொள்கையையுடைய சோழர்களின் வேந்தன்
கீழே எறிந்த வெண்மையான வேலினை என் முன்னே கொண்டுவருவீராக என்ற சொல் கேட்டவுடன்,

முந்து

முந்து – 1. (வி) சிறந்திரு, surpass, excel
– 2. (பெ) 1. முன்பான நிலை, front position
2. முதல் நிலை, first position
3. முன்னிலை, being ahead
4. முன்னர், பண்டைக் காலம், olden days
1.
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/4
ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமையிற் சிறந்த கூகையே!
2.1.
முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி
கை தொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 251,252
முன் அப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தால் விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி,
கையால் தொழுது, புகழ்ந்து, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி,
2.2.
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி – நற் 22/1,2
குறமகள் காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின்
முதலில் விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு

நேரார் ஆர் எயில் முற்றி
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/4,5
பகைவருடைய கொள்ளற்கரிய அரனைச் சூழ்ந்து
வாயிதழைக் கடித்து உரப்பி நீ முற்படச் செல் ஏவானாதலால்
2.3.
தண் பனி வடந்தை அச்சிரம்
முந்து வந்தனர் நம் காதலோரே – ஐங் 223/4,5
குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும்
முந்திக்கொண்டு வந்துவிட்டார் நம் காதலர்.

அரும் பனி அளைஇய கூதிர்
பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே – ஐங் 252/4,5
பொறுத்தற்கரிய குளிரையும் கலந்து, கூதிர்காலத்தின்
பெரிதான குளிர்ந்த வாடைக் காற்று வருவதற்கு முன்னர் திரும்பி வந்துவிட்டான்.
2.4
மன்பதை மருள அரசு பட கடந்து
முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர் – பதி 42/16,17
மக்களெல்லாம் வியப்படையுமாறு அரசர்கள் பலரை வென்று,
முன்னால் செய்த போரை, அடுத்தும் எதிர்வரப் பெறுவதைக் காணும்பொருட்டாக

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே – பரி 13/17,18
முன்னர் நாம் கூறிய ஐந்தனுள்ளும்
முதற்புலனாகிய ஓசையினால் உணரப்படும் வானமும் நீயே!

முந்துறு

முந்துறு – (வி) 1. முன்னால் இரு, be in front
2. முன்னால் செலுத்து, முற்பட விடு, drive in front
3. முற்படு, be first, precede
4. முன்னால் செல், go in front
5. முன்னால் நிறுத்து, place in front
6. தோற்றுவி, cause to appear
7. வெளிப்படுத்து, disclose
8. முன்னிடு, நோக்கமாகக்கொள், bear in mind
1.
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்_காலை
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/7-11
(பகைவர்)எறியும் படைக்கலம் தம்மில் கலந்த அஞ்சத்தக்க போரின்கண்
கள் உள்ள கலத்தை ஏந்தியவராய் ஊர்க்குள்ளே கூறிய
வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரின்கண் மறந்த சிறிய பேராண்மையுடையோர்
போர்க்கலத்து அஞ்சிப் புறங்கொடுத்து ஓடுங்காலத்து
அவர்க்கு அரணாக தான் முன்னால் இருப்பான்.
2.
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே – நற் 89/7-11
நாள்தோறும் நம்மைத் துன்புறுத்தும் அன்பில்லாத வாடைக்காற்று,
மேல் அலங்காரம் கொண்ட யானை அயர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று
இப்பொழுதும் வருகின்றதே! தோழி! இதுவரை வராதிருந்த
வன்கண்மையாளரான தலைவரோடு ஒத்த பண்புடைய
துன்பம் நிறைந்த மாலைப்பொழுதையும், தனிமைத்துயரையும் தன் முன்னால் செலுத்திக்கொண்டு
3.
திவவு மெய்நிறுத்து செவ்வழி பண்ணி
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலி
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது – மது 604-609
வார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து,
குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி,
நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,
ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது
4.
உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 282-284
உண்பதற்கு இனிமையான பழங்களையும், பார்த்தவர்கள்
சூடுவதற்கு மகிழ்ச்சிதரும் பூக்களையும், காட்டி
தீமைகள் மிகுந்த பாதையில் அவர் முன்னேசெல்ல,
5.
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ – அகம் 249/6,7
சந்தனம் பூசிய உயர்ந்து அசையும் அழகிய திமிலினையுடைய
காளையினை முன்னர் நிறுத்தி, மிக்க உணவினைக் குவித்து
6..
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் – அகம் 39/1-4
செய்யலாகாது என்று ஒழித்த கொள்கையைப் பழித்த நெஞ்சமோடு, பயணம் மேற்கொண்டு
நினைத்தும் அறிந்தீரோ என்னை என்று, உன்
கூரிய பற்களை உடைய சிவந்த வாயின் முறுவல் அழிய
நோவினை ஏற்படுத்தி அன்பற்றவற்றைப் பேசாதே
7.
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின் – அகம் 310/3,4
பிறர் வணங்கத்தக்க தோற்றத்தினையுடையவனாகிய நீ மனச்சிதைவை வெளிப்படுத்தி
பல நாளும் வந்து பணிந்த மொழிகளைப் பலகாலும் கூறலின்
8.
நின் படைகொள் மாக்கள்
பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்து
கூவை துற்ற நால் கால் பந்தர்
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்றாக நின் செய்கை – புறம் 29/17-22
நின்னுடைய படைக்கலம் பிடித்த மாந்தர்
நின்னுடைய பகைவரைப் போல் இரக்கத்தை முன்னிட்டுக்கொண்டு
கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களையுடைய பந்தராகிய
சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி நின்பால் வருவார்க்கு
உதவி செய்யும் நட்போடு கூடிய குணத்தையுடைய
முறைமையுடைத்தாக நினது தொழில்

முந்தூழ்

முந்தூழ் – (பெ) மூங்கில், spiny bamboo
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே
———————- ————————– ———————-
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே – குறு 239/1-6
வளையல்கள் கழன்றி வீழ்ந்தன, தோள்கள் மெலிந்துபோய்விட்டன,
——————– ———————— ——————–
மூங்கில் வேலியை உடைய மலைகளையுடைய நம் தலைவனுக்காக

முந்தை

முந்தை – 1. (பெ) முற்பட்டது, முதலில்வருவது, that which comes first
-2. (வி.அ) முன், in front of
1.
மன்றுதொறும் நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை – மது 615-620
மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் – குடியிருப்புகள்தோறும் (நின்ற)
புனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து,
வேறு வேறான ஆரவாரம் ஆவேசம்கொண்டு கலந்து,
பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில்,
சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே
முற்பட்ட (முதல்)யாமம் நிகழ்ந்த பின்னர்
2.
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – நற் 355/5,6
முன்னதாக இருந்து நண்பர்கள் கொடுத்தால்
நஞ்சையும் உண்பர் மிகுந்த நாகரிகத்தையுடையவர்காள்

முந்நீர்

முந்நீர் – (பெ) 1. ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது, கடல்,
Sea, as consisting of three waters, viz., river water, spring water and rain water.
2. பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது,
Sea, as having the three qualities of forming, protecting and destroying the earth
1.
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293
இருண்ட நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில்
2.
வான் இயைந்த இரு முந்நீர்
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து – மது 75,76
வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று தன்மையுடைய
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,

முனாது

முனாது – (பெ) முன்னே உள்ளது, that which is in front
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது
குல்லை கண்ணி வடுகர் முனையது
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே – குறு 11/4-8
செல்ல)எழுவாயாக, இனியே! வாழ்க என் நெஞ்சே! முன்னே உள்ள
கஞ்சங்குல்லையைக் கண்ணியாக அணிந்த வடுகரின் இடத்ததாகிய
வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால்
மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்
(அங்குச்)செல்வதை எண்ணினேன் அவருடைய நாட்டினிடத்துக்கு

முனி

முனி – (வி) 1. வெறு, hate, dislike
2. சினம்கொள், be angry
1.
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் – புறம் 178/1,2
கம்பத்தை வெறுத்து நெட்டுயிர்ப்புக்கொள்ளும் யானயோடு, பந்தியை வெறுத்து
காற்றுப்போலும் இயல்புடைய குதிரை ஆலிக்கும் அவ்விடத்து
2.
மகளிரை மைந்து உற்று அமர்பு_உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல் – பரி 20/91-93
மகளிர்மேல் காமமயக்கம் கொண்டு அவரை விரும்பிச் சென்ற ஆடவரின்
மார்பினைக் கடிந்து ஒதுக்குவோம் என்று சொல்வது குலமகளிர் யாருக்கேனும்
முடிந்த முடிவு அன்று, சினங்கொள்ளவேண்டாம்,

முனிவு

முனிவு – (பெ) 1. வெறுப்பு, dislike, aversion
2. கோபம், anger
3. வருத்தம், suffering

1.
வாழ்தல், இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே – புறம் 192/4-6
வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம், ஒரு வெறுப்பு வந்தவிடத்து
இன்னாதென்று இருத்தலும் இலம்
2.
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய் – நற் 230/6
உன்மேல் கோபம் இல்லாத உன் பரத்தைக்கு, என்னைத் துறந்து, அருள்செய்வாய்!
3.
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 40
(வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே,

முனை

முனை – 1. (வி) 1. வெறு, dislike, hate
2. வீசு, blow as a wind
– 2. (பெ) 1. போர்முனை, warfront
2. பகைவர் நாடு, enemy country
3. ஊர் அல்லது தெருவின் இறுதி, either end of a village or street
4. பகை, enmity
1.1.
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி – அகம் 20/7,8
கீழ்க்காற்று கொணர்ந்த மணலில் குரவைக்கூத்து ஆடி, அது வெறுத்துப்போய்,
வெள்ளிய நுரையைத் தலையில் கொண்ட கடல் அலைகளில் தோழியரோடு ஆடி,

ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி – பட் 55,56
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,

பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 93
கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
1.2
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் – பதி 47/3,4
மலைமேலிருந்து விழும் அருவியினைப் போல, மாடங்களின் மேலிருந்து
காற்று வீசி அசையும் கொடிகள் ஆடி அசையும் தெருவில்
(ச.வே.சு.உரை)
2.1
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை – சிறு 105
குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும்
2.2
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் – குறி 128
-பகைவர் நாட்டைப் பாழாக்கும் நெருங்குவதற்கு முடியாத வலிமையையுடைய,
2.3
முனை ஊர்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் – நற் 100/7-9
ஊர் முனையிலுள்ள
பல பசுக்களின் நீண்ட வரிசையை வில்லினால் போரிட்டுக் கவர்ந்து செல்லும்
தேர்களைக் கொடையாகக் கொடுக்கும் மலையன்
2.4
முனை எழ
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன – நற் 260/5-7
பகை மிகுதலாலே
ஆண்டு வந்த பகைவரை அழித்த சிவந்த வேற்படையையுடைய வீரனாகிய விரான் என்பவனது
நிறைந்த புனல்வாயிலை அடுத்து இருப்பையூர் போன்ற
(பின்னத்தூரார் உரை)

முன்கடை

முன்கடை – (பெ) வீட்டின் முன்வாசல், front entrance of a house, porch
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம்
முன்கடை நிறீஇ சென்றிசினோனே – நற் 300/5,6
சிறிய வளை அணிந்தவளுக்கு இது விலையாகும் என்று பெரிய தேரை அலங்கரித்து, எமது
வீட்டின்முன் நிறுத்திச் சென்றுவிட்டான்

முன்கை

முன்கை – (பெ) முழங்கை முதல் மணிக்கட்டு வரையில் உள்ள பகுதி, forearm
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் – பொரு 32,33
அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,
நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள் (போலும்)மெல்லிய விரலினையும்,

பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 141,142
(முன்பு)பொன் வளையல்கள் (அழுத்தித்)தழும்புண்டாக்கிய மயிர் ஒழுங்குபட்ட முன்கையில்
வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,

முன்துறை

முன்துறை – (பெ) 1. துறைமுகம், port, harbour
2. ஆற்றில் இறங்குமிடம், place whereone gets into a river
1.
தீம் புகார் திரை முன்துறை
தூங்கு நாவாய் துவன்று இருக்கை – பட் 173,174
(கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே,
அசைகின்ற (நெருக்கமாய் நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில்,

முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை – நற் 23/6
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை – குறு 128/2
நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகம் 35/15,16
முதுநீர் முன்துறை முசிறி முற்றி – அகம் 57/15
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை – அகம் 93/21
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை – அகம் 100/13
அடு போர் வேளிர் வீரை முன்துறை – அகம் 206/13
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/8
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை – அகம் 290/13
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை – புறம் 136/25
2.
திருமருத முன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் – பரி 7/83
திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்

முன்னம்

முன்னம் – (பெ) 1. கருத்து, எண்ணம், thought, intention
2. குறிப்பு, sign, gesture
1.
நின் நசை வேட்கையின் இரவலர் வருகுவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/24-26
நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர், அங்ஙனம் வருவது
அவர் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து அவருடைய
வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான்
2.
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/7
ஏடா! நீ உன் குறிப்பினால் ஏதோ ஒன்றைக் கூறவிரும்புவது போல் காட்டிக்கொள்கிறாய்!

முன்னிலை

முன்னிலை – (பெ) 1. முன்னால் நிறுத்துவது, that which can be placed in front of you (as equal)
2. முன்னால் நிற்றல், standing in the front
3. படைகளின் முன்பகுதி, தூசிப்படை, the forefront of an army
1.
வாணன் வைத்த விழு நிதி பெறினும்
பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ – மது 203-206
வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,
பழி நமக்கு வரட்டும் என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை
வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்;
அத்தன்மையுடையாய், உன்னோடு முன்னிலையாக வைத்துக்கூறுவதற்கு யாதுளது?
2.
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் – அகம் 125/17,18
அச்சந்தரும் சேனையுடன் தான் விரும்பும் புலத்தில் தங்கிய
பெரிய வளத்தையுடைய கரிகால் வளவன் முன் நிற்றலை ஆற்றாராய்
3.
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று
நிரையொடு வரூஉம் என் ஐ – புறம் 262/4,5
பகைவரது தூசிப்படையை முறித்து, பெயர்ந்து போகிறபோது தனது படைக்குப் பின்னே நின்று
நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்கு

முன்னு

முன்னு – (வி) 1. கருது, think, contemplate
2. அடை, சேர், reach, arrive at
3. அணுகு, அருகில் செல், approach, go or come near
4. எழு, பொங்கு, rise, swell
1.
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66
இப்பொழுதே பெறுவாய், நீ கருதிய வினையின் பயனை;
2.
வானத்து அன்ன வளம் மலி யானை
தாது எரு ததைந்த முற்றம் முன்னி – மலை 530,531
மழைமேகங்களைப் போன்ற செழுமை மிகுந்த யானைகள்(இருக்கும்),
(காய்ந்த)சாணத் துகள்கள் (யானை மிதிப்பதால்)சிதறிக்கிடக்கும் முற்றத்தை அடைந்து,
3.
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று
பெறாது பெயரும் புள்ளினம் போல – புறம் 209/7-10
பல பழத்தையும் நச்சி, தாம் வாழ்வதற்கிடமாகிய ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து
பெரிய மலையின் முழை எதிரொலி முழங்கச் சென்று
அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து மாறிற்றாக வருந்தி
பழம் பெறாதே மீளும் புள்ளினத்தை ஒப்ப
4.
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு – பரி 12/7,8
செறிந்த நீரையுடைய கடல் பொங்கி வருவதைப் போன்றிருக்கிறது – இனிய நீரையுடைய
காற்றோடு கலந்து வரும் வையையின் வரவு;

முன்னை

முன்னை – (பெ) 1. முற்காலம், பழமை, former times, antiquity
2. முன்பக்கம், opposite side
1.
முன்னை மரபின் முதுமொழி முதல்வ – பரி 3/47
அநாதிக் காலமாய் வரும் மரபினையுடைய வேதத்திற்கு முதல்வனே!
2.
பாங்கு அரும் பாட்டம்_கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ – கலி 116/1-3
பக்கத்தில் இருக்கும் உள்ளே எளிதில் போகமுடியாத தோட்டத்திற்குக் கன்றோடு செல்கின்றபோது எம்
தாம்புக்கயிற்றின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டவனாய், இங்கு எம்மை
முன்னால் நின்று தடுத்து நிற்பவனே! நீ

முன்ப

முன்ப – (வி.வே) வலிமையினையுடையவனே! Oh! powerful one
போர் பீடு அழித்த செரு புகல் முன்ப
கூற்று வெகுண்டு வாரினும் மாற்றும் ஆற்றலையே – பதி 14/9,10
போர்த்திறனின் பெருமிதத்தை அழித்த போர்மீது விருப்பம் கொண்ட வலியவனே!
கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அழித்துவிடும் ஆற்றலையுடையவனே

முன்பனி

முன்பனி – (பெ) ஆண்டில் மார்கழி, தை ஆகிய மாதங்கள், the period during the months of margazhi and thai
பின்பனி அமையம் வரும் என முன்பனி
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/2,3
பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!

முன்பு

முன்பு – (பெ) உடல்வலிமை, bodily strength
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு – புறம் 341/12,13
கடத்தற்கரிய போரைச் செய்தற்குரிய மறத்தீக் கிளறும் வலிமையினையும்
நீண்ட இலையையுடைய வேலால் புண்ணுற்று வடுப்பட்ட உடம்போடே

முன்றில்

முன்றில் – (பெ) வீட்டின் முன்பகுதி, the front of a house
இது வீட்டுக்கு முன்பக்கம் தெருவரையில் உள்ள திறந்த வெளி.
முன்றில் = முன் + இல்
முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! (தொல்-எழுத். புள்.மயங்:60)
‘முன்’ என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ‘இல்’ என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும்.
1.
இந்தத் திறந்த வெளியில் பந்தல் போட்டிருக்கும் அல்லது மரநிழல் இருக்கும்.
குறி இறை குரம்பை பறி உடை முன்றில்
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 265-267

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முன்றிலையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
2.
பலவித மரங்கள் இருக்கும்.
மன்ற புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும் – நற் 49/8,9
மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
வீட்டு முன்றிலில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும்

வளி சீத்து வரித்த புன்னை முன்றில் – நற் 159/6
காற்று துடைத்துத் தூய்மையாக்கிய வரிவரியான புன்னை மரம் உள்ள முன்றிலில்

சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளை உடை முன்றில் – நற் 77/5,6
கிளைகள்தோறும் தொங்கும் பழங்களையுடைய பலாவின்
சுளைகளை உடைய முன்றிலில்

தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/1,2
தொங்குகின்ற ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
கரிய அடிமரத்தைப் புதைத்த மணல் மிகுந்துகிடக்கும் வீட்டு முன்றிலில்

வேங்கை
வீ உக வரிந்த முன்றில் – நற் 232/7,8
வேங்கையின்
மலர்கள் உதிரும்படி வரிக்கப்பட்ட முன்றில் உள்ள

நெல்லி, மரை_இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே – குறு 235/3-5
நெல்லிக்காயை
மரைக் கூட்டங்கள் உண்ணும் முன்றிலையுடைய
புல் வேய்ந்த குடிசைகளையுடைய நல்லவளின் ஊர்

தேம் பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிர – அகம் 78/7,8
இனிமையுறப் பிழிந்த கள்ளினையுடைய குறவர்களின் முன்றிலில்
மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும்

முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி – அகம் 348/1-3
முன்றிலின்கண்ணுள்ள
தேன் எனத்தகும் சுவையினவாகிய திரண்ட அடியினையுடைய மாமரத்தின்
கோடைக்காலத்தே முதிர்ந்த நன்மணங்கமழும் இனிய கனிகளுடன்
3.
வீட்டு முன்றிலில் மகளிர் கள் காய்ச்சுவர்.
பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 337-340
4.
முன்றிலில் நிலத்தில் உரலைப் பதித்துவைத்திருப்பர். அதில் அரிசி, அவல் போன்றவற்றை உலக்கையால் குற்றுவர்.
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
——————————— ——————
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி – பெரும் 94-97
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்
———————————————- ———————————
நிழலையுடைய முன்றிலில் நில(த்தில் குழிக்கப்பட்ட) உரலில் இட்டு,
குறிய வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி,

புது வை வேய்ந்த கவி குடில் முன்றில்
அவல் எறி உலக்கை பாடு விறந்து – பெரும் 225,226
புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடிலின் முன்றிலில்
அவலை இடிக்கும் உலக்கையின் ஓசை செறிகையினால்,
5
முன்றிலில் முளையினை அறைந்து அதில் ஆட்டுக்குட்டிகளைக் கட்டிவைத்திருப்பர்.
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் – பெரும் 152,153
நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முன்றிலில்,
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்
6.
முன்றிலில் தானியங்களைச் சேர்த்துவைக்கும் குதிர்கள் கட்டியிருப்பர். முன்றிலில் பந்தலிட்டு அதன் நிழலில்
தானியங்களை அரைக்கும் திரிகையை வைத்திருப்பர்.
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர் – பெரும் 186,187
பிடித்திரள் நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும்,
யானையினது காலை ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும்,
7.
முன்றிலில் மஞ்சள் கிழங்கு நட்டுவைத்திருப்பர்.
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354
வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முன்றிலினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
8.
அரசனுடைய அரண்மனை முன்றிலில் மந்திகள் செத்தைகளை அகற்றும், விலங்குகள் துயிலும், முனிவர்கள்
வேள்வி செய்வர்.
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 497-500
மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முன்றிலில்,
சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய
eகளிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும்,
ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன்
9.
பரதவர் குடிசைகளின் முன்புள்ள முன்றிலில் மீன் பிடிக்கும் வலையைக் காயப்போட்டிருப்பர்.
குறும் கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 81-83
குறுகிய கூரைச்சரிவுகளையுடைய குடியிருப்புகளின் நடுவில்,
நிலவின் நடுவே சேர்ந்த இருளைப் போல
வலைகிடந்து உலரும் மணலையுடைய முன்றிலைக்கொண்ட இல்லங்களில்
10.
பண்டகசாலைகளின் முன்றிலில் பொதிமூட்டைகளின் மீதேறி நாயும் ஆட்டுக்கிடாயும் விளையாடும்.
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடை போர் ஏறி
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்
வரை ஆடு வருடை தோற்றம் போல
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை
ஏழக தகரோடு உகளும் முன்றில் – பட் 136-141
மதிப்பு மிக்க ஏராளமான பண்டங்கள்
பொதிந்த பொதிகளை அடுக்கிவைத்த குவியலின்மீது ஏறி,
மழை விளையாடும் சிகரத்தையுடைய உயர்ந்த மூங்கில்கள் வளர்ந்த சரிவுகள் உள்ள
மலையில் துள்ளி விளையாடும் வருடைமானின் காட்சி போல,
கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது
ஆட்டுக் கிடாயுடன் குதிக்கும் (பண்டசாலையின்)முன்றிலினையும் – (கொண்ட பட்டினம்),
11.
மீனவர் சேரிகளில் முன்றிலில் மீனை அறுத்து வெடுக்கு நீக்கி, அதனை எண்ணெயில் பொரிப்பர்.
மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 176,177
மீனை வெட்டி, (அதனுள் இருக்கும்)வேண்டாத பகுதிகளை நீக்கி,
(அதன்)தசையினைப் பொரிக்கும் ஓசையெழும்பும் முன்றிலினையும்
12.
மீன் பிடிப்பவர் பிடித்த மீனை முன்றிலில் கூடையில் வைத்திருப்பர்.
வலைஞர் முன்றில் மீன் பிறழவும் – பட் 197
வலைஞர் முன்றிலில் மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும்,
13
மலைவாழ் மக்களின் தினைப்புனத்தில் கதிர் அறுக்க வரும் குறவர், இரவில் தம் குடும்பத்துடன் முன்றிலில்
படுத்திருப்பர்.
புனத்த
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர
கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் – நற் 44/5-8
தினைப்புனத்தில்
நீண்ட இலையையுடைய நன்கு விளைந்த தினையின் வளைந்த தாள் நிமிரும்படி
கொழுமையான கதிர்களைக் கொய்வதைக் கருதி, திரண்ட பல
பெருத்த கூட்டமான குறவர்கள் இராத்தங்கி இன்பமாய்ப் பொழுதுபோக்கும் முன்றிலிலுள்ள
14.
வீட்டுக்குள் புழுக்கம் மிகுந்திருந்தால், முன்றிலில் காற்றாட அமர்ந்திருப்பர்.
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை இனி வாழி தோழி புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே – நற் 236
என் காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும்
நெருப்பு வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது;
விரைவாக, நான் சிறிதாகிலும் உயிர்த்திருக்க, மெல்ல
முன்றிலில் இவளை இருத்தினால் நலம்பெறுவாள் பெரிதும் என்று
உள்ளிருப்போரை வெளிவிடாத நரகக் காவலர் போன்ற நெஞ்சத்தையுடைய அன்னைக்கு அறிவுறுத்தி, அங்கு
உரைப்பாயாக இனியே, வாழ்க தோழி நீ! குற்றமற்ற
நுண்ணிய நேரிய ஒளிபொருந்திய வளைகளை நெகிழச்செய்தவனின் குன்றத்து
மிகப்பெரிய உயர்ந்த கொடுமுடியில் தவழ்ந்து, குளிர்ச்சியுடன்
நம் மலையின் அகன்ற பாறைகளில் நிரம்பியுள்ள காற்று எனது
பசலை பாய்ந்த மார்பினைத் தீண்டுவதற்காக, சிறிதேனும்
15.
பரதவர் வீட்டு முன்றிலில் நண்டுகள் ஓடித்திரியும்.
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடி செல் நெறி வழியின் – நற் 239/4,5
நண்டுகள் ஓடித்திரிந்த புலால்நாறும் மணல் பரப்பிய முன்றிலையுடைய
கண்டோர் விரும்பும் சிறுகுடிக்குச் செல்லும் ஒழுங்குபட்ட வழியில்
16.
வீட்டு முன்றிலில் பெண்கள் கள்ளுண்டு குரவைக்கூத்து ஆடுவர்.
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே – நற் 276/8-10
எம் ஊரில் தங்கிச் செல்வாயாக நீயே! பெரிய மலையில் உண்டான
வளைந்த மூங்கிலாலான குப்பிகளில் விளைந்த கள்ளினை உண்டு
வேங்கை மரங்கள் இருக்கும் முன்றிலில் நாங்கள் ஆடும் குரவைக்கூத்தையும் கண்டுவிட்டு

