| ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
|---|
| தலைசொல் | பொருள் |
|---|---|
| ரகு | தீர்க்கவாகுபுத்திரன். அஜன்தந்தை, ரகுவைத்திலீபன் புத்திரனென்பது ரகுவமிசம், ஆண்மையிலும், கல்வியிலும், மிக்க பெயர் படைத்தோன். இவன் வசுவசித்தென்னும் யாகஞ் செய்து அவ்வியாகத்துக்குச் சென்றிருந்த அந்தணர் குழாத்துக்குத் தன் சம்பத்தெல்லாம் வாரி வழங்கினவன் |
| ரக்தபீசன் | சும்பநிசும்பர் சகோதரி புத்திரன். இவன் தேசத்திலிருந்து சிந்துகின்ற ரத்தத்துளிகள் எத்தனையோ அத்தனை அசுரர் பிறப்பார்களென்று நியமமிருந்தமையால் அதனை நினைத்துக் காளிகாதேவி கராளரூபந்தாங்கி ஒரு துளியாவது சிந்தாமல் அவனைக் கொன்று தொலைத்தாரெனக் கூறுப |
| ரங்கநாதன் | ஸ்ரீரங்கத்திற் கோயில் கொண்டிருக்கும் விஷ்ணுமூர்த்தி, உ, ஓராந்தரகவி |
| ரசசு | அநேநசு வமிசத்துத் தரிககுத்தன் தந்தை |
| ரசநிரூபணம் | ஓரலங்கார கிரந்தம். இது சிங்காரசநிரூபணம், அஷ்டரச நிரூபணம், பாவநிரூபணம் என மூன்று நிரூபணங்களையுடையது |
| ரசனை | திதிபுத்திரி. துவஷ்டா பாரி |
| ரசரத்தினாகரம் | ஓரிரசவாதகிரந்தம். நவரத்தினங்கள் லோகங்கள் கந்தகாதிகள் என்பனவற்றைப் பஸ்மம் பண்ணும்முறை, உருக்கும் முறை, முதலியன இதிற் கூறப்படும். இது நித்தியநாத சித்தராற் செய்யப்பட்டது |
| ரசாதலம் | கீழுலகத்தொன்று. இது மலைமயமாயுள்ளது. இதற்கு அரசன் வாசுகி. இதற்கு ராஜதானி போகவதி. வாமனாவதாரமெடுத்து விஷ்ணுவினால் மிதித்தழுத்தப்பட்ட பலிச்சக்கரவர்த்தி போயுறைந்த விட மிதுவாதலால் பலிசத்துவ மெனப் பெயர் பெற்றது |
| ரசை | பிரசாபதிபாரி. அகன் என்னும் வசுவினது தாய் |
| ரஜன் | பிரியவிரதன் வமிசத்து விரஜன் புத்திரன் |
| ரஜி | ஆயுபுத்திரன். புரூரவன் புத்திரன். நகுஷன் தம்பி. இவனுக்கு ஐஞ்நூறு புத்திரர் பிறந்தனர். அவர்கள் மகா வீரர்கள். தேவர்கள் அவர்களை வேண்ட அவர்கள் தைத்தியர்களை வென்று தேவேந்திரனுக்குச் சுவர்க்கத்தைக் கொடாது தாமே ஆளவிரும்பியபோது இந்திரனால் நிர்மூலம் பண்ணப்பட்டார்கள் |
| ரதிகன் | ஜயசேனன் புத்திரன் |
| ரதிதரகோத்திரங்கள் | ரதீதரண்பாரியிடத்து அங்கிரசமுனிக்குப் பிறந்த பிரமதேஜோதனருடைய சந்ததிகள் |
| ரதிதேவி | மன்மதன் பாரி. இவ்விரதிதேவியே மாயாதேவியாகவும், பிரத்தியுமனன் பாரியாகவும் அவதரித்தாளெனக் கூறுவர் |
| ரதீதரன் | இக்ஷூவாகு தம்பி. நபகன் வமிசத்து அம்பரீஷன் புத்திரனாகிய விரூபன் பௌத்திரன் |
| ரத்தினகிரிநாதர் | திருநாட்டியத்தான்குடியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
| ரத்தினநாயகர் | திருஆடானையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
| ரத்தினபக்ஷை | வயிரம் காண்க |
| ரத்தினாபணம் | பிரதாபருத்திரீய வியாக்கியானம் |
| ரத்தினாவளி | ஸ்ரீஹரிஷதேவர் செய்தசம்ஸ்கிருத நாடகம். இது பாண்டவவமிசத்து உதயணன் சரித்திரஞ் சொல்வது |