வேங்கை முன்றில் குரவை அயரும் – புறம் 129/3
17.
வீட்டு முன்றிலில் தானியங்களைக் காயப்போட்டிருப்பர்.
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி – குறு 46/2,3
கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி
முன்றிலில் காயும் தானியங்களை வயிறார உண்டு
18.
முன்றிலின் எல்லையிலுள்ள குத்துக்கல்லில் தெருவில் செல்லும் விலங்குகள் முதுகைத்தேய்த்துச் செல்லும்.
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் – ஐங் 277/1
குறவரின் வீட்டு முன்றிலில் இருக்கும் விலங்குகள் தம் முதுகைத் தேய்த்துக்கொள்ளும் குத்துக்கல்லில்
19.
மாலை நேரத்தில் முன்றிலில் கட்டில் போட்டு கணவனும் மனைவியும் குழந்தையுடன் இனிமையாகப் பொழுதைக்
கழிப்பர்
மாலை முன்றில் குறும் கால் கட்டில்
மனையோள் துணைவி ஆக புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே
மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410
மாலைநேரத்தில், வீட்டு முன்றிலில், குட்டையான கால்களையுடைய கட்டிலில்,
மனைவியானவள் பக்கத்தில் இருக்க, புதல்வன்
மார்பினில் தவழும் மகிழ்ந்த சிரிப்பின் இன்பமான
நேரத்திற்கு ஒப்பானது –
மென்மையாக உள்ளத்தைப் பிணிக்கும் பாணனது யாழிசை
20.
இடையர்கள் முன்றிலில் தயிர் கடைந்து, மத்தினை அங்குத் தொங்கவைத்திட, அங்குக் கட்டியிருக்கும் கன்றுக்குட்டி
அதனை வாயால் நக்கும்.
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் – அகம் 87/1,2
இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினையுடைய மத்து
கன்று தன் வாயால் சுவைத்திட முன்றிலில் தொங்கும்
21.
முல்லை நில வீடுகளுக்கு வெளியேயுள்ள புலத்தில் மேய்ந்த முயல்கள், வீட்டு முன்றிலுள்ள சிறிய கலங்களிலுள்ள
நீரைப் பருகும்.
குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன் துயில் எழுந்து துணையொடு போகி
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் – அகம் 284/2-6
குறிய விழி பொருந்திய கண்களையும், கூரிய மயிரினையுமுடைய குறிய முயல்கள்
வளைந்து கிடக்கும் வரகினது பருத்த குருத்தினைத் தின்று
வளைந்த அழகிய செவியினவாகி, காய்களைக் கொண்ட கொடிகளுள் புகுந்து
இனிய துயிலினின்றும் எழுந்து, தம் துணையோடு போகி
வீட்டு முன்றிலிலுள்ள சிறிய சால்களிலுள்ள நீரைக் கண்டு பருகும்
22.
பாலைநிலத்துச் சீறூர்களில் வீட்டு முன்றிலில் பூனை குட்டியுடன் படுத்திருக்கும்.
ஈர் முள் வேலி புலவு நாறு முன்றில்
எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனில் தாய்வழிப்படூஉம், சிறுகுடி – அகம் 297/12-16
ஈர்கின்ற முள்வேலியினையுடைய புலால் நாறும் முன்றிலில்
ஓவியத்து எழுதினாற் போன்று மெலிந்து நீண்ட பூனையின்
பூளைப் பூவினைப் போன்ற விளங்குகின்ற மயிரினையுடைய குட்டிகள்
திங்களைச் சூழ்ந்துள்ள விண்மீன்கள் போலத் தம் தாயின் பின் சூழ்ந்திருக்கும், சீறூர்
23.
பாலைநிலத்துச் சீறூர்களில் வீட்டு முன்றிலில் புழுக்கிய ஊனைத் தேக்கிலையில் குவித்து உண்ணுவர்
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின்
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே – அகம் 315/15-18
தங்கியிருப்பாளோ அவள், தேக்கமரத்தின்
அகன்ற இலையில் குவிக்கப்பெற்ற, புதர் போலும் குடிசையின்
முன்றிலில் புழுக்கிய ஊனினை உண்ணும்
காட்டில்பொருந்திய வாழ்க்கையினையுடையாரது சீறூரின்கண்
24.
எளியோரின் வீட்டு முன்றிலில் பசுமாடு கட்டிக்கிடக்கும்.
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/23,24
வறுமையுற்ற பெண்டினது புல்வேய்ந்த குடிலாய
ஒரு பசு கட்டியுள்ள ஒற்றைத் தூண் கொண்ட முன்றிலில்
25.
முன்றில் முள்வேலியால் அடைக்கப்பட்டிருக்கும்.
முள் மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் – புறம் 116/4-6
முள்ளால் நெருங்கிய வேலியையும்
பஞ்சு பரந்த முன்றிலையுமுடைய சிறிய மனையிடத்தின்கண்
26.
முன்றிலைச் சுற்றியுள்ள நெல்லி மரங்களே அதற்கு வேலியாக இருக்கும்.
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர் – புறம் 170/1,2
மரையாவால் பிரித்துண்ணப்பட்ட நெல்லியாகிய வேலியையுடைத்தாய்
அதனது விதையாகிய பரல் உடைத்தாகிய முன்றிலினையுடைய அழகிய குடியையுடைய சிறிய ஊரின்கண்
27,
மரத்தின் கழிகளாலும், இலைதழைகளாலும் செய்யப்பட்ட படல் முன்றிலைச் சுற்றி இருக்கும்.
உடும்பு இழுது அறுத்த ஒடுங்காழ் படலை
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார் – புறம் 325/7,8
அறுத்தெடுத்த உடும்பின் தசையை, ஒடு மரத்தின் வலிய கழிகளால் செய்யப்பட்ட படல் சார்த்தப்பட்ட
சிறிய மனை முன்றிலில் பகுத்தளித்தற்பொருட்டு

படலை முன்றில் சிறுதினை உணங்கல் – புறம் 319/5

மேற்கண்ட கூற்றுகளினின்றும் நாம் பெறுவது : முன்றில் என்ற வீட்டு முன் பகுதி வீட்டுப் புழக்கத்தில் உள்ள பகுதி.
எனவே, வீட்டின் பல அன்றாடச் செயல்கள் அங்கு நடைபெறும். வீட்டுப் பொருள்களும் அங்கு இருக்கும். எனவே,
இப்பகுதி பாதுகாப்பான ஒரு வேலியைக் கொண்டிருக்கும் என்பது உறுதி. மேலே காணப்படும் எடுத்துக்காட்டுகள்
25,26,27 ஆகியவை இதனை உறுதிப்படுத்தும். இதுவே முன்றிலை, வீட்டு முற்றத்தினின்றும் வேறுபடுத்திக்
காட்டுவதாகும்.

மும்மை

மும்மை – (பெ) மூன்றாயிருக்குந் தன்மை, The state of being three
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/1,2
ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான பாண்டியனின்
குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை

முய

முய – (வி) நெருங்கியிரு, be close
முய பிடி செவியின் அன்ன பாசடை
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போ – நற் 230/1-3
நெருக்கமாய்க்கிடக்கும், பெண்யானையின் காதைப் போன்ற பசிய இலைகளையும்,
குளத்தில் கூட்டமாய் நிற்கும் கொக்குகளைப் போன்ற குவிந்த மொட்டுக்களையும்
திரட்சியான தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது

முயத்தல் – நெருங்கல். முயா என்னும் குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது நின்றது. –
பின்னத்தூரார் உரை விளக்கம்.

முயக்கம்

முயக்கம் – (பெ) தழுவல், embrace
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/7,8
ஒருவர் மெய்யில் ஒருவர்மெய் புகுவது போலும் கை விரும்பும் முயக்கத்தால்
ஈருடம்பிற்கு ஓர் உயிர் எனத்தகும் காதலர்களும் வருந்துவரன்றோ

முயக்கு

முயக்கு – (பெ) தழுவல், பார்க்க : முயக்கம்
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின்
முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே – கலி 78/25,26
உன்னை விரும்புபவரும், நீ விரும்புவரும் ஆகிய பரத்தையர் வெறுத்து மனம் மாறும்படியாக! கையினால்
மலரச்செய்த மொட்டினைப் போன்ற தழுவலில் சிறப்பு இல்லை,

முயங்கல்

முயங்கல் – (பெ) தழுவுதல், embracing
குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே – நற் 119/8-11
காட்டு மல்லிகையுடனே
கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன் ஒருபோதும்
என்னுடைய தழுவுதலைப் பெறமாட்டான்
என்மீது பிணக்குக் கொண்டாலும் கொள்ளட்டும், தன் மலையைக் காட்டிலும் பெரிதாக

முயங்கு

முயங்கு – (வி) தழுவு, அணை, embrace, cuddle with, hug
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்க துயில் இன்னாதே – குறு 353/6,7
பின்னல் தாழ்ந்த முதுகைத் தழுவி
அன்னை அணைத்திருக்க தூக்கம் இன்னாததாகும்

முயறல

முயறல் – (பெ) முயலுதல், trying hard
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல்
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/1-3
பலரும் தூங்கும் நள்ளென்னும் நடு இரவில்
வலிமையுடைய ஆண்யானை போல வந்து இரவில் கதவைத் திறக்க முயன்றதை
நான் கேட்காமல் இல்லை, கேட்டேன், தலைவனே!

முயறி

முயறி – (மு.ஒ.வி.மு) முயல்கிறாய், you are trying
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ – கலி 17/9-12
ஆற்றல் மிக்க காம நோய் இவளை வருத்த, இவளின் அழகு வாடிப்போக, இவளை விட்டுப் பிரிந்து நீ
பெருமை தரும் தோற்றம் கொண்ட அரச செல்வத்தைப் பெற முயலுகின்றாய்! உன் முயலுதல் தொடரும்வரை
மணம் மிக்க, நீர் நிறைந்த குளத்தில் இலைகளுக்கு மேல் உயர்ந்து நிற்கும் மொட்டுகளுக்கு
மலர்ச்சியே அதற்குக் கூற்றமாக இருப்பது போல், குறைந்துகொண்டுவரும் இவள் கற்பு வாழ்க்கை நிலைபெறுமோ?

முயல்

முயல் – 1. (வி) முனைப்புடன் ஒன்றைச் செய், முயற்சி செய், விடாது ஊக்கத்துடன் செயல்புரி
strive, try hard, endeavour
2. ஒரு சிறுவிலங்கு, rabbit, hare
1.
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/12,13
மிக்க வருத்தமின்றி ஊக்கத்துடன் ஈட்டமுடிகின்ற பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால்
நீர் நிறைந்த கண்கள் உறக்கம் கொள்ளாமல் துன்பம் மிகுவாள் அன்றோ

கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/7
வன்கண்மையுடைய ஆறலைப்போர் அம்பு எய்ய முயற்சிசெய்து பதுங்கியிருத்தற்கண்

செல்லிய முயலி பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப – ஐங் 378/1,2
பறந்து செல்வதற்கு முயன்று விரித்துப் பரப்பிய சிறகினையுடைய
வௌவால் வானுக்கு உயர்ந்து செல்லும் மாலை நேரத்தில் நாம் தனித்து வருந்த,
2.
முயலைப்பற்றிய சில வருணனைகள்:

நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 115

குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல் – அகம் 284/2

பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய – புறம் 322/5

கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல்
உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும் – புறம் 333/3,4

தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல் – புறம் 334/2

முயல்வு

முயல்வு – (பெ) முயலுதல், Endeavouring, persevering; exercising
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ – கலி 17/9-12
ஆற்றல் மிக்க காம நோய் இவளை வருத்த, இவளின் அழகு வாடிப்போக, இவளை விட்டுப் பிரிந்து நீ
பெருமை தரும் தோற்றம் கொண்ட அரச செல்வத்தைப் பெற முயலுகின்றாய்! உன் முயலுதல் தொடரும்வரை
மணம் மிக்க, நீர் நிறைந்த குளத்தில் இலைகளுக்கு மேல் உயர்ந்து நிற்கும் மொட்டுகளுக்கு
மலர்ச்சியே அதற்குக் கூற்றமாக இருப்பது போல், குறைந்துகொண்டுவரும் இவள் கற்பு வாழ்க்கை நிலைபெறுமோ?

முயால்

முயால் – (வி.வே) முயலே! Oh! rabbit!
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ – கலி 144/18,19
திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?

முயிறு

முயிறு – (பெ) முசுறு என்னும் ஒருவகை எறும்பு, செந்நிறமுள்ள எறும்பு வகை, Red ant, Formica smaragdina
பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள் அரிசியின் தாஅம் – நற் 180/1-3
வயலருகே இருக்கின்ற பலாமரத்தில் முயிறு எனப்படும் சிவந்த பெரிய எறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
கழனியில் இரைதேடிவந்த நாரை தேய்த்துச் சிதைத்ததால், செந்நெல்
கலந்த வெள்ளை அரிசியைப் போல் எறும்புகளும் அவற்றின் முட்டைகளும் பரந்துகிடக்கும்

பழன பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும் – ஐங் 99/1,2
நீர்நிலைகளை ஒட்டிப் படர்ந்திருக்கும் பாகல் கொடியில், முசுற்றெறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
வயல்வெளிகளில் மேயும் எருமை, நெற்கதிரோடு சேர்த்து உழப்பிவிடும்

இந்த முசிற்றெறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழும். பெரிய இலைகலையுடைய மா, பலா ஆகிய மரங்களில்
அதன் இலைகளை ஒன்றுசேர்த்துக் கூடுகட்டி முட்டையிட்டு வாழும்.
இங்கே வயல்வெளி ஓரங்களில் படர்ந்து கிடக்கும் பாகற்கொடியின் இலைகலைச் சேர்த்து அவை கூட்டுகட்டுவதாகப்
புலவர் கூறுகிறார்.

முரசம்

முரசம் – (பெ) அளவில் பெரிய, அரைக்கோள வடிவிலான தோல்கருவி, பறை, a kind of drum.

இன் இசைய முரசம் முழங்க – மது 80

படு கண் முரசம் காலை இயம்ப – மது 232

மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236

தழங்கு குரல் முரசம் காலை இயம்ப – ஐங் 448/1

போர்ப்பு_உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/18

எடுத்து எறிந்த விறல் முரசம்
கார் மழையின் கடிது முழங்க – பதி 80/3,4

இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப – அகம் 354/2

பிணி உறு முரசம் கொண்ட_காலை – புறம் 25/7

முரசு

முரசு – (பெ) பார்க்க : முரசம்
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை – முல் 79

முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை தணிந்து – ஐங் 450/1

அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப – புறம் 126/19

முரச்சு

முரச்சு – (வி) முற்றுவி, ஒரு செயலை முடி, நிறைவேற்று, accomplish, finish
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து
முரசு செய முரச்சி களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய் – பதி 44/14-17
பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு
வீழ்த்தி
முரசு செய்வதற்காகத் துண்டுகளாக வெட்டி, யானைகள் பலவற்றை வண்டியில் பூட்டி
இழுத்துக்கொண்டு போகச் செய்தவனே!

முரசு செய முரச்சி என்றது, அவ்வேம்பினை முரசாகச் செய்யும்படி முற்றுவித்து என்றவாறு. முற்றுவித்தலாவது
ஒழுகை ஏற்றலாம்படி துண்டங்களாகத் தரிப்பித்தல் – ஔவை.சு.து. உரை விளக்கம்.

முரஞ்சு

முரஞ்சு – 1. (வி) முதிர், முற்று, mature, ripen
– 2. (பெ) முதிர்வு, maturing
1.
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து – மலை 268
கிளைகள் பலவும் முற்றிப்போன பூவாது காய்க்கும் மரமாகிய ஆலமரத்தில்
2.
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 144
முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்

முரண்

முரண் – 1. (வி) 1. மாறுபடு, எதிராகு, பகைகொள், be at variance, be opposed, be in conflict with
2. ஒத்திரு, be similar to
– 2. (பெ) 1. மாறுபாடு, எதிரான நிலை, variance, opposition
2. பகைமை, being inimical
1.1.
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெருவளம் மலர அல்லி தீண்டி – அகம் 255/11,12
கருவிளையின் பூவினொடு மாறுபட்ட குளிர்ந்த பகன்றைச் செடியின்
மிக்க செழுமையுடைய மலர்களின் அகவிதழை அசைத்து

வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை – அகம் 214/5,6
அரசனும் மிக்க பகையொடு மாறுபட்டு, நிமிர்ந்த இலையினையுடைய
ஒளி விடுகின்ற நீண்ட வேல் மின்னும் பாசறைக்கண்ணேயிருந்து

சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் – நற் 389/6
சிறு கிளிகள் கொத்தியழிக்கும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனத்தின்
முரணுதல் – மாறுகொண்டழித்தல் – பின்னத்தூரார் உரை விளக்கம்.

செருவேட்டு
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய – புறம் 99/8-10
போரை விரும்பி
ஒலிக்கும் ஓசை பொருந்திய முரசினையுடைய ஏழு அரசரோடு பகைத்து
மேற்சென்று போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த
1.2
பொரு கயல் முரணிய உண்கண் – குறு 250/5
ஒன்றை ஒன்று எதிர்ந்த இரண்டு கயல்களை ஒத்த மையுண்ட கண்களையும்
முரணிய – உவம வாசகம் – உ.வே.சா உரை, விளக்கம்.
2.1.
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 84
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்

முது மரத்த முரண் களரி – பட் 59
பழைமையான மரத்தின் (கீழான) மற்போர் (செய்யும்) களங்கள் (கொண்ட பட்டினம்)
2.2
மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த
முறம் செவி வாரணம் – கலி 42/1,2
வீரங்கொண்ட பெரிய புலியுடனான தன் பழம் பகையைத் தீர்த்துக்கொண்ட
முறம் போன்ற காதுகளைக் கொண்ட யானை

முரம்பு

முரம்பு – (பெ) பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டு நிலம், hard rough ground having mounds of gravel
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி – அகம் 133/3
சிவந்த பரல்கள் மிக்க வன்னிலத்தில் கிளறிப்போகட்ட புழுதியில்

முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் – மலை 198
சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில்

முரற்கை

முரற்கை – (பெ) 1. முரல் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல், முரலுதல், பார்க்க : முரல்
2. தாள வகை, a time-measure
1.
புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே – ஐங் 402
புதல்வனை அணைத்துக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு
ஆசையுள்ளவனாகப் படுத்திருந்த படுக்கைநிலை, பாணர்
யாழின் நரம்புகளை மீட்டும் இனிய இசையினைப் போல
இனிமையானது, இதுதான் இல்லறத்தின் இயல்பும் ஆகும்.
2.
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனைமின் – மலை 390,391
கேட்போர்)மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டு (நடுகல் வீரருக்கு)விருப்பமாய் அமைய
தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக –

முரற்சி

முரற்சி – (பெ) 1. முரல் என்ற ஒலிப்பின் அடியாக வந்த பெயர்ச்சொல், ஒலி, பாட்டு, sound, song,
பார்க்க : முரல்
2. கயிறு, கயிறாகத்திரித்தல், cord, twisting into a rope
1.
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 217,218
(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க

தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/4
வளையணிந்த விறலியின் வாய்ப்பாட்டு போல தும்பிகள் மலரைச் சுற்றி ரீங்காரிக்கவும்
2.
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி
கை புனை சிறு நெறி வாங்கி – நற் 222/1-3
கருமையான அடிமரத்தையுடைய வேங்கையின் செம்மையான மலர்களையுடைய வளைந்த கிளையில்,
தழும்பு உண்டாகுமாறு இறுகக் கட்டிய சற்றுத்தளர்ந்த முறுக்கினைக் கொண்ட கயிற்றாலாகிய
கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து

வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே – நற் 270/9,10
பகைவரை ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன்
பகைவரின் உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது

முரல்

முரல் – (வி) 1. ஒலி, கத்து, பாடு, இசை, sound, cry, sing
1.1
ஆண்புறா தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கும் ஒலி.

வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் – நற் 71/8,9
அழகிய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
தான் விரும்பும் தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கச் செயலற்றுப்போய் ஒலிக்கும் ஓசையை
1.2
போர்க்களத்தில் ஊதும் சங்கின் ஒலி.

இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு
முடிகள் அதிர படிநிலை தளர
நனி முரல் வளை முடி அழிபு இழிபு – பரி 2/37-40
இடிக்கு எதிராய் முழங்கும் முழக்கத்தோடு, காற்றைப் போன்ற வலிமையுடன் போருக்கு எழுந்தவரின்
கொடிகள் அற்று விழவும், செவிகள் செவிடாகிப் போகவும்,
மணிமுடிகள் அதிரவும், அவர்கள் நின்ற நிலை தளர்ந்துபோகுமாறு
மிகுந்து ஒலிக்கின்ற சங்கினால், தலைகள் வலிமை அழிந்து கீழே விழுந்து
1.3
மலரைச் சுற்றிப்பறக்கும் தும்பி எழுப்பும் ஒலி. அது குழலோசையை ஒத்திருக்கும். விரைந்து செல்லும் அம்பின்
ஓசையையும் ஒத்திருக்கும்.

விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத – பரி 21/33,34
விரலால் மூடியும் திறந்தும் குழலின் காற்றுவிடும் துளையினின்றும் எழும் இசையைப் போல
இசைபாடும் குரலையுடைய தும்பி கட்டவிழ்கின்ற மலரின் மீது பாடிக்கொண்டு பறக்க

விரி இணர், தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப
பரியினது உயிர்க்கும் அம்பினர் – அகம் 291/10,11
விரிந்த பூங்கொத்துக்களில் பூந்துகளை உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் இசையைப் போல
விரைந்து செல்வதாய் ஒலிக்கும் அம்பினையுடையவரும்
1.4
யாழ் நரம்பினை மீட்டும் ஒலி.

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/18,19
ஏழு நரம்பால் கூட்டி எழுப்பிய இனிய ஓசைகள், இசைப்பவர்க்கன்றி
அவை யாழினுள்ளே பிறந்தாலும் யாழுக்கு அவை தாம் என்ன செய்யும்

குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப – பட் 156,157

நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 217,218
(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க
1.5
கூகையும் குராலும் எழுப்பும் ஒலி.

குடுமி கூகை குராலொடு முரல – மது 170
கொண்டையையுடைய கூகைச்சேவல் தன் பெடையோடே ஒலிஎழுப்ப
1.6
முழவுகளும், பெரும் முரசுகளும் எழுப்பும் ஒலி.

உழவர் களி தூங்க முழவு பணை முரல – பரி 7/16
உழவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாட, முழவுகளும், பெரும் முரசுகளும் முழங்க,
1.7
கின்னரம் என்னும் பரவைகள் எழுப்பும் ஒலி.

கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் – பெரும் 494
கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே
1.8
கார்கால மேகங்கள் இலேசான இடியுடன் தொலைவில் எழுப்பும் ஒலி

கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமின முரலும் – குறு 200/5,6
கார்ப்பருவத்து மழை மாலையில் பெரிய மலையில்
இனிய ஓசையுடைய இடியுடன் முழங்கும்
1.9
பாலைப் பண்ணை யாழில் மீட்டும் ஒலி

வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/4,5
யாழ் வல்லோன் தடவும் நரம்பு இனிய இசைகொண்ட பாலைப்பண்ணை
யாழ் நரம்புகள் ஒலித்தாலொத்த இசையுடன் வண்டின் கூட்டங்கள் ஒலிக்கும்

ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் – பரி 17/17
ஒருபக்கம் பாடினி பாடுகின்ற பாலைப் பண்ணாகிய வாய்ப் பாட்டின் கூறுபாடுகள்
1.10
விடியற்காலையில் அந்தணர் வேதம் ஓதும் ஒலி

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட – மது 654-656
பூக்கள் தளையவிழ்ந்த (மணம்)கமழுகின்ற நறிய பொய்கைகளில்,
தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று,
ஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட,

முரல்வு

முரல்வு – (பெ) இசை, மெல்லோசை, music, soft sound
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு – பரி 8/36
தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை

முரவு

முரவு – (பெ) 1. முறிவு, உடைபாடு, break, as of the mouth of a mud pot
2. முழக்கம், அதிர்வொலி, reverberation, resonance
1.
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி
முரவு வாய் – இதனை ஒறுவாய்ப்போன பானை என்பர் நச்சினார்க்கினியர். இக்காலத்தார்
மூளிப்பானை என்று வழங்குப – பொ.வே.சோ. விளக்கம்

2.
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் – அகம் 260/12
முதிய மரத்தின்கண் எப்போதும் நீங்காது தங்கும், முழக்கத்தையுடைய வாயையுடைய பேராந்தை

முரவை

முரவை – (பெ) தீட்டப்படாத அரிசியிலுள்ள வரி, streaks in unpolished rice
முரவை போகிய முரியா அரிசி – பொரு 113
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்

முரி

முரி – (வி) 1. ஒடி, முறி, break off, snap off
2. வளைவு, கூனல், bend
1.
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி

நல்ல அடுப்பில் வாய்ப்பகுதியில் மூன்று குமிழ்கள் இருக்கும். நாளாக ஆக, அந்தக் குமிழ்கள் தேய்ந்தும் உடைந்தும்
போகும். அவ்வாறான அடுப்பே முரி அடுப்பு எனப்படும்.
2.
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி – கலி 94/22
போ! சீச்சீ! குறைபட்ட மக்கள் வடிவே! இனி நீ இந்நிலையைக் கைவிடு!

முருகு

முருகு – (பெ) 1. முருகக்கடவுள், Lord Murugan
2. நறுமணம், fragrance
3. முருக வழிபாடு, வேலன் வெறியாட்டு, worship of Murugan, dancing of the priest under
possession by Murugan
4. வேள்வி, sacrifice
1.
குருதி செம் தினை பரப்பி குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 242-244
குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள்
முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக,
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே
2.
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரி அணி சுடர் வான் பொய்கை – பட் 37,38
மணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடப்பதினால்
பல நிறங்களைக் கொண்டு ஒளிரும் அழகிய பொய்கைகளையும்
3.
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/10,11
அன்னையானவள் எடுப்பித்த முருகவழிபாடு உன்
பொன்னைப் போன்ற பசலைக்கு பயன்படாத நிலையை
4.
தொடி தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு
நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கி பின் பெயரா
படையோர்க்கு முருகு அயர – மது 34-38
வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை,
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)
(இட்ட)அடியை வாங்கிப் பின்போகாத
வீரர்க்கு வேள்விசெய்யும்படி

முருக்கு

முருக்கு – 1. (வி) 1. கொல், kill
2. அழி, சிதை, ruin, destroy, crush
3. முறி, துண்டாக்கு, break into pieces
– 2. (பெ) புரச மரம், palas tree, Butea Monosperma
1.1.
செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 99,100
கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து,
வெகுளி கொண்ட நெஞ்சத்தோடு களவேள்வியைச் செய்யும்; ஒரு முகம்
1.2.
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் – சிறு 247,248
வெற்றி (தரும்)வேலினையுடைய வேந்தரின் உயர்ந்த அரண்களை அழித்து,
விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி,
1.3.
புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டு
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மட பிடி தழீஇய தட கை வேழம் – நற் 202/1-4
புலியுடன் போரிட்டதால் சிவந்துபோன புலால் நாறும் அழகிய செம்மையான கொம்புகளில்
உண்டாயிருக்கும் பலவான முத்துக்கள் ஒலிக்க, வலிமை மிக்கு,
கட்டாந்தரையான மேட்டுநிலத்தில் உள்ள பருத்த அடியினைக் கொண்ட வேங்கையை முறித்து, கன்றோடு
தன் இளைய பெண்யானைத் தழுவிக்கொண்ட நீண்ட கைகளையுடைய ஆண்யானை
2.
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து – குறு 156/2
சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து

கரு நனை அவிழ்ந்த ஊழ்_உறு முருக்கின்
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப – அகம் 41/2,3
பெரிய அரும்புகள் தம் பிணியவிழ்ந்த மலர்ச்சியடைந்த முருக்கமரத்தின்
நெருப்பைப் போன்ற பூக்களைக் கொண்ட கிளைகளில் வண்டினம் மிக்கு ஒலிக்க,

முருங்கு

முருங்கு – (வி) 1. அழி, சிதைந்துபோ, perish, be ruined
2. முறி, break
3. கசங்கு, be crumpled
1.
ஓரி முருங்க பீலி சாய
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம்
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/4-6
தலைக்கொண்டை சிதையும்படியும், தோகை மெலியும்படியும்,
நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நாம்
வருந்திப் புரளும்தோறும் தழுவிக்கொள்கிறாள் அறப்பண்பு இல்லாத எம் அன்னை
2.
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 375-379
பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,
இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்
கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
3.
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ – அகம் 136/20
கசங்காத புத்துடையால் உடல் முழுவதும் போர்த்தியதால்

முருந்து

முருந்து – (பெ) 1. மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து, the white tender bottom of a quill
2. குருத்து, the white soft bottom of the stem of grass plants
1.
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் – அகம் 179/11
மயிலிறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும், சிவந்த வாயினையும்
2.
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/1,2
பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த
ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்

முரைசு

முரைசு – (பெ) பார்க்க :முரசு
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த – பதி 34/10-12
முரசை முழக்கிச் செய்யும் பெரிய போர் உருக்குலைந்துபோவதனாலும், ஆரவாரம் உண்டாக,
பகை மன்னர் பலரை வெல்லும் ஆற்றலையுடைய
சிறப்பு மிக்க வலிமையினை உடையவனே!

முறம்

முறம் – (பெ) தானியம் முதலியவற்றைப் புடைக்கப்பயன்படும் மூங்கில் தப்பையால் பின்னப்பட்ட தட்டு,
winnowing pan.
சங்க இலக்கியங்களில் இச்சொல் நான்குமுறை வருகிறது. நான்குமுறையும் இது யானையின் காதுக்கு
உவமமாகவே வருகிறது.

முறம் செவி யானை தட கையின் தடைஇ – நற் 376/1
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி – கலி 42/2
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து
—————————– ——————————————————-
அதன், நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/1-4
முறம் செவி யானை வேந்தர் – புறம் 339/12

முறி

முறி – 1. (வி) 1. துண்டாகு, ஒடி, break, snap
2. துண்டாக்கு, ஒடி, break apart, rupture
– 2. (பெ) 1. இளந்தளிர், shoot, sprout
2. கொழுந்து இலை, tender leaf
3. பாதித் துண்டு, half piece, half broken bit
1.1
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் – புறம் 347/4
பகைவரை எறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும்
1.2
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை – அகம் 141/17,18
பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களை ஒடித்து
பசிய அவலாகக்குற்றும் கரிய வயிரமாகிய உலக்கையின்
2.1
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே – குறு 62/4,5
நறுமணமுள்ள நல்லோளது மேனி,
இளந்தளிரினும் மென்மையானது, தழுவுதற்கும் மிக்க இனியது
2.2
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/4-7
கிளிகளை விரட்டும் தழலும், தட்டையும் ஆகிவற்றோடே கொழுந்தான தழையும் தந்து இவை
உனக்குப் பொருந்துவன என்று பொய்யானவற்றைக் கூறி
அன்னை பாதுகாத்த ஆய்வதற்குரிய பெண்மை நலத்தை
தலைவன் கவர்ந்துகொண்டான், நாம் இப்படியானோம் இப்பொழுது.
2.3
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழை பூவின் வளை முறி சிதற – புறம் 237/10,11
மாறிமாறி வெய்தாக மார்பின்கண் அரைந்துகொண்ட மகளிர்,
வாழைப்பூவினைப் போல வளையல்களின் துண்டுகள் சிதற

முறுகு

முறுகு – (வி) முதிர், mature, ripen
துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகு குலை முறுக பழுத்த – மலை 131,132
(பக்கத்திலுள்ள)பாறைகள் சூழ நின்ற தோட்டத்தின் வாழைமரங்களில்,
இறுகிக்கிடக்கும் குலைகள் முதிர்ந்து பழுத்தன;

முறுக்கு

முறுக்கு – (வி) திருக்கு, twirl,
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/9-11
வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
பெண்யானை, படியாக அமைக்க திருக்கி ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை

முறுக்குறு

முறுக்குறு – (வி) சுழற்றுதல்செய், turn, rotate
மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப – அகம் 224/12
மனைவி பதமாகக் காய்ந்த அரிசியைப் பெய்து சுற்றுதல்செய்த
சுழலும் திரிகையின் குரல் ஒலி ஒக்க

பார்க்க : சுழல்மரம்

முறுவல்

முறுவல் – (பெ) 1. புன்னகை, smile
2. பல், tooth
1.
முல்லை, முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய் – கலி 118/19,20
முல்லையின், மொட்டு தம் முகத்தைத் திறந்தது போன்ற இனிய முறுவலை அழிப்பதில்லை;
2.
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறி நீ செய்தனை என்ப அலரே – ஐங் 369/2,3
மூங்கிலின் முளை போன்ற வரிசையான பற்களுடைய ஒருத்தியை நேற்று
நீ குறிப்புக்காட்டி அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு

முறை

முறை – (பெ) 1. ஒழுங்கு, நியதி, தகவு, propriety, order
2. தன்மை, விதம், செயல்பாங்கு, manner, way
3. நீதி, justice
4. வரிசை ஒழுங்கு, row order
5. உறவு, relationship by blood or marriage
6. பிறப்பு, birth
7. தடவை, time (as once, twice)
8. ஊழ், விதி, fate
1.
கல்லா இளைஞர் சொல்லி காட்ட
கதுமென கரைந்து வம் என கூஉய்
அதன் முறை கழிப்பிய பின்றை – பொரு 100-102
(அரச முறைமையை இன்னும்)கற்றுக்கொள்ளாத (எம்)இளைஞர் (எம் வரவைக்)கூவி எடுத்துக்கூற,
விரைவாக அழைத்து, ‘வருக வருக’ என்று உரத்துச் சொல்லி,
அரசனைக் காணும் முறைகளைச் செய்து முடித்த பின்னர்,
2.
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70
கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த
3.
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 443,444
(வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும்
வேண்டியவற்றை எல்லாம் வேண்டினர்க்கு அருள்செய்து,

அரசு முறை செய்க களவு இல் ஆகுக – ஐங் 8/2
அரசன் நீதியுடன் அரசாளுக, களவும் இல்லாதன ஆகுக
4.
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9
உறுதியாகக் கட்டப்பெற்ற, அல்குலின் காசுமாலையில் உள்ள காசுகள் வரிசைமாறிக் கிடப்பினும்,
5.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/1,2
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும் எந்த உறவுப்படி உறவினர்?
6.
முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம் – பரி 11/138
முற்பிறப்பில் செய்த தவத்தினால் இப் பிறப்பில் நாங்கள் பெற்றோம்
7.
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை
ஊர் புறம் நிறைய தருகுவன் – புறம் 258/7,8
ஒரு தடவை உண்பதன் முன்னே, பெரிய ஆனிரையை
இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக் கொடுதருவன்
8.
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் – புறம் 192/8-11
கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேரியாற்று
நீரின் வழியே போம் மிதவை போல, அரிய உயிர்
ஊழின் வழியேபடும் என்பது நன்மைக் கூறுபாடறிவோர்
கூறிய நூலானே தெளிந்தேம்

முறைமுறை

முறைமுறை – (வி.அ) அடுத்தடுத்து, one after another, முறைப்படி, according to the order, status etc.,
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை_முறை காட்ட – நெடு 176,177
வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே
முன்செல்கின்றவன் (புண்பட்ட வீரரை) முறைப்படி (வரிசையாகக்) காட்ட

கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை
மென் தினை நுவணை முறை_முறை பகுக்கும்
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும் – பதி 30/23-25
மணம் மிக்க காட்டுமல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில்
மென்மையான தினை மாவை விருந்தினருக்கு முறைப்படி பகிர்ந்தளிக்கும்
புன்செய் நிலங்களைத் தழுவிக்கிடக்கும் முல்லைநிலத்திற்கு அண்மையிலுள்ள குறிஞ்சிப் பகுதி மக்களும் –

உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர – அகம் 86/8-10
உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய அகன்ற கலத்தினை உடையவரும் ஆகிய
மணத்தினைச் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர்
முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறைப்படி தந்திட

விழவின், கோடியர் நீர்மை போல முறை_முறை
ஆடுநர் கழியும் இ உலகத்து – புறம் 29/22-24
விழாவின்கண் ஆடும், கூத்தரது வேறுபட்டகோலம் போல, முறைப்படி (அடுத்தடுத்து)
தோன்றி, இயங்கி, இறந்து போகின்ற இவ்வுலகத்தின்கண்

முறையுளி

முறையுளி – (வி.அ) முறைப்படி, வரிசைப்படி, according to order
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும் 462
இடப்பக்கத்தே உடைய பேரியாழை இயக்குமுறையில் இயக்கி,

முற்றம்

முற்றம் – (பெ) 1. வீட்டின் எல்லைக்குள், வீட்டின் முன்பக்கமுள்ள திறந்தவெளிப் பகுதி, courtyard of a house
2. தெருக்கள் சந்திக்குமிடத்திலுள்ள திறந்தவெளி, open space in a street junction
3. ஊரின் வெளியே உள்ள திறந்த வெளி, esplanade
4. பரப்பு, expanse
1.
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி – ஐங் 248/1
புதுமணல் பரப்பிய முற்றத்தை அழகு பெற நிறுவி,

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நற் 143/2
கொண்டுவந்த மணலை, தலைசுற்றிப் பரப்பிய வளமிக்க மனைகளின் முற்றத்தில்

2.
படு நீர் புணரியின் பரந்த பாடி
உவலை கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 28-31
ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் –
தழைகளால் வேய்ந்த கூரை ஒழுங்குபட்ட தெருவிடத்து,
நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற
மதம் பாய்கின்ற கதுப்பினையும் சிறிய கண்ணையும் உடைய யானை
3.
குரு மணி யானை இயல் தேர் பொருநன்
திருமருத முன்துறை முற்றம் குறுகி – பரி 24/71,72
நிறமிக்க மணிகள் பூட்டிய யானைகளையும், அழகிய தேர்களையும் உடைய பாண்டியனின்
திருமருத முன்துறை முற்றத்தை அணுக,
4.
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர் என – அகம் 279/4,5
பொன் என விளங்கும் சுணங்கினைக் கொண்டு நெருங்கப் பணைத்த
மெல்லிய முலைப் பரப்பினை விட்டு நீங்காத நெஞ்சினர்

முற்றல்

முற்றல் – (பெ) முதுமை, முதிர்ச்சி, old age, maturity
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/1,2
காய்ந்து இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய
சேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை

முற்று

முற்று – 1. (வி) 1. முதிர், கனி, ripen, mature
2. முழுவளர்ச்சி பெறு, be fully grown
3. மிகு, பெருகு, increase, abound
4. மரம் போன்றவற்றின் உட்பகுதி உறுதிப்படு, become hardened as the core of a tree or plant
5. முடி, come to end, be finished
6. செய்து முடி, finish, complete
7. சூழ், encircle, surround
8. முற்றுகையிடு,வளை, besiege
9. தேர்ந்த திறம்பெறு, become skilled, be adept
10 நோய் குணப்படுத்த முடியாத நிலையை அடை, get to an advanced stage as a disease
– 2. (பெ) 1. முழுமை, பூரணம், completeness, perfection
2. முதிர்ச்சி, ripeness, maturity
3. முற்றுகை, siege
4. சூழ்ந்திருத்தல், encircling
1.1
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி – அகம் 293/6,7
குயிலின் கண்ணைப் போன்ற விளங்கும் காய் முதிர்ந்து
அழகிய பொற்காசு போன்ற பெருமை பொருந்திய நிறத்தினையுடைய பெரிய கனி
1.2
முகை முற்றினவே முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம் – குறு 188/1,2
முழுதும் வளைச்சியுற்றன முல்லையின் அரும்புகள்; முல்லையோடு
முற்றும் அழகுகொண்டன குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்
1.3
முகை முற்றினவே முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம் – குறு 188/1,2
முதிர்ந்துவிட்டன முல்லையின் அரும்புகள்; முல்லையோடு
முற்றும் அழகுகொண்டன குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்
1.4
முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப – நற் 101/1
முதிராத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்
1.5
செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் – கலி 24/12
பொருளீட்டும் பணி முற்றுப்பெறும் வரை என்று குழறினார்; அழகிய அணிகலன்களை அணிந்தவளே!

ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 83,84
ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய (முடிக்குச்)செய்யும் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்
1.6
சென்ற தேஎத்து செய்_வினை முற்றி
மறுதரல் உள்ளத்தர் எனினும் – அகம் 333/20,21
தாம் சென்றுள்ள தேயத்தே தாம் செய்யும் தொழிலை செய்து முடித்துக்கொண்டு
மீளும் எண்ணம் உடையராயினும்

வீயா சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன் களம் பல-கொல் – புறம் 15/20,21
கெடாத தலைமையுடைய யாகங்களைச் செய்துமுடித்து
தூண் நடப்பட்ட யாகச்சாலைகள் பலவோ?
1.7
வான் புகு தலைய குன்றம் முற்றி
அழி துளி தலைஇய பொழுதில் – நற் 347/4,5
வானத்தை ஊடுருவிச் செல்லும் உச்சிகளையுடைய குன்றுகளைச் சூழ்ந்து,
மிக்க மழையைப் பொழிந்த பொழுதில்
1.8
முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/15,16
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்
1.9
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ்
பாணர் ஆர்ப்ப – அகம் 331/10,11
அரிய இசைத்துறைகளை முற்ற உணர்ந்த கரிய தண்டினையுடைய சிறிய யாழினையுடைய
பாணர்கள் ஆரவாரம் செய்ய
1.10
கொன்றை
ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து – அகம் 398/3-5
கொன்றையினது
நன்கு மலர்ந்த பூக்களைப் போல பாழ்பட முற்றிப்போன
பசலை படர்ந்த மேனியைப் பார்த்து நெற்றியும் பசலையுறப்பெற்று
2.1
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் – பட் 296
உடல் முழுதும் அணிகலன்கள் அணிந்த மகளிரின் (தாமரை)மொட்டு(ப் போன்ற)முலைகள் அழுந்துவதாலும்
2.2
கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை – நற் 174/1,2
ஈந்தின் கற்றையான முதிர்ச்சியுள்ள குலை போன்ற,
ஆளரவம் அற்ற பாலைவழியில் நிற்கும் தாளிப்பனையின்
2.3
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்
செரு மிகு தானை வெல் போரோயே – பதி 63/11,12
ஒரு முற்றுகையில் இரு பெரும் வேந்தர்களை ஓட்டிய ஒளிரும் வாளையுடைய,
போரில் மேம்பட்ட சேனையைக் கொண்டு வெல்லுகின்ற போரினையுடையவனே!
2.4
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் – புறம் 29/6,7
பாணர்கள் சூழ்ந்திருத்தல் ஒழிந்த பின்னர், நினது உரிமை மகளிருடைய
தோள் சூழ்வதாக நின் சாந்து புலர்ந்த மார்பும்

முற்றை

முற்றை – (பெ) முன்பு, கடந்தகாலம், past, earlier times
முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின்
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே – நற் 374
சரளைக் கற்கள் பரவிக்கிடந்த, சென்று முடியாத நீண்ட வழியில்,
உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்
களர்நிலத்துப் புளிச்சுவைகொண்டு, அவரின் வருத்தும் பசியைப் போக்க,
தலை உச்சியில் கொண்ட உயர்ந்த சோற்றுப்பொதிகளையுடைய அயலூர் மக்களே!
முன் நாளிலும் பெற்றிருக்கிறோம் – இப்பொழுது பெறப்போகும்,
விரும்பப்படும் கரிய மணியைப் போன்ற, புனையப்பட்ட நீண்ட கூந்தலையுடையவள்,
கண்ணீர் வடிந்து சொட்டுச் சொட்டாக மார்பினை நனைக்க,
நமக்கு விருந்து வைக்கும் விருப்பினளாய் தன்னை வருத்திக்கொள்ளும்
திருத்தமான அணிகலன்களை அணிந்த அரிவையாகிய இன்மொழிக்காரியின் நிலையை –