| ரந்திதேவன் | பூருவமிசத்தான். சங்கிருதிபுத்திரன். இவன் தன் சம்பத்துக்களையெல்லாம் வறியார்க்குக் கொடுத்துவிட்டு வனத்திற் சென்று வசிக்கும் போது ஒருநாள் பசியால் வருந்தி அகப்பட்ட அற்பவுணவையுண்ணத் தொடங்கும் போது ஓரந்தணனும் பசியால் வாடி அவனிடம் வருவானாயினான். அதுகண்ட ரந்திதேவன் அவ்வுணவிற் பாதியைக் கொடுத்தான். அச்சமயம் இன்னுமோரந்தணன் பசித்து வந்தான். அவனுக்கும் எஞ்சிய பாகத்தில் பாதியைக் கொடுத்தான். அச்சமயம் பின்னுமொருவன்வர மிக்கிருந்த தன்பாகத்தையுங் கொடுத்தான். இங்ஙனமாகப் பின்னருமோ ரதிதி வந்து தாகத்துக்காகவிருந்த ஜலத்தையும் பருகிப் போயினார். அது கண்ட தேவர்கள் இவன் உபகார குணத்தைமெச்சி அவனுக்கு வேண்டும் வரங்களை யீந்துபோயினர். இவன் செய்தயாகங்கள் எண்ணில. யாகபலித் தோலினிரத்தத்திலிருந்து ஓராறுற்பத்தியாயிற்று. அது சர்மணவதி யெனப்படும் |
| ரபசன் | ஆயு பௌத்திரன். கம்பீரன்தந்தை, உ, ஒரு சம்ஸ்கிருத நிகண்டு செய்த பண்டிதன். அந்நிகண்டு ரபசகோச மெனப்படும் |
| ரமா, ரமை | லக்குமிதேவி |
| ரம்பன் | ஆயுபுத்திரன். புரூரவன் பௌத்திரன். நகுஷன் தம்பி |
| ரம்பை | இந்திரன் சபையிலாடும் ஓரப்சரப்பெண். இவள் மகாரூபவதி. இவள் நளகூபரன்பாரி. கௌரி |
| ராகு | விப்பிரசித்திபுத்திரன். இவன் தாய் சிங்கிகை. இவன் தம்பி கேது. இவர் இருவருக்கும் கசியபன் பௌத்திரர். விஷ்ணு மோகினி வேஷங் கொண்டு அமிர்தம் பங்கிடும் போது ராகு, தேவதாரூபங் கொண்டு தேவரோடு கலந்து அமிர்தங்கொள்ள எத்தனித்த போது, சூரியசந்திரர் அஃதுணர்ந்து விஷ்ணுவுக்குணர்த்தினமை பற்றிச் சூரியசந்திரர்க்கும் ராகு கேதுக்களுக்கிடையே பகையுண்டாயத. அச்சமயத்திலே விஷ்ணு ராகுவினது தலையைக் கொய்து விட்டார். ராகுகேதுக்கள் சாயாக்கிரகங்கள் |
| ராகை | தாதாபாரிகளுளொருத்தி, உ, சுமாலிமகள். தூஷணன் திரிசிரன் என்பவர்கள் தாய் |
| ராக்ஷசர் | இவர்கள் கசியபனுக்குச் சுரசையிடத்துப் பிறந்தவர்கள். இவர்கள் பிறந்தவுடன் பசிதாகங்களையடைந்த சிலர் யக்ஷாம என்றும் பசிதாக மில்லாத மற்றோர் ரக்ஷாம என்றும் அழுதார்கள். அதுபற்றியே யக்ஷரென்றும் ராக்ஷசர் என்றும் பெயர்பெற்றார்கள், யக்ஷாம ~ யாமுண்ணுக,, ரக்ஷாம ~ யாங்காக்க,, உ, நந்தர்களுடைய மந்திரி. ராக்ஷசன் என்னும் பெயருடையவன். முத்திராராக்ஷச மென்னும் நாடகத்தில் இவன் முக்கியபாத்திரம். ராக்ஷசர்களைப் புலஸ்தியன் மரபில் வந்தோரென்றுங்கூறுப. இவர்கள் பிராமண அமிசமாகப்பிறந்தும், நரமாமிசபக்ஷணமும், மாயவல்லபமுமுடையராய்த் தேவர்களுக்குப் பகைவராயிருந்தவர்கள். இவர்களுள்ளே ராவணகும்பகர்ணர்கள் முக்கியர்கள் |
| ராசிகள் | மேஷாதி மீனமீறாயுள்ள பன்னிரண்டும் ராசிகளெனப்படும். சூரியன் ஒரிராசியிற் சஞ்சரிக்குங்காலம் ஒருமாசமெனப்படும் |
| ராஜகேசரி | ஒரு சோழன், உ, ஈழநாட்டிலரசுபுரிந்த ஓரரசன். அரசகேசரி காண்க |
| ராஜதர்மன் | நாரீஜங்கன் |
| ராஜன் | சந்திரன், உ, இந்திரன், ந, ஓர்யடின் |
| ராஜராஜநரேந்திரன் | வேகிதேசாதிபதி. இவ்வரசனுடைய சமஸ்தான வித்துவானே நன்னயப்பட்டன் |
| ராஜாதிதேவி | வசுதேவன் தங்கை. ஜயசேனன் பாரி. இவள் புத்திரர் விந்தன், அநுவிந்தன் |