முலை

முலை – (பெ) 1. பெண்ணின் மார்பகம், woman’s breast
2. பெண் விலங்கின் பால் சுரக்கும் மடி, beast’s dug
1.
கூழையும் குறு நெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின – அகம் 315/1,2
தலை மயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலைகளும்
உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன
2.
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 358,359
கவைத்த முலையையுடைய குறிய பெண்யானையின் கடைவாயின் கொம்புகளை ஒக்கும்,
குலையில் முதிர்ந்த வாழையின் வளைந்த வெளுத்த பழத்தையும்,

கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் – ஐங் 92/1,2
கரிய கொம்பினையுடைய எருமையின் சிவந்த கண்ணையுடைய அண்மையில் ஈன்ற பெண்ணெருமை
தன் அன்புக்குரிய கன்றினுக்குப் பால் சுரக்கும் தன் முலையைத் தந்து ஊட்டிவிடும்

குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி – புறம் 383/18
குறுகிய முலையை உண்டற்குத் தாயைச் சுற்றித்திரியும் பாலுண்ணும் ஆட்டுக்குட்டி

முல்லை

முல்லை – (பெ) 1. ஒரு சிறிய வெண்ணிறப்பூ, a kind of jasmine
2. காடும் காடு சார்ந்த இடமும், pastoral region
3. கணவன் பிரிந்து சென்றபோது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருக்கும் தன்மையான
ஒழுக்கம், patient endurance of the akam heroine during the separation of the hero.
4. ஒரு பண், a primary melody type
1.
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி – குறு 240/3
காட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக
2.
முல்லை வியன் புலம் பரப்பி கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/7-9
முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக விட்டு, கோவலர்கள்
சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறிய பூக்களைப் பறித்துச் சூடிக்கொள்ள,
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
3.
முல்லை சான்ற முல்லை அம் புறவின் – சிறு 169
முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில்
4.
பாணர் முல்லை பாட சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய – ஐங் 408/1,2
பாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட
ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க,

முளரி

முளரி – (பெ) 1. விறகு, firewood
2. முள்ளுள்ள சுள்ளி, thorny twig (used by birds in building nests)
3. தாமரை, Lotus
4. காடு, jungle
1.
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 55
குளிர்ந்த மணமுள்ள சாந்துக்கட்டையை விறகாகக்கொண்டு நெருப்பை உண்டாக்கி
2.
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடை பேடை உணீஇய – நற் 384/3,4
முட்களைக்கொண்ட சுள்ளிக்குச்சியால் கட்டப்பட்ட அழகிய கூட்டில் குஞ்சுபொரித்து இளைத்துப்போன
வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக
3.
முளரி கரியும் முன்பனி பானாள் – அகம் 163/8
தாமரை மலர் கரிந்திடும் முன்பனிக் காலத்துப் பாதியிரவில்
4.
முளரி தீயின் முழங்கு அழல் விளக்கத்து – அகம் 301/13
காட்டுத் தீயில் எழுந்த ஒலிக்கும் தீயின் ஒளியில்

முளவு

முளவு – (பெ) முள்ளம்பன்றி, Porcupine, Hystrix leucura
முளவு_மா வல்சி எயினர் தங்கை – ஐங் 364/1
முள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான

முளவுமா

முளவுமா – (பெ) பார்க்க : முளவு
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 176
முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளை

முளவுமான்

முளவுமான் – (பெ) பார்க்க : முளவு
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை – நற் 85/8
வேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசை

முளி

முளி – 1. (வி) 1. காய்ந்துபோ, உலர், வற்று. dry
2. முற்று, உறை, தோய், mature, curdle
3. வேகு, கருகு, தீய், burn, be scotched
1.
முளி கழை இழைந்த காடு படு தீயின் – மலை 248
(முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து – நற் 105/1
காய்ந்த கொடிகள் வலப்பக்கமாய்ச் சுற்றி வளைத்த முள்ளுள்ள அடிமரத்தைக்கொண்ட இலமரத்தின்

பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும் – புறம் 266/1,2
பயன் பொருந்திய பெரிய முகில் பெய்யாதொழிதலால்
நீர்நிலைகள் களியாய் வற்றிப்போகும் கோடைக்காலமாயினும்
2.
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/1,2
கொல்லன் தொழிலால் பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி
முகத்தில் படும்படி கட்டப்பட்ட முற்றிய மூங்கிலின் வலிமையுள்ள கழியை

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – குறு 167/1
முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் போன்ற மெல்லிய விரல்களை
3.
நெடும் கழை முளிய வேனில் நீடி – ஐங் 322/1
உயர்ந்த மூங்கில்கள் கருகிப்போகுமாறு வேனல் நீண்டு

மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து – பரி 5/25,26
பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று வகையான கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளை ஒரு தீக்கணையால்
வேகும்படியும்,
திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து

முளிவுறு

முளிவுறு – (வி) காய், உலர், become dry
முளிவுற வருந்திய முளை முதிர் சிறுதினை – கலி 53/22
காய்ந்து உலர்ந்து போய் வாடி நிற்கிற முளைவிட்டுப் பயிராகி நிற்கும் சிறுதினைப் பயிர்

முளை

முளை – 1. (வி) எழு, தோன்று, உதி, rise, appear, come to light
– 2. (பெ) 1. மூங்கில் போன்ற தாவரங்களின் கணுக்களினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி,
tender shoot of trees or plants
2. விதை, கிழங்கு ஆகியவற்றினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி
sprout, seed-leaf
1.
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – பொரு 72
வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே
2.1
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை – நற் 116/4
பெரிய மூங்கிலில் முளைத்த வேல்முனையைப் போன்ற தலையைக் கொண்ட கொழுத்த முளைகளை

முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் – பெரும் 53
(மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும்
2.2
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய – நற் 172/1,2
விளையாட்டுத் தோழியருடன் வெள்ளையான மணலில் ஊன்றிவைத்துப்
பின்னர் மறந்தவராய் விட்டுப்போன விதையினின்றும் முளை தோன்ற

சேம்பின், முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் – பெரும் 361,362
சேம்பின், முளையைப் புறத்தேயுடைய முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர்

முள்கு

முள்கு – (வி) 1. முயங்கு, தழுவு, embrace
2. உட்செல், நுழை, enter, pierce
1.
தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது – நற் 337/8,9
தாழ்ந்து இறங்கும் நறிய கூந்தலில் துயின்று மெல்ல முயங்கும்
அரிதாய்க் கிடைக்கும் பெரிய பயனைக் கொள்ளாது
2.
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் – நற் 165/1,2
மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
குறிதப்பிய அம்பின் போக்கை நினைத்துப்பார்த்த கானவன்,

விரை பரி
புல் உளை கலிமா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப – அகம் 234/3-6
விரைந்த செலவினையுடைய
புல்லிய பிடரி மயிரினையுடைய செருக்கு வாய்ந்த குதிரைகளை மென்மையுறப் பூட்டிய
கடிவாள வாரினை ஒரு பெற்றியமையப் பற்றி நிலத்தே பதிந்த
பல ஆரங்களையுடைய உருளை மென்னில வழியை அறுத்தே

முள்ளி

முள்ளி – (பெ) 1. நீர்முள்ளி, Asteracantha Longifolia, Hygrophila spinosa
2. முட்செடி, thorny plant,
1. இது நீர்வளம் மிக்க மருத நிலத்தில் காணப்படுவது. தண்டுகளில் முள் உள்ளது.
பூக்களின் இதழ்கள் முன்பக்கம் மடங்கியிருக்கும். பூக்கள் நீல நிறத்தில் இருக்கும்.
முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி
கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு – பெரும் 214-216
முள்ளையுடைய கொம்புகளையுடைய
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்
வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு,

முள்ளி நீடிய முது நீர் அடைகரை – ஐங் 21/1
முள்ளிச் செடிகள் உயரமாக வளர்ந்துள்ள பழமையான நீரினைக் கொண்ட திண்ணிய கரையில்

அள்ளல் ஆடிய புள்ளி களவன்
முள்ளி வேர் அளை செல்லும் ஊரன் – ஐங் 22/1,2
சேற்றில் துளாவித் திரிந்த புள்ளிகளையுடைய நண்டு
முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும் ஊரினைச் சேர்ந்த தலைவன்

கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் – அகம் 26/1-3
வளைவான முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்று விழுந்த
மீனின் முள்ளைப் போன்ற வெண்ணிற காம்புகளையுடைய கரிய மலர்களை,
விளையாட்டு மகளிர் தமது திருவிழா ஆட்டத்துக்கு அழகுசெய்ய எடுத்துச் சேர்க்கும்
2.
கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் – புறம் 363/10,11
கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முதுகாட்டில்
வெள்ளிடையே ஓங்கிய அகன்ற இடத்தின்கண்

முள்ளூர்

முள்ளூர் – (பெ) ஒரு சங்ககாலத்து ஊர், a city in sangam period
முள்ளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரி என்னும் காரி. இவன் பெண்ணை அம்
படப்பை நாடு கிழவோன் எனப் புறப்பாடல் 126 குறிக்கிறது. எனவே முள்ளூர் பெண்ணையாற்றுப் படுகையிலுள்ளது
எனப்பெறப்படும்.
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடி ஆங்கு – நற் 170/6-8
ஆரியர்கள் ஒன்று கூடிய பெரும் புகழ் படைத்த முள்ளூர்ப் போர்க்களத்தில்
பலருடன் உருவிய வாளுடன் வந்த ஒளிவிளங்கும் வாட்படை, மலையனது
ஒரு வேற்படைக்குத் தோற்றோடியதைப் போல

முழ

முழ – (பெ) பார்க்க : முழவு
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10
மணவீடுகளில் முழங்கும் உன் மண முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;

முழக்கம்

முழக்கம் – (பெ) பேரொலி, shout, roar, rumble, thunder
எந்த வகைப் பேரொலிகளைச் சங்க இலக்கியங்கள் முழக்கம் என்கின்றன என்று பார்ப்போம்.

1. கரைகளை இடித்துச்செல்லும் வைகைப் பெருவெள்ளம் – இடியேற்றின் ஒலி
பொருது இழி வார் புனல் பொற்பு அஃது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் – பரி 7/81,82
(வைகை) கரைகளை இடித்து ஓடுகின்ற புதுப்புனலின் அழகிய ஆரவாரம்
உருமேறாகிய இடியோடு சேர்ந்த முகிலின் முழக்கத்தைப் போன்று ஒலிக்கும்

2. யானையின் பிளிறல் – மேகங்களின் இடிக்குரல்
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல் – பரி 8/17,18
முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;

3. கூத்தரின் முழவு ஒலி – மேகங்களின் இடிக்குரல்
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர்
முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து – அகம் 328/1-3
சுரபுன்னை மரங்கள் நிறைந்த மலைச்சாரலில் மேகமானது வலமாக எழுந்து
கூத்தரது முழவம் அதிர்ந்தாற் போன்ற முழக்கத்தினையுடைய இடியேறுகளுடன் கூடி
மிக்க பெயலைச் சொரிந்த நள்ளென்னும் ஒலியினையுடைய நடு இரவில்.

4. கடல் அலைகளின் ஆரவாரம்
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த
கொண்டல் இரவின் – அகம் 100/5,6
பெரிய அலையின் முழக்கத்தோடு அதன் அலைவும் ஓய்ந்திருந்த
மேகம் சூழ்ந்த இரவில்

5. மேகங்களின் இடிக்குரல் – முரசு ஒலி
உரும் மிசை முழக்கு என முரசும் இசைப்ப – புறம் 373/1
இடியினது ஓசையைத் தன்பால் உடைய முரசு முழங்க

முழங்கு

முழங்கு – (வி) பேரொலி எழுப்பு, make a loud noise, roar, thunder, பார்க்க : முழக்கம்
பிடி புணர் பெரும் களிறு முழங்க – மது 676

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237,238

அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை – முல் 79

பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1

அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5

தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/5,6

மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை – குறு 237/5,6

கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324

முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் – கலி 25/6

களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் – அகம் 227/11

முழந்தாள்

முழந்தாள் – (பெ) முழங்கால், knee
முழந்தாளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் வரும் நான்கு குறிப்புகளிலும், அது பெண்யானையின்
முழந்தாளைப் பற்றியதாகவே காணப்படுகிறது. இது ஆய்வுக்குரியதாகும்.

முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் – பெரும் 53,54
(மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும்,
துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலை

வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 127,128
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;

முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி – குறு 394/1
முழந்தாளையுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று

வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2
மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை

இங்கு வரும் முதலிரண்டு குறிப்புகள், பெண்யானையின் முழந்தாளை உவமைகளாகக் கையாள்கின்றன. ஆனால்
அடுத்துவரும் இரண்டு குறிப்புகளும், முழந்தாள் இரும்பிடி என்று முழந்தாளைப் பெண்யானைக்கு
அடைச்சொல்லாகக் கொள்கின்றன. முழந்தாளையுடைய இரும்பிடி என்றால், மற்ற விலங்குகளுக்கு முழந்தாள்
இல்லையா? அல்லது ஆண்யானைக்கு முழந்தாள் இல்லையா என்ற கேள்வி எழும்.
கலித்தொகையில் வரும் முழந்தாள் இரும்பிடி என்ற சொல்லுக்கு, உரையாசிரியர் இராசமாணிக்கனார்,
முழவு போல் பருத்த கால்களையுடைய பெண்யானை என்று பொருள் கொள்வார். இங்கு இவர் முழந்தாள் என்பதை
முழ தாள் என்ற இருசொற்களின் சேர்க்கையாகக் கொள்வார். முழ எனில் முழவு என்ற பொருளுண்டு.

முழம்

முழம் – (பெ) முழங்கால், முழங்கை (?), knee, elbow (?)
உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை – அகம் 119/17,18
நீர் உண்டற்கு விரைந்து சென்று
மண்ணில் முழங்காலை மடித்தூன்றிய நெடிய நல்ல யானை

முழவன்

முழவன் – (பெ) முழவை இயம்புவோன், the person who beats the drum called ‘muzhavu’
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளை தலைவன் கல்லா கடுவன்
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆக கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்பட தழீஇ
இன் துணை பயிரும் குன்ற நாடன் – அகம் 352/1-7
வளைதல் மிக்க பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தினை
பல சுற்றத்திற்குத் தலைவனாகிய கல்லாத ஆண்குரங்கு
மிக ஒலிக்கும் அருவியையுடைய கற்பாறையிடத்தே
ஆடுகின்ற மயில் ஒன்று தனக்கு முன்னே நிற்க, கூத்தர்
விழாவினைக்கொண்டாடும் முதிய ஊரில் விறலியின் பின்பு நிற்கும்
முழவு இயம்புவோன் போலத் தன்னகத்தே பொருந்தத் தழுவிக்கொண்டு
இனிய துணையாய பெண்குரங்கினை அழைக்கும் மலைநாட்டையுடைய நம் தலைவன்

எனவே முழவு என்பது பலாப்பழத்தைப் போன்றது என்பது பெறப்படும்.

முழவம்

முழவம் – (பெ) பார்க்க : முழவு
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் – பரி 8/99
மணங்கமழும் பூக்களும், இசையை எழுப்பும் முழவுகளும்

முழவு

முழவு – (பெ) ஒரு தோல் இசைக்கருவி, a kind of drum
1. மாட்டு வண்டியின் உருளி, இந்த முழவைப் போன்றது.
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி – பெரும் 46,47
கொழுவிய வட்டைகள் தம் அகத்தே கொண்ட, திருத்தமான நிலையிலுள்ள ஆரங்களையுடைய,
மத்தளம் போன்று முழுமர(த்தால் கடைந்த) உருளியினையும்,

வட்டை என்பது ஒரு சக்கரத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் வளைந்த அமைப்பு. இது felloe of a wheel
எனப்படும். ஆறு வட்டைகள் ஒரு சக்கரத்தை வடிவமைக்கும். உருளி என்பது குடம். இது ஆரக்கால்களை
வட்டையுடனும் அச்சுடனும் இணைக்கும் பகுதி. இது முழுமரத்தைக் கடைந்து செய்யப்படுவது.
இந்த உருளி முழவினைப் போன்றது.

2. பழுத்துத் தொங்குகின்ற பலாப்பழங்கள், கோடியர் தூக்கிச்செல்லும் முழவினைப் போன்றது.
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 143,144
வழியே செல்லும் கூத்தருடைய மத்தளங்களைப் போன்று தொங்கி,
முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்;

3. இந்த முழவுகளின் இரு முகப்புகளும் வெவ்வேறான அளவுள்ளவையாக இருந்திருக்கக்கூடும். அவை முழவின்
தலை எனப்பட்டன. அவற்றில் பூச்சுற்றி வைத்திருப்பார்கள். அவற்றுள்பெரிய முகப்பு நோன்தலை எனப்பட்டது.
இது பெண்கள் வைத்திருக்கும் பூக்குடையைப் போன்றது என்கிறது மதுரைக்காஞ்சி.
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 396,397
பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற
கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,

4. முழவை ஒரு குறுந்தடிகொண்டு அடுத்து இசையை எழுப்புவர். முழவின் முகப்பில் மார்ச்சனை என்ற கரிய சாந்து
பூசுவர்.
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறு தவ பலவே – மலை 370-372
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முழவின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக் கையில் பிடித்து
(முழவை அடிக்கும்)குறுந்தடியை (மூன்றாவது)காலாக (ஊன்றிக்)கொண்டு, தடுமாறுதலினின்றும் (உம்மைக்)காத்து,
(தடியை)ஊன்றினராக(வே) கடந்து செல்லுங்கள் – இடையூறுகள் மிகப் பலவாம்,

5. முழவின் முகப்புகளில் உள்ள தோல் பரப்பு, வார்களினால் இழுத்துக் கட்டப்பெற்றிருக்கும்.
வாருற்று
விசி பிணி கொண்ட மண் கனை முழவின் – புறம் 15/22,23
வார் பொருந்தி வலித்துக் கட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த முழவினையுடைய

6. முழவு ஒருவரின் பருத்த கைகளுக்கு உவமையாகக் கொள்ளப்பட்டது.
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215
முழவுக்கு மாற்றான பெருமையுடைய கைகளில் பொருந்தத் தாங்கி

7. முழவு ஒருவரின் திண்ணிய தோள்களுக்கு உவமையாகக் கொள்ளப்பட்டது.
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15
முழவைப் போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின்

8. மரங்களின் தடிமனான அடிப்பகுதிக்கு முழவை உவமிப்பர்.
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை – நற் 307/6
நம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின்

முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை – குறு 301/1
முழவைப் போல அடிமரத்தையுடைய வளைந்து நிற்கும் பனையின்

முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை – கலி 44/4
முற்றிய பூங்கொத்துக்களைத் தீயைப் போல் வரிசையாகக் கொண்ட, முழவினைப் போன்ற அடிமரத்தையுடைய
வேங்கை,

9. தாழையின் காயும் பழமும் முழவுக்கு உவமிக்கப்பட்டன.
நிலவு கானல் முழவு தாழை – மது 114
நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக்கொண்ட

10. விழாக்காலங்களில் ஊர்களில் முழவு இடைவிடாமல் இசைக்கப்பட்டது.
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் – பதி 15/18
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20
முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் – அகம் 206/11
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் – நற் 220/6
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் – அகம் 336/16
விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று – நற் 320/1

11. வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் முழவு இசைக்கப்பட்டது.
உழவர் களி தூங்க முழவு பணை முரல – பரி 7/16
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ – அகம் 136/7
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22

முழா

முழா – (பெ) முழவு, பார்க்க : முழவு
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக – பதி 52/14
முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக,

முழுச்சொல்
முழுநெறி

முழுநெறி – (பெ) பூவில், புறவிதழ் ஒடித்த முழுப் பூ / இதழ் ஒடியாத முழுப் பூ,
entire flower with the calyx removed / with the calyx not removed
கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி – குறு 80/1
கூந்தலில் ஆம்பலின் புறவிதழை ஒடித்த முழுப்பூவைச் செறுகி
முழுநெறி – புறவிதழ் ஒடித்த முழுப்பூ, இதழொடியாத பூவெனினுமாம் – உ.வே.சா உரை, விளக்கம்.

கழனி ஆம்பல் முழுநெறி பைம் தழை – அகம் 156/9
கழனியில் பூத்த ஆம்பலின் இதழ் ஒடியாத பூவுடன் கூடிய பசிய தழையுடை
முழுநெறி – இதழ் ஒடிக்கப்படாத முழுப்பூ – நாட்டார் உரை, விளக்கம்.

தீ நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல் – புறம் 116/1,2
இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது
முகை அவிழ்ந்து புறவிதழ் ஒடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட தழை அசையும் அல்குலையும்
செங்கழுநீரின் முகை அவிழ்ந்து புறவிதழ் ஒடிக்கப்பட்ட பூ ஈண்டு முழுநெறி எனப்பட்டது. இனி,
அடியார்க்கு நல்லார், ‘முழுநெறிக் குவளை (சிலப்.2,14) என்றதற்கு இதழ் ஒடிக்கப்படாத குவளை என்ற பொருள்பட,
‘இதழொடிக்கப்படாதெனவே செவ்வி கூறிற்று’ என்று கூறி இவ்வடிகளை எடுத்துக்காட்டினார் –
– ஔவை.சு.து.உரை, விளக்கம்

முழுமீன்

முழுமீன் – (பெ) முதிர்ந்த மீன்
முதலை போத்து முழுமீன் ஆரும் – ஐங் 5/4
ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும்
முழுமீன், இனி வளர்ச்சி இல்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன். – ஔவை.சு.து.உரை, விளக்கம்

முழுமுதல்

முழுமுதல் – (பெ) (மரத்தின்) அடிப்பகுதி, stem (as of a tree)
ஆர முழு_முதல் உருட்டி – திரு 297
வாழை முழு_முதல் துமிய – திரு 307
தடவு நிலை பலவின் முழு_முதல் கொண்ட – பெரும் 77
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என – குறி 188
புன்னை, நல் அரை முழு_முதல் அ வயின் தொடுத்த – நற் 354/5,6
செயலை முழு_முதல் ஒழிய – குறு 214/5
யாஅத்து, பொரி அரை முழு_முதல் உருவ குத்தி – குறு 255/1,2
அணங்கு உடை கடம்பின் முழு_முதல் தடிந்து – பதி 88/6
போந்தை முழு_முதல் நிலைஇய – அகம் 238/16
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து – புறம் 58/2

குழுமு நிலை போரின் முழு_முதல் தொலைச்சி – பெரும் 237
(பலவாகத்)திரண்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து

காலை வந்த முழு_முதல் காந்தள் – குறு 361/4
காலையில் வந்த முழுச்செடியான காந்தளை

முள் அரை தாமரை முழு_முதல் சாய்த்து – கலி 79/2
முள்ளைத் தண்டிலே கொண்டிருக்கும் தாமரை மலரை அடியோடு சாய்த்து

இழுமென இழிதரும் பறை குரல் அருவி
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் – பதி 70/24,25
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
அடிப்பக்கம் மிக அகண்ட உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்

நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/35-37
இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற பூணினைக் கொண்ட
பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி

முழை

முழை – (பெ) குகை, Large mountain cave, cavern, den
வாள் வரி வய புலி கல் முழை உரற – அகம் 168/12
வாள் போன்ற வரியையுடைய வலிய புலி மலையின் குகையிடத்தே முழங்க

மூ

மூ – 1. (வி) முதுமை அடை, மூப்பு எய்து, become old
– 2. (பெ.அ) மூன்று, three
1.
மூத்து வினை போகிய முரி வாய் அம்பி – நற் 315/3
முதுமையுற்று, கடற்செலவாகிய வினைக்கு உதவாதாகிய விளிம்பு முரிந்து கெட்ட தோணியை
2.
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11
ஆறு மென்மையான தலைகளையும், முழவினைப் போன்ற பன்னிரண்டு தோள்களையும்,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி – புறம் 55/2
ஒப்பில்லாததோர் அம்பை வாங்கி மூன்று மதிலையும் எய்து

மூக்கு

மூக்கு – (பெ) 1. நாசி, nose
2. வண்டிப் பாரின் தலைப்பகுதி, Nose-shaped end of the pole of a cart
3. இலை,காய்,கனி ஆகியவற்றின் காம்பு, stem or base of a leaf or fruit
1.
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற – நற் 149/2,3
மூக்கின் உச்சியில் சுட்டுவிரலை வைத்து
தெருவில் பெண்டிர் கிசுகிசுப்பாய்ப் பழிச்சொற்களால் தூற்ற

உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/8
உள்ளிருக்கும் ஊன் வாடிப்போன சுருண்ட மூக்குள்ள சிறிய நத்தைகள்

கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
கதிர் நுனை போலும் மூக்கையுடைய ஆரல் மீன் சேற்றின் கீழே செருக
2.
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 57,58
காடி வைத்த மிடாவினுடைய மூக்கணை மீதிருந்து,
குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப
3.
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/2-4
கடற்கரைச் சோலையின் பனையின் தேனையுடைய மிக முதிர்ந்த பழம்
வளமையான இதழ்களையுடைய நெய்தல் பூ வருந்தும்படியாக, காம்பு இற்று
குழைவான கரிய சேற்றில் ஆழமாகப் புதைந்துபோகுமாறு வீழ்ந்ததாக,

நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த
ஈர்ம் தண் பெரு வடு – ஐங் 213/1,2
நறிய வடுக்களையுடைய மாமரத்திலிருந்து காம்பு அற்றுப்போய் உதிர்ந்த
பசுமையான குளிர்ந்த பெரிய வடுக்களை

மூசு

மூசு – (வி) 1. மொய், swarm around
2. சூழ், throng, gather around
1.
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலை தண் துளி பேணார் – நெடு 32-34
முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர்
வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு,
தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல்

நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி
எறும்பும் மூசா இறும்பூது மரபின் – பதி 30/37,38
இரத்தம் தூவிய நிறைந்த கள்ளுடனான பெரிய பலியானது
எறும்புகளும் மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினை யுடையதாக
2.
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் – மது 716-718
ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பினில்,
வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப,
கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும்

மூட்டு

மூட்டு – (வி) 1. தீ மூளச்செய், பற்றவை, make a fire, kindle a flame
2. செலுத்து, cause to enter, put into
1.
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் – பரி 2/63,64
புகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி,
திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினை மேலும் பெருக்கிக்கொள்வதும்
2.
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/2,3
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல, ஞாயிறு
மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்

மூட்டுறு

மூட்டுறு – (வி) தைக்கப்படு, பொருத்தப்படு, sewn, fastened with stitches, joined
முரசு உடை செல்வர் புரவி சூட்டு
மூட்டுறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/1,2
முரசங்களையுடைய செல்வரது குதிரையின் தலையின் உச்சியிடத்து
இணைத்துத் தைக்கப்பட்ட கவரியை நிமிர்த்து வைத்தாலொத்த

மூதரில்

மூதரில் – (பெ) மூது + அரில், பழமையான புதர், old bush
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/18,19
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,

மூதா

மூதா – (பெ) வயதுசென்ற பசு, old cow
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்த ஆங்கு – குறு 204/3,4
பழைய மேட்டு நிலத்தில் செழித்துவளர்ந்த முற்றாத இளம் புல்லைப்
பல்லில்லாத கிழட்டுப்பசு நாவினால் நக்கிப்பார்ப்பதைப் போன்று

மூதாய்

மூதாய் – (பெ) இந்திரகோபம், தம்பலப்பூச்சி எனப்படும் வெல்வெட் பூச்சி,
the red velvet mite, Trombidium grandissimum

இதனை, ஈயன்மூதாய். Cochineal insect என்கிறது தமிழ்ப்பேரகராதி.
ஆனால் ஈயன்மூதாய் என்பது Cochineal insect அல்ல என்று பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் இதே ஆசிரியர்
இந்திரகோபம் என்ற ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார்.
அதனைக் காண இங்கு சொடுக்குக

மூதாய் என்ற சொல் பத்துப்பாட்டில் இல்லை. எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை, கலித்தொகை, அகநானூறு
ஆகிய நூல்களில் இச்சொல் ஒன்பது முறை வருகிறது. அதில் ஏழுமுறை இது அகநானூறில் வருகிறது. இவை
ஒவ்வொன்றும் மூதாயைப் பற்றிய ஒரு தகவலைக் கூறுகின்றன. அவற்றைப் பார்ப்போம்.

1. கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5
2. பெய் புல மூதாய் புகர் நிற துகிரின் – கலி 85/10
3. ஈயல் மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
4. குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/4
5. செம் புற மூதாய் பரத்தலின் நன் பல – அகம் 134/4
6. அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் – அகம் 139/13
7. வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/15
8. ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
9. குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12

இது செம் மூதாய்(1), குருதி உருவின் ஒண்செம் மூதாய்(4), செம்புற மூதாய்(5), அரக்குநிற உருவின் மூதாய்(6)
என்று கூறப்பட்டுள்ளதாலும், இது பவளத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளதாலும்(3), இப்பூச்சி சிவப்பு நிறத்தது என்பது
தெளிவாகின்றது. இதன் பண்புகளைப் பற்றி அறிய, இந்த அடிகளுக்கு அடுத்த, முந்தைய அடிகளையும்,
அவற்றின் உரைகளையும் பார்க்கலாம்.

1. கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனையாயின்
தலைநாட்கு எதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீ விளையாடுக சிறிதே ——- நற்றிணை 362:1-6

வேலைப்பாடு நன்கு அமைந்த பாவை போல இயங்கி, நின் தந்தையின்
மனையெல்லையைக் கடந்து (என்னுடன்) வந்திருக்கிறாய், அதனால்
முதல் மழையைப் பெய்யத் தொடங்கிய குளிர்ந்த மழையையுடைய மேகம்
அழகு மிக்க காட்டில் அகன்ற இடமெல்லாம் பரந்த
விரைந்து ஓடும் சிவந்த ஈயலின் மூதாயைப் பார்த்தும் பிடித்தும்
நீ விளையாடுக சிறிது பொழுதே —

என்பது இதன் பொருள்.

தலைவனோடு உடன்போகும் தலைவிக்கு, இடைச்சுரத்தின்கண்ணே தலைவன் கூறிய கூற்று இது.
விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும், அவற்றைப் பிடித்தும் சிறிதுபொழுது நீ
விளையாடுவாயாக என்று உரை கூறும் பின்னத்தூரார், பின்னர், செம்மூதாய் – தம்பலப்பூச்சியுமாம் என்கிறார்.
எனவே இவர் ஈயலின் மூதாய் என்று எதனைக் குறிக்கிறார் என்று தெரியவில்லை. ஈயல் என்பது
இன்றைக்கு ஈசல் எனப்படுகிறது. இங்கு நாம் உற்றுநோக்கவேண்டியது, தலைவனும் தலைவியும் நடந்துசெல்லும்
பாலை வழியில், முதல்மழை பெய்கிறது. உடனே, இந்த ஈயன்மூதாய் அணிமிகு கானத்து அகன்ற மேற்பரப்பில்
பரவி, அங்குமிங்கும் விரைவாகச் செல்கின்றன என்று பார்க்கிறோம். நாம் அறிந்த சாதாரண ஈசல் என்றால் அது
புற்றுக்குள்ளிருந்து புறப்பட்டு சிறிது தொலைவு பறந்து, பின்னர் தரையில் பரவி, வேகமாக அங்குமிங்கும் செல்லும்;
ஆனால் அது சிவப்பாக இருக்காதே! எனவே இது ஈசல் வகையைச் சேர்ந்த வேறொரு பூச்சியாக இருக்கவேண்டும்.
இதற்கு உரை எழுதிய ஔவை துரைசாமியார், கடும்செம் மூதாய் என்பதற்கு மிகச் சிவந்த
தம்பலப்பூச்சிகள் என்று ‘கடும்’ என்பதனை நிறத்திற்கு ஏற்றிக் கூறுகிறார்.
‘செம்மூதாய் தம்பலப்பூச்சி; இதனைக் கோபம் என்பதும் வழக்கு; இந்திரகோபம் என்பதுமுண்டு’ என்ற
கூற்றுக்களால் இது இந்திரகோபமே என உறுதி செய்கிறார். ‘இப்பூச்சிகளின் செம்மைநிறமும் மென்மைத்
தன்மையும் காண்பார்க்கு இன்பம் நல்கலின், இளையர் அவற்றை எடுத்துத் தம்முடைய ஆடைமேல் இட்டு
மேயவிடுவர்’ என்றும் அவர் கூறுகிறார்.

2. பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் – கலி 85/10

பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின்
மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண் – கலி 85:10,11

மழை பெய்த புலத்து ஈயன்மூதாயின் புகர்நிறமுள்ள பவளத்தாற் செய்த
அழுக்கற விளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண்

இங்கே துகிர் என்பது பவளம். புகர்நிறம் என்பது கருஞ்சிவப்பு நிறம் (tawny colour) அல்லது கபில
நிறம் ஆகும். பெய்புல மூதாய் என்பதால் மழை பெய்தபின் முல்லைநிலக்காடுகளில் காணப்படும் என்பது
பெறப்படுகிறது. எனவே, இது முற்கண்ட நற்றிணை அடிகளின் பொருளை மெய்ப்பிக்கிறது எனலாம்.

3. ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு – அகம் 14/3

அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றம் —– – அகநானூறு 14:1-4

செவ்வரக்கினை யொத்த சிவந்த நிலத்திற் செல்லும் பெருநெறியில்
காயாவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, பலவும் ஒருங்கே
தம்பலப்பூச்சிகள் வரிவரியாக ஊர்ந்து செல்ல (அவை) பவளத்தொடு
நீலமணி நெருங்கி யிருந்தா லொக்கும் குன்றம்

என்று வேங்கடசாமிநாட்டார் உரை கூறுகிறது. இங்கே வரி என்ற வினைச்சொல்லுக்கு அழகுசெய்
(adorn, decorate) அல்லது ஓடு (run, flow) என்ற பொருள் கொள்ளலாம். இங்கும் நாம் ஏற்கனவே கண்ட
செய்திகள் உறுதிப்படுகின்றன எனக் காண்கிறோம்.

4. குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/4

தண்பெயல் பொழிந்த பைதுறு காலைக்
குருதி யுருவின் ஒண்செம் மூதாய்
பெருவழி மருங்கில் சிறுபல வரிப்ப – அகநானூறு 74:3-5

குளிர்ந்த மழை பொழிந்ததாற் பசுமையுற்ற காலத்தே,
குருதியைப் போலும் சிவந்த நிறத்தையுடைய ஒள்ளிய தம்பலப்பூச்சி
பெரிய வழிகடோறும் பல சிறிய வரிகளாகப் பரக்க

என்று இதற்கு நாம் முன்னர் கண்ட வகையிலேயே பொருள் அமைந்துள்ளது.

5. செம்புற மூதாய் பரத்தலின் நன்பல – அகம் 134/4

வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின் ———- – அகநானூறு 134:1-4

மழை தப்பாது பெய்தலால் காடு அழகுபெற்று,
நிறைந்த சூலுடைய கரிய மேகங்கள் கார் காலத்தினைத் தந்து தங்கிற்றாக,
நீலமணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடையிடையே
சிவந்த புறத்தினையுடைய இந்திரகோபப் பூச்சி பரத்தலோடு

என்ற பொருளும் நாம் அறிந்த செய்திகளை உறுதிசெய்கிறது.

6. அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் – அகம் 139/13

அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவை போல் பாஅய்ப் பலவுடன்
நீர்வார் மருங்கின் ஈரணி திகழ – அகம் 139/13-15

செவ்வரக்கு அனைய நிறத்தையும் அழகினையுமுடைய தம்பலப்பூச்சிகள்
பரப்பிவைத்தாற் போலப் பலவும் ஒருங்கே பரந்து
நீர் ஒழுகிய ஈரமுடைய இடத்தில் அழகுடன் விளங்க

என்பது இதன் பொருள். மழைக்காலத்தில், ஈரமான இடங்களில் இவை படைபடையாக அடைந்திருக்கும்
என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. கார்காலத்தின் கடைநாள் காட்சியாகப் பாடல் இதைக் கூறுகிறது.
எனவே, கார்காலத்தில் பிறந்து ஓடியாடித் திரிந்த இவை, கார்கால இறுதியில் அங்கங்கே திட்டுதிட்டாய்ப்
படுத்துக்கிடக்கும் என்பது தெரிகிறது.

7. வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/15

———– ———- ——— கரிமரம்
கண்அகை இளம்குழை கால்முதல் கவினி
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப்
பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப்
புல்நுகும்(பு) எடுத்த நல்நெடுங் கானத்(து)
ஊட்டு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன
வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப — அகநானூறு – 283:9-15

கரிந்த மரங்கள்
தம்மிடத்தே கிளைக்கப்பெறும் இளந்தளிர்கள் அடி முதல் கிளைத்து அழகுபெறவும்,
வானில் ஒருங்கே இருட்சியுற்று, வெம்மை நீங்கவும்,
பசுமையைத் தன்பால் கொண்ட மேகம் பரந்த துளியினைச் சொரிந்ததாக,
புற்கள் குருத்தினைவிட்ட நல்ல நீண்ட காட்டில்
செந்நிறம் ஊட்டிய பஞ்சின் பிதிர் பரவியது போன்ற
செந்நிறமுடைய தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தே அழகுறுத்த

என உரை கூறப்படும் இந்த அழகிய அடிகளில், கார்காலத் தொடக்கம் அழகுற வருணிக்கப்பட்டுள்ளது.
எனவே, கார்காலத் தொடக்கத்தில் இப்பூச்சிகள் தென்பட ஆரம்பிக்கின்றன என்பது மீண்டும் உறுதிசெய்யப்படுவதோடு,
அதன் மேனி பிய்த்தெறிந்த பஞ்சுச் சிதறல்கள் போல் இருக்கும் என்பதுவும் தெளிவாகிறது. இவற்றின் இயக்கத்தை
விளக்கும் வரிப்ப என்ற சொல் இங்கும் காணப்படுகிறது. ஆனால் அதற்கு அழகுறுத்து என்ற பொருள்
கொள்ளப்பட்டுள்ளது.

8. ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப – அகம் 304/15

——— ———— ——— வரிமணல்
மணிமிடை பவளம் போல அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப
புலனணி கொண்ட காரெதிர் காலை – அகநானூறு – 12-16

வரிப்பட்ட மணலில்
நீல மணியுடன் கலந்த செம்பவளம் போல அழகு மிக
காயாவின் வாடல்பூ பலவும் சேரப் பரந்து அவற்றுடன்
தம்பலப்பூச்சியும் நிலத்தில் ஈரம்பட்ட இடத்தை அழகுசெய்ய,
காடாகிய நிலம் அழகு பெற்ற கார்காலம் தோன்றிய பொழுதில்

என்பது இதன் பொருள். இப்பூச்சியின் முன்னற்கண்ட பண்புகளை இங்கு மீண்டும் காண்கிறோம்.

9. குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12

இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்பிசைத் தன்ன
இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல
பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச்
செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவழம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய – அகநானூறு 374:7-14

இடித்தலும் குமுறுதலும் இன்றி, பாணர்
வடித்தலுற்ற நல்ல யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற
இனிய குரலுடன் மிக்க துளியைப் பொருந்தி, நன்றாகிய பல
மழைகளைப் பெய்து கழிந்த, பூக்கள் மணக்கும் விடியற்காலத்தில்,
செறிந்த மணல் மேடுபட்டுக் களர்மண்ணும் தோன்றும் நெறியில்
சிறு வயிற்றினையுடைய தம்பலப்பூசி குறுகுறுவென்று ஓடி
நீலமணியுடன் கூடிய பவழம் போலக் காயாவின்
அழகுமிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய —

என்பது இதன் பொருள்.

மின்னாமல் முழங்காமல் விடிய விடியப் பொழிந்த விடியற்காலையில், செறிந்த மணல் மேடுபட
அதன்மேல் களர்மண் படிந்திருக்கும் பாதையில், சிறிய வயிற்றினை உடைய தம்பலப்பூச்சி குறுகுறுவென ஓடி,
நீலமணியுடன் கூடிய பவழம் போல காயாவின் அழகு மிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய என்று கூறும் இப்பகுதி
தம்பலப்பூச்சியைப் பற்றி மேலும் இரு செய்திகளைக் கூறுகிறது. இப் பூச்சியின் வயிறு குறுகியதாக இருக்கும்
(குறு மோடு). அது குறுகுறுவென ஓடி ஒளிந்துகொள்ளும். எனவே, ஆளரவம் கேட்டு அதற்கேற்ப இயங்கக் கூடியது
அது.

எனவே, இதுவரை கண்டவற்றால் இப் பூச்சியைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது:-

1. கார்காலத் தொடக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. இது காணப்படுவதைக் கார்காலத் தொடக்கத்தின்
அறிகுறியாக மக்கள் கொண்டனர்.
2. கார்கால முடிவில் இவை பலுகிப் பெருகி அங்கங்கே பரவலாக படர்ந்திருக்கும்.
3. ஒரு நாளின் தொடக்கமான வைகறைப் பொழுதில் இது தன் அன்றைய வாழ்க்கையைத் தொடங்குகிறது.
4. ஈரமான பகுதிகளில் விரும்பி உறையக்கூடியது.
5. தாம் தங்கியிருக்கும் இடத்தை அழகுசெய்வது.
6. பவளம் போல் சிவப்பு நிறத்தது.
7. மரத்தடிகளில் ஊர்ந்து திரியக்கூடியது. காயா மரத்தடிகளில் காணப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன.
8. பாதை ஓரங்களில் திரியக்கூடியது.
9. ஆள் அரவம் கேட்டு ஓடி ஒளிந்துகொள்ளக்கூடியது.
10. இதன் வயிற்றுப்பகுதி சிறியதாக இருக்கும்.
11. பஞ்சுப்பிசிர் போன்று மென்மையான உடலைக் கொண்டது.
12. சிறுவர்கள் பிடித்து விளையாடும் அளவுக்குச் சாதுவானது (harmless).

இத்தனை பண்புகளிலும் சிவப்பு நிறம் என்ற ஒன்றைத் தவிர ஏனையவை cochineal என
அழைக்கப்படும் தம்பலப்பூச்சிக்கு இல்லை. எனவே, இதிலிருந்து நாம் இருவித முடிவுகளுக்கு வரலாம்.

1. Cochineal எனப்படும் இந்திரகோபப்பூச்சி வேறு – மூதாய் என்றழைக்கப்படும் தம்பலப்பூச்சி வேறு.

2. இந்திரகோபம், தம்பலப்பூச்சி, மூதாய் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பூச்சி ஒன்றே
– ஆனால் அது cochineal என்றழைக்கப்படும் coccus cacti என்ற சப்பாத்துக்கள்ளிப் புழு அல்ல.

அப்படியென்றால் இது என்ன?

இப் பூச்சியின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தபோது இது நமது கிராமங்களில் வெகுவாக அறியப்பட்ட
வெல்வெட் பூச்சியாக இருக்கலாம் எனத் தோன்றியது. இந்தத் தலைப்பில் வலைத்தளங்களில் தேடியபோது பல
தகவல்கள் கிடைத்தன.
இது ஆங்கிலத்திலும் the red velvet mite எனப்படுகிறது. இது Trombidium grandissimum என்ற
வகையைச் சேர்ந்தது. இதைப்பற்றிக் கிடைத்த பல தகவல்களில் கீழ்க்கண்டவை நம் மூதாய்க்குப் பொருந்திவந்தன.

It is a red mite about half an inch long and from a quarter to three-eighths of an inch in its
widest part. It is covered with a scarlet, velvety down, and appears on the ground at the beginning of the
rainy season. It is only to be found for a few weeks in the year.
The mites are visible in large numbers early in the Monsoon season and so are also called
rain mites in the subcontinent.

எனவே, தமிழ் இலக்கியங்களில் கோபம், கோவம், மூதாய், ஈயன் மூதாய் என்று அழைக்கப்படும்
இந்திரகோபம் எனப்படும் தம்பலப்பூச்சி என்பது வெல்வெட் பூச்சி, Trombidium grandissimum எனப்படும்
பூச்சியே என்பது தெளிவாகும்.

பார்க்க : கோபம்

பார்க்க : ஈயல்மூதாய்

மூதாலம்

மூதாலம் – (பெ) தொன்மையான ஆலமரம், very old banyan tree
தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/2,3
மிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும்
நான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல

மூதாளர்

மூதாளர் – (பெ) 1. ஒழுக்கத்தினையுடையவர், people with good character
2. வயதில் பெரிதும் முதிர்ந்தோர், eldery people
1.
பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 54
பெரிய ஒழுக்கத்தினையுடைய மெய்க்காப்பாளர் காவலாகச் சூழ்ந்து நிற்ப
நச். உரை
2. பெரு மூதாளர் – ஆண்டானே பெரிதும் முதிர்ந்தோர் – பொ.வே.சோ. உரை விளக்கம்

மூதிலாளர்

மூதிலாளர் – (பெ) பழமையான மறக்குடியைச் சேர்ந்தவர், person of ancient warrior-tribe
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய
மூதிலாளருள்ளும் – புறம் 289/4,5
பெருமை பெற்ற பழைமையான குடியில் பிறந்தாரிடத்து வழிவழியடிப்பட்டு வரும் நற்பண்புகளனைத்தையும்
சோர்வுபடாது காத்துவரும்
முதுகுடி மறவருள்ளும்

தமியன் வந்த மூதிலாளன்
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக
திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/4-7
தனியனாய் வந்த மறக்குடி மறவன்
போரில்பகைவரை மேற்செல்லாதவாறு தடுத்து, தான் முன்னேநின்று வாளால் வெட்டி வீழ்த்தின
களிறாகிய பிணத்தினது கொம்புகளையே அமைப்பாகக் கொண்டு
கோணிய கூரிய வாளை நிமிர்த்துக்கொண்டு

மூதில்

மூதில் – (பெ) 1. பழங்குடி, ancient family
2. பழமையான் வீடு, very old house
3. பழமையான மறக்குடி, Ancient warrior-tribe
1.
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/6
மூதில் மகனாகிய அருமன் என்பவனின் பெரும்புகழ்பெற்ற சிறுகுடி என்ற ஊரைப் போன்ற
மூதில் – தொல்குடி என்னும்பொருட்டு – ஔவை.சு.து.உரை விளக்கம்.
2.
சிவந்த காந்தள் முதல் சிதை மூதில்
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பில் – பதி 15/11-13
சிவந்த காந்தள் வேரொடு காய்ந்தழிந்திருக்கும் பாழ் வீடுகளில்
புலால் நாறும் வில்லேந்தி உயிர்க்கொலை புரியும் புல்லிய மறவர் உறையும்
பனையோலைகளே வேய்ந்த ஊர்களையுடைய
ஔவை.சு.து.உரை
3.
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/15
முதிய மறக்குடியில் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ
ஔவை.சு.து.உரை

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே – புறம் 279/1,2
இவளது சிந்தை கெடுக, இவளது துணிவு அச்சம்பொருந்தியதாகவுள்ளது
இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளாமெனல் தக்கதே
ஔவை.சு.து.உரை

மூது

மூது – (பெ) 1. தொன்மை, பழைமை, ancientness
2. முதுமை, oldness
1.
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும் – புறம் 382/11
முன்னாள் நீ பரிசில் தந்து விட்ட தொன்முறை அறிந்த சிறுவரும்

கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/5-8
கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர்
வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால்
உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும்
நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில்
2.
பசும்பழப் பாகல்
கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/13,14
அழகிய பழத்தினையுடைய பாகற்கொடிகள்
கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில்கிடந்து அசையும்படி செய்து

மூதூர்

மூதூர் – (பெ) பழைமையான ஊர், ancient town

மூதூரில் விழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். கொடிகள் அசையும் அகன்ற கடைத்தெருக்கள் இருக்கும். நகருக்குக்
காவல் பலமாக இருக்கும்.