| ராஜாநகன் | உத்தம புலவர்களுக்கு முற்காலத்திலே சூட்டப்படும் ஒரு பட்டாபிதானம் |
| ராதை | கிருஷ்ணன் பிரியநாயகி. நந்தன் தங்கை, உ, கர்ணணை வளர்த்ததாய். இது பற்றியே கர்ணன் ராதேயனெனப்படுவன் |
| ராமகிரி | நாகபுரத்துக்குச் சமீபத்துள்ள ஒரு மலை. இதன் பிரஸ்தாபம் மேகதூதத்திற் சொல்லப்படும் |
| ராமகிருஷ்ணன் | ஓராந்தரகவி. இவன் பிறந்தவூர் தெனாலி. கிருஷ்ண தேவராயருடைய சபையில் விளங்கிய எண்மர் வித்துவான்களுளொருவன். அதி சாதுரியபுத்தியும் விகட சாமர்த்தியமு முடையன். தெனாலிராமன் என்னும் பெயர் சாதாரணவழக்கு. பாண்டுரங்க மான்மியம் என்னும் மகாவியஞ் செய்தவனமிவனே. இது முழுவதும் விலடிணரசமுடையது. இவர் கூறிய விகடகதைகள் அநேகம் இக்காலத்தும் வழங்கி வருகின்றன. தென்னாலுராமன் காண்க |
| ராமபத்திரன் | இவர் கிருஷ்ண தேவராயர் சபையிலிருந்த எண்மர் பண்டிதரு ளொருவர். ராமாப்பியுத மென்னும் மகாகாவியஞ் செய்தவர் |
| ராமமந்திரி | ஓராந்தரகவி. இவர் ஆதுனிக கவிகளுளொருவர். இவர் தசாவதாரசரித்திரஞ் செய்தவர் |
| ராமராஜபூஷணன் | பட்டுமூர்த்தி |
| ராமர் | விஷ்ணு தசாவதாரங்களுள் எழாம் அவதாரமாயுள்ளவர். இவர் இக்ஷூவாகு வமிசத்திலே அஜன் புத்திரனாகிய தசரதனுக்குக் கௌசலையிடத்துப் பிறந்த புத்திரர். இவர் பாரி சீதை. பரதன், லக்ஷூமணன், சத்துருக்கினன் என்போர் தம்பியர், குசலன்புத்திரர் இவர் பாரியோடும் லக்ஷூமணனோடும் பிதிர்வாக்கிய பரிபாலனார்த்தம் பதினான்குவருஷம் வனவாசஞ் செய்து ராவணன் கும்பகர்ணன் முதலியோரைக் கொன்று, தண்டகாரணியவாசிகளாகிய முனிவர்களுக்கு அவ்வரக்கரால் விளைந்த துன்பங்களை நீக்கி மீண்டு தமது ராச்சியம் பெற்று நல்லரசு புரிந்தவர். இவர் தசரதன் புத்திரனாதலின் தாசரதி யென்றும், ககுத்தன் வமிசமாதலின் காகுத்தனென்றும், ரகுகுலதிற் பிறந்தமையின் ராகவ னென்றும் பெயர் பெறுவர். ராவணனைக் கொன்று சிறையிட்டபோது ராமருக்கு வயசு நாற்பது. பூர்வம் தேவர்க்கும் அசுரர்க்குமிடையே நடந்த யுத்தத்திலே பிருகு மகாமுனிவருடைய பத்தினியை விஷ்ணு கொன்ற காரணத்தால், பிருகு கோபித்து விஷ்ணுவை நரனாகப்பிறந்து பத்தினியைப்பிரிந்து வருந்துமாறு சபித்தமையின் விஷ்ணு இவ்வவதார மெடுத்து வருந்தினர். ராமர் தம்மைக் காட்டுக்கனுப்பித் தனது புத்திரன் பரதனுக்கு அரசு பெற்ற சிறியதாயாகிய கைகேயி யிடத்திலே அணுத்துணையும் கோபமில்லாதவராய்த் தமது தந்தையார் பாற்சென்று அவளைச் சபித்த சாபத்தை நீக்குமாறு வரம்பெற்ற பெருந்தகைமையும், பிறர்துயர்கூரத் தாமதுகண்டு சகியாதபேரருளு முடையரென்றால், அவரிடத்து விளங்கிய திவ்வியகுணங்களை யெடுத்துச் சொல்லதெங்ஙனம். ராமபிரான் உத்தம அரசராக வன்று உத்தமகாருண்ணிய மூர்த்தியினது அவதாரமாக் கொண்டே இந்நாளிலும் வழிபடப்படுவர். இவரை வழிபடுவோர் தொகையும் இவர்க்கு ஆலயங்களும் ஆரியவார்த்தத்தில் எண்ணில. ராம ராம சத்திய நாம என்னும் மந்திரம் ராமபக்தர்கள் வாயிலும் மனத்திலும் நீங்காதது ராமர் பெருந்தகைமையை மேல்வரும் ராமாயணம் என்பனுட் காண்க |