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்

விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் – பெரும் 411
விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய தொன்மையான ஊராகிய காஞ்சிநகர்

அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 7
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 29,30
மாடங்கள் உயர்ந்துநிற்கும் வளப்பமுள்ள பழைய ஊரில்,
ஆறு கிடந்தால் போன்ற அகன்ற நெடிய தெருவில்,

துஞ்சா முழவின் மூதூர் வாயில் – குறி 236
செயலற்று இராத(எப்போதும் ஒலிக்கும்) முழவினையுடைய பழைய (நம்)ஊர் வாயிலில்

சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு – பட் 215
திருவிழா நிகழும் பழைமையான ஊருக்குச் சென்று குடியேறினாற்போன்று,

நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4
நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1
ஆட்டங்களைக் கொண்ட திருவிழாவின் ஆரவாரம் உள்ள பழமையான ஊரில்,

விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – நற் 293/4
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த மூதூரில்

பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/10
பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன

விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்
கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்து – பதி 15/18,19
விழாக்கள் இல்லாமல் இருப்பதை அறியாத, முழவுகள் முழங்கும் மூதூர்களில்
கொடிகளின் நிழலில் இருக்கும் பொன்னை மிகவும் உடைய கடைத்தெருக்களில்

முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20
முழவுகள் முழங்குகின்ற பழமையான ஊரில் விழாவினைக் காண்பதற்காகச் செல்லுகின்ற,

விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – அகம் 17/19
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்

நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – அகம் 83/7
நீண்ட கொடிகள் அசையும் அங்காடிகளையுடைய பழைமையான ஊரில்

அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12
அணுகுதற்கு மிக்க காவலினையுடைய பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதீர்

அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் – அகம் 115/1
என்றும் நீங்காத விழாவினையுடைய பகைவர்க்கு அச்சம் தரும் இம் முதிய ஊரின்கண்ணே

செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர் – புறம் 37/11
செம்பு பொருவும் மதிலையுமுடைய தலைமை பொருந்திய பழைய ஊரினுள்ளே

மூப்பு

மூப்பு – (பெ) 1. முதுமை, old age
2. பழைமை, ancientness
1.
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமை கொண்ட வழி – கலி 12/16-19
பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து
உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை
2.
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய – அகம் 7/4
மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.

மூய்

மூய் – 1. (வி) மொய், சூழ்ந்திரு, encircle, surround
– 2. (பெ) மூடி, cover
1.
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய – பதி 42/19,20
மானத்தையுடைய வலிமை மிகுந்த வீரரோடு மன்னர்களும் புகழ்ந்து போற்ற, – உன்
தேருடன் சேர்ந்த வீரர்கள் உலகமுழுவதும் சூழ்ந்திருக்க,

சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/13-15
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்
கயிறுகட்டி மேலிழுத்து நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும்
பசுக்கள் நிறைந்த கொங்கர் நாட்டினை வென்று சேர்த்துக்கொண்ட
2.
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன – குறு 233/3
பொன்னை இட்டுவைக்கும் பேழையின் மூடியைத் திறந்துவைத்ததைப் போன்று

மூரல்

மூரல் – (பெ) 1. புன்னகை, இளநகை, smile
2. பொலுபொலுவென்று வெந்த சோறு, rice cooked properly
1.
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழை கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே – குறு 286
நினைத்துப் பார்க்கத்தான் முடியும் போலிருக்கிறது, முள் போன்ற கூர்மையான பற்களையுடைய
அமிழ்தம் சுரக்கின்ற சிவந்த வாயையும், கமழ்கின்ற அகிலும்
சந்தனமும் மணக்கும் கருமணல் போன்ற கூந்தலையும்,
பெரிய அமர்த்த குளிர்ச்சியான கண்களையும் உடைய தலைவியின்
இளநகையோடு கூடிய செருக்கிய பார்வையை

பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
சில் நிரை வால் வளை பொலிந்த
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/12-17
தனது பெரிய
அரி படர்ந்த மையுண்ட கண்ணினால் மாறுபட்டனள் போல நோக்கி
எம்மைத் தடுப்பீர் நீவிர் யாவிரோ என்று கூறி
இளநகையுடையவளாய்ச் சிறிது பெயர்ந்து நின்ற
சிலவாய நிரைந்த வெள்ளிய வளைகளாற் பொலிவுற்ற
பல மாண்புடைய பேதையின் பொருட்டு என் நெஞ்சம் தன் வலியினை இழந்துவிட்டது.

மூரல் என்ற சொல் முறுவலுக்கு அடையாக வந்துள்ளதைக் கவனிக்கவேண்டும். வாய் திறந்து சிரிப்பது சிரிப்பு.
மனம் மகிழ்ந்து முகம் மட்டும் மலர்வது முறுவல். அந்த முறுவலில் ஓரளவு வாய் திறந்து இலேசாகப் பல்
தெரிய முறுவல் காட்டுவது மூரல் முறுவல். எனவே மூரல் என்பதை இளநகை எனலாம்.

மேலே காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளின் சூழ்நிலையை உற்றுக் கவனித்தால் மூரல்முறுவல் என்பதன்
முழுப்பொருளை உணரலாம். இதனை மேலும் விளக்க இன்னொரு எடுத்துக்காட்டைக் காண்போம்.

வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர். உடனே
உங்கள் முகம் மலர்கிறது. வாயெல்லாம் பல்லாய், “வாங்க வாங்க” என்று உற்சாகத்துடன் வரவேற்கிறீர்கள். இது
மலர்ந்த சிரிப்பு.

தெருவில் போகும்போது முற்றிலும் புதிய ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். யாரென்று தெரியாத
நிலையில் பதிலுக்கு ஒரு சிறு முறுவல்மட்டும் காட்டிவிட்டுச் செல்கிறீர்கள்.

இப்படியில்லாமல் நெடுநாள்களுக்கு முன்னர் ஓரளவே பரிச்சயம் ஆகியிருப்பவரை எதிர்பாராமல்
காணும்போது உங்கள் முகம் ஓரளவு மலர்ந்து, வாயில் பற்கள் மிகச் சிறிய அளவே தெரிய புன்னகைக்கிறீர்களே
அதுதான் மூரல்.

இதை விருந்தின் மூரல் என்கிறது சிலம்பு.

திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – வஞ்சி 28/24

என்கிறது சிலப்பதிகாரம். இதற்கு, திருந்திய பற்கள் சிறிது தோன்றிய புதிய நகையினையும் என்று உரை
கூறுவார் வே.நாட்டார்.

2.
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் – பெரும் 167,168
பெரிய சுற்றமாகிய நண்டின் (கருவிலுள்ள)சிறிய பார்ப்பை ஒத்த
பசிய தினையரிசியிலான சிலுத்த சோற்றைப் பாலோடும் பெறுவீர்

நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன் சுவை மூரல் பெறுகுவிர் – பெரும் 192-196
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை,
புள்ளிபுள்ளியாகத் தெரியும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டாற் போன்ற
அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால்
இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர்.

உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
உப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில்

இளநகை என்பதனைக் குறிக்கும் மூரல், எப்படி உணவுக்கானது?

நன்றாக வெந்து குழைந்துபோன சோறு நெருங்கிய உறவினரிடம் காட்டும் மலர்ந்த சிரிப்புப் போன்றது. சரியாக
வேகாத அரிசிச்சோறு விதை விதையாய் இருக்கும். இது முற்றிலும் புதியவருக்குக் காட்டும் முறுவல் போன்றது.
மிகச் சரியான பதத்தில் வெந்து, சோறு பருக்கைபருக்கையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால்
அதுவே மூரல். இளநகை போன்று இளம்பதச் சோறு எனலாம்.

உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4

என்று அகநானூறு கூறுவதைக் கவனியுங்கள். மூரல் முறுவல் என்பது போல, இங்கு மூரல் முறுவல்
என்று வந்திருப்பதைக் கவனிக்கவேண்டும்.
பெரும்பாணாற்றுப்படை (பெரும் 192 – 196) இதனை மேலும் விளக்கமாய் உரைக்கிறது.
அவரை விதையை வேகவைத்துக் கடைந்து வரகரிசிச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டிருக்கிறார்கள்.
நன்றாக மலர வெந்த வரகரிசிச்சோறு ‘பொலபொல’-வென்று இருக்கும். அதுவே அவிழ் சொன்றி. பருப்பை
வேகவைத்துக் கடைந்தாலும் அது குருணைப் பதத்தில்தான் இருக்கும். ‘குக்கரில்’ வைத்த துவரம்பருப்பு போல்
குழைய இருக்காது. இந்தக் குருணைப்பதப் பருப்புக் கடைசலை, குருணை போன்ற வரகரிசிச் சோற்றில் பிசையக்
கிடைப்பதே இன்சுவை மூரல்.

மூரி

மூரி – (பெ) 1. வலிமை, strength
2. பெருமை, greatness
3. பழமை, antiquity
4. எருமை, buffallo
5. எருது, ox, bullock
6. செழுமை, கொழுமை, Plumpness, luxuriance
7. (ஊன்) துண்டம், bit, part
1.
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் – பதி 45/16
வில் விசையால் வரும் அம்புகளை அடக்கிய வலிமையான வெள்ளிய தோலாலான கேடகத்தையும்,
2.
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 15/1
முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
3.
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து – அகம் 103/6
வன்னிலத்தைச் சார்ந்திருந்த பழமையான பெரிய மன்றிலே
4.
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முது சாடி – பரி 20/53,54
பெண்ணின் தன்மையைக் கொண்ட அழகு என்னும் வயலில், காமவெறியாகிய கலப்பையைக் கட்டி
எம் தலைவரான எருமையைச் சோம்பிக்கிடக்காமல் முடுக்கிவிட்டு உழுகின்ற பலமுறை உழப்படும் உழவே!
5.
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் – பதி 67/15,16
வளைவு வளைவாக அமைந்த கொம்பினையும் பெரிய கண்ணுமுடைய எருதுகளினுடையதும்
வேறு வளைந்த தலைகளையுடைய விலங்குகளினுடையதுமான தாழ்ந்த இழிவான இறைச்சியை விற்போரின்
ஔவை.சு.து.உரை
6.
முதை சுவல் கலித்த மூரி செந்தினை – அகம் 88/1
பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த கொழுத்த செந்தினையின்
வே.நாட்டார் உரை
7.
திருந்தா மூரி பரந்து பட கெண்டி – புறம் 391/5
திருந்தாத ஊன்கறியைச் சிறுசிறு துண்டாகப் பரக்குமாறு துண்டித்து
திருந்தா மூரி – திருந்தாத ஊன்; மூரி – ஊன், ஔவை.சு.து.உரை, விளக்கம்
திருந்தா மூரி – big pieces of meat, வைதேகி ஹெர்பர்ட் விளக்கம்

வெண் நிண மூரி அருள – புறம் 393/14
வெள்ளிய ஊன் துண்டங்களைக் கொடுத்து உண்பித்து

மூழ்

மூழ் – (வி) 1. முடிவடை, come to an end
2. மூடு, close, fold up
3. மூழ்கடி, engulf, submerge
4. மொய், swarm around, throng about
1.
விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று – நற் 320/1
ஊரில் திருவிழாவும் முடிவடைந்தது; முழவுகளும் கட்டித்தொங்கவிடப்பட்டன
ச.வே.சு.உரை
2.
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/5
விளங்குகின்ற வேலேந்திய வீரரும் வாய்மூடி ஒன்றும் உரையாடாராயினர்
3.
நெடு நீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/4,5
ஆழமான நீரையுடைய குளங்களின் துறைகள் கலங்குமாறு
அதனை மூழ்கடிப்பதுபோல் தங்கிய பெரும் படையோடு
4.
புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும்
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்
அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/14-18
ஏறி அமர்வதற்கு அரிய பொங்கிய பிடரிமயிரையுடைய பறவைபோல் விரைந்துசெல்லும் குதிரைகள்,
மிக விரைவாக வந்தாலும் மேலே அமர்ந்திருக்க இனிதாக இருக்கும் பெண்யானைகள்,
அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு
வகைவகையாகவும், முறைமுறையாகவும் விரைவாக மொய்த்துக்கொண்டு அவற்றின் மீது ஏறி,

மூழ்கு

மூழ்கு – (வி) 1. அமிழ், plunge, submerge, sink
2. மறை, be hidden
3. நுழை, புகு, enter, get in, reach
4. அழுந்து, be thrust
1.
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் அமிழும் மகளிரின் கண்களை ஒக்கும்
2.
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று – நற் 163/9,10
அடிவானத்தில் மறைந்துபோன, விளங்குகின்ற ஒளிபொருந்திய நெடிய சுடரையுடைய
கதிர்கள் வெப்பத்துடன் எழுந்து உள்ளிடமெல்லாம் தகிக்கும் ஞாயிற்றின்
3.
வகை பெற எழுந்து வானம் மூழ்கி
சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மது 357,358
பலவகையால் பெயர்பெற எழுந்து வானத்தே சென்று(ப்பின்)
சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும்
4.
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 197-201
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்
நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று,
பிடியின் வாயை ஒத்த, மடங்கிய வாயையுடைய கலப்பையின்
உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு அழுந்த அமுக்கி,
வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை

மூவன்

மூவன் – (பெ) சேரநாட்டுச் சிற்றரசன், a chieftain of chEra country
மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்
தெறல் அரும் தானை பொறையன் பாசறை
நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/2-6
மூவன் என்பானின்
முழு வலிமை கொண்ட முள் போன்ற பற்களைப் பிடுங்கி அழுத்திவைத்த கதவினைக் கொண்ட
கடற்கரைச் சோலையைக் கொண்ட தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய
கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்
நெஞ்சு நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள்

மூவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது நாடு நெல்வளம் மிக்கது. பெருந்தலைச்சாத்தனார் இவனை
நேரில் கண்டு பாடியுள்ளார் (புறம் 209). பொய்கையார் இவனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (நற்.18). தொண்டி அரசன்
பொறையன் இவனைப் போரில் வென்று, இவனது பல்லைப் பிடுங்கி, தன் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான்.

மூவர்

மூவர் – (பெ) 1. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்,
The three Tamil kings, namely CEran, COzhan and PAndiyan
2. அயன், அரி, அரன் என்னும் மூன்று தெய்வங்கள், The Hindu Trinity.
3. திருமால் உருத்திரன் இந்திரன் என்ற மூன்று தெய்வங்கள், the three hindu gods, namely
vishnu, siva and Indra
1.
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/14,15
தமிழ்நாட்டினை ஆளும் மன்னர் மூவரும் காக்கும்
தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேயங்களின் பல மலைகளையும் கடந்து.
2.
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 160-162
நான்காகிய பெரிய தெய்வத்தையுடைய நன்றாகிய ஊர்கள் நிலைபெற்ற
உலகத்தைக் காக்கும் ஒரு தொழிலையே விரும்பிய கோட்பாட்டையுடைய செல்வன்(151)
என முன்னேகூட்டித் திருமாலுக்கு அடையாக்குக.
பலரும் புகழ்கின்ற அயன் அரி அரன் என்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்புபோல் நிறுத்தித்
தலைவராகவேண்டி
நச்.உரை

பிரமன் திருமால் உருத்திரன் இந்திரன் எனப்படும் நான்கு பெரும் தெய்வங்களிலே வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாடுடைய
பலராலும் புகழப்படுகின்ற அயனை ஒழிந்த ஏனை மூவரும் தலைவராக வேண்டி
பொ.வே.சோ உரை

மூவாய்

மூவாய் – (பெ) மூன்று பகுதிகள், திரிசூலத்தின் தலை, three parts, the head of the trident
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலும் உண்டு அ தோலாதோற்கே – அகம் 0/5,6
கையில் இருப்பது, குந்தாலியுடன் கோடரி, மூன்று கூறுகளையுடைய
சூலாயுதமும் உண்டு அந்தத் தோல்வி இல்லாதவருக்கு

மூவெயில்

மூவெயில் – (பெ) திரிபுரம், முப்புரம், பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால்
எரிக்கப்பட்டனவும் விண்ணிற் சஞ்சரித்தனவுமான மூன்று நகரங்கள்,
The three aerial cities of gold, silver and iron burnt by Siva
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 154
முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும்

மென்புலம்

மென்புலம் – (பெ) 1. நெய்தல் நிலம், coastal tract
2. மருதநிலம், agricultural tract
3. முல்லை நிலம், pastoral tract
1.
அம்ம வாழி தோழி நன்றும்
எய்யாமையின் ஏது இல பற்றி
அன்பு இலன் மன்ற பெரிதே
மென்புல கொண்கன் வாராதோனே – ஐங் 119
கேட்பாயாக, தோழியே! திருமணத்திற்குரிய நல்ல வழிகளை
அறியாமையினால், அதற்கு ஏதுவானவைகளைத் தவிர மற்ற வழிகளைப் பற்றிக்கொண்டிருப்பதால்
நம்மீது அன்பு இல்லாதவன், தெளிவாக, பெரிதும் –
மென்புலமாகிய நெய்தல் நிலத்துக்குரிய தலைவன் – நம்மை மணந்துகொள்ள இன்னும் வராதவன்
ஐங்குறுநூறு – நெய்தல்திணைப் பாடல்
2.
மென்புலத்து வயல் உழவர்
வன்புலத்துப் பகடுவிட்டு – புறம் 395/1,2
மென்புலமாகிய மருத நிலத்து வயல்களில் தொழில்புரியும் உழவர்
வன்புலமாகிய முல்லைநிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு
3.
அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்ப
மென்புல முல்லை மலரும் மாலை – ஐங் 489/1,2
அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகளின் அரித்தெழும் ஓசையினைக் கொண்ட கூட்டம் மொய்க்கும்படி,
மென்மையுடைய நிலமாகிய முல்லை நிலத்தின்கண் முல்லைப்பூக்கள் மலர்கின்ற மாலைப்பொழுது
ஐங்குறுநூறு – முல்லைத்திணைப் பாடல் – பொ.வே.சோ – உரை

மெய்

மெய் – (பெ) 1. உடல், body
2. உண்மை, truth
1.
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8
(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க –
2.
பொய் படுபு அறியா கழங்கே மெய்யே
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன்
ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250
பொய்கூறுதலை அறியாத கழங்குகளே! உண்மையே!
நீலமணி போன்ற மலையைப் புகலிடமாகக் கொண்ட இள மயில்கள் ஆடிக்கொண்டிருக்கும் நம்
விரிந்த வள்ளிக்கிழங்குகள் உள்ள அழகிய கானத்திற்கு உரியவன்,
ஆண்தகைமை உள்ள வெற்றி சிறக்கும் முருகவேள் அல்லன் – இவளின்
பூண் விளங்கும் இளமையான முலைகளை நோயுறச் செய்தவன்.

மெய்ப்படு

மெய்ப்படு – (வி) 1. தெய்வம் அல்லது ஆவியால் பற்றப்படு, be possessed, as by a deity or a spirit
2. உண்மையாகு, prove correct
1.
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல – புறம் 259/5
தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளை ஒப்ப
2.
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி – ஐங் 245/1,2
பொய் உரைக்காத மரபினையுடைய நம் ஊரின் வயதான வேலன்
கழங்குகளால் ஆராய்ந்து உண்மையினைக் கண்டு வெளிப்படுத்தி, நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைப் படைத்து,

மெய்ப்பை

மெய்ப்பை – (பெ) சட்டை, shirt, cloak
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 59-61
கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும்,
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

மெய்ம்மற

மெய்ம்மற – (வி) 1. உடம்பைத்துற, leave the body
2. தன் உணர்வு இழ, lose one-self
1.
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து
இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன்
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56
விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்
கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில்
வல்லவன் அல்லன்; வாழ்க! அவன் தலைமாலை!
வெற்றியையுடைய முரசத்தை ஓங்கி அறைய, வாளினை உயர்த்திக்கொண்டு
மின்னிடும் பூணினை அணிந்தவனாயும், பொன்னாலான கொடியாகிய உழிஞையைச் சூடியவனாயும்,
அறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
இறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன் –

அவர் தம் உடலைக் கைவிட்டு உயிர்கொண்டு துறக்கம் புகுந்து வாழலுற்றார் என்றற்கு “மெய்ம்மறந்த வாழ்ச்சி”
என்றும் கூறினார். நிலையில்லாத மெய்யை நிலையாகக் கருதாது அதனைமறந்து நிலைத்த புகழை விரும்பி
மாய்தலால் உண்டாகும் துறக்கவாழ்வு மெய்ம்மறந்த வாழ்ச்சி ஆயிற்று என அறிக – ஔவை.சு.து.உரைவிளக்கம்.
2.
முலை பொலி ஆகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மைகூர – புறம் 25/10-12
முலை பொலிந்த மார்பம் அழல் அறைந்துகொண்டு
அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை ஆரவாரத்தையுடைய
ஒண்ணுதல் மகளிர் கைம்மை நோன்பிலே மிக

மெய்ம்மறை

மெய்ம்மறை – (பெ) மெய்புகுகருவி, கவசம், coat-of-mail, armour
இச்சொல் எட்டுமுறை பதிற்றுப்பத்தில் மட்டும் வருகிறது

நோன்பு புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12
வலிமை பொருந்திய பெரிய கையினையுமுடைய படைவீரருக்கு மெய்க்கவசம் போன்றவனே!

குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!

வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8,9
வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!

ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11,12
உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,

வில்லோர் மெய்ம்மறை – பதி 59/9
வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே!

வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/5
வில்லோருக்குக் கவசமானவனே! தன்னை அடைந்தவருக்குச் செல்வமாயிருப்பவனே!

புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை – பதி 73/12
கார் நகரத்தையுடைய செல்வனே! பூழி நாட்டிலுள்ளவர்களின் கவசம் போன்றவனே!

எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/27
தம்மிடம் தோற்றவரிடம் போர்க்கு எழாத இரு தோள்களையுடைய பூழியருக்குக் கவசம் போன்றவனே!

மெய்யாப்பு

மெய்யாப்பு – (பெ) மகளிர் மெய்யில் அணியும் ஆடை, a shirt like dress worn by women
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் – பரி 24/19
மகளிர் தம் மெய்யாப்பால் தம் மெய்முழுக்க மூடுவார்

மெலிகோல்

மெலிகோல் – (பெ) கொடுங்கோல், Rod of tyranny
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப அவரை
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு
அவர் புறங்காணேன் ஆயின் ——–
———————- ——————
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக – புறம் 71/2-9
மிகைத்துச் செல்லும் படையையுடைய வேந்தர், தம்மில் ஒப்பக்கூடி
என்னொடு பொருவேம் என்று சொல்லுவர், அவ்வேந்தரைப்
பொறுத்தற்கரிய போரின்கண்ணே அலறப் பொருது, தேருடன்
அவர் உடைந்து ஓடும் புறக்கொடையைக் கண்டிலேனாயின் ————–
————————— —————————-
அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய அவைக்களத்து
அறத்தின் திறப்பாடில்லாத ஒருவனை வைத்து முறை கலங்கிக்
கொடுங்கோல் செய்தேன் ஆகுக

மெல்கிடு

மெல்கிடு – (வி) அசைபோடு, chew the cud
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் – அகம் 34/4-8
பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான்கள்
செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை
குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து
தெளிவாக அறுத்துக்கொண்டு செல்லும் நீரையொட்டிய நீண்ட மணல்சார்ந்த கரைகளில்
அசைபோடும் கதுப்புக்களுடன் துயில்கொள்ளும் இடத்தைக் காத்து நிற்கும்

மெல்கு

மெல்கு – (வி) மெல்லு, chew, masticate
அல்கு_உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/5
தனித்துத் தங்கியிருக்கும் காலத்தே மெல்லும் இரையினைத் தின்னாது

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 42-45
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,

மெல்லம்புலம்பன்

மெல்லம்புலம்பன் – (பெ) நெய்தல்நிலத் தலைவன், Chief of a maritime tract;
அம்ம வாழி தோழி நலம் மிக
நல்ல ஆயின அளிய மென் தோளே
மல்லல் இரும் கழி மல்கும்
மெல்லம்புலம்பன் வந்த மாறே – ஐங் 120/4
கேட்பாயாக, தோழியே! நலம் மிகப் பெற்று
நன்றாக ஆகிவிட்டன, இரங்கத்தக்க என் மென்மையான தோள்கள்!
வளமிக்க பெரிய கழியில் நீர் நிறைந்திருக்கும்
நெய்தற்புலத்துத் தலைவன் வந்ததனால்

மெழுகு

மெழுகு – 1. (வி) 1. சாணம் கலந்த நீரால் பூசு, smear the floor with cow-dung water
2. சந்தனக் குழம்பால் பூசு, smear, as the body with sandal paste
– 2. (பெ) எண்ணெய் அல்லது கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் உருகும் தன்மையுள்ள பொருள்,
wax
1.1
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14
தன் கண் கலுழ்கின்ற நீராலே சாணத்தைக் கரைத்து மெழுகிறாள்.

பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298
பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,
1.2
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ – பரி 10/73,74
அவர்கள் தம் முலைமுகட்டில் பூசிய சந்தனத்தின் மணம், மடைதிறந்த வெள்ளம்போல்
திசைகள் முழுதும் கமழ,
2.
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32
தோழியே கேட்பாயாக! நம் தலைவன்
ஒரே ஒருநாள் நமது வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள்
அழுதிருந்தனர் என்று சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர்,
தீயில் பட்ட மெழுகைப் போல வெகு விரைவாக உள்ளம் உருகிப்போய் –

மெழுக்கம்

மெழுக்கம் – (பெ) சாணத்தால் மெழுகப்பட்ட இடம்,
Ground or floor prepared by being smeared with cow-dung water
மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில் – பட் 248,249
பூக்களைச் சூட்டின, சாணம் மெழுகிய, இடத்தில் ஏறிப் பலர் தொழுவதற்கு,
புதியவர்கள் தங்கும், தெய்வம் உறையும் கம்பம் உள்ள அம்பலத்தில்,

மெழுக்கு

மெழுக்கு – (பெ) சாணத்தால் மெழுகுதல், smearing Ground or floor with cow-dung water
பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 166-168
பாக்கு(வெற்றிலை) சொரிந்த, புது மெழுக்கினையுடைய,
கால்கள் நட்டு (அதன் மேல்)வைத்த கவிந்த மேற்கூரையின்
மேலே நட்டுவைத்த (வீர வணக்க)துகில் கொடிகளும்,

மே

மே – 1. (வி) விரும்பு, desire
2. (பெ) மேன்மை, உயர்வு, eminence, excellence
1.
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24
அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று
கூறுவது போல் காட்டி
பின்னர் அவன் விரும்பும் வழியில் விரும்பிச் செல்வாயாக நெஞ்சமே!
2.
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மே தக மலரும்
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/4-6
உள்ளீடற்ற காயைக் கொண்ட கொன்றையின் கிளைகளில், அழகாகக் கொடிபோன்ற பூங்கொத்து
பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் மேன்மை பொலிய மலர்கின்ற,
பிரிந்திருப்போர் வருந்தும், அரிதினில் பெறும், கார்காலத்திலும்

மேஎம்

மேஎம் – 1. (வி.எ) பொருந்திய, மேவும் என்பதன் திரிபு, be fitted
change of one letter into another in syntactic coalescence of the word ‘mEvum’
– 2. (பெ.அ) 1. இன்னிசை அளபெடை, மேலுள்ள, covering
2. இன்னிசை அளபெடை – பொருந்திய, fitted on
1.
இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1
பெரிய உப்பங்கழியில் உள்ள முதலையிடத்துப் பொருந்திய தோலை ஒத்த
– மேவும் என்பது மேஎம் எனத் திரிந்தது – ந.மு.வே.நாட்டார் உரை, விளக்கம்
2.1
இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1
பெரிய உப்பங்கழியில் உள்ள முதலையிடத்து மேலுள்ள தோலை ஒத்த
பார்க்க : மேம் -1
2.2
இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1
பெரிய கழியின்கண் வாழ்கின்ற முதலையினது முதுகிலே பொருந்திய தோல் போன்ற
– மேவும் என்னும் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்து ஈற்று உயிர் மெய் கெட்டு மேம் என நின்று
‘இன்னிசை நிரைப்ப மேஎம்’ என அளபெடுத்தது – பொ. வே. சோமசுந்தரனார் உரை விளக்கம்

மேஎய்

மேஎய் – (வி.எ) மேவி என்பதன் திரிபு, நிலைகொண்டு, abiding, settled, பொருந்தி, having been fitted
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 82,83
பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு இருக்கும்
நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்,

மேகலை

மேகலை – (பெ) பெண்கள் இடையில் அணியும் அணிவகை, A jewelled girdle of women
வார் அணி கொம்மை வகை அமை மேகலை
ஏர் அணி இலங்கு எயிற்று இலங்கு நகையவர் – பரி 22/30,31
கச்சணிந்த இளம் முலைகளையும், சிறப்பாக அமைந்த மேகலையையும்,
அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும்,

மேக்கு

மேக்கு – 1. (பெ) உயரமான இடம், elevatted place
– 2. (வி.அ) மேலே, மேல்நோக்கி, over, on, upward
1.
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486
கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து
– நச்.உரை
2.
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486
கண் பார்வைக்கு நேரே இல்லாது மேல் உயர்ந்து இருந்தன
– ச.வே.சு.உரை

பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/2-7
ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடலில் துழாவித் தன் பெடையோடு
சேர்ந்து இரையைத் தேடும் அகன்ற பாதங்களையுடைய நாரை
மெல்லிய சிறுகண்ணில் சிவந்த கடைக்கண்ணையுடைய சிறிய மீன்களைப் பிடித்து
மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்
– மேக்குயர்தல் – மேலோங்கி உயர்தல் : ஔவை.சு.து.உரை விளக்கம்

மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை – குறு 26/2
மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது
– உ.வே.சா உரை

மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை
கூப்பிடூஉ உகளும்- அகம் 205/21,22
மேல் நோக்கி எழுந்த பெரிய கிளையில் ஏறி கூட்டமாய ஆண் குரங்குகள்
தன் இனங்களைக் கூப்பிட்டுத் தாவும்
– ந.மு.வே.நாட்டார் உரை

மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2
மழை மிகப் பெய்தலான் அப் பெயல் அமைந்து முகில் மேலே போவதாக வேண்டுமென
– ஔவை.சு.து.உரை.

மேதி

மேதி – (பெ) எருமை, buffalo
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 111
எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில்,

மேதை

மேதை – (பெ) பேரறிவு, supreme intelligence
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் – அகம் 7/6
நீ பேதைப் பருவத்தினை அல்லை, அறிவினையுடைய இளைய மகளே

மேந்தோன்று

மேந்தோன்று – (வி) மேம்பட்டு விளங்கு, சிறந்து விளங்கு, become eminent, be great
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி
நோய் இலை ஆகியர் நீயே – பதி 89/12,13
அரசுமுறையில் பிழையாமல், போரில் வெற்றியால் மேம்பட்டு,
நோயின்றி இருப்பாயாக நீயே!

மேன

மேன – (வி.மு) விரும்பி உறையும் இடம் ஆயின, are desirable living places
காடே கடவுள் மேன புறவே
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/20,21
காடுகள் முனிவர்கள் விரும்பி வாழும் இடமாக, முல்லைநிலங்கள்
ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக,
– ‘காடே கடவுள் மேன’ என்றது நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முதற்காலத்துக் கோயில்களாயின எ-று;
புறவு மகளிரொடு மள்ளர் மேன என்றது சிறு காடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள் மகளிரொடு உறையும்
படைநிலைகளாயின எ – று – ஔவை.சு.து. உரை விளக்கம்.

மேனி

மேனி – (பெ) 1. உடம்பு, body
2. நிறம், colour, complexion
1.
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 2,3
செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்
2.
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின்
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 148-151
மாந்தளிரைப் போன்ற நிறத்தினையும், பரந்த அழகுத் தேமலையும்,
அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை
கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து நெளியும் இடையினையும்,
மென்மையான தன்மையினையும் உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை வருடிக்கொடுக்க

மேம்

மேம் – (பெ.அ) 1. மேலுள்ள, covering
2. மேன்மையான,
1.
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/2
மேலுள்ள தோல் நீக்கப்பட்ட இனிமை பொருந்திய வெள்ளிய எள்ளாகிய
– ஔவை.சு.து.உரை
2.
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்
மேம் பால் உரைத்த ஓரி – பெரும் 171,172
உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும்,
மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும்

மேம்படு

மேம்படு – (வி) மேலாகு, சிறந்து விளங்கு, rise high as in status, be great
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401
எல்லா ஊர்களிலும் மேலாம்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய பழைய ஊர்

தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே – குறு 125/3,4
தழையையுடுத்த அல்குலையுடைய மகளிர் பலருள்ளும்
திருவிழாவைப் போன்று மேன்மையுற்றுத் திகழ்ந்த எனது பெண்மை நலம்

மேம்பாடு

மேம்பாடு – (பெ) மேன்மை, சிறப்பு, grandeur, pre eminence
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் – பரி 10/36
பூவின் சிறப்பினால் அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல

மேய

மேய – (வி.எ) 1. மேவிய என்பதன் திரிபு – பொருந்திய, attached
change of one letter into another in syntactic coalescence of the word ‘mEviya’
2. மேவிய என்பதன் திரிபு – தோன்றிய, வெளிப்படுத்திய, disclose, make known
3. மேவிய என்பதன் திரிபு – தங்கிய, நிலைகொண்ட, abiding
4. மேய் என்ற வினைச்சொல்லின் எச்சம்
1.
பிரியினும் பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே – ஐங் 297/3,4
நீ பிரிந்து சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை,
உன்னோடு பொருந்திய அந்த மடந்தையின் நட்பு.
– ஔவை.சு.து.உரை
2.
தொன் முது கடவுள் பின்னர் மேய
வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 41,42
பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றிய
பக்க மலையில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனாகிய வீரர் பெருமானே
– பொ.வே.சோ-உரை

மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591
திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளிடத்தே
– உயிர்கள் பிறப்பது போலன்றித் தானே பிறத்தல் வேண்டும் எனக்கருதி வந்து பிறப்பன் என்பது தோன்ற மேய என்றார்.
– பொ.வே.சோ-உரை விளக்கம்
3.
படு மணி யானை நெடியாய் நீ மேய
கடி நகர் சூழ் நுவலும்_கால் – பரி 19/28,29
ஒலிக்கின்ற மணிகளைக்கொண்ட யானையையுடைய நெடியவனே! நீ எழுந்தருளிய (கோயில்கொண்டிருக்கும்)
திருக்கோயிலைச் சுற்றிவருதலைச் சொல்லும்போது;
4.
இழிபு அறியா பெரும் தண் பணை
குரூஉ கொடிய எரி மேய
நாடு எனும் பேர் காடு ஆக – மது 154-156
குன்றுதல் அறியாத பெரிய மருதநிலங்களை
(செந்)நிறக் கொழுந்துகளையுடைய நெருப்பு மேய்ந்துவிட,
நாடு என்னும் பெயர்(போய்) காடு என்னும் பெயராக,

மேயல்

மேயல் – (பெ) 1. மேய்தல், grazing
2. மேய்வதற்கான உணவு, pasture
1.
மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9
விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக
2.
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அகம் 341/7
அறுகம்புல்லாகிய மேய்ச்சல் உணவினை அருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்

மேய்

மேய் – (வி) 1. பசு, மான் போன்றவை, புல், இலை, தழை ஆகியவற்றை உண்ணு, graze
2. விலங்குகள் உணவுகொள்ளு, feed
3. காய்ந்து போன புல் ஆகியவற்றைத் தீ பொசுக்கு, (fire) burn dry grass to ashes
1.
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை – சிறு 42

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/1,2
காய்ந்து இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய
சேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை

மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1

முருங்கை மேய்ந்த பெரும் கை யானை – அகம் 167/11

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி – புறம் 132/4
2.
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/18
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்

வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/1-4
சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும், தூய சிறகுகளுடன்
மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து,
கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக!
3.
ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை – ஐங் 356/3
ஒளிரும் நெருப்பு சுட்டுக் கருக்கிய தீர்த்த பாலை வழியிடையே

எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய்
பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான்
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட – கலி 13/2-4
நெருப்பு பரவலாய்ச் சுட்டதினால் கரியாகி வறண்டு போன நிலத்தில் பசித்த வாய்க்குப் பச்சை இலை கிடைக்காதவையாய்
பொரிகள் விரிந்து கிடப்பதைப் போன்ற புள்ளிகளையுடைய இளைய மான்
முறுக்கிய கொம்புகளையுடைய தன் ஆண்மானோடு பொய்த்தேர் எனப்படும் கானல் நீரைப் பார்த்து ஓட

மேரு

மேரு – (பெ) ஏழு தீவுகளின் மத்தியிலுள்ளதும் கிரகங்கள் சுற்றிவருவதாகக் கருதப்படுவதுமான பொன்மலை.,
Mt.Meru, a mythical golden mountain round which the planets are said to revolve,
believed to be the centre of the seven concentric continents.
சுடரொடு சூழ்வரு தாரகை மேரு
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி
மட மயில் ஓரும் மனையவரோடும்
கடன் அறி காரிய கண்ணவரோடும் நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின் பழ மதி
சூடி அசையும் சுவல் மிசை தானையின்
பாடிய நாவின் பரந்த உவகையின்
நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/19-26
திங்கள் தன்னோடு சூழ்ந்துவரும் விண்மீன்களோடு மேருவின்
பக்கத்தே சுற்றிவரும் சூழலானது – அறிவிற் சிறந்த பாண்டியன்
இளமையான மயில் போன்ற தன் மனைவியரோடும்,
தமக்குரிய கடமைகளை நன்கு அறிந்து செயல்படும் கண்களைப் போன்ற அமைச்சர்களோடும், உன்
சூரர மகளிர் வாழும் குன்றின் உயர்ந்த மலையில் ஏறி, மேலே
பெருமையுண்டாக வலமாக வருகின்ற பண்பினோடே, பழமைச் சிறப்புள்ள் மதியினைச்
சூடியவனாய், அசைகின்ற, தோள்மீதுள்ள துகிலினை உடையவனாய்,
உன்னைப் புகழ்ந்து பாடும் நாவினையுடையவனாய், மிகுந்த மகிழ்ச்சியுடையவனாய்,
நாட்டிலுள்ளோரும், நகரத்திலுள்ளோரும் வந்து நெருக்கமாய்ச் சூழ்ந்திருப்பதை ஒத்தது

மேற்கொள்

மேற்கொள் – (வி) 1. மேலேறு, mount, climb up
1.
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி

மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார்
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/4,5
மரல்கள்ளியின் மேலேறி நின்று மான் கூட்டங்களைத் தடுக்கும்பொருட்டு
கொடிய ஆற்றலையுடைய இளைஞர்கள் வேட்டைக்கு எழுந்தாற்போல

மேற்செல்

மேற்செல் – (வி) முன்னேறிச்செல், go on, proceed
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2
மனச் சோர்வின்றி முன்னேறிச் சென்று பகைவர் நாட்டில் தனக்கு இடம் உண்டாக,

மேற்படு

மேற்படு – (வி) அதிகமாகு, மிகுந்திரு, increase, be excessive
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/21,22
உள்ளம் உடைந்து, ஊராருக்கும் தெரிந்துவிட்ட வருத்தம் மிகுந்திட,
மிகவும் பித்துப்பிடித்தவளாய் ஆவதைத் தடுத்து நிறுத்துவாய் பெருமானே!

மேலோர்

மேலோர் – (பெ) 1. மேலிடத்தில் இருப்பவர்கள், Those who are seated high, as on horses and elephants
2. தேவர்கள், celestials
1.
கோலோர் கொன்று மேலோர் வீசி
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 381-383
கோல் கொண்டு அடக்குவோரைக் கொன்று, மேலே அமர்ந்திருக்கும் பாகரைத் தூக்கி எறிந்து,
மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்
2.
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் – பரி 17/8
தேவர்கள் உலகத்தில் உறைவதை வேண்டுபவர் யாரிருக்கக்கூடும்?

மேல்வரு(தல்)

மேல்வரு(தல்) – (வி) எதிர்த்து வருதல், advance against
அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 418,419
(எண்ணில்)அடங்காத படையுடன் சினந்து எதிர்த்து வந்த
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து,

மேழகம்

மேழகம் – (பெ) செம்மறி ஆடு, sheep
மேழக தகரொடு சிவல் விளையாட – பட் 77
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட

மேழி

மேழி – (பெ) கலப்பை, plough
கொடு மேழி நசை உழவர் – பட் 205
வளைந்த கலப்பை(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்

மேவன

மேவன – (பெ) விரும்புவன, likings
கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே – குறு 8/4-6
கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல
விரும்பியவற்றைச் செய்வான் தன் மகனுடைய தாய்க்கே

மேவரு(தல்)

மேவரு(தல்) -(வி) 1. விரும்பு, like, desire
2. (மனம்) பொருந்து, இயைந்திரு, be harmonius
3. பொருத்தமாக இரு, be fitting
1.
கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே – புறம் 344/9
வேங்கைத் தாதினை விரும்பும் இளையவளுடைய அல்குலிடத்தே பரந்த அழகிய வரிகள்
– மேவருதல் – விரும்புதல் – ஔவை.சு.து.உரை விளக்கம்
2.
இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவர
துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 135-137
துன்பம் என்பதை
அறியாத தன்மையுடையவர் மனம் பொருந்த
வெறுப்பில்லாத ஞானத்தை உடைய முனிவர்கள் முதலில் புகுந்தனர்
– ச.வே.சு.உரை
3.
மென்தளிர்
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 586-588
மெல்லிய தளிர்களைக்
கொழுவிய கொம்புகளினின்றும் கொய்து நீர்க்கீழ் அரும்புகளோடே பொருந்துதல் வரக் (பொருத்தமாக இருக்கும்படி) கட்டின
நெடிய தொடரையுடைய வடிம்பிலே விழும்படி உடுத்து
– பொ.வே.சோ.உரை

மேவல்

மேவல் – 1. (வி.மு) மேவ வேண்டாம், பொருந்தியிருக்க வேண்டாம், கொள்ளவேண்டாம், do not be in
– 2. (பெ) 1. விருப்பம், ஆசை, wish, desire
2. பொருந்துதல், fitting
1.
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் – அகம் 229/10
பெரும் வெறுப்பினைக் கொள்ளற்க, தவமிருந்த் பெற்றெடுத்த இளைய மகளே
மேவல் – கொள்ளற்க, மேவற்க – இரா.செயபால் உரை (NCBH)
2.1.
ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/2
ஊஞ்சலாடுவதின் மேல் விருப்பத்தையும் கொண்ட செம்மையான இழை அணிந்த மகளிர்,
2.2.
புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய் – பரி 13/61
முறுக்குடைய மலரையுடைய துளசிமாலை பொருந்துதலையுடைய மார்பினையுடையவனே!