| ராமானுஜாசாரியர் | வசிஷாத்வை தமதோத்தாரகராகிய இவர் எண்ணூற்றிருபது வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவர் தந்தையார் ஆசூர்க்கேசவாசாரியார், தாயார்காந்திமதி. இவர் ஜன்மஸ்தானம்பூதபுரம், ஸ்ரீபெரும்பூதூர், இவர்வித்தியாப்பியாசஞ் செய்தவிடம் காஞ்சி. இவர் யாதவப்பிரகாச ரென்னும் சந்நியாசியிடத்திற் சாஸ்திரங்களைக்கற்று வல்லராசித் தங்குரு முன்னிலையிலே தானே விசிஷ்டாத்துவைத மதத்தைச் சாதித்துப் பின்னர்த் திரிதண்ட சந்நியாசியாகி, யதிராஜன் என்னும் பெயர் பெற்றுத் திருநாராயணபுரம் ஸ்ரீரங்கம் திருப்பதி முதலியஸ்தலங்களிற் சென்று ஆங்காங்கும் மடங்கள் ஸ்தாபித்து வைஷ்ணவமதத்தை நிலை நாட்டினர். அதன்பின்னர்ப் பலவிடங்களுக்குஞ் சென்று பரமதங்களைக் கண்டித்துத் தமது மதநாட்டி ஆங்காங்குஞ் சீடர் குழாங்களைச் சேகரித்துத் தமது மதத்தை விருத்தி செய்தனர். இவர் கீதாபாஷியம், வியாசசூத்திர பாஷியம், தர்க்கபாஷியம் முதலிய அநேக நூல்களைச் செய்தார். இவரை வைஷ்ணவர்கள் பாஷியகார ரென்றும், எம்பெருமானாரென்றும் வழங்குவர். இவருக்கு முன்னர் விசிஷ்டாத்துவைதமதம் நாட்டினவர்கள் பன்னிருவராவார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், சூடிக்கொடுத்தாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்போர் |
| ராமாயணம் | இது ஸ்ரீராமருடைய வரலாறு கூறுவதோரிதிகாசம். இது வடமொழியிலே வான்மீகி பகவானாற் கூறப்பட்டது. இது ஆதி காவியமெனவும்படும். இது பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிஷ்கிந்தாகாண்டம், லங்காகாண்டம், யுத்தகாண்டம், உத்தரகாண்டம் என ஏழுகாண்டமும் இருபத்து நாலாயிரங் கிரந்தமுமுடையது. ஒவ்வோராயிரத்து முதற் சுலோகத்து முதற்பாதம் காயத்திரி மந்திரத் தொவ்வோ ரெழுத்தாற் றொடங்குதலின் இக்காவியம் காயத்தரி ரூபமெனப்படும். இவ்விராமாணத்தைத் தமிழிற் காவியமாக மொழி பெயர்த்வர். கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர். இவர் சாலிவாகனசகம் அ0எ ல் விளங்கிய புலவர். கம்பர் வான்மீகி ராமாயணத்தையே மொழி பெயர்த்தாரென்பது வேதபாடையினிக்கதை செய்தவர் மூவரானவர் மூவருண்முந்திய ~ நாவினானுரையின் படி நான்றமிழ்ப் ~ பாயினுலிதுணர்த்திய பண்பரே என்னுங் கம்பர் வாக்காலுணரப்படும். முதலிற் செய்தவர் வான்மீகி. அதன் பின்னர்ச் செய்தவர் வசிட்டர். அதன் பின்னாச் செய்தவர் போதாயனர். கம்பராமாணத்துச் சரித்திரம் பெரும்பாலும் வான்மீகி ராமாயணப்படியேயாயினும் வர்ணனை யெல்லாம் கம்பருடையனவேயாம். கம்பர் லங்கா காண்ட மென்பதைச் சுந்தரகாண்டமெனப்பெயரிட்டு வழங்குவர். கம்பராமாணத்துச் செய்யுள் பதினாயிரம். எஞ்சிய ஈராயிரமும் ஒட்டக் கூட்டத்தார் பாடல். கம்பர் பாடிய ராமாயணத்திலே செய்யுள் வன்மையும், சொற்சாதுரியமும் சந்தவின்பமும், பொருட் கம்பீரமும், சிருங்காரம், சோகம், வீரம் முதலியரசங்களும் பயின்ற வருதலால், அது தமிழிலேயுள்ள இலக்கியங்களை