மேவார்

மேவார் – (பெ) இயைந்து செல்லாதவர், பகைவர், foes, enemies
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2
மனச் சோர்வின்றி முன்னேறிச் சென்று பகைவர் நாட்டில் தனக்கு இடம் உண்டாக,

மேவாள்

மேவாள் – (வி.மு) விரும்பமாட்டாள், have no desire in
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் – குறு 396/1
பாலைப் பருகமாட்டாள்; பந்து விளையாட்டை விரும்பமாட்டாள்

மேவு

மேவு – 1. (வி) 1. விரும்பு, desire
2. பொருந்து, be attached
3. மேற்கொள், manifest, assume
1.1
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் – கலி 62/2
விருப்பத்திற்கு இணங்கமாட்டோம் என்று சொல்வாரையும் விரும்பிக் கையினைப் பற்றிக்கொள்வான்
1.2
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை – பரி 13/50
உயிர்களைக் காக்கும் ஒரு வினையில் பொருந்திய உள்ளத்தையுடையவன் நீ!
1.3
மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/65
மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது

மை

மை – (பெ) 1. அஞ்சனம், பெண்கள் கண்களுக்குத் தீட்டிக்கொள்ளும் கருப்புநிற அலங்காரப் பொருள்,
a black pigment applied on the edges of eyelashes by women
2. எழுதுபொருளாகப்பயன்படும் திரவம், ink
3. கருமை நிறம், black colour
4. குற்றம், களங்கம், fault,defect, stain, blot
5. ஆடு, goat, sheep
6. எருமை, buffalo
7. கருமேகம், dark clouds
8. இருள், darkness
1.
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9
மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும், மையிட்டு
மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,
2.
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417
மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய கூந்தலினையுமுடைய
3.
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 271
கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,
4.
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைங்காய் அருந்தி – அகம் 399/13,14
குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய
பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்களை உண்டு

மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 159,160
களங்கம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட
மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்
5.
களம்தோறும் கள் அரிப்ப
மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 753,754
களங்கள்தோறும் கள்ளை அரிப்பவும்,
மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை
6.
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1
பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட
7.
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/7
முகில்கள் சூழ்ந்த சிகரங்களையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து
8.
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/7-9
கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும்
முதலைகளையும் கருத்தில்கொள்ளாமல் இரவுக்காலத்தில் வந்தால்,
நான் உயிரோடு இருக்கமாட்டேன் ஐயனே! அதுவும் இந்த இருள் நிறைந்த பனிக்காலத்தில்

மைந்தன்

மைந்தன் – (பெ) 1. வலிமையுடையவன், strong man
2. விலங்கு, ஊர்வனவற்றின் குட்டி, Young of an animal or reptile
3. இளைஞன், young man
4. ஆண்மகன், man
5. கணவன், husband
6. வீரன், warrior
1.
மாறா மைந்தர் மாறுநிலை தேய
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/9-12
அறத்துறை மாறாத வீரரது வலியானது கெடுமாறு
முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருங்கியவழி ஆரவாரம் உண்டாக
பகை மன்னர் தம்வலி முற்றவும் அழியப்பொருது வென்றி பெறும் ஆற்றலால்
உயர்வமைந்த வலியினை உடையோனே நீ நின் தானையைப் பாதுகாப்பதினால்
2.
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
அலர் முகிழ் உற அவை கிடப்ப
தெரி மலர் நனை உறுவ
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள – பரி 19/66-74
ஒரு மரக்கொம்பின் கடைசி நுனி விரும்பத்தக்கவகையில் சுனைநீரின்மேல் சாய்ந்திருக்க,மணமிக்க
பூங்கொத்துக்களைக் கொண்ட
அந்தக் மரக் கொம்பினைப் பிளந்துகொண்டுவரும் இளந்தளிர்களை மரத்தின் மீதேறிய மங்கையர் பறித்து
நீரில் உதிர்த்துவிட
அவ்வாறு உதிர்க்கப்பட்ட சுனையில் நிமிர்ந்து நிற்கும் தலையினையுடைய
மலரும் மொட்டுக்களின் மேல் படியுமாறு அத் தளிர்கள் கிடக்க,
இவ்வாறு விரிந்த பூக்கள்மீதும் அரும்புகள்மீதும் பொருந்திக்கிடக்க,
ஐந்து தலைகளையும், ஒளிரும் பொறிகளையும் உடைய பாம்பின் மூத்த
பிள்ளை அருகில் இருக்கும் ஒன்று, மற்றொன்று அதன் இளம்பிள்ளை என்று
அங்கு நீராடும் இளம் மகளிர் மருண்டுநோக்க
3.
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து
ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன் செத்து
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே – புறம் 271/5-8
அச்சம் தருகிற குருதியில் கலந்து, உருமாறி
துணிபட்டுக் கிடந்த நொச்சிமாலையை ஊனென்று கருதி
பருந்து கவர்ந்து உயரத்தில்கொண்டுபோகவும் ஆம் கண்டேம்,
மறத்தை விரும்பும் இளையோன் அணிந்திருந்ததினால்
4.
மகளிர் கோதை மைந்தர் புனையவும்
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் – பரி 20/20,21
மகளிர் சூடிக்கொள்ளும் மரபினவாகிய மாலையை ஆராயாமல் ஆடவர் அணிந்துகொள்ளவும்,
ஆடவரின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும்
– பொ.வே.சோ.உரை
5.
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும் – பட் 109,110
கணவர் சூடிய கண்ணியைத் தமது கோதையாக நினைத்து மகளிர் சூடிக்கொள்ளும்படியாகவும்
மகளிர் சூடிய கோதையைத் தமது கண்ணியாக நினைத்து மைந்தர் சூடிக்கொள்ளும்படியாகவும்
– நச்.உரை
6..
மாறா மைந்தர் மாறுநிலை தேய
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/9-12
அறத்துறை மாறாத வீரரது வலியானது கெடுமாறு
முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருங்கியவழி ஆரவாரம் உண்டாக
பகை மன்னர் தம்வலி முற்றவும் அழியப்பொருது வென்றி பெறும் ஆற்றலால்
உயர்வமைந்த வலியினை உடையோனே நீ நின் தானையைப் பாதுகாப்பதினால்

மைந்தர்

மைந்தர் – (பெ) மைந்தன் என்பதன் பன்மை, the plural of the word mainthan.
பார்க்க : மைந்தன்

மைந்து

மைந்து – (பெ) 1. வலிமை, might, strength
2. விருப்பம், desire
3. காம மயக்கம், Infatuation of love, lust
4. யானையின் மதம், Must of an elephant
5. அறியாமை, பேதைமை, Ignorance, stupidity
1.
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான்
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல – கலி 53/3,4
வீர உணர்வை மிகுதியாகப் பெற்ற ஒரு வேழம் பகையுணர்வு கொண்ட வலிமையினால்
மற்ற யானைகளைக் குத்தி உருவிய இரத்தக்கரை படிந்த கொம்பினைப் போல
2.
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிக நவின்று
தணி புனல் ஆடும் தகை மிகு போர்_கண்
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின்
அணி அணி ஆகிய தாரர் கருவியர்
அடு புனலது செல அவற்றை இழிவர் – பரி 6/27-32
அழகாக அணிந்த அணியினரான இளையவர்களும், அவருக்கு இனியரான அவரின் காதலியரும்,
நீராடத்தகுந்த ஈரமான அணிகளுடன், விளையாட்டாகச் சண்டையிடுவதை மிகவும் விரும்பி,
குளிர்ந்த புதுப்புனலில் ஆடுகின்ற பொருத்தம் மிகுந்த போரிடும் இடமாக
அந்தத் தெளிந்த ஆற்று நீர் அமைய, ஏற்ற துறையைத் தேர்ந்துகொள்ளும் விருப்பத்துடனே
அணியணியாகிய போரின் முன்னணிப்படையினரைப் போல, தேவையான கருவிகளுடன்,
கரையை இடிக்கும் வெள்ளத்தினூடே செல்ல, தம் அணிகலன்களைக் களைவர்;
3.
மகளிரை மைந்து உற்று அமர்பு_உற்ற மைந்தர் – பரி 20/91
மகளிர்மேல் காமமயக்கம் கொண்டு அவரை விரும்பிச் சென்ற ஆடவர்
4.
களிறே
————————- ——————————-
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8
களிறுதான்
————————– ——————————
தன்னை மருவிய பாகரை அறியாது மதம்பட்டது.
5.
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை
வந்திக்க வார் என – பரி 20/69,70
பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை
வணங்க வருவாயாக என்று சொல்ல

மைப்பு

மைப்பு – (பெ) குற்றம், fault
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
குற்றம் நீங்க, இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெள்ளிய சோற்றை

மைம்மீன்

மைம்மீன் – (பெ) சனிக்கோள், the planet saturn
மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் – புறம் 117/1
சனி மீன் புகைகளோடு கூடிப் புகையினும், எல்லாத் திசைகளிலும் புகை தோன்றினாலும்

மையல்

மையல் – (பெ) 1. காதல்மயக்கம், Infatuation of love
2. அறிவு மயக்கம், confusion
3. யானையின் மதம், Must of an elephant
4. ஒரு சங்க காலத்து ஊர், a place in sangam period
1.
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் – முல் 81-83
நெஞ்சம் (ஆற்றியிரு என்று தலைவன் கூறியபடி)பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு,
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,
காதல் மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும்,
2.
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை – நற் 297/8-10
முதிர்ந்த மிளகுக்கொடிகளின் பின்னலில் உறங்கிக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன்
மெல்ல வந்து உன் மார்பின் அடையப்பெற்றதனால் உண்டாயதன் காரணம் யாதென்று
மயக்கத்தைக் கொண்டிருக்கிறாள் அன்னை,
3.
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 165
மதக்களிப்புடைய களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்
4.
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் – புறம் 71/11,12
பொய்யாத புதுவருவாயையுடைய மையல் என்னும் ஊர்க்குத் தலைவனான
மாவனும், நிலைபெற்ற எயில் என்னும் ஊரையுடைய ஆந்தையும்

மையாடல்

மையாடல் – (பெ) மை தடவிய ஓலைச்சுவடியைப் பிடித்தல், holding the palm leaf smeared with ink
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88
மையோலையைக் கையில் பிடித்து சுவடி தூக்கி ஆடும் இளம் சிறுவரின் ஆட்டத்திற்கு மாறாக எழுந்து
– மையாடல் – மையோலை பிடித்தல். அஃதாவது, மை தடவப்பெற்ற நெடுங்கணக்கு முதலிய சுவடிகளைக்
கையில் ஏந்திப் பயிலுதல். இங்ஙனம் முதன் முதலாகச் சுவடி பிடித்தலை மையாடல் என்று பண்டையோர்
வழங்கினர் என்றுணர்க. மை:ஆகுபெயர்; மையோலை ஓலையின்கண்ணுள்ள எழுத்துக்கள் விளங்கித்
தோன்றும்படி சுவடியில் மை பூசுதலைச் செய்தலின் மையாடல் எனப்பட்டது எனினுமாம்.
-பொ.வே.சோ.உரை விளக்கம்.

மையாப்பது

மையாப்பது – (பெ) மேகம் பரவுவது, the act of clouds spreading over (the moon)
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின்
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே
இவட்கே செய்வு_உறு மண்டிலம் மையாப்பது போல்
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/5-8
நீயோ, இங்கு பொருளீட்டும் காரியத்திற்காகப் பயணம் மேற்கொள்வதை விரும்பி, உன்னுடைய
கையால் செய்த வலிமையான வில்லின் நாணை நீவிவிட்டுப் பார்க்கிறாய்;
ஆனால் இவளுக்கோ, செம்மையாகச் செய்யப்பட்டது போன்ற முழுநிலவில் மேகம் படர்வது போல்
மறு இல்லாத ஒளியையுடைய முகத்தில் பசப்பு பரவத் தொடங்கிற்று;

மொக்குள்

மொக்குள் – (பெ) 1. உடலில் தோன்றும் நீர் அல்லது சீழ் நிரம்பிய கட்டி, blister, pustule, boil
. 2. நீர்க்குமிழி, bubble
3. மரல் எனப்படும் பெருங்குரும்பையின் பழம், the fruit of the plant called Bowstring hemp.
1.
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின்
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 42-45
ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)-
சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால்
பரல் கல்லாகிய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி,
மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,
2.
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/1-3
குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
3.
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/2
அடுத்து வளர்ந்த மரலின் பழம் போன்ற அரும்புகள் மலர்ந்து இதழ் விரிய
– மரல் பழம் நீர் மொக்குள் போறலின் மொக்குள் எனப்பட்டது – ஔவை.சு.து.உரை விளக்கம்

மொசி

மொசி – (வி) 1. மொய், swarm, throng
2. நெருங்கு, அடர்த்தியாகு, be demse, crowd
3. ஒன்றுகூடு, gather or assemble together
4. பரவலாகப் படர்ந்திரு spread all over
5. உண், தின்னு, eat
1.
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் – அகம் 257/8,9
தேன் பொருந்திய கூந்தலில் குறியனவாய்ப் பலவாக மொய்க்கும்
வண்டுகளை கடிந்து பாதுகாத்தலையும் அறியாயாய்
2.
புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/7-9
புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் நெருங்கத் தூர்க்காநிற்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
– பின்னத்தூரார் உரை,
புன்னையின் கொம்பும் குழையும் மேலே உரிஞுதலால் வெண்குருகின் முதுகிடம் முழுதும் நுண்ணிய தாது படிவது
விளங்க மொசிய வரிக்கும் என்றார் – ஔவை.சு.து.உரை
3.
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9
வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,
4.
கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/12-15
கூரிய அலகினைக் கொண்ட சிவந்த வாயினையுடைய ஆண் பருந்துகள்
இறந்துபட்ட பிணங்களின் பசிய தலையினைத் தோண்டுவனவாகக் கூடி
வலிய நெருங்கிய விரலால் தோண்டி, கண்மணியைப் பெயர்த்துக்கொண்டு
வலிய வாயினையுடைய தம் பேடைகட்குச் சொரியும் அவ்விடத்தே
– நாட்டார் உரை.
இங்கே ,மொசிய என்பதற்கு நெருங்கிய என்ற பொருள் ஒத்துவருமா என்று தெரியவில்லை.
பிணந்தின்னிக் கழுகுகளின் அல்லது பருந்துகளின் கால் விரல்கள் நெருக்கமாக இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு பொருளை நாலாபுறங்களிலும் நன்கு கவ்விப் பிடிப்பதற்காக, அவற்றின் விரல்கள் நாலாபுறத்திலும்
படர்ந்திருப்பதையே மொசி விரல் என்று புலவர் கூறுவதாகக் கொள்ளலாம்.

நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்
அத்த எருவைச் சேவல் – அகம் 375/7,8

என்ற இடத்திலும் இதே பொருள் குறிப்பால் உணர்த்தப்படுவதையும் காணலாம்
5.
மை ஊன் மொசித்த ஒக்கலொடு – புறம் 96/7
செம்மறியாட்டுத் தசையைத் தின்ற சுற்றத்துடனே

மொய்

மொய் – 1. (வி) 1. ஒரு பரப்பின் மீது கூட்டமாகச் சூழ்ந்து அமை, சுற்றிச்சூழ், swarm, throng
2. கூட்டமாக நெருங்கிச் சுற்று, swarm around, crowd around
3. மூடு, cover, enclose
– 2. (பெ) 1. திரள், தொகுதி, flock, mass
2. வலிமை, strength
3. நெருக்கம், இறுகுதல், closeness, tightness
4. பெருமை, மிகுதி, greatness, abundance
1.1
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் – அகம் 72/3
மின்மினிகள் கூட்டமாய்ச் சூழ்ந்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய புற்றினை
1.2
களிறே, ————————- ——————————–
—————————- ————————-
சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8
களிறுதான் ————————- ——————————-
————————- —————————–
சுறவின் இனத்தை ஒத்த வாள் மறவர் சூழ
தன்னை மருவிய பாகரை அறியாது மதம்பட்டது
1.3
குளவி மொய்த்த அழுகல் சில் நீர் – குறு 56/2
காட்டுமல்லிகை இலைகள் மூடியதால் அழுகிப்போன சிறிதளவு நீரை
2.1
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417
மை ஒழுகினாற் போன்ற திரளான கரிய கூந்தலினையுமுடைய
2.2
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9
வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,
2.3
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/18
அந்தப் பரத்தையரின் இறுகல் மிகுந்த முயக்கத்தை நாம் நன்கு அறிந்துகொண்டோம்,
2.4
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை – அகம் 246/11-13
மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தே ஒழிந்துகிடக்க
வேளிர் பதினொருவருடன் இரு பெரு வேந்தரும் நிலை கெட
அவர்தம் மிக்க வலியைக் கெடுத்த நாளில்

மொய்ம்பன்

மொய்ம்பன் – (பெ) வீரன், warrior, hero
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26
வேலினால் போர் செய்யும் வீரனான முருகனைப் போல, மணமுள்ள மலர்களை அம்பாகக் கொண்ட மன்மதனை

மொய்ம்பு

மொய்ம்பு – (பெ) 1. வலிமை, strength, valour
2. தோள், shoulder
1.
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72
நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்
2.
ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக
தொடிய எமக்கு நீ யாரை – கலி 88/1-3
அகன்று போ! கொடி போன்ற இயல்புடைய நல்ல பரத்தையரின் கூந்தலின் மணத்தை எடுத்துக்கொண்டு,
அவர் முடியிலிருந்து உதிர்ந்த பூந்தாதினைத் தோளிலே கொண்டவனாக
எம்மைத் தொடுவதற்கு எமக்கு நீ யாரோ?

மொழிபெயர்

மொழிபெயர் – (பெ.அ) மொழி வேறுபட்ட, (place) where language is different
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/7
மொழி வேறுபட்ட நாட்டிலுள்ளவராயினும்

மோ

மோ – (வி) முகர், மூக்கால் நுகர், smell
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8
அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்;

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த_காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே – அகம் 5/22-26
(தன்) மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள
தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை
மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள்
பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தைக்
கண்டு தவிர்த்துவிட்டோம் நாம் செல்வதை,

மோகூர்

மோகூர் – (பெ) சங்க காலத்து ஊர், a city during sangam period
மோகூர் சங்ககாலத்து ஊர். இது இக்காலத்தில் திருமோகூர் என்னும் பெயரினைப் பெற்றுள்ளது.
சங்ககாலக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் இந்த மோகூரின் அரசன் பழையன்.
மோகூரில் வேந்தரும் வேளிரும் கூடினர். அவர்களுடன் செங்குட்டுவன் போரிட்டு அவர்களை வென்றதோடு
அவ்வூர் காவல்மரமான வேம்பையும் வெட்டி வீழ்த்தினான்.

பார்க்க : பழையன்-1

வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9
வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,

மோக்கல்

மோக்கல் – (பெ) முகர்ந்து பார்த்தல், smelling
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8
அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்;

(கையில்)சுற்றியதோடு அமையாது மோந்தும் பார்த்தான் என அச்செயலை விதத்தற்கு
மோக்கலும் மோந்தான் என்றாள்.- நச்.உரை விளக்கம்

மோசி

மோசி – (பெ) ஒரு சங்ககாலப்புலவர், a poet of sangam period
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வம்_உற்று
உள்ளி வருநருலைவு நனி தீர – புறம் 158/12-14
பெரிய மலைநாடனாகிய பேகனும், திருந்திய சொல்லையுடைய
மோசி என்னும் புலவரால் பாடப்பெற்ற ஆயும் ஆசைப்பட்டுத்
தன்னை நினைந்து வருவாருடைய வறுமை மிகவும் நீங்க

இங்கே மோசி என்று குறிப்பிடப்படும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார். இவர்
ஆய் அண்டிரனைப் பாடியுள்ள ஒன்பது பாட்டுக்கள் புறநானூற்றில் உண்டு (புறம் 127 – 135

மோசை

மோசை – (பெ) மோதிரம், ring, Finger-ornament, probably of the shape of plantain-flower
படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம்
மெல் விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/1-5
நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின்
வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு
ஒளிரும் இழையணிந்த மகளிரின் ஒளிவிடும் வளையல்களோடு பிணிப்புற்ற
மெல்லிய விரல்களிலுள்ள மோதிரம் போல, காந்தளின்
வளமையான இதழ்களில் தோய்கின்ற, வானத்தை எட்டும் மலைநாட்டினனே!

மோடு

மோடு – (பெ) 1. பெருமை, greatness
2. உயரம், height
3. பருத்த வயிறு, large stomach, belly
1.
கணம்_கொள் இடு மணல் காவி வருந்த
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/37,38
திரளாக வந்து குவியும் மணல் குவியலினால் கருங்குவளை மலர்கள் வருந்த,
பிணங்கிவருகின்ற கருமை தங்கிய பெருமையுடையனவாகிய அலைகள் மணலைக் கரைத்து அருள்செய்யும்
2.
ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/4,5
ஈங்கையின்
மொட்டுக்களும் மலரான புனமல்லிகையும் உயரமான மணல் குன்றின்மேல்
3.
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 50,51
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்

மோட்டு எருமை முழு_குழவி – பட் 14
பருத்த வயிற்றையுடைய எருமை (ஈன்ற)முதிர்ந்த கன்றுகள்

மோதகம்

மோதகம் – (பெ) கொழுக்கட்டை, A bolus-like preparation of rice-flour
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626
உள்ளீட்டோடே பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,

மோரியர்

மோரியர் – (பெ) மௌரியர், வடநாட்டு அரசர், The Maurya
மௌரியப் பேரரசினைச் சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது.
கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது.
இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப்
பரப்பளவை 50 லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான்.
கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியர் தமிழ்நாட்டிற்கும்
படையெடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் வெற்றிபெற்றதாகச் செய்திகள் இல்லை

இதற்குரிய சான்று சங்கப்பாடலில் உள்ளது.

கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில்
மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.
எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.
வெல்கொடி
துனை கால் அன்ன, புனை தேர் கோசர்
தொன் மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெவ் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியாமையின், பகை தலைவந்த
மா பெரும் தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர்
——————————— ——————–
தேக்கு அமல் சோலை – அகம் 251/6-18
வெல்லும் கொடியினையுடைய
விரையும் காற்றைப் போன்ற அஇ செய்யப்பெற்ற தேரினையுடைய கோசர் என்பார்
மிக்க தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் அரிய கிளைகளையுடைய மன்றத்தே
இனிய ஓசையையுடைய முரசம் குறுந்தடியால் அடிக்கப்பெற்று ஒலிக்க
பகைவரது போர் முனையை அழித்த காலத்தே, மோகூரை ஆளும் பழையன் என்பான்
பணிந்து வாராமையின் அவன்பால் பகை ஏறட்டுக் கொண்டவராகிய
குதிரைகள் பொருந்திய சேனையினையுடைய புதிய மோரியர் என்பார்
புனையப்பெற்ற தேர் உருளை தடையின்றிச் செல்லுதற்பொருட்டு உடைத்து வழியாக்கிய
விளங்கும் வெள்ளிய அருவிகளையுடைய மலை நெறிக்கு அப்பாற்பட்ட
——————————– ——————————–
தேக்குமரங்கள் நிறைந்த காடாகிய

வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.

ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/4-12
நுடங்கும் தன்மை வாய்ந்த இளமை பொருந்திய மயில்கழித்த தோகையை
நீண்ட வாரினால் வலிய வில்லில்வைத்துக் கட்டி, அந்த வலிய வில்லில்
அழகிய நெடிய நாணின் விளிம்பிற்குப் பொருந்திய விரைவுத்தன்மையுடைய
மிக்க ஒலி ஒலிக்கும் விரைந்த செலவு பொருந்திய கடிய அம்புகளையுடைய
மாறுபாடு மிக்க வடுகர் தமக்கு முன்னே துணையாகி வர, மோரியர் என்பார்
தென் திசை நாடுகளைப் பற்ற எண்ணிப் போந்த வருகைக்கு
வான் அளாய உயர்ந்த பனியுடைய பெரிய மலையினை
தமது ஒள்ளிய கதிர்களையுடைய அழ்ழி தடையின்றிச் செல்லப் போழ்ந்து வழியாக்கிய
பாறைகளைக் கடந்து நம் தலைவர் போய்விட்டார்.

இப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு
தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது.
வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.

விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும் – அகம் 69/10-12

விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
உல்க இடைகழி அறைவாய் – புறம் 175/6-8

என்ற செய்திகளும் இதனை உறுதிப்படுத்தும்.

மோரியராவர் சக்கரவாளச் சக்கரவர்த்திகள்; விச்சாதரரும் நாகரும் என்ப – என்பார் ஔவை.சு.து.அவர்கள்.

மோரோடம்

மோரோடம் – (பெ) ஒரு மரம்/மரத்தின் மலர், செங்கருங்காலி, Red catechu
பராரை பாதிரி குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு – நற் 337/4-6
பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
நறுமணம் கமழும் செங்கருங்காலி மலருடன் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அடைத்துவைத்துள்ள
செப்பினைத் திறந்துவைத்ததைப் போன்ற நறுமணம் சேர்ந்து

மோழைமை

மோழைமை – (பெ) நயமான சொற்கள், sweet words
தேம் கலந்து அளைஇய தீம்பால் ஏந்தி
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்
மறுத்த சொல்லள் ஆகி – அகம் 207/14-16
தேனைப் பெய்து நன்கு கலந்து இனிய பாலை ஏந்திக்கொண்டு
கூந்தலைக் கோதி நயமொழிகளைக் கூறவும்
மறுத்துரைப்பாள் ஆகி
– வே.நாட்டார் உரை. மோழைமை – தாழ்ந்த மொழி என்பார் அவர்.

மோவாய்

மோவாய் – (பெ) மீசை, தாடி, வாயின் கீழ்ப்புறம், mustasch, beard, chin
முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்து நின்றது, ஈண்டு முகவாயின்கண் உள்ள மயிரைக் குறித்தது
இது மீசை; தாடியுமாம் என்பார் ஔவை.சு.து.அவர்கள்.

முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5
வளைந்த முதுகினைக் கொண்ட இறா மீனின் நீண்ட மீசையையுடைய ஆண்

புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – அகம் 133/2
மெல்லிய கால்களையும் தாடியினையுமுடைய ஆண் வெள்ளெலி

குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் – புறம் 257/3,4
குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும்
செவியிறந்து முன்னே தாழ்ந்த கதுப்பினையுமுடையவனாய்

மௌவல்

மௌவல் – (பெ) காட்டு மல்லிகை, wild jasmine, jasminum officinale
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3
மணக்கும் காட்டுமல்லியின் மொட்டுகளைப் போன்ற, வண்டுகள் விரும்பும், ஒழுங்குபட்ட வரிசையான வெண்ணிறப் பற்கள்

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்
வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம்.
இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும்.