யெல்லாங் கடந்து தமிழ்க் கலைவினோதர்களை வசீகரிக்கும் பெருஞ் சிறப்பினையும் மதிப்பினையும் முடைய பெருங்காவியமாயிற்று. கம்பர் வாக்கெல்லாம் பெரும்பாலும் ஊன்றி நோக்குமிடத்து ஒரு பொருளும், வெளிப்படையி லொருபொருளும் பயப்பனவாய்க் கற்போர்க்கு அதிசயமும் ஆராமையுமுண்டாக்குமியல்பின. அவர் சாதுரியத்தை மேல்வரும் கவியாலள விட்டுணர்க: இந்திரன் சசியைப்பெற்றானி ருமூன்றுவதனத் தோன்றன், றந்தையமுமையைப்பெற்றான் றாமரைச்செங்கணானுஞ், செந்திருமகளைப்பெற்றான் சீதையைநீயும்பெற்றா லந்தரம்பார்க்கினன்மை யவர்க்கில்லை யுனக்கேயையா. இக்கவியிலே, நன்மை அவர்க்கில்லை,உனக்கே நன்மை என்பதாகத் தொனிக்கினும், பின்னர் நிகழப்போவதை நோக்குமிடத்து, நன்மை அவர்க்கு, இல்லை யுனக்கு என்பது தோன்றவமைத்தனர். இக்கவியில் மாத்திரமன்று அடுத்த இரண்டுகவிகளிலும் இவ்வாறே அநிஷ்டப் பொருட் குறிப்பமையப் பாடியிருத்தல் காண்க. பாகத்திலொரு வன்வைத்தான் என்னுஞ் செய்யுளிலே, நீயெங்ஙனம் வைத்துவாழ்தி என்று வினவியதற்கு, நீ எவ்விடத்திலிருத்தி வாழப் போகின்றாய்? என்றும், நீ எப்படி வைத்து வாழ்வாய் வாழமாட்டாய் என்றும் பொருள்படுமாறமைத்தனர். மற்றச் செய்யுளிலே, பிள்ளை போற் பேச்சினாளைப் பெற்றபின் பிழைக்கலாற்றாய் என்பதற்கும், சீதையைப் பெற்றபின் அவள் இஷ்டத்துக்குமாறாக யாதுஞ் செய்யமாட்டார் என்றொரு பொருளும், அவளைப் பெற்றால் இறப்பாய் என்றமற்றொரு பொருளும் கொள்ள வைத்தனர். இவ்வாறே அவர் சாதுரிய சாமர்த்தியங்கள் ஊன்றி நோக்குந்தோறும் ஊற்றாய்ப் பெருகும். மேலெயெடுத்துக் காட்டிய செய்யுட்கள் மாரீசன் வதைப்படல்திலே சூர்ப்பணகைகூற்றாக வருவன. இனி வான்மீகிபகவான் வைதிகப் பொருளையெல்லாம் லௌகிகப் பொருண்மேல்வைத்துக் கூறுங் கருத்தினையுடையராய் ராமசரித்திரத்தினையே ஏற்றவாயிலாகக் கொண்டு வெளிப்படையிலே லௌகிகத்திற் குரிமையும் இனிமையும் பயக்கவும், குறிப்பிலே வைதிக போதமும் தத்துவங்களும் விளங்கவும் இப்பாரகாவியத்தை இயற்றிப் போயினர். இவ்வுண்மை மேலேயெடுத்தோதிய காயத்திரியடிரக் குறிப்பினால் நன்கு துணியப்படும். ராமாயண கதாநாயகராகிய ஸ்ரீராமபிரானம் சக்ரவர்த்தி திருமகனாராக அவதரித்தும், தந்தையார் வாக்கைக் காக்குமாறு காட்டுக்கேகிய பெருந்தகைமையும், சத்தியம், பொறுமை, அறிவு, ஆண்மை, நீதிதிறம்பாமை, பேரருளுடைமை, நன்றிமறவாமை, அடைந்தவரைக் காக்கும் பேராற்றல், சகோதரவொற்றுமை முதலிய உத்தமகுணங்களுக்கெல்லா முறைவிடமாகவுள்ளவர். அவருடைய இல்லறவொழுக்கச் சிறப்புச் சூர்ப்பணகைக்கு எடுத்தோதிய நன்மதியுரைகளால் விளங்கும். ஸ்ரீராமரைப் பாலியப்பருவத்தில் வீதியிலே விளையாட்டயரும் வேளையிலே கண்டு உச்சிமோந்து கட்டித்தழுவிச் செல்பவனாகிய ஒரு பிச்சைக்காரன், அவர் காட்டுக்கேகி மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டேழுந்தருளியிருக்கும். அவ்வமையத்திலே அச்சபை முன்னேவந்து, அடாராமா! எங்கடா போயிருந்தாய்! உன்னைக்காணாமல் என்கண்கள் மிக வருந்திவிட்டனவே யென்று போராமையோடு கூவியழ, அவர் சிங்காசனத்தை விட்டேழுந்து யானும் உம்மைக்காணப் பேராசையுற்றேன் வருக என் சிறியதந்தையே என்றிருகையும் நீட்டியழைக்க, அச்சபையிலிருந்த அரசர் முனிவர் பெரியோரெல்லா மதிசயித்தெழுந்து வழிவிட, பிச்சைக்காரனாகிய முதியோன் சென்ற அவரைத்தழுவி மோந்து போயினன். அவனுடைய அழுக்குடை யையும் நாறுகின்ற சரீரத்தையும் நோக்காது பேரன்பாற் கட்டுண்டுமயங்கிய ராமன் பெருந்தகைமைக்கு எல்லையுமுண்டோ! இத்துணைச் சிறந்த பெருயோனது சரித்திரத்தைக் கேட்டலும் கற்றலும் உலகுக்குப் பெரும் பயனைத்தராமற் போகுமா? இப்பெருமையெல்லா நோக்கியே இதனைத் திவ்வியநூலென்று பெரியோர் கொண்டாடுவர் |
| ராமேசுவரம் | ராமர் ராவணனைக் கொன்று திரும்பியபோது சேதுவோரத்திலே சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து பூசைபுரிந்த ஸ்தலம். இவ்விலிங்கத்தைத் தரிசித்துவழிபடுவோர் சகலபாவங்களும் நீங்கப்பெறுவர் என்பது புராணசம்மதம் |
| ராவணன் | ராக்ஷசர்தலைவன். இவன் ராஜதானி லங்காபுரி. புலஸ்தியன் புத்திரனாகிய விச்சிரவாவு புத்திரன். தாய் சுமாலி புத்திரியாகிய கைகசி. இவன் பாரிமயன் மகளாகிய மந்தோதரி, மண்டோதரி, கும்பகர்ணன், விபீஷணன் என்போர் இவன் தம்பியர் முடையனாகித் திரிலோகங்களிலுஞ் சென்று சாதுக்களையுந் துன்புறுத்தி வந்தான். இத்துன்பங்களை யொழிக்குமாறே விஷ்ணு ராமனாகப் பிறந்து ராவணனைக் கொன்றார். ராவணன் திக்கெல்லாம் வெற்றிபெற்று வடக்கிற் சென்று குபேரனைக் கண்டு அவனைச்செயித்து அவன் புஷ்பக விமானத்தைக் கவர்ந்து கொண்டு கைலைக்கு மேல் நேராக வந்தபோது நந்திதேவர் தடுப்ப, இவன் தனது விமானத்தோடழிந்து அக்கைலையை வேரோடும் பழித்துச் செல்வெனென்று கர்வங் கொண்டு பெயர்த்துத் தோள் மேற் கொள்ள வெத்தனிக்க, அதுகண்ட சிவன் தமது பெருவிரலாலழுத்த, அம்மலையின் கீழ் அகப்பட்ட இவன்நெடுங் காலங் கிடந்து வருந்திச்சிவனைத் தோத்திரித்து அவ்வாபத்தினின்றும் நீங்கிப் போயினான். அக்கைலையின் கீழ்க்கிடந் துச்சவிசையாலழுது துதித்தமையால் இவனுக்கு ராவணன் என்னும் பெயர் வாய்ப்பதாயிற்று. இவன் திக்குவிஜயஞ் செய்யப் போனவிடங்களில் அபஜயப்பட்டுத் திரும்பியது இரண்டிடத்தன்றி மற்றெங்கு மில்லை. ஒன்று வாலியாலும் மற்றது கார்த்தவீரியார்ச்சுனனாலுமேயாம் இவன் மேரு பக்கஞ் சென்ற போது அங்கே அரம்பையைக் கண்டு அவளைப் பலவந்தம் பண்ணிப் புணர்ந்தான். அது கேட்ட நளகூபரன் சினந்து, நீ எப்பெண்ணையாயினும் அவள் சம்மதமின்றிப் புணர்வையேல் உன் தலைகள் ஆயிரத்துண்டமாகச் சிதறி யிறக்கக்கடவையென்று இவனைச் சபித்துப் போயினான். அதுபற்றியே சீதையை மானபங்கஞ் செய்யாது தன் சிறையிலிட்டு அவள்பாற் சென்றிரந்து வருவானாயினதும், முன் நரரைப் பொருட்படுத்தாது கேட்டவரத்திழுக்கால் நரனாகிய ராமனாலிறந்தது மாமென்க |
| ராஷ்டிரபாலன் | கஞ்சன் தம்பி |
| ராஷ்டிரபாலிகை | உக்கிரசேனன் புத்திரி. சிருஞ்சயன்பாரி |
| ரிபு | யதுவினது நான்காம் புத்திரன் |
| ரிபுஞ்சயன் | பிருகத்திரதன் வமிசத்து மகததேசராஜர்களுள் கடையரசன். இவன் தனது மந்திரி சுக்கிரீநகனாற் கொல்லப்பட்டவன் |
| ருகன் | விருகன் தந்தை. விஜயன் புத்திரன் |
| ருக்குமகேசன்,ருக்குமதரன், ருக்குமநேத்திரன், ருக்குமவாகு | ருக்குமிதம்பியர் |
| ருக்குமன், ருக்குமேஷூ | ருசிகன் புத்திரர். சியாமகன் சகோதரர் |
| ருக்குமி | விதர்ப்பராஜனாகிய வீஷ்மகன்மூத்த மகன். ருக்குமிணி தமையன் |
| ருக்குமிணி | கிருஷ்ணன் மூத்தமனைவி. வீஷ்மகன் புத்திரி. பிரத்தியுமனன் தாய் |
| ருக்ஷயன் | மகாவீரன் புத்திரன், இவனுக்குப் புஷ்கராருணி, கவி, திரயாருணி எனமூவர்புத்திரர். இவர்கள் சந்ததியார் பிராமணராயினர் |
| ருசி | ஒருபிரஜாபதி. சதரூபன் புத்திரியாகிய ஆகூதி இவன் பாரி. இவளிடத்திற் பிறந்த புத்திரன் யஞ்ஞன் |
| ருசிகன் | தருமன்புத்திரன். இவன்புத்திரர் சியாமகன், புருது, ருக்குமோஷூ, ருக்குமன், புருசித்து என்போர் |
| ருசிரதன் | குரு |
| ருசிராஜன் | பிருகதிஷன் வமிசத்துச் சேனசித்துபுத்திரன். பிராக்கியன் தந்தை |
| ருத்திரகோடி | ஒரு தீர்த்தம். இது ஒரு காலத்தில் ருத்திரன் இருஷிகளுக்குப் பிரத்தியடிமாகக் கோடி ரூபமாய்த் தோன்றினமையால் இப்பெயர் பெற்றது |
| ருத்திரன் | திருமூர்த்திகளுளொருவராகிய சங்காரகர்த்தா. சிவனுக்கும் பெயராம். பிரமாவினது புத்திரருள்ளு மொருவராவர். ஸ்ரீகண்டருத்திரர் முதலிய ருத்திரபேத மெண்ணில |
| ருத்திரபர்வதம் | ஜானவிகட்டமென்னும் கங்கைக் கரையிலேயுள்ள மலை |
| ருத்திரப் பிரயாகை | மந்தாகினிக்கும் அளக நந்தைக்கு மிடையேயுள்ள க்ஷேத்திரம் |
| ருத்திரர் | இவர் அஜன், ஏகபாதன், அரன், அகிர்ப்புத்தியன், சம்பு, திரியம், பகன், அபராஜிதன், ஈசானன், திரிபுவனன், துவஷ்டா, ருத்திரன் எனப்பதினொருவர். இவர்களை ருத்திரன் மானசபுத்திரரென வழங்குவர். பிரமமானச புத்திரரெனவும் படுவர் |
| ருத்திராக்ஷம் | சிவபக்தராற் றரிக்கற் பாலதாகிய ஒரு மணி. திரிபுராசுரர்களை வதம் பண்ணப் புறப்பட்ட போது காயத்திரியைக் கண்ணைமூடிச் செபிக்கக் கண்களிலிருந்து வீழ்ந்த கண்ணீர்த் துளிகள் இம் மணிகளாயின வென்பது சரித்திரம் |
| ருமை | சுக்கிரீவன் பாரி |
| ருரன் | சியவனன் புத்திரனாகிய பிரமதிக்குக் கிருதாசியென்னும் அப்சரசையிடத்திற் பிறந்த புத்திரன். இவரோரிஷி. இவர் பாரி பிரமத்துரை. இவர் தமது பாரி ஒரு பாம்பாலிறக்க, அவளைத் தமது தவமகிமை யாலெழுப்பி, அன்று முதற் பாம்புகளைக் கொல்வதே விரதமாகக் கொண்டவர். அவ்விரதத்தை நீக்கினவர் டுண்டுபம் என்னும் சர்ப்பரூபந் தாங்கியிருந்தவராகிய சகஸ்திர பாதமுனிவர். ருரன் மகன் சுநகன் |
| ரூபாசுவன் | கிருதாசுவன் |
| ரூபாவாகிகள் | ரூபாநதிதீரவாசர்கள் |
| ரூபை | சுக்தி மந்தமென்னுமிடத்திலிருந்து பாய்கின்றவொரு நதி |
| ரேணுகை | பரசுராமன் தாய், ஜமதக்கினி பாரி |
| ரேணுமதி | நகுலன் பாரி |
| ரேவதி | ரைவதபர்வத மீதில் தாமரைத் தடாகத்திற் பிறந்த ஒருகன்னிகை. இவளைப் பிரமசன் என்னுமுனிவர் எடுத்து வளர்த்தார். இவள் புத்திரன் ரைவதமனு, உ, பலராமன் பாரி. ரேவதன் புத்திரி. இவள் சரியாதி பௌத்திரனாகிய ரைவதன் புத்திரன் குகுத்மிபுத்திரியெனவும் படுவள், ந, நக்ஷத்திரங்களுளொன்று, ச, அரிஷ்டன் பிப்பலன் என்போர்க்குத் தாய். மத்திரன் பாரி |
| ரேவந்தன் | ஒரு குஹியகன் |
| ரைப்பியன் | ஈளினன். இவன் சுமதிபுத்திரன். உ அர்த்தாவசு பராவசு என்போர் தந்தை |
| ரைவதன் | ஐந்தாம் மனு. பிரியவிரதன் வமிசத்துத் துர்த்தமனுக்கு ரேவதியிடத்திற் பிறந்த புத்திரன், உ, ஆநர்த்தன் புத்திரன். குருத்மிதந்தை |
| ரைவதம் | ஒரு மலை. இது குமுதமலையெனவும் படும். இது துவாரகைக்குச் சமீபத்திலேயுள்ளது. இருதவாக்கு என்னும் இருஷியால் சபிக்கப்பட்ட ரேவதி இம்மலைமேல் வீழ்ந்து ஒரு தடாகமாயினமையால் இப்பெயர் பெற்றது |
| ரோகிணம், ரோஹிணம் | ஒருமலை. இம்மலையிலே ரத்தினாகரங்கள் நேகமாகவுள்ளன, உ, ஒரு விருடிம். இது அலம்பதீர்த்தக் கரையிலேயுள்ளது. இதிலே வாலகில்லியர் தலைகீழாகத் தூங்கித் தவஞ்செய்திருக்கும் போது கருடன் அமிர்தங்கொண்டு வருமாறு சென்றது. தனக்கு வழியுணவாக ஓர் யானையையும் ஒரு கச்சபத்தையும் கொண்டு சென்ற அக்கருடன் அவ்வுணாவோடிவ் விருடித்தின் மீது வதிந்திட அம்மரம் ஒடிந்து சாய்ந்தது. சாய்தலும் வீழாமுன்னர்க் கருடன் எழுந்து தன்காலிற் சிக்கிய அம்மரத்தையும் அவ்வுணாவோ டுடன் கொண்டு சென்று போய் நிஷ்புருஷமலையிலே இறங்கித்தனது உணவைத்தின்று போயது. அவ்விருக்ஷத்திற் றொங்கிய வாலகில்லியரும் அம்மரத்தோடு கொண்டு போய் இம்மலையில் விடப்பட்டார்கள் |
| ரோசனை | வசுதேவன் பாரிகளுளொருத்தி |
| ரோமகசித்தாந்தம் | சோதிடசித்தாந்தங்களுளொன்று. இது ரோமகன் என்னும் பண்டிதன் செய்தது |
| ரோமகன் | ரோமகபுரியிலிருந்து ஆரிய தேசத்தில்வந்து ஆரிய சாஸ்திரங்களைக் கற்றுவிளங்கிய பூர்வகாலத்துப் பண்டிதன் |
| ரோமகபுரி | இது பூர்வகாலத்திலே மேகலாரேகையிலே லங்காபுரிக்கு மேற்கே தொண்ணூறுபாகை தூரத்திலேயிருந்த பட்டணம் |
| ரோமகர்ஷணன் | வியாசன் சீஷனாகிய சூதர். இவர் அநேக புராணங்களையுப தேசித்தவர் |
| ரோமபாதன் | தசரதன். தருமரதன் புத்திரன். இவன் தனக்குச் சந்ததியில்லாமையால் ஸ்ரீராமன் தந்தையாகிய தசரதன் புத்திரி சாந்தையை எடுத்து வளர்த்தவன், உ, விதர்ப்பன் மூன்றாம் புத்திரன் |
| ரோமஷன் | இந்திரன் ஏவலால் அருச்சுனன் நாகலோகத்தி லிருக்கிறானென்று தருமருக்குணர்த்தி அருச்சுனனைத் தீர்த்த யாத்திரை செய்ய ஏவிய முனிவர் |
| ரோஹிணி | நக்ஷத்திரங்களுளொன்று. தக்ஷன் மகள். சந்திரன் பிரியநாயகி, உ, பலராமன் தாய். வசுதேவன் பாரி |
| ரௌகிதம் | பாரதயுத்தத்திற்குப் புறப்பட்ட கௌரவ சேனைக்குப் பாசறையாயிருந்தவனம் |
| ரௌத்திராசுவன் | அஹம்யாதி புத்திரன். இவனுக்குக் கிருதாசியிடத்திற் பதின்மர் புத்திரர் பிறந்தார்கள். அவர்களுள்ளே இருசேயு மூத்தோன் |
| ரௌரவம் | ஒரு நரகம். இந்நரகத்திலே மகாகொடிய பாவிகளிட்டு வருத்தப்படுவார்கள். ஈராயிரம் யோசனை சதுரமாயுள்ளது. இந்நரகம் முழங்காலாழம் உருக்கிய செம்புநீர்ப் பரவையாக விருப்பது |